Sunday, November 29, 2009

கற்றது தமிழ் (மட்டுமல்ல)

இன்று மாலை கலைஞர் தொலைக்காட்சியில் 'கற்றது தமிழ்' திரைப்படத்தை ஒளிபரப்பினார்கள். சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

சில காட்சிகள், வசனங்கள் நன்றாக இருந்தன, இருந்தாலும் ஒரு டாகுமெண்டரி படம் போலத்தான் இருந்தது.

கருணாஸ் ஜீவாவிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதும், தப்பிக்க வழி தேடுவதும், நண்பரிடம் மொபைலில் பேசுவதும் இயல்பாய் இருந்தது.

ஆனந்தியின் 'நிஜமாத்தான் சொல்றீயா?' வசனமும், காட்சிப் படுத்திய விதமும் அருமை!




மகாராஷ்டிராவில் ஒரு குக்கிராமத்துக்கு ஆனந்தியை தேடிச் செல்வதும் நன்றாக காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. நானும் முன்பு மகாராஷ்டிராவில் (மும்பை மற்றும் புனே) பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு சில கிராமங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு காட்சியில் மகாராஷ்டிரா மாநில சிவப்பு நிற அரசு பேருந்தை பார்த்தவுடன் எனக்கு நிறைய பழைய ஞாபகங்கள் வந்து அலை மோதின.

படத்தில் தமிழை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள நினைப்பவனையும், அதனை சமூகம் ஏளனப் படுத்துவதையும் காட்டியிருக்கிறார்கள். அக் கருத்து உண்மைதானல்லவா? இன்று தமிழ் மட்டும் படித்தவனுக்கு என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது. எம். ஏ, எம் பில் தமிழ் படித்தால் ஏதேனும் பல்கலைக்கோ, கல்லூரிக்கோ பேரசிரியாராய் செல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவல்லவா? சினிமாவுக்கு பாட்டெழுத தமிழ் பட்டப் படிப்பு தேவையில்லை என நினைக்கிறேன். தமிழ் மட்டுமே படித்து தற்காலத்தில் பிழைக்க முடியாது என்றே கருதுகிறேன்.

ஆதலால் ஏதேனும் தொழில் நுட்ப அறிவு அவசியம் தேவை. பிற மாநில/நாட்டு மக்களுடன் உரையாடுவதற்கு ஆங்கில மொழியறிவும் அவசியம் என்றே கருதுகிறேன்.

தமிழ் மட்டுமே படித்தவருக்கு வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் இருக்கிறதா என்று கூறுங்களேன்!

Sunday, November 22, 2009

யாருமற்ற ஞாயிறு

மதிய வெயில்
மவுனமாய் பொழியும்
ஞாயிறன்று
இணையத்தில்
அர்த்தமற்று தேடும்போதுதான்
உணர்ந்தேன்
உந்தன் பிரிவை!!

<<>>

நீ
நான்
மற்றும்
வேறு எவரிமில்லா
பிரபஞ்சம்
இவை போதுமெனக்கு,
வெறெதுவும் வேண்டாம்!

<<>>

என் உயிரில்லாவிடினும்
நான் உயிர் வாழ்வேன்,
உன் உயிர் என்னிலல்லவா
கலந்திருக்கிறது!

<<>>

பணம்,
புகழ்,
அழகு,
செல்வாக்கு
அதிகாரம்
மது
மாது
சூதாடுதல்
என
எல்லா போதைகளையும்
விட
அதிகமானது
காதலெனும் போதை!

Sunday, November 15, 2009

சன் டிவி - பெப்ஸி கலை நிகழ்ச்சிகள் - சில கேள்விகள்

சன் டிவி சனி, ஞாயிறு என்று ப்ரைம் டையத்தில் ஒளிபரப்ப இருந்த போதே நினைத்தேன், விளம்பர மழை பொழியப் போகிறதென்று! அதேதான் நடந்தது! இரண்டு நிகழ்வுகளுக்கொரு முறை விளம்பரம், இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கு முன்பு அடுத்து வரப்போவது என்று இரண்டு நிமிடங்களுக்கு ப்ரீவியு கொடுத்ததுதான் :-)

என்ன செய்வது, என் சகதர்மினி இதைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். வெளியே வேறு மழை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. சுஜாதாவின் வண்ணத்துப் பூச்சியின் வேட்டை புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டேன்.

