Sunday, November 29, 2009

கற்றது தமிழ் (மட்டுமல்ல)

இன்று மாலை கலைஞர் தொலைக்காட்சியில் 'கற்றது தமிழ்' திரைப்படத்தை ஒளிபரப்பினார்கள். சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

சில காட்சிகள், வசனங்கள் நன்றாக இருந்தன, இருந்தாலும் ஒரு டாகுமெண்டரி படம் போலத்தான் இருந்தது.

கருணாஸ் ஜீவாவிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதும், தப்பிக்க வழி தேடுவதும், நண்பரிடம் மொபைலில் பேசுவதும் இயல்பாய் இருந்தது.

ஆனந்தியின் 'நிஜமாத்தான் சொல்றீயா?' வசனமும், காட்சிப் படுத்திய விதமும் அருமை!




மகாராஷ்டிராவில் ஒரு குக்கிராமத்துக்கு ஆனந்தியை தேடிச் செல்வதும் நன்றாக காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. நானும் முன்பு மகாராஷ்டிராவில் (மும்பை மற்றும் புனே) பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு சில கிராமங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு காட்சியில் மகாராஷ்டிரா மாநில சிவப்பு நிற அரசு பேருந்தை பார்த்தவுடன் எனக்கு நிறைய பழைய ஞாபகங்கள் வந்து அலை மோதின.

படத்தில் தமிழை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள நினைப்பவனையும், அதனை சமூகம் ஏளனப் படுத்துவதையும் காட்டியிருக்கிறார்கள். அக் கருத்து உண்மைதானல்லவா? இன்று தமிழ் மட்டும் படித்தவனுக்கு என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது. எம். ஏ, எம் பில் தமிழ் படித்தால் ஏதேனும் பல்கலைக்கோ, கல்லூரிக்கோ பேரசிரியாராய் செல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவல்லவா? சினிமாவுக்கு பாட்டெழுத தமிழ் பட்டப் படிப்பு தேவையில்லை என நினைக்கிறேன். தமிழ் மட்டுமே படித்து தற்காலத்தில் பிழைக்க முடியாது என்றே கருதுகிறேன்.

ஆதலால் ஏதேனும் தொழில் நுட்ப அறிவு அவசியம் தேவை. பிற மாநில/நாட்டு மக்களுடன் உரையாடுவதற்கு ஆங்கில மொழியறிவும் அவசியம் என்றே கருதுகிறேன்.

தமிழ் மட்டுமே படித்தவருக்கு வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் இருக்கிறதா என்று கூறுங்களேன்!

Sunday, November 22, 2009

யாருமற்ற ஞாயிறு

மதிய வெயில்
மவுனமாய் பொழியும்
ஞாயிறன்று
இணையத்தில்
அர்த்தமற்று தேடும்போதுதான்
உணர்ந்தேன்
உந்தன் பிரிவை!!

<<>>

நீ
நான்
மற்றும்
வேறு எவரிமில்லா
பிரபஞ்சம்
இவை போதுமெனக்கு,
வெறெதுவும் வேண்டாம்!

<<>>

என் உயிரில்லாவிடினும்
நான் உயிர் வாழ்வேன்,
உன் உயிர் என்னிலல்லவா
கலந்திருக்கிறது!

<<>>

பணம்,
புகழ்,
அழகு,
செல்வாக்கு
அதிகாரம்
மது
மாது
சூதாடுதல்
என
எல்லா போதைகளையும்
விட
அதிகமானது
காதலெனும் போதை!

Sunday, November 15, 2009

சன் டிவி - பெப்ஸி கலை நிகழ்ச்சிகள் - சில கேள்விகள்

சன் டிவி சனி, ஞாயிறு என்று ப்ரைம் டையத்தில் ஒளிபரப்ப இருந்த போதே நினைத்தேன், விளம்பர மழை பொழியப் போகிறதென்று! அதேதான் நடந்தது! இரண்டு நிகழ்வுகளுக்கொரு முறை விளம்பரம், இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கு முன்பு அடுத்து வரப்போவது என்று இரண்டு நிமிடங்களுக்கு ப்ரீவியு கொடுத்ததுதான் :-)

என்ன செய்வது, என் சகதர்மினி இதைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். வெளியே வேறு மழை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. சுஜாதாவின் வண்ணத்துப் பூச்சியின் வேட்டை புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டேன்.

டி. ராஜேந்தர் மேடையில் கலக்கினார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வந்ததை குறிப்பிட்ட அவர், முதல் படமான உயிரில்லவரை உஷாவிலிருந்து ஒரு பாடலைப் பாடி, பிறகு வாயாலும் ம்யூசிக் கொடுத்து திகிலடித்தார். பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, விஜயிலிருந்து ஸ்ரேயா வரை விழுந்து விழுந்து ஏன் சிரித்தனர், என்று புரியவில்லை :-)

கவுண்டமணி வந்து எல்லோருக்கும் நன்றி சொல்லி, அவர் ஸ்டைலில் சலம்பினார், உற்சாகபானம் சாப்பிட்டிருப்பார் போல் தெரிந்தது.

சிம்புவும், நயன் தாராவும் அருகருகே உட்கார்ந்து கொண்டு, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன திரும்பவும் ராசியாகி விட்டார்களா என்று தெரியவில்லை :-) இன்னொரு வல்லவன் படம் வருமா?

திடிரென்று பார்த்தால் ஆர்யா நயன் தாரவுக்கும், ஸ்ரேயாவுக்கும் மத்தியில் உட்கார்ந்து கொண்டிருந்தார், சிம்பு பாதியில் சென்று விட்டாரா?

விழா மொத்தமே 3 மணி நேரம் தான் நடந்திருக்கும், அதை 7 மணி நேரத்திற்கு ஓளிபரப்பும் திறமை சன் டிவிக்கு மட்டுமே வரும்!!

நடுவில் திடிரென்று நளினி, குயிலி, அனுராதா போன்ற முன்னாள் நாயகிகள் நடனமாடி பயமுறுத்தினார்கள். இந்த ஐடியா யார் கொடுத்தது என்று தெரியவில்லை, நிச்சயமாய் சண்டிவியில் பேப்பர் போட்டிருப்பார் (ரிசைனிங் லெட்டர் கொடுத்து, ரிலிவீங் பீரியடில் இருப்பவர்) என்று நினைக்கிறேன் :-)

நடுவில் பிரபு வந்து ஏதோ கோபமாய் பேசினார் (என்னவென்று சரியாக புரியவில்லை). என்னால்தான் விஜய், சூர்யா வந்தார்கள் என்றார். அவர்களை கேமிராவில் காமியுங்கள் என்றார். வஞ்சப் புகழ்ச்சி அணியா??

இந்த கலைநிகழ்ச்சிகளின் மூலம் வசூலான பணத்தைக் கொண்டு, ஏழைத் தொழிலாளர்களுக்காக ஏதோ கட்டடம் கட்டப் போகிறார்கள் என நினைக்கிறேன், நோக்கம் நல்ல விதமாய் நிறைவேறினால் சரி!!

Sunday, August 30, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

சில நேரங்களில் இணையம்
சில நேரங்களில் தொலைக்காட்சி
சில நேரங்களில் சுஜாதா நாவல்கள்
சில நேரங்களில் செல்பேசியில் உரையாடல்கள்
சில நேரங்களில் வண்டியில் பயணம்
சில நேரங்களில் உணவருந்துதல்
இத்தனை இருப்பினும்
எந்நேரமும் உன் நினைவுதான்,
சீக்கிரம் வாடி என்னருமை மனைவியே
செல்ல சண்டைகளை
விட்ட இடத்திலிருந்து தொடரலாம்!

Friday, July 24, 2009

சில நிகழ்வுகள் & சில எண்ணங்கள்

1. ஆஷஸ் சீரிஸ்
முதல் போட்டியை தட்டுத்தடுமாறி இங்கிலாந்து டிரா செய்த போது, இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வெல்லும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் ப்ளிண்ட்டாப்பின் 5 விக்கெட்டுகள், ஸ்வானின் 4 விக்கெட்டுகள், ஸ்டாராசின் முதல் இன்னிங்ஸ் 161 போன்றவை இங்கிலாந்தின் ஹைலைட்ஸ். மொத்தத்தில் 2005 போல் இன்னொரு விறுவிறுப்பான ஆஷஸ் தொடர் நமக்காக காத்திருக்கிறது. இங்கிலாந்து இதை வென்று, ஓய்வு பெறும் பிளிண்ட்டாப்புக்கு பரிசாய் தருமா?

2. அச்சமுண்டு & நாடோடிகள்
இரண்டுமே சமீபத்தில் வந்து வரவேற்பை பெற்றுள்ள நல்ல படங்கள். இன்னும் நான் பார்க்க வில்லை. இம்மாதிரியான வித்தியாசமான, நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பது ஆரோக்கியமான நிகழ்வு. இந்த வார இறுதியில் பார்க்கலாமென்று சத்யம், ஐநாக்ஸ் இணைய தளத்தில் பார்த்தால் டிக்கெட் கிடைக்க வில்லை. இரு படங்களுமே இரு தியேட்டர்களிலும் ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே இருக்கிறது. அது ஏனென்று புரியவில்லை. இன்னும் கூடுதலாக வார இறுதிகளிலாவது காட்சிகள் வைக்கலாமே?

3. முதல்வரின் வீடு மருத்துவமனையாகிறது
இன்றுதான் செய்தித்தாளில் பார்த்தேன். முதல்வர் மற்றும் அவரது மனைவியின் வாழ்நாளிற்கு பிறகு, அவரது வீடு ஏழைகளுக்கு இலவசமாய் மருத்துவ வசதி அளிக்கும் மருத்துவமனையாய் மாறுகிறது. இதற்கு முதல்வர் அவரது குடும்பத்தினரிடமும் ஒப்புதல் பெற்று விட்டாராம். மிக அருமையான காரியத்தை செய்திருக்கும் முதல்வருக்கு, மனமார்ந்த பாராட்டுகள், இது ஒரு நல்ல தொடக்கமாய் இருக்கட்டும்.

4. பீகாரில் பெண் துன்புறுத்தல்
இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன விஷயமென்று தெளிவாய் தெரியவில்லை. ஒரு பெண்ணை நிறைய ஆண்கள் சேர்ந்து கொண்டு, மார்க்கெட் போன்ற ஒரு பகுதியில் துன்புறுத்துகிறார்கள். ஒருவர் கையை இழுக்கிறார், ஒருவர் அடிக்கிறார். டிராபிக் போலீஸ்காரர் வேறு வேடிக்கை பார்க்கிறார். அந்த பெண் தவறு செய்திருந்தாலும், காவல்துறையில் புகார் செய்யலாமே தவிர, நாமே சட்டத்தை கையில் எடுக்கலாமா? பெண் என்று இல்லை, ஆணாக இருந்தாலும் நாம் கும்பலாய் சேர்ந்து கொண்டு துன்புறுத்த சட்டத்தில் இடமில்லையை, மனிதாபிமானத்திலும் இடமில்லையே!!

Thursday, July 02, 2009

பசங்க - யதார்த்தமான படமா?

