Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Saturday, September 01, 2012

பழூர் காராச்சேவு: மாணவர்கள் செய்வது சரியா? - ஆதங்கம்

புதிய வாசகர்களுக்கு முன்குறிப்பு:

பல செய்திகளை கலந்து என் கருத்துக்களோடு கொடுக்கும் பதிவுகளுக்கு காராச்சேவு என்று பெயர் வைத்திருக்கிறேன்.

எனக்கு பிடித்த இம்மாதிரி வகைத் தலைப்புகள்

  • கொத்து பரோட்டா (கேபிள் சங்கர்)
  • வானவில் (மோகன் குமார்)
  • அஞ்சறைப் பெட்டி (சங்கவி)


***

மாணவர்கள் செய்வது சரியா - ஒரு ஆதங்கம்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், மாணவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சாலையில் செல்லும் பேருந்தில் போட்ட ஆட்டம் இது. படத்தைப் பாருங்கள். இன்றைய தினமலரில் வந்த செய்தி இது.



இதில் என்ன தவறு, இதெல்லாம் ஒரு ஜாலிக்காக, நானும் கல்லூரிக் காலத்தில் இப்படி இருந்தவந்தான் என்பவர்களுக்கு சில சிந்தனைத் துளிகள்

1. மாணவர் தேர்தல் என்பது என்ன? கல்லூரியில் மாணவர்களை ரெப்ரசண்ட் பண்ண, அவர்களுக்காக குரல் கொடுக்க, சேவை செய்ய ஒரு தளம். அதில் வெற்றி பெற்றதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

2. அப்படியே நீங்கள் மகிழ்ச்சியின் விளைவாய் கொண்டாட விரும்பினாலும், கல்லூரியிலோ (அ) உங்கள் வீட்டிலோ (அ) ஒரு வளாகத்திலோ (ஹாஸ்டல்) அமைதியாக, மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் கொண்டாடலாமே?

3. இப்படி சாலையில் வந்து பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு செய்யலாமா? அதற்கு உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?

4. படத்தை மற்றுமொரு முறை பாருங்கள், பேருந்தில் இப்படி கூரைக்கு மேலேயும், பக்கவாட்டு ஜன்னல்களிலும் இருந்து கொண்டு பயணிக்கலாமா? உங்களது உயிருக்கு அல்லவா ஆபத்து?

5. ஒரு சில மாணவர்களைப் பாருங்கள், சட்டையை துறந்து வீரமாக போஸ் கொடுக்கின்றனர், இது ஒரு நாகரிகமான செயலா?

6. இவர்கள் ரோட்டில் ஆட்டம் போடுவதன் மூலம், பின்னால் வரும் வாகனங்களையும் அல்லவா தடுக்கின்றனர்.

இவையெல்லாம் உங்களை பெற்றெடுத்து, வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் உங்களை கல்லூரிக்கு அனுப்பி, அவன் பெரிய ஆளாக வருவான் என கனவு கண்டு கொண்டிருக்கும் பெற்றோருக்கு பெருமை சேர்க்குமா என்ன? நம்பிக்கை தருமா என்ன?

மாணவச் செல்வங்களே, இம்மாதிரி புகழ், பதவி, அரசியல் விளையாட்டுகள் தற்போது உங்களுக்கு வேண்டாம், படிப்பில் கவனம் செலுத்தி, முடித்து ஒரு வேலையை (அ) சுய தொழிலை தேடிக் கொள்ளுங்கள். அதில் வெற்றி பெற்று பிறகு மொத்தமாய் கொண்டாடலாம்!

***

கோவையில் டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி இருந்ததாம். ஒருவேளை நமது அரசாங்கமே மக்களின் மதுப் பழக்க வழக்கத்தை குறைக்க, இம்மாதிரி நடவடிக்கை எடுத்திருக்கிறதோ, என்னமோ!! இனிமே தமிழக அரசை யாரும் குறை கூற வேண்டாம் :)

***

வரதட்சினை கேட்போருக்கு 7 ஆண்டு சிறை - என மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறதாம். அப்படியா இந்த 2G, 3G ஊழல், நிலக்கரி, கிரானைட் ஊழலுக்கெல்லாம் ஏதெனும் சட்டம் கொண்டு வர திட்டம் உள்ளதா என்று யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்.

