Thursday, July 02, 2009
பசங்க - யதார்த்தமான படமா?
படத்தை பற்றி நிறைய விமர்சனங்களை படித்திருந்ததால் ஓரளவுக்கு கதையின் போக்கு முன்பே தெரியும், அதனால் சில விஷயங்களை முழுமையாய் ரசிக்க முடிவதில்லை.
படம் முழுவதும் சற்றே மிகைப் படுத்தப் பட்ட யதார்த்தம் தெரிகிறது (உதாரணமாய் வீட்டின் சொந்தக்காரர் பார்க்கும் போது, பையன்கள் பூந்தொட்டிகள் வைத்து அழகு படுத்துவது, பட ஆரம்பத்தில் பையன்களை பற்றி கிராமத்து பெரிசுகள் போலிஸ் ஸ்டேசனில் கம்ப்ளெயிண்ட் செய்வது, சடாரென்று மனம்மாறி அன்புகரசுவின் அப்பா, அம்மா சமாதானாமாய் செல்வது)
இருந்தாலும் படத்தை ரசிக்க முடிகிறது. அன்புக்கரசு ஐஏஸ் என்று சிறுவன் சொல்வதும், போதும் பொண்ணு, பக்கடா போன்ற பெயர்களும், அவற்றிற்கான பெயர்க் காரணங்களும் ரசிக்க வைக்கின்றன.
கதையின் ஊடே வரும் காதல் நன்றாக இருக்கிறது. இருந்தாலும், இருவருக்குமிடையே காதல் வருவதற்கான காரணங்கள் பலமானதாயில்லை. அடுத்தடுத்து வரும் சம்பங்கள் படத்தை அழகாய் நகர்த்திச் செல்கின்றன.
கிளைமேக்ஸ் படு சினிமாத்தனம், எப்படி வில்லனாய் வரும் சிறுவன் திடிரென்று மனம் திருந்துகிறான்?
வெளியே வரும்போது, நல்லதொரு படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது.
Tuesday, June 30, 2009
சன் டிவியே, உன் அழும்புக்கு எல்லையில்லையா?
சன் டிவியின் டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியில், மாசிலாமணி முதலிடமாம். கடவுளே, இந்த கொடுமையை கேட்பாரில்லையா?? கொஞ்ச நாள் முன்பு தெனாவட்டு, ஆயுதம் செய்வோம் போன்ற படங்களையும் இதே மாதிரிதான் முதலிடத்தில் 'வைத்து' இருந்தனர் என நினைக்கிறேன்.
இப்படி பகிரங்கமாய் மோசடி செய்கின்றனரே, இதற்கு பேசாமல் இந்த நிகழ்ச்சியையே நிறுத்தி விடலாமே!! மக்கள் யாராவது இதை (இந்த ரேட்டிங்கை) நம்புகிறார்களா? என்னை பொறுத்த வரை, நான் நீண்ட நாட்களுக்கு முன்பே இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். மாசிலாமணி, நிஜமாகவே முதலிடத்திற்கு தகுதிதானா? பசங்க, நாடோடிகள் போன்ற படங்களுக்கு சன் டிவி கொடுத்த ரேட்டிங் என்ன? யாராவது பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.
இப்படியே போனால், இன்னும் ஒரு வருடத்தில் டாப் டென் படங்களுமே சன் குழுமம் தயாரித்த படங்களே பிடித்து விடுமே! மக்கள் நம்பிக்கை இழந்து இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விடுவார்கள் என்று சன் டிவிக்கு தெரியாதா??
இதேபோல் விகடன் குழுமம் தயாரித்த வால்மீகி படத்துக்கு ஆனந்த விகடனில் வழங்கப்பட்ட மார்க் என்ன? விமர்சனம் வந்து விட்டதா? படம் சரியில்லை என கேள்விப்பட்டேன், சிவா மனசில சக்தி என்ற மொக்கைக்கே ஆனந்த விகடன் 40க்கு மேல் மதிப்பெண் அளித்ததாக ஒரு ப்ளாக்கில் படித்தேன், உண்மைதானா?
இம்மாதிரி ஊடகங்கள் தயாரிக்கும் படங்களுக்கு அவர்களே விமர்சனம், ரேட்டிங் போன்றவற்றை தரக்கூடாது என சட்டமியற்ற இயலுமா, சாத்தியாமா சொல்லுங்களேன்!
Monday, June 29, 2009
சென்னை - ஒரு பொன்மாலைப் பொழுதில்..