படம் வந்து ஒரு மாதமாகி விட்டதால், உதயம் தியேட்டரில் அதிக கூட்டமில்லை. பின் மூன்று வரிசைகள் மட்டுமே நிறைந்திருந்தது. இப்படி கொஞ்ச நாள் கழித்துச் செல்வதில் சில சவுகரியங்கள் உள்ளன. ப்ளாக்கில் டிக்கெட் வாங்கத் தேவையில்லை. தியேட்டர் டிக்கெட் க்யூவில் நெரிசலில் நின்று அடிபடத் தேவையில்லை. படம் பார்க்கும் போது விசிலடிச்சான் குஞ்சுகளில் தொல்லை இருக்காது. கூட்டத்தால், தியேட்டர் ஏசி எபெக்ட் குறைந்து காணப் படாது.

படத்தை பற்றி நிறைய விமர்சனங்களை படித்திருந்ததால் ஓரளவுக்கு கதையின் போக்கு முன்பே தெரியும், அதனால் சில விஷயங்களை முழுமையாய் ரசிக்க முடிவதில்லை.

படம் முழுவதும் சற்றே மிகைப் படுத்தப் பட்ட யதார்த்தம் தெரிகிறது (உதாரணமாய் வீட்டின் சொந்தக்காரர் பார்க்கும் போது, பையன்கள் பூந்தொட்டிகள் வைத்து அழகு படுத்துவது, பட ஆரம்பத்தில் பையன்களை பற்றி கிராமத்து பெரிசுகள் போலிஸ் ஸ்டேசனில் கம்ப்ளெயிண்ட் செய்வது, சடாரென்று மனம்மாறி அன்புகரசுவின் அப்பா, அம்மா சமாதானாமாய் செல்வது)

இருந்தாலும் படத்தை ரசிக்க முடிகிறது. அன்புக்கரசு ஐஏஸ் என்று சிறுவன் சொல்வதும், போதும் பொண்ணு, பக்கடா போன்ற பெயர்களும், அவற்றிற்கான பெயர்க் காரணங்களும் ரசிக்க வைக்கின்றன.

கதையின் ஊடே வரும் காதல் நன்றாக இருக்கிறது. இருந்தாலும், இருவருக்குமிடையே காதல் வருவதற்கான காரணங்கள் பலமானதாயில்லை. அடுத்தடுத்து வரும் சம்பங்கள் படத்தை அழகாய் நகர்த்திச் செல்கின்றன.

கிளைமேக்ஸ் படு சினிமாத்தனம், எப்படி வில்லனாய் வரும் சிறுவன் திடிரென்று மனம் திருந்துகிறான்?

வெளியே வரும்போது, நல்லதொரு படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது.

Tuesday, June 30, 2009

சன் டிவியே, உன் அழும்புக்கு எல்லையில்லையா?

சன் டிவி டாப்டென் சென்ற ஞாயிற்றுக்கிழமை யாராவது பார்த்தீர்களா? நான் பார்க்க வில்லை. இன்று மதியம் பெங்களூரிலிருந்து நண்பர் அருண் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

சன் டிவியின் டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியில், மாசிலாமணி முதலிடமாம். கடவுளே, இந்த கொடுமையை கேட்பாரில்லையா?? கொஞ்ச நாள் முன்பு தெனாவட்டு, ஆயுதம் செய்வோம் போன்ற படங்களையும் இதே மாதிரிதான் முதலிடத்தில் 'வைத்து' இருந்தனர் என நினைக்கிறேன்.

இப்படி பகிரங்கமாய் மோசடி செய்கின்றனரே, இதற்கு பேசாமல் இந்த நிகழ்ச்சியையே நிறுத்தி விடலாமே!! மக்கள் யாராவது இதை (இந்த ரேட்டிங்கை) நம்புகிறார்களா? என்னை பொறுத்த வரை, நான் நீண்ட நாட்களுக்கு முன்பே இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். மாசிலாமணி, நிஜமாகவே முதலிடத்திற்கு தகுதிதானா? பசங்க, நாடோடிகள் போன்ற படங்களுக்கு சன் டிவி கொடுத்த ரேட்டிங் என்ன? யாராவது பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.

இப்படியே போனால், இன்னும் ஒரு வருடத்தில் டாப் டென் படங்களுமே சன் குழுமம் தயாரித்த படங்களே பிடித்து விடுமே! மக்கள் நம்பிக்கை இழந்து இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விடுவார்கள் என்று சன் டிவிக்கு தெரியாதா??

இதேபோல் விகடன் குழுமம் தயாரித்த வால்மீகி படத்துக்கு ஆனந்த விகடனில் வழங்கப்பட்ட மார்க் என்ன? விமர்சனம் வந்து விட்டதா? படம் சரியில்லை என கேள்விப்பட்டேன், சிவா மனசில சக்தி என்ற மொக்கைக்கே ஆனந்த விகடன் 40க்கு மேல் மதிப்பெண் அளித்ததாக ஒரு ப்ளாக்கில் படித்தேன், உண்மைதானா?

இம்மாதிரி ஊடகங்கள் தயாரிக்கும் படங்களுக்கு அவர்களே விமர்சனம், ரேட்டிங் போன்றவற்றை தரக்கூடாது என சட்டமியற்ற இயலுமா, சாத்தியாமா சொல்லுங்களேன்!

Monday, June 29, 2009

சென்னை - ஒரு பொன்மாலைப் பொழுதில்..

நீங்கள் புதிதாய்/சமீபத்தில் திருமணமானவரா? சமீபத்தில் என்றால் பத்து வருடங்களுக்குள்ளா? ஒரு வாரயிறுதி மாலைப்பொழுதை, அதிக செலவில்லாமல் மகிழ்ச்சியாய் வெளியில் சென்று அனுபவிக்க ஆசைப்படுபவரா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானதே, மேலே படியுங்கள்! :-)

பெரும்பாலான பன்னாட்டு, உள்நாட்டு ஐடி, தொழில் நுட்ப கம்பெனிகளில், அரசு அலுவலகங்களில் சனி, ஞாயிறு இரு நாட்களும் விடுமுறை அளிக்கின்றனர். சனிக்கிழமை மாலையே உங்கள் துணைவியுடன், குழந்தைகளுடன் (இருந்தால்) வெளியே சென்று வர ஏற்ற சமயம். சனி மாலையென்றால் எல்லா தொ(ல்)லைக் காட்சி சானல்களிலும் உருப்படாத படங்களையும், எரிச்சலூட்டும் பாட்டு, டான்ஸ், அரட்டை நிகழ்ச்சிகளையும் போடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி வெளியே சென்று வருவதுதான் :-)

சரி வெளியே செல்லலாம் என்றால் எங்கே செல்வது? நீங்கள் ஸ்பென்சர், சிட்டி செண்டர் போன்ற மெகாமால்களுக்கு செல்லலாம், ஆனால் அங்கே சென்று வந்தால் நமது பர்ஸ் காலியாவது நிச்சயம். என்னதான், உங்களது மனைவி ‘சும்மா சென்று வரலாம், விண்டோ ஷாப்பிங் செய்வோம்’ என்று சொன்னாலும் மயங்கி விடாதீர்கள். அங்கெ சென்றால் ஆயிரத்தெட்டு offers போட்டிருப்பார்கள், அதாவது 4 ஜீன்ஸ் வாங்கினால் ஒரு ஜீன்ஸ் இலவசம் (4 ஜீன்ஸின் விலை ரூ 4000) மற்றும் 2 டிசைனர் சாரி வாங்கினால் ஒன்று இலவசம் (இரண்டு சாரியின் விலை ரூ 8000) போன்ற உட்டாலக்கடி offerகள்.

கழுதை, அதைக்கண்டால் நீங்களும் உங்கள் மனைவியும் மதிமயங்கி கண்டது, கடையது வாங்கித் தள்ளி விடுவீர்கள். கிரெடிட் கார்டு என்றொரு பூதம் இருப்பதால், நமக்கும் செலவழிப்பது தெரியாமல் கன்னாபின்னாவென்று ஸ்வைப் (ஸ்வைப் செய்வது - இதற்கு தமிழ்ச்சொல் என்ன?) செய்து விடுவோம். அதுவும் குழந்தைகளோடு சென்றால் கேட்கவே வேண்டாம், சும்மா அந்த பொம்மையை வாங்கிக்கொடு, இந்த டீசர்ட்டை வாங்கிக்கொடு என்று பிய்த்து பீராய்ந்து விடுவார்கள். இது மட்டுமல்லாமல், ஏதாவது திண்பண்டம் வேறு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஐஸ்கிரீம் எதை எடுத்தாலும், 50 ரூபாய்க்கு கீழே இருக்காது. என்னடா இது உலகமென்று, தர்க்க ரீதியாக யோசிக்கத் துவங்கி விடுவீர்கள் :-)

இதை விட்டுத் தள்ளுங்கள், சினிமாவிற்கு செல்லலாம் என்றால், அதுவும் அபாயகரமான யோசனைதான். சத்யம், மாயாஜால் போன்ற மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களுக்கு என்றால் உங்கள் கதி அதோ கதிதான், டிக்கெட் ஒன்றில் விலை 120 ரூபாய், குடும்பத்தில் 4 பேர் என்றால் 500 ரூபாய் காலி, இண்டர்வெல்லில் வழக்கம்போல் குழந்தைகளுக்காகவோ, மனைவிக்காகவோ கூல்டிரிங்க்ஸ், பாப்கார்ன், ஸ்னாக்ஸ் வகையறாக்கள் 200 ரூபாயாவது ஆகிவிடும். உதயம், கமலா போன்ற மிடில்கிளாஸ் தியேட்டர்களுக்கு சென்றால் ஒரளவுக்கு தப்பிக்கலாம் :-)

இதற்கெல்லாம் உள்ள ஒரே உத்தமமான மாற்று வழி கடற்கரைக்கு செல்வதுதான், சென்னை மக்களுக்கு கடவுள் தந்த செலவில்லாத மகத்தான பொழுதுபோக்கு தலம் பீச்தான்.
மெரினா பீச், சாந்தோம் பீச், பெசண்ட் நகர் பீச், திருவான்மியூர் பீச் என்று ஏராளமான கடற்கரைகள் நம்மை வா, வாவென்று அழைக்கின்றன. அற்புதமான கடற்காற்று உங்களை ஆபீஸ் மேனெஜர் தொல்லை, project deadline (இதற்கு தமிழில் என்ன?) கவலைகள், வீட்டுக்காரன் மிரட்டல் போன்ற லவூதீக விஷயங்களை தற்காலிமாய் மறக்க வைக்கும்  என்னதான் சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி, சோன்பப்டி வகையறாக்கள் வாங்கித் தின்றாலும், 100 ரூபாய்க்கு மேல் உத்தரவாதமாய் செலவில்லை.

இப்போது என் அனுபவத்தை சொல்கிறேன், கேளுங்கள் :-)

ஒரு ஜூன் மாத மழை பெய்யும் சனிக்கிழமை மாலையில் நாங்கள் வெளியே சென்று வர முடிவெடுத்தோம் (போன வாரந்தாங்க அந்த சனிக்கிழமை, ஒரு சுஜாதா effect측¸ இப்படி எழுதுறதுதான் இப்போ பேஷன் :-))

மாலை 5 மணிக்கு கிளம்பினோம், கிளம்பிய போது லேசாக தூறல் விழுந்தது, பத்து நிமிடம்தான். குளுகுளுவென்று சென்னை ஊட்டி போல் மாறிவிட்டது. பைக்கில் ராமாபுரத்திலிருந்து கிண்டி, அடையார் வழியே பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்றோம்.