***

எனக்கு ஓட்டுகளில் நம்பிக்கை இல்லை, ஆனால் உங்கள் பின்னூட்டம் உங்கள் கருத்தை எனக்கு சொல்லும், என்னையும் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும். ஆதலால்...

***


நன்றி: படம் & தகவல்: தினமலர்

***

Friday, July 24, 2009

சில நிகழ்வுகள் & சில எண்ணங்கள்

1. ஆஷஸ் சீரிஸ்
முதல் போட்டியை தட்டுத்தடுமாறி இங்கிலாந்து டிரா செய்த போது, இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வெல்லும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் ப்ளிண்ட்டாப்பின் 5 விக்கெட்டுகள், ஸ்வானின் 4 விக்கெட்டுகள், ஸ்டாராசின் முதல் இன்னிங்ஸ் 161 போன்றவை இங்கிலாந்தின் ஹைலைட்ஸ். மொத்தத்தில் 2005 போல் இன்னொரு விறுவிறுப்பான ஆஷஸ் தொடர் நமக்காக காத்திருக்கிறது. இங்கிலாந்து இதை வென்று, ஓய்வு பெறும் பிளிண்ட்டாப்புக்கு பரிசாய் தருமா?

2. அச்சமுண்டு & நாடோடிகள்
இரண்டுமே சமீபத்தில் வந்து வரவேற்பை பெற்றுள்ள நல்ல படங்கள். இன்னும் நான் பார்க்க வில்லை. இம்மாதிரியான வித்தியாசமான, நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பது ஆரோக்கியமான நிகழ்வு. இந்த வார இறுதியில் பார்க்கலாமென்று சத்யம், ஐநாக்ஸ் இணைய தளத்தில் பார்த்தால் டிக்கெட் கிடைக்க வில்லை. இரு படங்களுமே இரு தியேட்டர்களிலும் ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே இருக்கிறது. அது ஏனென்று புரியவில்லை. இன்னும் கூடுதலாக வார இறுதிகளிலாவது காட்சிகள் வைக்கலாமே?

3. முதல்வரின் வீடு மருத்துவமனையாகிறது
இன்றுதான் செய்தித்தாளில் பார்த்தேன். முதல்வர் மற்றும் அவரது மனைவியின் வாழ்நாளிற்கு பிறகு, அவரது வீடு ஏழைகளுக்கு இலவசமாய் மருத்துவ வசதி அளிக்கும் மருத்துவமனையாய் மாறுகிறது. இதற்கு முதல்வர் அவரது குடும்பத்தினரிடமும் ஒப்புதல் பெற்று விட்டாராம். மிக அருமையான காரியத்தை செய்திருக்கும் முதல்வருக்கு, மனமார்ந்த பாராட்டுகள், இது ஒரு நல்ல தொடக்கமாய் இருக்கட்டும்.

4. பீகாரில் பெண் துன்புறுத்தல்
இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன விஷயமென்று தெளிவாய் தெரியவில்லை. ஒரு பெண்ணை நிறைய ஆண்கள் சேர்ந்து கொண்டு, மார்க்கெட் போன்ற ஒரு பகுதியில் துன்புறுத்துகிறார்கள். ஒருவர் கையை இழுக்கிறார், ஒருவர் அடிக்கிறார். டிராபிக் போலீஸ்காரர் வேறு வேடிக்கை பார்க்கிறார். அந்த பெண் தவறு செய்திருந்தாலும், காவல்துறையில் புகார் செய்யலாமே தவிர, நாமே சட்டத்தை கையில் எடுக்கலாமா? பெண் என்று இல்லை, ஆணாக இருந்தாலும் நாம் கும்பலாய் சேர்ந்து கொண்டு துன்புறுத்த சட்டத்தில் இடமில்லையை, மனிதாபிமானத்திலும் இடமில்லையே!!

Monday, June 29, 2009

சென்னை - ஒரு பொன்மாலைப் பொழுதில்..