டி. ராஜேந்தர் மேடையில் கலக்கினார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வந்ததை குறிப்பிட்ட அவர், முதல் படமான உயிரில்லவரை உஷாவிலிருந்து ஒரு பாடலைப் பாடி, பிறகு வாயாலும் ம்யூசிக் கொடுத்து திகிலடித்தார். பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, விஜயிலிருந்து ஸ்ரேயா வரை விழுந்து விழுந்து ஏன் சிரித்தனர், என்று புரியவில்லை :-)

கவுண்டமணி வந்து எல்லோருக்கும் நன்றி சொல்லி, அவர் ஸ்டைலில் சலம்பினார், உற்சாகபானம் சாப்பிட்டிருப்பார் போல் தெரிந்தது.

சிம்புவும், நயன் தாராவும் அருகருகே உட்கார்ந்து கொண்டு, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன திரும்பவும் ராசியாகி விட்டார்களா என்று தெரியவில்லை :-) இன்னொரு வல்லவன் படம் வருமா?

திடிரென்று பார்த்தால் ஆர்யா நயன் தாரவுக்கும், ஸ்ரேயாவுக்கும் மத்தியில் உட்கார்ந்து கொண்டிருந்தார், சிம்பு பாதியில் சென்று விட்டாரா?

விழா மொத்தமே 3 மணி நேரம் தான் நடந்திருக்கும், அதை 7 மணி நேரத்திற்கு ஓளிபரப்பும் திறமை சன் டிவிக்கு மட்டுமே வரும்!!

நடுவில் திடிரென்று நளினி, குயிலி, அனுராதா போன்ற முன்னாள் நாயகிகள் நடனமாடி பயமுறுத்தினார்கள். இந்த ஐடியா யார் கொடுத்தது என்று தெரியவில்லை, நிச்சயமாய் சண்டிவியில் பேப்பர் போட்டிருப்பார் (ரிசைனிங் லெட்டர் கொடுத்து, ரிலிவீங் பீரியடில் இருப்பவர்) என்று நினைக்கிறேன் :-)

நடுவில் பிரபு வந்து ஏதோ கோபமாய் பேசினார் (என்னவென்று சரியாக புரியவில்லை). என்னால்தான் விஜய், சூர்யா வந்தார்கள் என்றார். அவர்களை கேமிராவில் காமியுங்கள் என்றார். வஞ்சப் புகழ்ச்சி அணியா??

இந்த கலைநிகழ்ச்சிகளின் மூலம் வசூலான பணத்தைக் கொண்டு, ஏழைத் தொழிலாளர்களுக்காக ஏதோ கட்டடம் கட்டப் போகிறார்கள் என நினைக்கிறேன், நோக்கம் நல்ல விதமாய் நிறைவேறினால் சரி!!

Sunday, August 30, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

சில நேரங்களில் இணையம்
சில நேரங்களில் தொலைக்காட்சி
சில நேரங்களில் சுஜாதா நாவல்கள்
சில நேரங்களில் செல்பேசியில் உரையாடல்கள்
சில நேரங்களில் வண்டியில் பயணம்
சில நேரங்களில் உணவருந்துதல்
இத்தனை இருப்பினும்
எந்நேரமும் உன் நினைவுதான்,
சீக்கிரம் வாடி என்னருமை மனைவியே
செல்ல சண்டைகளை
விட்ட இடத்திலிருந்து தொடரலாம்!

Friday, July 24, 2009

சில நிகழ்வுகள் & சில எண்ணங்கள்

1. ஆஷஸ் சீரிஸ்
முதல் போட்டியை தட்டுத்தடுமாறி இங்கிலாந்து டிரா செய்த போது, இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வெல்லும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் ப்ளிண்ட்டாப்பின் 5 விக்கெட்டுகள், ஸ்வானின் 4 விக்கெட்டுகள், ஸ்டாராசின் முதல் இன்னிங்ஸ் 161 போன்றவை இங்கிலாந்தின் ஹைலைட்ஸ். மொத்தத்தில் 2005 போல் இன்னொரு விறுவிறுப்பான ஆஷஸ் தொடர் நமக்காக காத்திருக்கிறது. இங்கிலாந்து இதை வென்று, ஓய்வு பெறும் பிளிண்ட்டாப்புக்கு பரிசாய் தருமா?