டிராபிக் போலீசார் பீட் அமைத்து, டிராபிக்கை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். பைக் நிறுத்த தனியே இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. பைக்கை நிறுத்தி விட்டு, மாங்காய், பட்டாணி சுண்டல் 15 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டோம் (முன்பு 10 ரூபாய், இப்போது 15 ரூபாயாகி விட்டது, விற்றவரிடம் கேட்டால் விலைவாசி பற்றிய பொழிப்புரை கிடைக்குமென்பதால் வாயை மூடிக்கொண்டு நடையைக் கட்டினோம்).

அப்படியே ஹாயாக பீச்சில் நடந்து வந்து கடலோரமாய் அமர்ந்தோம். சுமார் ஒரு மணிநேரம் காற்று வாங்கிக் கொண்டே கதை பேசிக் கொண்டிருந்தோம். குழந்தைகளோடு வந்திருக்கும் குடும்பங்கள், மணலில் வீடு கட்டும் குழந்தைகள், இளம்பெண்ணை குதிரையில் ஏற்றிக்கொண்டு ஜாய்ரைடு (இந்த தலைப்பில் சுஜாதா கதையொன்று எழுதியிருக்கிறார், படித்திருக்கிறீர்களா?) செல்லும் குதிரைக்காரர், சுண்டல் விற்கும் பையன், வண்டியில் பெரிய பெட்ரோமாக்ஸை கட்டி மணியடித்துச் செல்லும் சோன்பப்டிகாரர், சோளத்தை சுட்டு தீயில் வித்தை காட்டும் வண்டிக்காரர் என்று பீச்சே குதூகாலமாய் இருந்தது.

சோன்பப்டி ஒன்று (10 ரூபாய் ஒரு பொட்டலம்) வாங்கி ருசித்தோம், சுமாராய்த்தான் இருந்தது. 10 ரூபாய் என்ற ரேட்டால் ஏற்கனவே என்னை திட்டிக் கொண்டிருந்த என் மனைவி (ஹிஹி, சும்மா செல்லமாத்தான் திட்டினாங்க) சோன்பப்டியின் சுமாரான டேஸ்ட்டால் பத்ரகாளியானாள், அதன்பின் நடந்ததை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் (எப்படித்தான் கரெக்டா ஏமாந்து போரீங்களோ, உங்க நெத்தியிலேயே எழுதியிருக்கே ஏமாற்றவர்ன்னு போன்ற வசனங்களை நீங்கள் யூகிக்கா விட்டால் நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை என்று அர்த்தம் :-)

8 மணிபோல் அங்கேயிருந்து கிளம்பி, பொடிநடையாய் நடந்து வந்து மாதா கோயில் அருகே உள்ள முருகன் இட்லி கடைக்கு சென்றோம். சுடச்சுட இட்லி, ஆனியன் ஊத்தாப்பம், ப்ளெயின் தோசை, மெதுவடை, வெள்ளைப் பனியாரம் போன்றவற்றை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சாம்பார் போன்றவைகளின் உதவியால் உள்ளே தள்ளினோம் :-) (என்ன இதுக்காகவே சென்னையில் இருக்கனும் போல் தோனுமே). பில் எவ்வுளவு தெரியும், 103 ரூபாய்தான். நன்றாக உட்டுக்கட்டி விட்டு, வீடு திரும்பினோம்.

பின் குறிப்பு: பெசண்ட் நகர் முருகன் இட்லி கடைக்கு பக்கத்தில் ஒரு பேராபத்து உள்ளது. அது என்னவென்றால், பக்கத்தில்தான் Fab India என்று ஒரு பேமஸ் துணிக்கடை உள்ளது. என் மனைவி சாப்பிட்டு விட்டு அங்கே செல்வோம் என்று கூறினாள், நல்ல வேளை நாங்கள் சென்றபோது (சனி இரவு 9:30 மணி) கடையை மூடி விட்டார்கள், ஹப்பாடா தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டேன் :-) ஆதலால் பீச்சிலிருந்து வெளியே வரும் நேரத்தை 8 மணிக்கு மேல் திட்டமிட்டால், நீங்கள் தப்பித்து விடலாம் :-)

இப்படியாக எங்கள் சனிக்கிழமை மாலை அவுட்டிங் (காதலிப்பவர்களுக்கு டேட்டிங்) நிறைவு பெற்றது. மொத்த செலவு பைக் பெட்ரோல் போக வர 25 கிமீ: 25 ரூபாய், சுண்டல் + சோன்பப்டி: 25 ரூபாய், நைட் டிபன் செலவு: 103 ரூபாய், ஆக மொத்தம் 153 ரூபாய் ஆகியிருந்தது.

இப்போ சொல்லுங்க, என்னோட வழி சரியானதுதானே!! என்ன ஒவ்வொரு வாரமும் பீச்சிற்கே செல்ல முடியாது. அதனாலென்ன, ஒரு வாரம் வண்டலூர் சூ (zoo) போங்க, இன்னொரு வாரம் முட்டுக்காடு போட்டிங் போங்க, இன்னொரு வாரம் காந்தி மண்டபம், கிண்டி பார்க் போய்ட்டு வாங்க, இப்படியாக போனால் இயற்கையை ரசித்த மாதிரியும் இருக்கும், செலவை குறைத்த மாதிரியும் இருக்கும் :-) அவ்ளோதாங்க, பொசுக்குன்னு விண்டோவை க்ளோஸ் பண்ணிடாதீங்க.. நீங்க உங்க அனுபவங்களையும், யோசனையையும் சொல்லிட்டு போங்க!! :-)

Sunday, June 28, 2009

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - இன்றைய கிரிக்கெட் போட்டி - முன்னோட்டம்

இந்தியா டிவெண்ட்டி20 உலகக் கோப்பைத் தொடரில் சீக்கிரம் தோற்று வெளியேறிய போது வானத்திற்கும், பூமிக்குமாய் எகிறிக் குதித்தவர்களே, எங்கே இருக்கறீர்கள் நீங்களெல்லாம்? இப்போது சொல்லுங்கள், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் போட்டியை இந்தியா வென்று விட்டது. அநேகமாய் தொடரை வெல்லவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.

முதல் போட்டியின் யுவராஜ் பேட்டிங்கை பார்த்தீர்களா? சும்மா கிரிக்கெட் மட்டையை கதாயுதம் போல் கையாண்டு ரதகளப் படுத்தினார். ஜெரோம் டெய்லர் முதல் 5 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தவர், யுவராஜ் எனும் புயலில் சிக்கி ஆலை வாய் பட்ட கரும்பை போலாகி விட்டார். இரண்டு ஓவரில் 30 ரன்கள். இந்த போட்டியில் யுவராஜ் இறங்கினால், நான் விளையாட மாட்டேன் என்று அடம்பிடிகிறாராம் :-)

சரிதான், டெண்டுல்கர், சேவாக் இல்லை, பேட்டிங் வீக் என்று முடிவு செய்தவர்களுக்கு யுவராஜைத் தவிர தினேஷ் கார்த்திக், தோனி, பதான் போன்றவர்களும் தம் திறமையை நிரூபித்தனர். கம்பீர், ரோகித் ஷர்மாவும் நல்ல திறைமையான பேட்ஸ்மேன்களே, சீக்கிரம் பார்முக்கு வந்தால் இந்தியாவுக்கு நல்லது.

நமது பவுலிங்தான் வீக்காக உள்ளது. இஷாந்த் ஷர்மா சொதப்புகிறார், அவருக்கு பதிலாய் வேறு யாராவது வரலாம். ரவிந்திர ஜடேஜாவும் அவ்வுளவு எபெக்ட்டாக இல்லை, ரவி தேஜா வரலாம். பந்து வீச்சை பலப்படுத்தினால், தொடர் நமது பக்கம் எளிதாய் வந்து விழும்.

இன்றைய போட்டி இரவு 8 மணி இந்திய நேரத்துக்கு தொடங்குகிறது; பரபரப்பாய் இருக்குமென எதிர்பார்க்கலாம்! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!! :-)

Saturday, June 27, 2009

கால்டாக்சி - சென்னையின் வரப்பிரசாதம்

கால்டாக்சி என்பதற்கு தமிழில் என்ன என்று சொல்லுங்களேன். அழைப்பு சிற்றுந்து எனலாமா?

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆட்டோகாரர்களின் அட்டகாசம் பற்றி எழுதியிருந்தேன். 7 கிமீ தூரத்திற்கு 120 ரூபாய் கூசாமல் கேட்கிறார்கள்.

இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன். அது என்னவென்றால் ஆட்டோவில் இனிமே முடிந்தவரை பயணிக்க கூடாது. எங்கே போனாலும் பைக் அல்லது கால் டாக்சியில் போவதென்று முடிவெடுத்தாயிற்று.

சென்ற வாரம் நுங்கம்பாக்கம் ஓட்டல் பாம்க்ரோவில் உறவினர் இல்ல திருமண ரிஷப்ஷன் இருந்தது. குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம் என முடிவெடுத்து கால் டாக்சி (FAST TRACK) புக் செய்தோம். கரெக்டான நேரத்திற்கு வந்து மொபைலில் அழைத்தார் டிரைவர்.

உள்ளே அமர்ந்தவுடனேயே மீட்டர் ஆன் செய்யப்பட்டது. வேறு பேச்சே இல்லை. முதல் 5 கிமீ தூரத்திற்கு 100 ரூபாய். மேற்கொண்டு ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் 10 ரூபாய். வெயிட்டிங் சார்ஜ் (டிராபிக் சிக்னலில் வண்டி நின்றபோது) ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய். எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம்) நுங்கம்பாக்கம் ஹோட்டலுக்கு 10 கிமீ தூரத்திற்கு மீட்டர் காட்டிய தொகை 157 ரூபாய் கட்டி நிகழ்ச்சிக்கு சென்றோம்.

அருமையான சேவை, டாக்சி புக் செய்தவுடன், வண்டி எண், டிரைவர் பெயருடன் அவரது மொபைல் நம்பர் போன்ற விபரங்களுடன் SMS வந்தது.

மனதிற்கு நிறைவாய் இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திரும்பவும் கால் டாக்சியிலே திரும்பி வந்தோம்.

நாங்க இனிமே எங்க போனாலும் கால் டாக்சிதான், அப்ப நீங்க??

Wednesday, May 27, 2009

ஐ.டி (IT) துறையின் அபத்தங்கள் - 1




ஐ.டி மற்றும் பிபிஓ துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஆபீஸ் கார்கள், பஸ்கள் நிறைய உண்டு. சென்னை OMR ரோட்டில் இவை சர் சர்ரென்று பறப்பதை காணலாம், இப்படி ஒரு வண்டிதான் பத்து மாதத்திற்கு முன்பு என்னை பைக்கில் இருந்து கீழே தள்ளியது.