நீங்கள் புதிதாய்/சமீபத்தில் திருமணமானவரா? சமீபத்தில் என்றால் பத்து வருடங்களுக்குள்ளா? ஒரு வாரயிறுதி மாலைப்பொழுதை, அதிக செலவில்லாமல் மகிழ்ச்சியாய் வெளியில் சென்று அனுபவிக்க ஆசைப்படுபவரா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானதே, மேலே படியுங்கள்! :-)

பெரும்பாலான பன்னாட்டு, உள்நாட்டு ஐடி, தொழில் நுட்ப கம்பெனிகளில், அரசு அலுவலகங்களில் சனி, ஞாயிறு இரு நாட்களும் விடுமுறை அளிக்கின்றனர். சனிக்கிழமை மாலையே உங்கள் துணைவியுடன், குழந்தைகளுடன் (இருந்தால்) வெளியே சென்று வர ஏற்ற சமயம். சனி மாலையென்றால் எல்லா தொ(ல்)லைக் காட்சி சானல்களிலும் உருப்படாத படங்களையும், எரிச்சலூட்டும் பாட்டு, டான்ஸ், அரட்டை நிகழ்ச்சிகளையும் போடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி வெளியே சென்று வருவதுதான் :-)

சரி வெளியே செல்லலாம் என்றால் எங்கே செல்வது? நீங்கள் ஸ்பென்சர், சிட்டி செண்டர் போன்ற மெகாமால்களுக்கு செல்லலாம், ஆனால் அங்கே சென்று வந்தால் நமது பர்ஸ் காலியாவது நிச்சயம். என்னதான், உங்களது மனைவி ‘சும்மா சென்று வரலாம், விண்டோ ஷாப்பிங் செய்வோம்’ என்று சொன்னாலும் மயங்கி விடாதீர்கள். அங்கெ சென்றால் ஆயிரத்தெட்டு offers போட்டிருப்பார்கள், அதாவது 4 ஜீன்ஸ் வாங்கினால் ஒரு ஜீன்ஸ் இலவசம் (4 ஜீன்ஸின் விலை ரூ 4000) மற்றும் 2 டிசைனர் சாரி வாங்கினால் ஒன்று இலவசம் (இரண்டு சாரியின் விலை ரூ 8000) போன்ற உட்டாலக்கடி offerகள்.

கழுதை, அதைக்கண்டால் நீங்களும் உங்கள் மனைவியும் மதிமயங்கி கண்டது, கடையது வாங்கித் தள்ளி விடுவீர்கள். கிரெடிட் கார்டு என்றொரு பூதம் இருப்பதால், நமக்கும் செலவழிப்பது தெரியாமல் கன்னாபின்னாவென்று ஸ்வைப் (ஸ்வைப் செய்வது - இதற்கு தமிழ்ச்சொல் என்ன?) செய்து விடுவோம். அதுவும் குழந்தைகளோடு சென்றால் கேட்கவே வேண்டாம், சும்மா அந்த பொம்மையை வாங்கிக்கொடு, இந்த டீசர்ட்டை வாங்கிக்கொடு என்று பிய்த்து பீராய்ந்து விடுவார்கள். இது மட்டுமல்லாமல், ஏதாவது திண்பண்டம் வேறு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஐஸ்கிரீம் எதை எடுத்தாலும், 50 ரூபாய்க்கு கீழே இருக்காது. என்னடா இது உலகமென்று, தர்க்க ரீதியாக யோசிக்கத் துவங்கி விடுவீர்கள் :-)

இதை விட்டுத் தள்ளுங்கள், சினிமாவிற்கு செல்லலாம் என்றால், அதுவும் அபாயகரமான யோசனைதான். சத்யம், மாயாஜால் போன்ற மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களுக்கு என்றால் உங்கள் கதி அதோ கதிதான், டிக்கெட் ஒன்றில் விலை 120 ரூபாய், குடும்பத்தில் 4 பேர் என்றால் 500 ரூபாய் காலி, இண்டர்வெல்லில் வழக்கம்போல் குழந்தைகளுக்காகவோ, மனைவிக்காகவோ கூல்டிரிங்க்ஸ், பாப்கார்ன், ஸ்னாக்ஸ் வகையறாக்கள் 200 ரூபாயாவது ஆகிவிடும். உதயம், கமலா போன்ற மிடில்கிளாஸ் தியேட்டர்களுக்கு சென்றால் ஒரளவுக்கு தப்பிக்கலாம் :-)