2. அச்சமுண்டு & நாடோடிகள்
இரண்டுமே சமீபத்தில் வந்து வரவேற்பை பெற்றுள்ள நல்ல படங்கள். இன்னும் நான் பார்க்க வில்லை. இம்மாதிரியான வித்தியாசமான, நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பது ஆரோக்கியமான நிகழ்வு. இந்த வார இறுதியில் பார்க்கலாமென்று சத்யம், ஐநாக்ஸ் இணைய தளத்தில் பார்த்தால் டிக்கெட் கிடைக்க வில்லை. இரு படங்களுமே இரு தியேட்டர்களிலும் ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே இருக்கிறது. அது ஏனென்று புரியவில்லை. இன்னும் கூடுதலாக வார இறுதிகளிலாவது காட்சிகள் வைக்கலாமே?

3. முதல்வரின் வீடு மருத்துவமனையாகிறது
இன்றுதான் செய்தித்தாளில் பார்த்தேன். முதல்வர் மற்றும் அவரது மனைவியின் வாழ்நாளிற்கு பிறகு, அவரது வீடு ஏழைகளுக்கு இலவசமாய் மருத்துவ வசதி அளிக்கும் மருத்துவமனையாய் மாறுகிறது. இதற்கு முதல்வர் அவரது குடும்பத்தினரிடமும் ஒப்புதல் பெற்று விட்டாராம். மிக அருமையான காரியத்தை செய்திருக்கும் முதல்வருக்கு, மனமார்ந்த பாராட்டுகள், இது ஒரு நல்ல தொடக்கமாய் இருக்கட்டும்.

4. பீகாரில் பெண் துன்புறுத்தல்
இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன விஷயமென்று தெளிவாய் தெரியவில்லை. ஒரு பெண்ணை நிறைய ஆண்கள் சேர்ந்து கொண்டு, மார்க்கெட் போன்ற ஒரு பகுதியில் துன்புறுத்துகிறார்கள். ஒருவர் கையை இழுக்கிறார், ஒருவர் அடிக்கிறார். டிராபிக் போலீஸ்காரர் வேறு வேடிக்கை பார்க்கிறார். அந்த பெண் தவறு செய்திருந்தாலும், காவல்துறையில் புகார் செய்யலாமே தவிர, நாமே சட்டத்தை கையில் எடுக்கலாமா? பெண் என்று இல்லை, ஆணாக இருந்தாலும் நாம் கும்பலாய் சேர்ந்து கொண்டு துன்புறுத்த சட்டத்தில் இடமில்லையை, மனிதாபிமானத்திலும் இடமில்லையே!!

Thursday, July 02, 2009

பசங்க - யதார்த்தமான படமா?

படம் வந்து ஒரு மாதமாகி விட்டதால், உதயம் தியேட்டரில் அதிக கூட்டமில்லை. பின் மூன்று வரிசைகள் மட்டுமே நிறைந்திருந்தது. இப்படி கொஞ்ச நாள் கழித்துச் செல்வதில் சில சவுகரியங்கள் உள்ளன. ப்ளாக்கில் டிக்கெட் வாங்கத் தேவையில்லை. தியேட்டர் டிக்கெட் க்யூவில் நெரிசலில் நின்று அடிபடத் தேவையில்லை. படம் பார்க்கும் போது விசிலடிச்சான் குஞ்சுகளில் தொல்லை இருக்காது. கூட்டத்தால், தியேட்டர் ஏசி எபெக்ட் குறைந்து காணப் படாது.

படத்தை பற்றி நிறைய விமர்சனங்களை படித்திருந்ததால் ஓரளவுக்கு கதையின் போக்கு முன்பே தெரியும், அதனால் சில விஷயங்களை முழுமையாய் ரசிக்க முடிவதில்லை.