இவற்றின் பின் புற கண்ணாடியில் பார்த்தால் ஒரு வாக்கியம் கண்ணுக்கு புலப்படாத பொடி எழுத்துக்களில் எழுதியிருக்கும். "If this vehicle is driven rashly, please inform us. Ph:22000000". ஒருவன் வண்டியை கன்னா பின்னா வேகத்தில் ஓட்டிச் செல்லும் போது நமக்கு இந்த வாக்கியம் எப்படி கண்ணில் தென்படும்? எப்படி மக்கள் படித்து, புகார் சொல்ல இயலும்? இந்த எழுத்துக்களை பக்கத்தில் சென்று படித்தாலே பத்து நிமிடம் ஆகும். இந்த லட்சணத்தில் இப்படி எழுதி வைக்கலாம் என்று யோசனை கொடுத்த அறிவாளி யார்? இதை விடவும் அபத்தமான செயல் இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்களேன், இப்படி எழுதி வைத்திருப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ??

Wednesday, May 13, 2009

ஐபிஎல் - அழகிகளின் ஆட்டம் -- கார்ட்டூன்



ஹலோ.. யாரு லலித்மோடிங்களா?? நாங்க குன்னாம்பட்டி மாரியம்மன் கோவில்ல இருந்து பேசறோம்.. இன்னைக்கு கொடையில ஆட வேண்டிய கரகாட்ட குரூப் வரலைங்க.. ஐபிஎல்ல ஆடற சீயர் லீடர்ஸை (cheer leaders) கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுங்களா??

ஐபிஎல் - கொல்கட்டா அணி - கார்ட்டூன்




ஹலோ.. யாரு ஷாருக்கானா பேசறது???
நாங்க கேகேநகர் மூனாவது குறுக்கு சந்து
ராமசாமி கிரிக்கெட் கிளப்பில இருந்து
பேசறோம்.. இன்னைக்கு மேட்ச்சுக்கு ரெண்டு
பேரு குறையறாங்க.. கொஞ்சம் கங்குலியையும்,
மெக்கல்லமையும் அனுப்பி வைக்க முடியுங்களா??

சென்னை - திருச்சி: ஒரு மோசமான பேருந்து பிரயாணம்

சென்னையிலிருந்து திருச்சிக்கு வழக்கமாய் ரயிலில்தான் பயணம் செய்வோம். எப்போதாவது டிக்கெட் இல்லாவிட்டால் கேபிஎன்னில் புக் செய்து பயணிப்போம். இம்முறை திடீரென்று ஒரு வாரத்திற்கு முன்புதான் திருச்சி செல்லலாமென்று முடிவு செய்து வலையில் தேடினால் எதிலும் டிக்கெட் இல்லை.

அரசாங்க SETC யில் புக் செய்ய நேரில் செல்ல வேண்டும், மேலும் மே 1 - வெள்ளி, சனி, ஞாயிறு நீண்ட வாரயிறுதி ஆதலால் SETCயிலும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு குறைவே. இது போன்ற சமயங்களில் ரெட் பஸ் வெப்சைட்டில்தான் வழக்கமாய் ஆம்னி பஸ் புக் செய்வோம்.

சரியென்று நீண்ட நேரம் தேடி SSCM டிராவல்ஸ் என்ற பஸ்ஸில் வியாழன் இரவு 10 மணி பஸ், திரும்பி வர ஞாயிறு இரவு 10 மணி பஸ்ஸையும் புக் செய்து விட்டோம். எங்கள் போதாத நேரம் ஓரே சீட்டையே (எண் 7 & 8) செல்வதற்கும், திரும்பி வரவும் தேர்ந்து எடுத்திருந்தேன்.

வியாழன் இரவு சென்னை - அசோக் பில்லர் நிறுத்தத்தில் 10:15 க்கு ஏறிக்கொள்ள பதிவு செய்திருந்தோம். 10:15க்கு வரவேண்டிய பஸ், 11 மணிக்குத்தான் வந்தது, போன் செய்து கேட்டால் கோயம்பேடில் டிராபிக், அதனால்தான் லேட் என்றனர். அசோக் பில்லர் ஆம்னி பஸ் நிறுத்ததில் ஒரு வசதியும் இல்லை. கிட்டத்தட்ட 500 பேர் அந்த இரவில் நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு நிழற்குடை, சேர்கள் எதுவுமில்லாமல் இருக்கிறது.

ஒரு வழியாக வந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் அடுத்த தலைவலி ஆரம்பித்தது. சீட் எண் 7-ல் புஷ்பேக் வசதி சரியாக வேலை செய்யவில்லை. உட்கார்ந்து கொண்டே இரவு நேர பிரயாணம் என்பது கொடுமையான அனுபவம். கஷ்டப்பட்டு பிரயாணம் செய்தோம். பஸ்ஸின் உரிமையாளரும் அப்போது இருந்தார், அவரிடம் பிரச்சனையை கூறி பிறகு சரி செய்யக் கூறினேன். சரியென்று தலையாட்டினார். பிறகு பஸ் சென்னையை சுற்றி வேளச்சேரி சென்றது. அங்கிருந்து மேடவாக்கம் வழியே தாம்பரம் செல்ல 12 மணியாகி விட்டது.

இப்படியே ஊர் சுற்றிக் கொண்டு மெல்ல சென்று காலை 745 மணிக்கு திருச்சி தில்லைநகரில் இறக்கி விட்டனர். இரவு 11 மணிக்கு ஏறி காலை 745 வரை, கிட்டத்தட்ட 9 மணி நேரம் பயணம். இத்தனைக்கும் தூரமென்னவோ 300 கிமீ தான். மிகவும் மோசமான பயணம். இறங்கும் போது, டிரைவரிடமிடமும் புஷ்பேக் பிரச்சினையை சொல்லி சரி செய்ய நினைவு படுத்தினோம்.

ஞாயிறு இரவு திரும்பவும் அதே பஸ், அதே இருக்கையில் பயணித்தோம். சீட் சரி செய்யப் படவில்லை. டிரைவரும், செல்போனில் காண்டாக்ட் செய்த ஓனரும் சரியான பதில் தரவில்லை. திரும்பி வரும் போதும் இரவு 1030க்கு திருச்சியில் எடுத்து, காலை 8 மணிக்கு சென்னையில் இறக்கி விட்டனர்.

போதுமடா இந்த பிழைப்பு என்றாகி விட்டது. திரும்பவும் வாழ்க்கையில் SSCM டிராவல்ஸ் ஏறக்கூடாது என முடிவு செய்தேன். ரெட் பஸ் வெப்சைட்டில் மோசமான ரிவியூ கமெண்ட்டுகளை பதிவு செய்தேன். இதற்கு கன்ஸூயுமர் கோர்ட்டில் புகார் செய்யலாமா, அப்படி செய்தால் சீட் சரியில்லாததற்கு என்ன ஆதாரம் காட்ட முடியும் என்று சொல்லுங்களேன், எங்களிடம் டிக்கெட் பிரிண்டவுட் மட்டுமே இருக்கிறது.

Saturday, April 25, 2009

சென்னை ஆட்டோகாரர்களை என்ன செய்யலாம்?

எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம், சென்னை) கோயம்பேடு செல்ல நேரடி பஸ் வசதி கிடையாது. கிண்டி சென்று அங்கே வேறு பஸ் பிடித்து கோயம்பேடு செல்லலாம், ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் வளசரவாக்கம், சாலிகிராமம், சின்மயா நகர் வழியே குறுக்கே சென்றால் 7 கிமீ தூரம்தான், 15 நிமிடத்தில் சென்று விடலாம், டிராபிக் இருக்காது. எனவே ஆட்டோவில் செல்வதைத்தான் விரும்புவோம்.

ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்கு செல்ல கோயம்பேடு செல்ல எத்தணிக்கும் போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனருடன் பெரும் பேசமே நடக்கும். வாய் கூசாமல் பெரும்பாலானோர் 150 ரூபாய் கேட்கிறார்கள், எந்த ஊர் நியாயம் என்றே தெரியவில்லை. 7 கிமீ தூரத்திற்கு 150 ரூபாயா? நான் மும்பையில் இருந்த போது ஒரு கி.மீ தூரத்திற்கு 9 ரூபாய் கொடுத்ததாய் ஞாபகம். அந்த கணக்கில் பார்த்தால் 63 ரூபாய்தான் வருகிறது. இப்போது டீசல் விலை வேறு 4 ரூபாய் (இரு தடவையாய்) குறைந்து இருக்கிறது. கேட்டால் டிராபிக் இருக்கும், திரும்பி வர ஆள் இருக்காது என்று ஆயிரம் காரணங்கள் கூறுகிறார்கள். பேரம் பேசி 100 ரூபாய்க்கோ, 120 ரூபாய்க்கோ ஒவ்வொரு முறையும் செல்கிறோம்.

சென்னையில் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? மும்பையில், புனேயில் இப்படி இல்லையே, நியாயமாய் மீட்டர் போடுகிறார்களே. இவர்களை என்ன செய்தால் திருத்தலாம், யோசனை சொல்லுங்களேன்?

Friday, April 10, 2009

யாவரும் நலம் - திரைப்பார்வை

சத்யம் தியேட்டரில், நாங்களும் படத்தை பார்த்து விட்டோம்.

+
நல்ல, இயல்பான திரைக்கதை
பாசாங்கில்லாத, இயல்பான நடிப்பு
வித்தியாசமான கதை
திறமையான ஒலி, ஒளிப்பதிவு

-
ஏற்கனவே பலரும் கூறிய இரு சிறு தவறுகள்:
1. ஒரு பாட்டில், பீச்சில் மாதவன் குடும்பத்தினர் விளையாடும் போது வரும் காட்சியில் அருகில் உள்ள சாட் கடையில், ஹிந்தியில் பெயர் பலகை, மும்பையில் வசித்த எனக்கு ஜூஹூ பீச் என்று அப்பட்டமாக தெரிகிறது
2. மருத்துவமனையில், மாதவன் ஹிந்து பேப்பரை வாங்கி டிவி நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது தமிழில் தெரியும் நிகழ்ச்சி நிரல்

வேறொன்றும் தோன்றவில்லை, வித்தியாசமான, இயல்பான திகில் படம், நன்றாக எடுத்திருக்கிறார்கள்!

Wednesday, April 01, 2009

எனது நூறாவது இடுகை: தேசிகன்

வணக்கம் நண்பர்களே! இது, எனது நூறாவது இடுகை. வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்றரை வருடங்களுக்கு பிறகு, நூறாவது இடுகையை தற்போதுதான் எழுதியிருக்கிறேன். என்னுடைய சோம்பேறித் தனம்தான் இவ்வுளவு தாமதத்திற்கு காரணம். இவ்வுளவு தூரம் நான் தொடர்ந்து எழுதி வருவதே அதிசயம்தான். என்னுடைய ஒவ்வொரு இடுகைக்கும் வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களே, என்னை இன்னமும் தொடர்ந்து எழுத தூண்டுகின்றன என நினைக்கிறேன்.