இதற்கெல்லாம் உள்ள ஒரே உத்தமமான மாற்று வழி கடற்கரைக்கு செல்வதுதான், சென்னை மக்களுக்கு கடவுள் தந்த செலவில்லாத மகத்தான பொழுதுபோக்கு தலம் பீச்தான்.
மெரினா பீச், சாந்தோம் பீச், பெசண்ட் நகர் பீச், திருவான்மியூர் பீச் என்று ஏராளமான கடற்கரைகள் நம்மை வா, வாவென்று அழைக்கின்றன. அற்புதமான கடற்காற்று உங்களை ஆபீஸ் மேனெஜர் தொல்லை, project deadline (இதற்கு தமிழில் என்ன?) கவலைகள், வீட்டுக்காரன் மிரட்டல் போன்ற லவூதீக விஷயங்களை தற்காலிமாய் மறக்க வைக்கும்  என்னதான் சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி, சோன்பப்டி வகையறாக்கள் வாங்கித் தின்றாலும், 100 ரூபாய்க்கு மேல் உத்தரவாதமாய் செலவில்லை.

இப்போது என் அனுபவத்தை சொல்கிறேன், கேளுங்கள் :-)

ஒரு ஜூன் மாத மழை பெய்யும் சனிக்கிழமை மாலையில் நாங்கள் வெளியே சென்று வர முடிவெடுத்தோம் (போன வாரந்தாங்க அந்த சனிக்கிழமை, ஒரு சுஜாதா effect측¸ இப்படி எழுதுறதுதான் இப்போ பேஷன் :-))

மாலை 5 மணிக்கு கிளம்பினோம், கிளம்பிய போது லேசாக தூறல் விழுந்தது, பத்து நிமிடம்தான். குளுகுளுவென்று சென்னை ஊட்டி போல் மாறிவிட்டது. பைக்கில் ராமாபுரத்திலிருந்து கிண்டி, அடையார் வழியே பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்றோம்.

டிராபிக் போலீசார் பீட் அமைத்து, டிராபிக்கை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். பைக் நிறுத்த தனியே இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. பைக்கை நிறுத்தி விட்டு, மாங்காய், பட்டாணி சுண்டல் 15 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டோம் (முன்பு 10 ரூபாய், இப்போது 15 ரூபாயாகி விட்டது, விற்றவரிடம் கேட்டால் விலைவாசி பற்றிய பொழிப்புரை கிடைக்குமென்பதால் வாயை மூடிக்கொண்டு நடையைக் கட்டினோம்).

அப்படியே ஹாயாக பீச்சில் நடந்து வந்து கடலோரமாய் அமர்ந்தோம். சுமார் ஒரு மணிநேரம் காற்று வாங்கிக் கொண்டே கதை பேசிக் கொண்டிருந்தோம். குழந்தைகளோடு வந்திருக்கும் குடும்பங்கள், மணலில் வீடு கட்டும் குழந்தைகள், இளம்பெண்ணை குதிரையில் ஏற்றிக்கொண்டு ஜாய்ரைடு (இந்த தலைப்பில் சுஜாதா கதையொன்று எழுதியிருக்கிறார், படித்திருக்கிறீர்களா?) செல்லும் குதிரைக்காரர், சுண்டல் விற்கும் பையன், வண்டியில் பெரிய பெட்ரோமாக்ஸை கட்டி மணியடித்துச் செல்லும் சோன்பப்டிகாரர், சோளத்தை சுட்டு தீயில் வித்தை காட்டும் வண்டிக்காரர் என்று பீச்சே குதூகாலமாய் இருந்தது.

சோன்பப்டி ஒன்று (10 ரூபாய் ஒரு பொட்டலம்) வாங்கி ருசித்தோம், சுமாராய்த்தான் இருந்தது. 10 ரூபாய் என்ற ரேட்டால் ஏற்கனவே என்னை திட்டிக் கொண்டிருந்த என் மனைவி (ஹிஹி, சும்மா செல்லமாத்தான் திட்டினாங்க) சோன்பப்டியின் சுமாரான டேஸ்ட்டால் பத்ரகாளியானாள், அதன்பின் நடந்ததை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் (எப்படித்தான் கரெக்டா ஏமாந்து போரீங்களோ, உங்க நெத்தியிலேயே எழுதியிருக்கே ஏமாற்றவர்ன்னு போன்ற வசனங்களை நீங்கள் யூகிக்கா விட்டால் நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை என்று அர்த்தம் :-)

8 மணிபோல் அங்கேயிருந்து கிளம்பி, பொடிநடையாய் நடந்து வந்து மாதா கோயில் அருகே உள்ள முருகன் இட்லி கடைக்கு சென்றோம். சுடச்சுட இட்லி, ஆனியன் ஊத்தாப்பம், ப்ளெயின் தோசை, மெதுவடை, வெள்ளைப் பனியாரம் போன்றவற்றை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சாம்பார் போன்றவைகளின் உதவியால் உள்ளே தள்ளினோம் :-) (என்ன இதுக்காகவே சென்னையில் இருக்கனும் போல் தோனுமே). பில் எவ்வுளவு தெரியும், 103 ரூபாய்தான். நன்றாக உட்டுக்கட்டி விட்டு, வீடு திரும்பினோம்.