படம் முழுவதும் சற்றே மிகைப் படுத்தப் பட்ட யதார்த்தம் தெரிகிறது (உதாரணமாய் வீட்டின் சொந்தக்காரர் பார்க்கும் போது, பையன்கள் பூந்தொட்டிகள் வைத்து அழகு படுத்துவது, பட ஆரம்பத்தில் பையன்களை பற்றி கிராமத்து பெரிசுகள் போலிஸ் ஸ்டேசனில் கம்ப்ளெயிண்ட் செய்வது, சடாரென்று மனம்மாறி அன்புகரசுவின் அப்பா, அம்மா சமாதானாமாய் செல்வது)

இருந்தாலும் படத்தை ரசிக்க முடிகிறது. அன்புக்கரசு ஐஏஸ் என்று சிறுவன் சொல்வதும், போதும் பொண்ணு, பக்கடா போன்ற பெயர்களும், அவற்றிற்கான பெயர்க் காரணங்களும் ரசிக்க வைக்கின்றன.

கதையின் ஊடே வரும் காதல் நன்றாக இருக்கிறது. இருந்தாலும், இருவருக்குமிடையே காதல் வருவதற்கான காரணங்கள் பலமானதாயில்லை. அடுத்தடுத்து வரும் சம்பங்கள் படத்தை அழகாய் நகர்த்திச் செல்கின்றன.

கிளைமேக்ஸ் படு சினிமாத்தனம், எப்படி வில்லனாய் வரும் சிறுவன் திடிரென்று மனம் திருந்துகிறான்?

வெளியே வரும்போது, நல்லதொரு படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது.

Tuesday, June 30, 2009

சன் டிவியே, உன் அழும்புக்கு எல்லையில்லையா?

சன் டிவி டாப்டென் சென்ற ஞாயிற்றுக்கிழமை யாராவது பார்த்தீர்களா? நான் பார்க்க வில்லை. இன்று மதியம் பெங்களூரிலிருந்து நண்பர் அருண் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

சன் டிவியின் டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியில், மாசிலாமணி முதலிடமாம். கடவுளே, இந்த கொடுமையை கேட்பாரில்லையா?? கொஞ்ச நாள் முன்பு தெனாவட்டு, ஆயுதம் செய்வோம் போன்ற படங்களையும் இதே மாதிரிதான் முதலிடத்தில் 'வைத்து' இருந்தனர் என நினைக்கிறேன்.

இப்படி பகிரங்கமாய் மோசடி செய்கின்றனரே, இதற்கு பேசாமல் இந்த நிகழ்ச்சியையே நிறுத்தி விடலாமே!! மக்கள் யாராவது இதை (இந்த ரேட்டிங்கை) நம்புகிறார்களா? என்னை பொறுத்த வரை, நான் நீண்ட நாட்களுக்கு முன்பே இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். மாசிலாமணி, நிஜமாகவே முதலிடத்திற்கு தகுதிதானா? பசங்க, நாடோடிகள் போன்ற படங்களுக்கு சன் டிவி கொடுத்த ரேட்டிங் என்ன? யாராவது பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.

இப்படியே போனால், இன்னும் ஒரு வருடத்தில் டாப் டென் படங்களுமே சன் குழுமம் தயாரித்த படங்களே பிடித்து விடுமே! மக்கள் நம்பிக்கை இழந்து இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விடுவார்கள் என்று சன் டிவிக்கு தெரியாதா??

இதேபோல் விகடன் குழுமம் தயாரித்த வால்மீகி படத்துக்கு ஆனந்த விகடனில் வழங்கப்பட்ட மார்க் என்ன? விமர்சனம் வந்து விட்டதா? படம் சரியில்லை என கேள்விப்பட்டேன், சிவா மனசில சக்தி என்ற மொக்கைக்கே ஆனந்த விகடன் 40க்கு மேல் மதிப்பெண் அளித்ததாக ஒரு ப்ளாக்கில் படித்தேன், உண்மைதானா?

இம்மாதிரி ஊடகங்கள் தயாரிக்கும் படங்களுக்கு அவர்களே விமர்சனம், ரேட்டிங் போன்றவற்றை தரக்கூடாது என சட்டமியற்ற இயலுமா, சாத்தியாமா சொல்லுங்களேன்!