2005 ஜூனில் வேலை குறைவாயிருந்த ஒரு அலுவலக மதியத்தில் பொழுது போகாமல் இணையத்தில் ‘Writer Sujatha Novels’ என்று தேடிய பொழுது வந்த ஒரு லிங்க் என்னை தேசிகனின் வலைத்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அவருடைய சில இடுகைகளை படித்தேன், அப்படியே அங்கிருந்து தமிழ்மணம் சென்று நிறைய இடுகைகளை படிக்க ஆரம்பித்தேன். நாமும் எழுதலாமே என்று ஆர்வம் வந்தது. தேசிகனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, எப்படி எழுதுவது என்று கேட்டு, ஒரு வழியாக 2005-ஆகஸ்டில் ஒரு வலைப்பதிவினை ஆரம்பித்தேன்.

எனது முதல் இடுகை - நண்பர்களுக்காக ஒரு பதிவு..

முதல் பின்னூட்டத்தினை, தேசிகன் அளித்தார் “சண்டை போடாமல் நிறைய எழுதுங்கள்”.

இன்று வரையிலும் இதை பின்பற்றி வருகிறேன். இதுவரையிலும் யாரிடமும் சண்டை போட்டதில்லை, எனது கருத்துகளை நாகரீகமாகவும், பிறர் மனம் புண்படாதவாறும்தான் இடுகையோ, பின்னூட்டமோ எழுதி வருகிறேன்.

வலைப்பதிவு ஆரம்பித்த போது ரொம்ப மஜாவாக இருந்தது. பெரிய எழுத்தாளராகி விட்டோம் என்று ஒரே மகிழ்ச்சி. பார்க்கும் நபரிடமெல்லாம் ப்ளாக் அட்ரஸைக் கொடுத்து, அவசியம் படித்து பின்னூட்டம் போடுங்கள் என்றேன். என்னைக் கண்டாலே அலறி அடித்து ஓட ஆரம்பித்தனர் என் நண்பர்கள் :-)

எனது முதல் இடுகைக்கு, தேசிகனைத் தவிர பாஸ்டன் பாலாவும், டோண்டுவும் பின்னூட்டினார்கள். நன்றி, வலைப்பதிவு முன்னோடிகளே!

ஆரம்பத்தில் சோம்பேறி பையன் என்ற பெயரில் எழுதினேன், பின் திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்தவுடன் பெயரை மாற்றிக் கொண்டேன் :-)

நிறைய வரவேற்பினை பெற்ற, எனது சில இடுகைகள்

நம்ம ஊர் திருச்சி
தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள்
தயாநிதி மாறன் - அன்றும் & இன்றும் - கார்ட்டூன்
மின் அஞ்சல் ரகசியங்கள்
அம்பியும், அன்னியனும்... Version 2.0
கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்
உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன்
சென்னையின் ப்ளஸ்கள்(+)
என் மனைவிக்காக, ஓர் கவிதை

வலைப்பதிவில் நான் சாதித்தது என்ன?

பெரிதாக ஒன்றுமில்லை. என் மனதுக்கு எழுத தோன்றியவற்றை எழுதினேன். கவிதை, கதை, சினிமா விமர்சனம், கார்ட்டூன், வாழ்க்கை அனுபவங்கள் என கலந்து கட்டி அடித்தேன். 2006 செப்டம்பரில் தேன்கூடு நடத்திய போட்டியில் கலந்து கொண்ட 80 இடுகைகளை படித்து விமர்சனம் செய்ததைத்தான் சாதனையாக கருதுகிறேன். வேலைப்பளுவிற்கு நடுவில் ஒரு 25 நாட்களில் 80 இடுகைகளை படித்து, விமர்சனம் எழுதி மதிப்பெண் அளிப்பது சுலபமானதல்ல என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என கருதுகிறேன்.

வலைப்பதிவின் ப்ளஸ்கள் (என நான் கருதுவது)

நம் எழுத்தை அச்சில் பார்க்கும் அல்ப சந்தோஷம்
நாம் நினைத்ததை எழுதி, ஆரோக்கியமாக விவாதிக்க முடிவது
பத்திரிக்கைகளில் படிக்க முடியாத கருத்துக்கள், விவாதங்களை படிக்க முடிவது

வலைப்பதிவின் மைனஸ்கள் (என நான் கருதுவது)

சில சமயங்களில், நாம் எழுதிய கருத்தை எதிர்ப்பதாய் நினைத்துக் கொண்டு, நம்மை எதிர்ப்பது
மொக்கை பதிவாயிருந்தாலும், நண்பர் எழுதியிருந்தால் வரிந்து வரிந்து பின்னூட்டமிடுவது
இடுகைகளிலும் மூலம் சாதி, மத, இன துவேஷம்
ஆபாச, தனிநபர் துவேஷ பின்னூட்டங்கள்

புதியவர்களுக்கு அறிவுரை
சண்டை போடாமல் நிறைய எழுதுங்கள் :-)

சமர்ப்பணம்
எனக்கு வலைப்பதிவு உலகத்தை அறிமுகப்படுத்தி, பதிய கற்றுத்தந்து, உற்சாகப்படுத்திய நண்பர் தேசிகனுக்கு, இந்த நூறாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.

நன்றிகள்

வலைப்பதிவு நண்பர்களே, நீங்கள் இதுவரை எனக்கு அளித்து வந்த ஆதரவிற்காகவும், இனிமேல் அளிக்கப்போகும் ஆதரவிற்கும் நன்றிகள் பலப்பல, இதுவரை வலைப்பதிவில் நான் பயணித்ததையும், இனிமேல் எப்படி பயணிக்க வேண்டும் என்பதையும், உங்கள் வலைப்பதிவு அனுபவங்களையும், உங்களது வேறு கருத்துகளையும், தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள். இவை என்னை உற்சாகப் படுத்தி, தொடர்ந்து எழுதச் செய்யும்.

நன்றி, மீண்டும் வாருங்கள்!!

இந்தியா - நியூசி டெஸ்ட் கிரிக்கெட் - 3வது போட்டி முன்னோட்டம்

இரண்டாவது போட்டியில் டிரா செய்தது பெரிய விஷயம். என்னதான் flat பிட்ச்சாக இருந்தாலும் இரண்டேகால் நாட்கள் விளையாடுவது என்பது சாதாரணமானதல்ல.

கம்பீர், லஷ்மணன், டிராவிட், சச்சின், யுவராஜ் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே. மூன்றாவது போட்டிக்கு தோனி அணிக்கு திரும்பி விடுவார் என எதிர்பார்க்கலாம்.

தினேஷ் கார்த்திக் கிடைத்த ஒரு வாய்ப்பையும் தவர விட்டு விட்டது வருத்தம்தான். இரண்டாவது போட்டியில் சேவக்கின் தலைமை சிலாகிக்கும்படி இல்லை. யுவராஜ் சிங் இரண்டு கேட்ச்சுகளை மிஸ் செய்யாமல் இருந்தால், போட்டியின் முடிவு வேறு மாதிரியும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

மூன்றாவது போட்டி நடக்கப்போகும் வெலிங்டன் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது, எனவே இந்தியா தொடரை வெல்ல அருமையான வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது.

சேவக் எல்லா பந்துகளை விளாச நினைப்பதை தவிர்க்கலாம். முதல் டெஸ்ட் வென்ற அதே அணியே மீண்டும் களமிறங்கலாம். இந்தியா பீல்டிங்கைல் அதிக கவனம் செலுத்த வேண்டும். பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சுகளில், பீல்டிங்கின் சிறு தவறுகள் கூட வெற்றிவாய்ப்பை தடுத்து விடும்.

பந்து வீச்சில் ஷாகிர், இஷாந்த், முனாப், ஹர்பஜன் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். தோனியின் தலைமை நிச்சயம் அணியை ஊக்குவிக்கும். யுவராஜ் பார்முக்கு திரும்பியுள்ளது நன்மையே.

மூன்றாவது போட்டியை வென்று, தொடரையும் வென்று சரித்திரம் படைக்க இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!

Tuesday, March 31, 2009

வடபழனி சரவணபவன்

சரவணபவன் உணவகம் சென்னையில் நிறைய இடங்களில் உள்ளன. ஆனாலும் வடபழனியில் சாப்பிடுவது இன்னமும் விசேஷமானது.

பக்கத்திலேயே பிரசித்தமான வடபழனி முருகன் கோவில் உள்ளது. கோவில் தூய்மையாக, அழகாக உள்ளது. திவ்யமான, திருப்தியான தரிசனத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு மாலைகளை தவிர்ப்பது உத்தமம். நாங்கள் வியாழன் மாலை சென்றோம், அதிக கூட்டமில்லை, பொறுமையாக முருகனிடம் உரையாட முடிந்தது.

சரவணபவனில் தென்னிந்திய, வட இந்திய உணவுகளும் கிடைக்கின்றன. தமிழக உணவு வகைகளில் இட்லி, தோசை, வடை போன்றவைகள் விதவிதமாய் கிடைக்கின்றன. நாங்கள் நெய் சாம்பார் இட்லி (மினி இட்லி 14 - நெய் சாம்பாரில் விட்டு), இடியாப்பம் மசாலா கறியுடன், மினி டிபன் (மினி தோசை, நெய் சாம்பார் இட்லி, கேசரி, உப்புமா) எல்லாம் சாப்பிட்டோம். அற்புதமாக இருந்தது, 170 ரூபாய் பில். முன்பொரு முறை அசோக் நகர் சரவண பவனில், சாப்பாடு சாப்பிட்டோம், அதுவும் நன்றாக இருந்தது.

நீங்கள் தரமான தமிழக டிபன் வகையறாக்களை சாப்பிட, சரவண பவன் செல்லலாம்.

உணவகத்தில் வாரியாரின் வெவ்வேறு புகைப்படங்கள், பெரிதாக மாட்டப் பட்டு இருந்தன. ஓரிரண்டு புகைப்படங்களில் அண்ணாச்சியும், பின்னாளில் ஜீவஜோதிக்காக ஜெயில் செல்லப் போவது தெரியாமல் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

எனது முந்தைய உணவிட வழிகாட்டு பதிவுகள்
மழைக் காடு - அடையார் - சென்னை
அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..

Tuesday, March 24, 2009

சுஜா(தா) தாட்ஸ்

கடந்த ஒரு வாரமாக சுஜாதாட்ஸ் என்ற புத்தகத்தை படித்து வருகிறேன்.

விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள புத்தகம் சுஜாதாட்ஸ். ஜூனியர் போஸ்ட்டில் 1997 - 1998ல் சுஜாதா எழுதிய கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டு உள்ளனர்.

வழக்கம் போலவே எல்லா விஷயங்களையும் தொட்டிருக்கிறார் சுஜாதா.

தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து விட்டு, நிஜ வாழ்க்கையை கவனியுங்கள் என்கிறார் சுஜாதா. அவர் கேபிள் இணைப்பே வைத்துக் கொள்ளவில்லை என்கிறார், வியப்பாக இருக்கிறது.


இன்னுமொரு கட்டுரையில், தமிழ் சொற்களை பற்றி ஆராய்கிறார். எழுத்தாளன் என்கிறோம், கொலையாளன் என்பதில்லை, கொலையாளி என்கிறோம், ஏன்? என கேட்கிறார். நீங்கள் யாராவது கூற முடியுமா?

மல்ட்டி மீடியா என்பதற்கு தமிழ் வார்த்தையாக ‘பல்லூடகம்’ என்கிறார்.