பின் குறிப்பு: பெசண்ட் நகர் முருகன் இட்லி கடைக்கு பக்கத்தில் ஒரு பேராபத்து உள்ளது. அது என்னவென்றால், பக்கத்தில்தான் Fab India என்று ஒரு பேமஸ் துணிக்கடை உள்ளது. என் மனைவி சாப்பிட்டு விட்டு அங்கே செல்வோம் என்று கூறினாள், நல்ல வேளை நாங்கள் சென்றபோது (சனி இரவு 9:30 மணி) கடையை மூடி விட்டார்கள், ஹப்பாடா தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டேன் :-) ஆதலால் பீச்சிலிருந்து வெளியே வரும் நேரத்தை 8 மணிக்கு மேல் திட்டமிட்டால், நீங்கள் தப்பித்து விடலாம் :-)

இப்படியாக எங்கள் சனிக்கிழமை மாலை அவுட்டிங் (காதலிப்பவர்களுக்கு டேட்டிங்) நிறைவு பெற்றது. மொத்த செலவு பைக் பெட்ரோல் போக வர 25 கிமீ: 25 ரூபாய், சுண்டல் + சோன்பப்டி: 25 ரூபாய், நைட் டிபன் செலவு: 103 ரூபாய், ஆக மொத்தம் 153 ரூபாய் ஆகியிருந்தது.

இப்போ சொல்லுங்க, என்னோட வழி சரியானதுதானே!! என்ன ஒவ்வொரு வாரமும் பீச்சிற்கே செல்ல முடியாது. அதனாலென்ன, ஒரு வாரம் வண்டலூர் சூ (zoo) போங்க, இன்னொரு வாரம் முட்டுக்காடு போட்டிங் போங்க, இன்னொரு வாரம் காந்தி மண்டபம், கிண்டி பார்க் போய்ட்டு வாங்க, இப்படியாக போனால் இயற்கையை ரசித்த மாதிரியும் இருக்கும், செலவை குறைத்த மாதிரியும் இருக்கும் :-) அவ்ளோதாங்க, பொசுக்குன்னு விண்டோவை க்ளோஸ் பண்ணிடாதீங்க.. நீங்க உங்க அனுபவங்களையும், யோசனையையும் சொல்லிட்டு போங்க!! :-)

Saturday, June 27, 2009

கால்டாக்சி - சென்னையின் வரப்பிரசாதம்

கால்டாக்சி என்பதற்கு தமிழில் என்ன என்று சொல்லுங்களேன். அழைப்பு சிற்றுந்து எனலாமா?

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆட்டோகாரர்களின் அட்டகாசம் பற்றி எழுதியிருந்தேன். 7 கிமீ தூரத்திற்கு 120 ரூபாய் கூசாமல் கேட்கிறார்கள்.

இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன். அது என்னவென்றால் ஆட்டோவில் இனிமே முடிந்தவரை பயணிக்க கூடாது. எங்கே போனாலும் பைக் அல்லது கால் டாக்சியில் போவதென்று முடிவெடுத்தாயிற்று.

சென்ற வாரம் நுங்கம்பாக்கம் ஓட்டல் பாம்க்ரோவில் உறவினர் இல்ல திருமண ரிஷப்ஷன் இருந்தது. குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம் என முடிவெடுத்து கால் டாக்சி (FAST TRACK) புக் செய்தோம். கரெக்டான நேரத்திற்கு வந்து மொபைலில் அழைத்தார் டிரைவர்.

உள்ளே அமர்ந்தவுடனேயே மீட்டர் ஆன் செய்யப்பட்டது. வேறு பேச்சே இல்லை. முதல் 5 கிமீ தூரத்திற்கு 100 ரூபாய். மேற்கொண்டு ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் 10 ரூபாய். வெயிட்டிங் சார்ஜ் (டிராபிக் சிக்னலில் வண்டி நின்றபோது) ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய். எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம்) நுங்கம்பாக்கம் ஹோட்டலுக்கு 10 கிமீ தூரத்திற்கு மீட்டர் காட்டிய தொகை 157 ரூபாய் கட்டி நிகழ்ச்சிக்கு சென்றோம்.