சிறுகதை ஆரம்பத்திற்கு சில மோசமான உதாரணங்களை காட்டி இருக்கிறார்.
“டுமில் என்று துப்பாக்கி ஒரு முறை உமிழ்ந்தது, சுகரிதா செத்து விழுந்தாள்”.

பெரும்பாலும் முதல் பாராவிலேயே கதையை ஆரம்பித்து விடுங்கள், சுவாரசியமாய் ஆரம்பத்தை அமைத்து, படிப்பவர்களை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார், சிறுகதை எழுத்தாளர்கள் கவனிக்கவும்.

இந்திய நடனங்களை பற்றி இன்னொரு இடத்தில் கிண்டலடிக்கிறார், ம்யூட் செய்து நடனத்தை பாருங்கள், அபத்தமாக இருக்கும் என்கிறார்.

ஆனாலும், எல்லா கட்டுரைகளுமே சுவாரசியமாக இருக்கின்றன என கூற முடிய வில்லை. கற்றதும், பெற்றதும் கட்டுரைகள் அளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

எல்லோரும் ரசித்து படிக்க முடியும் புத்தகம்!! நீங்கள் படித்திருக்கிறீர்களா? உங்களது கருத்து என்ன??

ஜூனியர் போஸ்ட் இப்போதும் வருகிறதா? இது என்ன தனி இதழா அல்லது இணைப்பா?

Saturday, March 14, 2009

அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..

செட்டிநாடு வகை சிறப்பு பலகாரங்களை, சுவையாக சாப்பிட வேண்டுமென்றால், நீங்கள் அடையாறு சங்கீதா உணவகத்திற்கு செல்லலாம்.
கிண்டியிலிருந்து வரும்போது, அடையார் மத்தியகைலாஷ் சிக்னலை தாண்டி, இடது புற சர்வீஸ் சாலையில் நுழைந்தால், ஒரு நிமிடத்தில் சங்கீதாவை அணுகலாம்.

வார இறுதி மாலை, இரவுகளில் கார் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம். சர்வீஸ் சாலையில்தான் நிறுத்த வேண்டும். டூ விலரில் செல்வது உத்தமம்.

குழிப் பணியாரம், இடியாப்பம் வடைகறி, அடை அவியல், கேரட் ஹல்வா, பீட்ரூட் போண்டோ, மகாராஜா ஸ்பெசல் மசால் தோசை, பீன்ஸ் வடை, கேரட் வடை, பால் கொழுக்கட்டை, தேங்காய்பால் ஆப்பம் போன்ற பல வகையான உணவுகளை ஒரு பிடி பிடிக்கலாம்.

விலையும், ரொம்ப இருக்காது. இன்று நானும், என் மனைவியும் சென்று ஒரு ஆந்திரா பெசரட்டு, அடை அவியல், இடியாப்பம், குழிப் பனியாரம், பீட்ரூட் போண்டோ எல்லாம் சாப்பிட்டோம், 181 ரூபாய் பில்.

சங்கீதா அடையாறில் மட்டுமல்லாமல், சென்னையில் வேறு சில இடங்களிலும் இருக்கிறது. ஒருமுறை முயற்சித்து பாருங்களேன்..

என்னுடைய சென்ற வார உணவிட வழிகாட்டு பதிவு: மழைக்காடு, அடையார்

Sunday, March 08, 2009

என் மனைவிக்காக, ஓர் கவிதை

அருகிலிருந்தால்
எந்நிமிடமும் ஊடல்தான்..
சிறுசிறு நிகழ்வுகளுக்காய்
நீயும், நானும்
கோபப் படுவோம்..
நீ அருகிலில்லா
இஞ்ஞாயிறு
ஏனோ போரடிக்கிறது..
ஒவ்வொர் நிமிடமும்
மெதுவாய் நகர்கின்றது..
சீக்கிரம் வாயேன்
என்னருமை மனைவியே,
அடுத்த ஊடலை
உடனே அவதானிப்போம்..

மழைக் காடு - அடையார் - சென்னை

அடையார் சிக்னலில் (flyover கீழே) அமைந்துள்ள உணவு விடுதி Rain Forest. உணவும், விடுதியின் சுற்றுப்புற சூழலும், வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது.

விடுதியின் கதவே, ஒரு பாதாள அறைக்குள் செல்வது போல் sliding wood ஆக அமைந்துள்ளது. உள்ளே சென்றால் மான் தலை, பாம்புகள், பறவைக் கூடுகள் என அருமையான அலங்கார பொருட்கள்.

உணவும் சுவையாக உள்ளது. உங்களுக்கு south indian, north indian, chinese என்று விதவிதமான உணவு வகைகள் கிடைக்கின்றன. ஒரு சைட் டிஷ் (side dish) ன் விலை சராசரியாக 100 ரூபாய் ஆகிறது. அளவு நிறையவே கிடைக்கிறது (quantity).

இதைவிடவும் பிரமாதமான விஷயம், நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கரடி, ஒற்றைக் கண்ணன் பேய் போன்ற விதவிதமான வேடங்களில் ஒருவர் வருகிறார்.

உங்கள் மனைவியை பயமுறுத்த, இதை விடவும் அருமையான தருணம் மனித உரிமை பேசும் இக்காலத்தில் கிடைப்பது அரிது :-)

இருவர் சென்று 500 ரூபாய்க்குள் திருப்தியாய் சாப்பிட்டு வரலாம்.

என்னங்க மழைக்காடுக்கு கிளம்பிட்டீங்களா, இருங்க ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க..

எஜமான் காலடி மண்ணெடுத்து..

இன்று காலை கே டிவியில் எஜமான் படம் க்ளைமேக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். நெப்போலியனை அடித்துப் போட்டு, கத்தியை அவரது மார்புக்கு அருகே சொருகி விட்டு, "நான் என்னைக்குமே பதவி, புகழுக்கு அலைஞ்சதில்லை.." என்று பேசிவிட்டு திரும்பி செல்கிறார், பின்னனியில் எஜமான் காலடி மண்ணெடுத்து பாட்டு ஒலிக்கிறது.

வெட்கத்தை விட்டு சொல்கிறேன், நான் தீவிர ரஜினி விசிறி அல்ல, ஆனாலும் எனக்கு இந்த காட்சியை பார்த்த போது புல்லரித்தது. மிகவும் ரசித்தேன். ரஜினியிடம் என்னை மாதிரி சாதாரண ரசிகனையும் கவர்ந்து இழுக்கக் கூடிய சக்தி அவரது நடிப்பால் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உதயகுமார், திறமையாய் காட்சி அமைத்ததையும் குறிப்பிட வேண்டும்.

எப்போது எஜமான் வந்தது, என தெரிய வில்லை. 1990ல் வந்திருக்கலாம். இன்றும் அந்த படத்தை பார்த்து ஒன்றி ரசிக்க முடிகிறது.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில், நான் படித்துக் கொண்டிருந்த போது ஒருமுறை டைரக்டர் உதயகுமர் ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார்.

எஜமான பட நினைவுகளை பற்றி கேட்கும்போது, ரஜினி மீனாவின் பேச்சை கேட்டு பட்டாம் பூச்சி புடிக்க செல்வாரல்லவா, அப்போது கிராம மக்களில் ஒருவர் 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா எதை வேணாலும் புடிப்பாரு' என்ற வசனம் வரும். ஆரம்பத்தில் அந்த வசனத்தை 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா கோட்டையையே புடிப்பாரு' என்றே உதயகுமார் அமைத்திருந்தாராம், ஆனால் ரஜினி கேட்டுக் கொண்டதால் மாற்றப் பட்டதாம்.

காலடி மண்ணெடுத்து வழிபடுவது போல் காட்டுவது ஓவராக தனிமனித வழிபாடாய் இருக்கிறதே என்று கேட்டோம், சரியாக பதிலளிக்காமல் நழுவி விட்டார்.

என்ன இருந்தாலும், ரஜினி இந்த படத்தில் கலக்கி விட்டார் அல்லவா??

NZ vs IND - இன்றைய போட்டியில் ஜெயிக்குமா இந்தியா?

இன்றைய ஞாயிற்றுக்கிழமை அற்புதமாக ஆரம்பித்தது. காலையில் அலாரம் வைத்து, 6 மணிக்கே எழுந்து விட்டேன். மேட்ச் துவங்கிய முதல் பாலிலிருந்து டிவியை விட்டு அங்கே இங்கே நகரவில்லை. சேவக் ஏமாற்றினாலும், சச்சின், யுவராஜ், தோனி, ரெய்னா என்று நியுசியை துவம்சம் செய்து விட்டர்கள். இந்தியா எடுத்த பேட்டிங் பவர்ப்ளேயில் 69 ரன்கள் குவித்ததெ, ஆட்டத்தின் திருப்பு முனை என கருதுகிறேன்.

இந்தியாவின் இறுதி ஸ்கோர் - 392/4. நியுசிலாந்து இதை சேஸ் செய்வது மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். வெட்டோரி இல்லாதது, அவர்களுக்கு ஒரு இழப்பே. முதல் போட்டியாதலால், அனுபவமில்லா கேப்டன் பவுலிங்கை மேனேஜ் செய்ய ரொம்பவும் கஷ்டப் பட்டார்.

பார்ப்போம், நியூசியின் பேட்டிங் வலுவானது, எனவே போட்டி சவாலாய் இருக்குமென நினைக்கிறேன். தற்போதைய ஸ்கோர் NZ: 203/5 (30.3 ov)

ஒரு பல்வலியும், சில பின்குறிப்புகளும்

ஒரு சுபயோக வெள்ளிக்கிழமை காலையில் எனக்கு பல்வலி ஆரம்பித்தது. மதியம் சாப்பிடவே முடியவில்லை, முதலில் சூட்டுக்கட்டி ஏதாவது வந்திருக்கும் என நினைத்தேன். வெள்ளி இரவு, வலி அதிகம் ஆனது. ஜூஸ் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன்.

சனிக்கிழமை மாலையில் பல் டாக்டரிடம் சென்றேன். வெற்றிச்செல்வன் இளைஞர், டாக்டர் என்றே நம்ப முடியவில்லை. ஆனால் அற்புதமாக என்னை கையாண்டார். பல் நோயாளிகளை பரிசோதிக்கும் இருக்கையில் என்னை சாய்மானமாக படுக்க வைத்து, சில பல கருவிகளை, மின் ஒளியின் ஊடே
கையாண்டு அங்கெ இங்கே தொட்டு அவனித்தார்.

பிறகு இருக்கைக்கு வந்து எனக்கு பொறுமையாய் படம் வரைந்து விளக்கினார். இப்போது பலருக்கும் தாடை அளவு குறுகி விட்டதால், 31,32 வது பற்கள் வெளிவருவதில்லையாம். இவற்றை ஞானப்பற்கள் (wisdom teeth) என்பார்களாம். சாதாரணமாய் இவை ஒரு மனிதனின் 25 வயதில் வெளிவந்து விடுமாம். ஆனால் தற்போது 10-ல் 7 பேருக்கு இவை வெளியே வருவதில்லையாம்.