அருமையான சேவை, டாக்சி புக் செய்தவுடன், வண்டி எண், டிரைவர் பெயருடன் அவரது மொபைல் நம்பர் போன்ற விபரங்களுடன் SMS வந்தது.

மனதிற்கு நிறைவாய் இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திரும்பவும் கால் டாக்சியிலே திரும்பி வந்தோம்.

நாங்க இனிமே எங்க போனாலும் கால் டாக்சிதான், அப்ப நீங்க??

Saturday, April 25, 2009

சென்னை ஆட்டோகாரர்களை என்ன செய்யலாம்?

எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம், சென்னை) கோயம்பேடு செல்ல நேரடி பஸ் வசதி கிடையாது. கிண்டி சென்று அங்கே வேறு பஸ் பிடித்து கோயம்பேடு செல்லலாம், ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் வளசரவாக்கம், சாலிகிராமம், சின்மயா நகர் வழியே குறுக்கே சென்றால் 7 கிமீ தூரம்தான், 15 நிமிடத்தில் சென்று விடலாம், டிராபிக் இருக்காது. எனவே ஆட்டோவில் செல்வதைத்தான் விரும்புவோம்.

ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்கு செல்ல கோயம்பேடு செல்ல எத்தணிக்கும் போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனருடன் பெரும் பேசமே நடக்கும். வாய் கூசாமல் பெரும்பாலானோர் 150 ரூபாய் கேட்கிறார்கள், எந்த ஊர் நியாயம் என்றே தெரியவில்லை. 7 கிமீ தூரத்திற்கு 150 ரூபாயா? நான் மும்பையில் இருந்த போது ஒரு கி.மீ தூரத்திற்கு 9 ரூபாய் கொடுத்ததாய் ஞாபகம். அந்த கணக்கில் பார்த்தால் 63 ரூபாய்தான் வருகிறது. இப்போது டீசல் விலை வேறு 4 ரூபாய் (இரு தடவையாய்) குறைந்து இருக்கிறது. கேட்டால் டிராபிக் இருக்கும், திரும்பி வர ஆள் இருக்காது என்று ஆயிரம் காரணங்கள் கூறுகிறார்கள். பேரம் பேசி 100 ரூபாய்க்கோ, 120 ரூபாய்க்கோ ஒவ்வொரு முறையும் செல்கிறோம்.

சென்னையில் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? மும்பையில், புனேயில் இப்படி இல்லையே, நியாயமாய் மீட்டர் போடுகிறார்களே. இவர்களை என்ன செய்தால் திருத்தலாம், யோசனை சொல்லுங்களேன்?

Tuesday, March 31, 2009

வடபழனி சரவணபவன்

சரவணபவன் உணவகம் சென்னையில் நிறைய இடங்களில் உள்ளன. ஆனாலும் வடபழனியில் சாப்பிடுவது இன்னமும் விசேஷமானது.

பக்கத்திலேயே பிரசித்தமான வடபழனி முருகன் கோவில் உள்ளது. கோவில் தூய்மையாக, அழகாக உள்ளது. திவ்யமான, திருப்தியான தரிசனத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு மாலைகளை தவிர்ப்பது உத்தமம். நாங்கள் வியாழன் மாலை சென்றோம், அதிக கூட்டமில்லை, பொறுமையாக முருகனிடம் உரையாட முடிந்தது.

சரவணபவனில் தென்னிந்திய, வட இந்திய உணவுகளும் கிடைக்கின்றன. தமிழக உணவு வகைகளில் இட்லி, தோசை, வடை போன்றவைகள் விதவிதமாய் கிடைக்கின்றன. நாங்கள் நெய் சாம்பார் இட்லி (மினி இட்லி 14 - நெய் சாம்பாரில் விட்டு), இடியாப்பம் மசாலா கறியுடன், மினி டிபன் (மினி தோசை, நெய் சாம்பார் இட்லி, கேசரி, உப்புமா) எல்லாம் சாப்பிட்டோம். அற்புதமாக இருந்தது, 170 ரூபாய் பில். முன்பொரு முறை அசோக் நகர் சரவண பவனில், சாப்பாடு சாப்பிட்டோம், அதுவும் நன்றாக இருந்தது.