நாம் பல் சுகாதாரத்தை முழுமையாய் கடைப்பிடிக்கா விடில், இப்பற்களில் ஒவ்வாமை (infection) ஏற்படுமாம். அப்படி ஏற்பட்ட ஒவ்வாமையால் இப்பகுதி எனக்கு கொஞ்சம் வீங்கி உள்ளது.

கொஞ்சம் சுகாதாரமாய் பல்லை பேணி வருமாறும், எனக்கு 2 tablets (Hagan - antibiatic, Nimulid - pain killer) - ம், tantrum oral rinse -ம் கொடுத்து தினமும் மூன்று முறை வாய் கொப்பளிக்க கூறினார்.

மேலும், எப்போதும் சாப்பிட்ட உடன், வாய் கொப்பளிக்க கூறினார். தினமும், காலை & மாலையில் பல் விளக்க கூறினார். வாய் கழுவுவதற்காக இருக்கும் oral rinser, mouth vash உபயோகப் படுத்த கூறினார்.

நாம் பின்பற்றப் போகிறேன், மக்களே நீங்களும் கவனமாய் பல்லை பேணுங்கள், வாழ்க்கையை அனுபவியுங்கள்!!

Wednesday, March 04, 2009

கவாஸ்கர் - இப்ப என்ன சொல்றீங்க?

இந்தியா இரு டி௨0 போட்டிகளிலும் தோற்றபோது, சுனில் கவாஸ்கர் கூறினார் (தினமலரில்), இந்தியாவிற்கு புதிய விதமான உடை (கரு ஊதா கலர்) ராசியில்லை, அதனால் தோற்று விட்டார்கள், இதனை பழைய விதமான உடைக்கே மாற்றி விட வேண்டும் என்று. இதை விடவும் அபத்தமான கருத்து இருக்க முடியாது.

இப்போது இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று விட்டது, அதே புதிய உடையில். இப்போது கவாஸ்கர் என்ன சொல்கிறார்??

உண்மையான காரணம், டி௨0 போட்டிகளில், நாம் போதுமான ரன்கள் எடுக்கவில்லை, பவுலிங்கும் எடுபட வில்லை. எனவே தோற்றோம்!!

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??

Saturday, February 28, 2009

ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சுஜாதா

இரண்டு நாட்களாய் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் சிறுகதைத் தொகுப்பை படித்து வருகிறேன். அனைத்து கதைகளுமே அட்டகாசமாய் இருக்கின்றன.

கதையை படிக்கும்போது, நம்மையுமே ஸ்ரீரங்கத்து சித்திரை வீதிகளிலும், தேரடி முட்டியிலும் கூடவே கூட்டிச் செல்கிறார். ஏதோ அவரது பக்கத்து வீட்டில் இருந்து அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

கடைசி இரண்டு கதைகளான காதல் கடிதம் மற்றும் மறு' வில் அவரது பாட்டியின் கேரக்டரைஷேஷன் அற்புதமானது, அது கதையல்ல நிஜமென்றே தோன்றுகிறது.

தெருமுனை விளையாட்டுகளை, முக்கியமாக தெரு கிரிக்கெட்டை மிக சுவாரசியமாக சுஜாதா ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும் என தோன்றுகிறது.

ரங்கு, அவரது கடை, கோபாலன், மல்லிகா, பத்தனா ஐயர், குண்டு ரமணி, வரது, வீர ராகவன், கிருஷ்ண மூர்த்தி போன்ற அவரது பாத்திரங்கள், இப்பதிவு எழுதும்போதும், இன்னும் வெகு நாட்களுக்கும் என் நினைவில் இருப்பார்கள்.

சுஜாதாவின் மற்ற நாவல்கள் சிலதையும் நான் படித்திருக்கிறேன், படித்து கொண்டிருக்கிறேன். எனக்கென்னவோ, மற்ற அவரது நாவல்களை விட ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு படி மேல் என்னை குதுகலப் படுத்துவதாகவே தோன்றுகிறது. இதில் வரும் நகைச்சுவை, சமூகப் பார்வைகள், நேரடி வர்ணணைகள், கதாபாத்திரங்கள் எல்லாமே மிகவும் பரிச்சயப் பட்டவை, நாம் நேரில் சந்தித்தவையாக இருக்கின்றன. மேலும் நம் அனைவரது சிறுவயது வாழ்க்கையை நினைவுபடுத்துவதும், ஒரு காரணம்.

என்றாவது ஒருநாள் பூவுலகை விடுத்து, மேலுலகு செல்லும் போது, நான் அங்கு சுஜாதாவை சந்திக்க நேர்ந்தால், இவ்வுளவு அற்புதமான வாசிப்பனுபவம் கொடுத்தற்காக, அவருக்கு சொல்லுவேன் "தேங்க்ஸ், ஸார்!!!".

Thursday, February 26, 2009

கிசுகிசு என்பது தமிழ்ச் சொல்லா??

இன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் போது பேருந்தில் பண்பலை வானொலி கேட்டுக் கொண்டிருந்தேன்.

பெரும் மோசடி செய்த பிரபல் ஐடி கம்பெனியின் பேரில் படமெடுத்த ஹீரோவை வைத்து அடுத்த படம் செய்ய யாரும் முன்வரவில்லையாம், அதனால் அவரே சொந்த படம் திரும்பவும் எடுக்கிறாராம்.

சரி அந்த கதையை விடுங்கள்.

கிசுகிசு என்பது தமிழ்ச்சொல்லா? இல்லையெனில், இதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன?

துணுக்கு - என்பதற்கான தமிழ்ச்சொல் என்ன?

கேரட் என்ற காய்கறியின் தமிழ்ச் சொல் என்ன? அப்படி ஏதும் இல்லையெனில், ஏன் இல்லை? கேரட், ஆப்பிள், பீன்ஸ் போன்ற காய்கறிகளுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்க வில்லை?

எல்லோரும் வந்து பதில் சொல்லுங்கள், விவாதிக்கலாம்!!

Wednesday, February 25, 2009

டி-௨0 கிரிக்கெட் - இந்தியா தோற்றது ஏன்?

  • சேவக் - கம்பிர் தொடக்க ஜோடி சரியாக விளையாடி ரன்கள் குவிக்க இயலாதது. கடந்த இரு ஆண்டுகளில், இந்தியா வெற்றிபெற்ற போட்டிகளில், இந்த ஜோடியின் பங்களிப்பு மகத்தானது.
  • இரண்டு போட்டியிலும் டாஸ் தோற்று, இந்தியா ஸ்கோர் சேஸ் பண்ண முடியாமல் போனது.
  • தோனியிடமிருந்து பெரிய அளவில் பங்களிப்பு இல்லை, அவரது டைமிங் இரண்டாவது போட்டியில், படு மோசம், முப்பது பந்துகளில், இருபத்தெட்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அவரால்.
  • சரியான திட்டமிடல் இல்லாதது. இரு போட்டிகளிலுமே பேட்டிங் ப்ளான் இல்லை.
  • இஷாந்த் ஷர்மா, ஷகீர் கான் கூட்டணி எதிர்பார்த்த அளவில் சோபிக்காதது.
  • ஒரு சரியான ஆல்ரவுண்டர் இல்லாதது.
  • பின் குறிப்பு: சில விமர்சனங்களில், இந்தியாவின் புதிய உடை ராசியில்லை என்று கூறுகிறார்கள். இன்று சுனில் கவாஸ்கர் கூட இதையே கூறி இருக்கிறார். இதை விட அபத்தமான காரணம் வேறெதுவும் இருக்க முடியாது.

Tuesday, February 24, 2009

எங்கே எனது கவிதை??

அருகருகே குடியிருந்தோம்..
நித்தமும்
ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்போம்..
வழமையாய் காலையில்
ஒரே மிதிவண்டியில் ஆற்றுக்கு செல்வோம்
செல்லும் போது நீயும்,
திரும்பும் போது நானும் ஓட்டுவோம்,
கேட்டால் எதிர்காற்றில் உன்னால் அழுத்த முடியாதென்பாய்..
என் பேனா மூடியில் பேப்பர் அடைத்து
கொண்டபோது, நீயே தண்ணீர் ஊற்றி எடுத்துத் தந்தாய்..
கிட்டிப் புல் விளையாடும் போது,
நான் எதிரணியில் இருந்தால்,
மெதுவாய் அடிப்பாய் நான் கேட்ச் பிடிக்க வசதியாய்..
ஏதாவது ஒரு பலகாரம் உங்கள் வீட்டில் செய்தால்,
உடனே எனக்கு கொடுக்க ஓடோடி வருவாய்..
உனக்கு ஓர் பம்பரம் வாங்கினால்,
எனக்கும் ஒன்று வாங்கி வருவாய் நான் கேட்காமலே..
வீட்டுப் பாடம் எழுத நேரமில்லா
சில மதிய உணவு இடைவேளைகளில்
எனக்காக நீ அவசரமாய் வாய்ப்பாட்டை சிலேட்டில் கிறுக்குவாய்..
உன் வீட்டிற்கு வரும் உறவினர் குழந்தைகளை
என் வீட்டிற்கும் அழைத்து வந்து
என்னை அறிமுகப் படுத்துவாய்..
பள்ளிக் கூடத்தில் எப்போதும் என்னருகே
அமர்ந்திருப்பாய்..
கோயிலுக்கும், சினிமாவுக்கும்,
சந்தைக்கும், விளையாட்டிற்கும்
நானில்லாமல் எங்கும் தனியாய் சென்றதில்லை நீ..
கல்லூரி பருவத்தில்
வேறிடத்தில் நீ படிக்க நேரிட்ட போதும்,
என்னுடன் தினமும் உரையாடுவாய்.
தினசரி கதைகளை தெரிவிப்பாய்..
இருவரும் நகரத்திற்கு வந்து
வேலையில் சேர்ந்தும் தொடர்பில் இருந்தோம்..
திருமணம், பிள்ளைப்பேறு,
வளைகாப்பு, மகளின் மஞ்சள் நீராட்டு
என வைபவங்கள்
உன் வீட்டிலும், என் வீட்டிலும் நடந்தேறின..
ஒவ்வொன்றிலும் என் ஆலோசனையை கேட்டாய் நீ..
இப்படியாய் நம் வாழ்வு
செவ்வனே சென்று கொண்டிருந்த போது
திடிரென, பூவுலகு எய்தினாய் நீ!!
நண்பா,
இத்தனை நாளாய் தினம் தினம்
பார்த்து, பழகிய உன் அருகாமை இல்லாமல்
வெறுமையாய் நகர்கிறது என் வாழ்வு,
எப்போது நாம் மீண்டும் சந்திப்போம்,
சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ?

Sunday, February 22, 2009

சன் டிவியே, மனசாட்சி இருக்கிறதா??

இன்று (ஞாயிறு) காலையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். தர்ம பத்தினியின் தொணதொணப்பு தாங்காமல் (ஹிஹிஹி, எப்போதும் கணிப்பொறியை கட்டிக் கொண்டு மாரடிக்கிறேனாம்), சற்று நேரம் கணிப்பொறியை மூடிவிட்டு, டிவியை ஆன் செய்தேன். நேரம் காலை ஒன்பது ஐம்பத்தைந்து.

சன் டிவியில் டாப் டென் மூவிஸ் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டாம் இடம் 'வெண்ணிலா கபடி குழு'வை பார்த்து ரசித்தேன். நல்ல படம்தான். அடுத்ததாக முதலிடம் பிடித்த படத்தை காட்டியபோது மிகுந்த அதிர்ச்சி. ஹார்ட் அட்டாக் வந்தது போலிருந்தது, கண்ணீர் கொட்டியது. ஏனென்றால் முதலிடமென் சன் டிவி அறிவித்த படம் 'படிக்காதவன்'.

படு மொக்கையான படம். பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. சன் டிவி பிக்சர்ஸ் வெளியீடு என்பதற்காக என்ன வேண்டுமானாலும் ரேங்கிக் குடுப்பதா? என்ன அநியாயம் இது? எப்படி ரேங்கிங்கை நிர்ணயிக்கிறார்கள்? இப்படித்தான் சில நாட்கள் முன்பு தெனாவட்டு, திண்டுக்கல் சாரதியையும் முதலிடத்தில் அறிவித்தார்கள்.

சன் டிவியே, உனக்கு மனசாட்சியே இல்லையா????

தேன்கூடு திரட்டி என்னானது?

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வலைப்பதிவு உலகத்திற்கு வந்திருக்கிறேன். எனது முந்தைய பதிவில் வலைப்பதிவு உலகத்தின் இந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி வினவி இருந்தேன். அதில் எவரும் தேன்கூடு திரட்டி பற்றி சொல்லவில்லை. யாராவது சொல்லுங்களேன், என்னானது இத்தளம்? 2007ல் தேன்கூடு திரட்டி மிக அருமையாக செயல் பட்டுக் கொண்டிருந்ததே, நிறைய போட்டிகள் எல்லாம் வைத்தார்களே. எங்கே போயிற்று தேன்கூடு?

Saturday, February 21, 2009

அஹம் பிரம்மாஸ்மி ? - நான் கடவுளா? - படம் குறித்த கேள்விகள்

1. ஆர்யா அட்டகாசமாக நடித்திருக்கிறார் அல்லது வாழ்ந்திருக்கிறார், ஆனால் அவரது கேரக்டர் முழுமை பெறாதது போல் தோன்றுகிறதல்லவா?

2. பூஜா, பாலாவின் முந்தைய கதாநாயகிகளையே ஞாபகப்படுத்துகிறார், முக்கியமாக பல இடங்களில், நந்தாவின் லைலாவையே பார்க்கும் படி இருப்பது, படத்தின் பலமா அல்லது பலவீனமா?

3. காவல் நிலையத்தில் நடக்கும் காமெடி காட்சி (மிமிக்ரி, எம்ஜிஆர் - சிவாஜி - நயந்தாரா டான்ஸ்) படத்தில் எவ்விதத்திலும் ஒட்ட வில்லையே?

4. பூஜா பாடுவதாக தோன்றும் சில பாடல்கள், வெவ்வேறு குரல்களில் வருகின்றனவே (வயதான குரல் பாடல்) அவருக்கு பொருந்த வில்லையல்லவா?

5. கிளைமேக்ஸில் பூஜாவின் சிதைந்த முகத்தில் மேக்கப் என்பது அப்பட்டமாக தெரிகிறதே, ஏன் இந்த இடறல்?

6. கடைசி காட்சியில் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான், எங்கே அவனது அடிப்பொடிகள், இன்ஸ்பெக்டர்?

இதற்கெல்லாம் பாலாதான் பதில் சொல்லவேண்டும் என்பதில்லை, இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்களேன்..

Thursday, February 19, 2009

பழைய பதிவர்களெல்லாம் எங்கே??

தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்து இருக்கிறேன், 2005-2006 ல் பார்த்து, படித்து பழகிய நிறைய பதிவர்களை தற்போதைய இடுகைகளில் சந்திக்க முடியவில்லை. அவர்க்ளெல்லாம் எங்கே சென்றார்கள், இன்றும் எழுதுகிறீர்களா??

1. கோ. கணெஷ்
2. டி.பி.ஆர். ஜோசப்
3. தருமி
4. துளசி கோபால்
5. ஞான வெட்டியான்
6. டுபுக்கு

இன்னும் பல பதிவர்கள் ஞாபகம் வரவில்லை. இவர்களின் links கொடுக்க முடியுமா?

தேன்கூடு திரட்டி தளம் என்னானது? தமிழ்மணத்தை தவிர வேறு aggregators வந்து பிரபலமாகி உள்ளதா??

போலி பிரச்சினை தீர்ந்து விட்டதா??

தமிழ் வலைப் பதிவில் வேறு ஏதாவது முன்னேற்றங்கள்? Improvements/updates/rules?

தயவுசெய்து சொல்லுங்களேன்...

Wednesday, February 18, 2009

வெண்ணிலா கபடி குழு - விமர்சனம் அல்ல

சென்னை ராமாபுரத்தில் இருப்பவர்களுக்கு மிக அருகே உயர்தர மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் எதுவும் கிடையாது. சத்யம் 12 km, ஐநாக்ஸ் 14 km, மாயாஜால் 30 km. கிண்டியிலோ, போரூரிலோ ஏன் எதுவும் இல்லை?

உதயம் 5 km ல் உள்ளது. இதை விட்டால், சாதாரண ஆனால் நல்ல தியேட்டர் வடபழனி கமலா, சாலிகிராமம் ஏவிஎம் ராஜேஸ்வரி என இரண்டும் உள்ளன.

இதில் கமலா தியேட்டருக்கு மட்டும் online booking வசதி உள்ளது (தற்போதிய படம்: வில்லு). உதயம் தியேட்டரில் வார இறுதியில் புதிய படம் பார்க்க, 2 - 3 நாட்கள் முன்பே நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் அனைத்து மல்டிப்ளெக்ஸ் மற்றும் சாதா தியேட்டர்களிலும் பைக் நிறுத்த Rs 10 டிக்கெட். ஐநாக்ஸில் Rs 15 என நினைக்கிறேன்.

இதை எல்லாம் அலசி ஆராய்ந்து ஏவிஎம் போக முடிவெடுத்தோம். ஒரு ஞாயிறு மாலை முதல் வகுப்பு டிக்கெட் Rs. 40 க்கு வாங்கி சென்றால் அரங்கமே நிரம்பி வழிகிறது. சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள் என்று கலந்து பட்ட கூட்டத்தில் படம் பார்ப்பதே ஓர் அற்புதமான அனுபவம்.

ஒரு வருடத்திற்கு முன்பு படம் பெயரை கேள்விப் பட்ட போதே படத்தை பார்க்க வேண்டும் என நினைத்து இருந்தேன். படத் தயாரிப்பாளர் ஒரு NRI யாம். எனது நண்பரின் நண்பராம்.

தியேட்டரில் இருக்கைகள் சற்று குறுகலாக உள்ளன. முன் சீட்டுகாரர் தலை மறைக்கிறது. ஆனால் காற்று நன்றாக வருகிறது. சரி, 40 ரூபாய்க்கு புஷ்பேக் சீட்டா கிடைக்கும் என்று சமாதானம் செய்து கொண்டேன்.

சரி படத்திற்கு வருவோம். படம் 35 mm மில் ஆரம்பித்த போது பயந்து விட்டேன், சரிதான் சின்ன பட்ஜெட் படம் என்று 35 mm மில் எடுத்து விட்டார்களா. ஆனால் கொஞ்ச நேரத்தில் ஆய் போகும் பசங்கள் பெரியவர்கள் ஆகும் போது விரியும் ஸ்க்ரீன் அழகு.

ஹீரோவும், ஹீரோயினும் கண்களால் பேசிக் கொள்வதை ரசிக்கலாம். ஒரு சில விமர்சனங்களில், இதை கிண்டல் செய்கிறார்கள். இதுதானே இயல்பு, இப்படித்தானே எங்கள் கிராமத்தில் இப்போதும் இளசுகள் பேசிக் கொள்கின்றன. அது போல் ஹீரோயின் கிராமத்து பெண்ணாயிருப்பினும் வாயாடிக்க வில்லையாம். யார் சொன்னது, எல்லா கிராமத்து பெண்களும் வாயாடிகள் என்று? பாதி கிராமத்து பெண்கள் அடக்கமான, அமைதியானவர்களே, நிறைய வெட்க படுபவர்களே. வேண்டுமானால் எங்கள் கிராமத்திற்கு வந்து பாருங்கள். மேலும் இந்த படத்தில் ஹீரோயின் மதுரை, டவுன் பெண்ணல்லவா.


கபடி ஆட்டத்தை இன்னும் பிரமாதமாய் காட்டியிருக்கலாம். ஒரே பாட்டில் சாதா அணி, சூப்பர் டீம் ஆவது சினிமாவில் மட்டுமே நடக்கும். ஹீரோ இயல்பாய் நடித்து இருக்கிறார். காமெடி நன்றாக இருக்கிறது. யதர்த்தமான கதை, திரைக்கதை. மக்களை குடும்பத்துடன் திரை அரங்கிற்கு அழைத்து வந்திருப்பது இயக்குனரின் வெற்றி.


திருவிழா கொண்டாட்டங்கள் அழகு. ஜாதி பற்றிய வசனங்கள் கைதட்டலை அள்ளுகின்றன. இசை, பரவாயில்லை.

படத்தின் ஊடே வரும் விரசமில்லா காமெடியை வாய் விட்டு சிரித்து ரசிக்கலாம். எல்லோரும் சொல்வது போல் பரோட்டா காமெடிதான் சூப்பர் என்றாலும், மேலும் நிறைய உள்ளன. ஸ்லோ சைக்கிள் ரேசில் படு வேகமாய் ஓட்டும் சீன், உரியடிக்கும் சீனில் மாமியார் மண்டையை உடைப்பது, படாத இடத்தில் பட்டுடப் போகுது என்று மனைவி சொல்லும் இடம், கபடி வீரரின் உறவு முறையை சொல்லும் மதுரைக் காரர் என அமர்க்களப் படுத்தியுள்ளனர்.

கபடி கோச் ஆக வருபவர் அசத்தி இருக்கிறார், "என்னடே சொல்லுதே, நீ ஆடுறியா" என்ற மொழி பிரயோகமும், உடல் அசைவுக்களுமாய் இயல்பாய் நடித்து இருக்கிறார்.

நடுவில் பக்கத்து ஊர் காரர்கள், பழைய பகையை தீர்க்க தண்ணி அடித்து கொண்டு சலம்பி கொண்டிருப்பதை அடிக்கடி காட்டும் போதே தெரிந்து விடுகிறது, அவர்கள் அடிக்க போவதில்லை என்று, இந்த சீன்களை வெட்டி இருக்கலாம்.

வழக்கமாய் துடுக்கு பெண்ணாய் வரும் சரண்யா, இதில் அடக்கமாய் வருவது வித்தியாசமாய், ரசிக்கும் படியாய் இருக்கிறது, well done madam!

கடைசியில் ஹீரோ ஏன் சாகிறார் என்று யாரும் தலையை பிய்த்து கொள்ள வேண்டாம், ஏதோ டைரக்டர் ஆசை பட்டு விட்டார், விட்டு விடுங்கள்.

வெண்ணிலா கபடி குழு - நின்று விளையாடி இருக்கிறது!!!