நீங்கள் தரமான தமிழக டிபன் வகையறாக்களை சாப்பிட, சரவண பவன் செல்லலாம்.

உணவகத்தில் வாரியாரின் வெவ்வேறு புகைப்படங்கள், பெரிதாக மாட்டப் பட்டு இருந்தன. ஓரிரண்டு புகைப்படங்களில் அண்ணாச்சியும், பின்னாளில் ஜீவஜோதிக்காக ஜெயில் செல்லப் போவது தெரியாமல் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

எனது முந்தைய உணவிட வழிகாட்டு பதிவுகள்
மழைக் காடு - அடையார் - சென்னை
அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..

Saturday, March 14, 2009

அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..

செட்டிநாடு வகை சிறப்பு பலகாரங்களை, சுவையாக சாப்பிட வேண்டுமென்றால், நீங்கள் அடையாறு சங்கீதா உணவகத்திற்கு செல்லலாம்.
கிண்டியிலிருந்து வரும்போது, அடையார் மத்தியகைலாஷ் சிக்னலை தாண்டி, இடது புற சர்வீஸ் சாலையில் நுழைந்தால், ஒரு நிமிடத்தில் சங்கீதாவை அணுகலாம்.

வார இறுதி மாலை, இரவுகளில் கார் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம். சர்வீஸ் சாலையில்தான் நிறுத்த வேண்டும். டூ விலரில் செல்வது உத்தமம்.

குழிப் பணியாரம், இடியாப்பம் வடைகறி, அடை அவியல், கேரட் ஹல்வா, பீட்ரூட் போண்டோ, மகாராஜா ஸ்பெசல் மசால் தோசை, பீன்ஸ் வடை, கேரட் வடை, பால் கொழுக்கட்டை, தேங்காய்பால் ஆப்பம் போன்ற பல வகையான உணவுகளை ஒரு பிடி பிடிக்கலாம்.

விலையும், ரொம்ப இருக்காது. இன்று நானும், என் மனைவியும் சென்று ஒரு ஆந்திரா பெசரட்டு, அடை அவியல், இடியாப்பம், குழிப் பனியாரம், பீட்ரூட் போண்டோ எல்லாம் சாப்பிட்டோம், 181 ரூபாய் பில்.

சங்கீதா அடையாறில் மட்டுமல்லாமல், சென்னையில் வேறு சில இடங்களிலும் இருக்கிறது. ஒருமுறை முயற்சித்து பாருங்களேன்..

என்னுடைய சென்ற வார உணவிட வழிகாட்டு பதிவு: மழைக்காடு, அடையார்

Sunday, March 08, 2009

மழைக் காடு - அடையார் - சென்னை

அடையார் சிக்னலில் (flyover கீழே) அமைந்துள்ள உணவு விடுதி Rain Forest. உணவும், விடுதியின் சுற்றுப்புற சூழலும், வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது.

விடுதியின் கதவே, ஒரு பாதாள அறைக்குள் செல்வது போல் sliding wood ஆக அமைந்துள்ளது. உள்ளே சென்றால் மான் தலை, பாம்புகள், பறவைக் கூடுகள் என அருமையான அலங்கார பொருட்கள்.

உணவும் சுவையாக உள்ளது. உங்களுக்கு south indian, north indian, chinese என்று விதவிதமான உணவு வகைகள் கிடைக்கின்றன. ஒரு சைட் டிஷ் (side dish) ன் விலை சராசரியாக 100 ரூபாய் ஆகிறது. அளவு நிறையவே கிடைக்கிறது (quantity).

இதைவிடவும் பிரமாதமான விஷயம், நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கரடி, ஒற்றைக் கண்ணன் பேய் போன்ற விதவிதமான வேடங்களில் ஒருவர் வருகிறார்.

உங்கள் மனைவியை பயமுறுத்த, இதை விடவும் அருமையான தருணம் மனித உரிமை பேசும் இக்காலத்தில் கிடைப்பது அரிது :-)

இருவர் சென்று 500 ரூபாய்க்குள் திருப்தியாய் சாப்பிட்டு வரலாம்.

என்னங்க மழைக்காடுக்கு கிளம்பிட்டீங்களா, இருங்க ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க..