பெரும்பாலான பன்னாட்டு, உள்நாட்டு ஐடி, தொழில் நுட்ப கம்பெனிகளில், அரசு அலுவலகங்களில் சனி, ஞாயிறு இரு நாட்களும் விடுமுறை அளிக்கின்றனர். சனிக்கிழமை மாலையே உங்கள் துணைவியுடன், குழந்தைகளுடன் (இருந்தால்) வெளியே சென்று வர ஏற்ற சமயம். சனி மாலையென்றால் எல்லா தொ(ல்)லைக் காட்சி சானல்களிலும் உருப்படாத படங்களையும், எரிச்சலூட்டும் பாட்டு, டான்ஸ், அரட்டை நிகழ்ச்சிகளையும் போடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி வெளியே சென்று வருவதுதான் :-)
சரி வெளியே செல்லலாம் என்றால் எங்கே செல்வது? நீங்கள் ஸ்பென்சர், சிட்டி செண்டர் போன்ற மெகாமால்களுக்கு செல்லலாம், ஆனால் அங்கே சென்று வந்தால் நமது பர்ஸ் காலியாவது நிச்சயம். என்னதான், உங்களது மனைவி ‘சும்மா சென்று வரலாம், விண்டோ ஷாப்பிங் செய்வோம்’ என்று சொன்னாலும் மயங்கி விடாதீர்கள். அங்கெ சென்றால் ஆயிரத்தெட்டு offers போட்டிருப்பார்கள், அதாவது 4 ஜீன்ஸ் வாங்கினால் ஒரு ஜீன்ஸ் இலவசம் (4 ஜீன்ஸின் விலை ரூ 4000) மற்றும் 2 டிசைனர் சாரி வாங்கினால் ஒன்று இலவசம் (இரண்டு சாரியின் விலை ரூ 8000) போன்ற உட்டாலக்கடி offerகள்.
கழுதை, அதைக்கண்டால் நீங்களும் உங்கள் மனைவியும் மதிமயங்கி கண்டது, கடையது வாங்கித் தள்ளி விடுவீர்கள். கிரெடிட் கார்டு என்றொரு பூதம் இருப்பதால், நமக்கும் செலவழிப்பது தெரியாமல் கன்னாபின்னாவென்று ஸ்வைப் (ஸ்வைப் செய்வது - இதற்கு தமிழ்ச்சொல் என்ன?) செய்து விடுவோம். அதுவும் குழந்தைகளோடு சென்றால் கேட்கவே வேண்டாம், சும்மா அந்த பொம்மையை வாங்கிக்கொடு, இந்த டீசர்ட்டை வாங்கிக்கொடு என்று பிய்த்து பீராய்ந்து விடுவார்கள். இது மட்டுமல்லாமல், ஏதாவது திண்பண்டம் வேறு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஐஸ்கிரீம் எதை எடுத்தாலும், 50 ரூபாய்க்கு கீழே இருக்காது. என்னடா இது உலகமென்று, தர்க்க ரீதியாக யோசிக்கத் துவங்கி விடுவீர்கள் :-)
இதை விட்டுத் தள்ளுங்கள், சினிமாவிற்கு செல்லலாம் என்றால், அதுவும் அபாயகரமான யோசனைதான். சத்யம், மாயாஜால் போன்ற மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களுக்கு என்றால் உங்கள் கதி அதோ கதிதான், டிக்கெட் ஒன்றில் விலை 120 ரூபாய், குடும்பத்தில் 4 பேர் என்றால் 500 ரூபாய் காலி, இண்டர்வெல்லில் வழக்கம்போல் குழந்தைகளுக்காகவோ, மனைவிக்காகவோ கூல்டிரிங்க்ஸ், பாப்கார்ன், ஸ்னாக்ஸ் வகையறாக்கள் 200 ரூபாயாவது ஆகிவிடும். உதயம், கமலா போன்ற மிடில்கிளாஸ் தியேட்டர்களுக்கு சென்றால் ஒரளவுக்கு தப்பிக்கலாம் :-)
இதற்கெல்லாம் உள்ள ஒரே உத்தமமான மாற்று வழி கடற்கரைக்கு செல்வதுதான், சென்னை மக்களுக்கு கடவுள் தந்த செலவில்லாத மகத்தான பொழுதுபோக்கு தலம் பீச்தான்.
மெரினா பீச், சாந்தோம் பீச், பெசண்ட் நகர் பீச், திருவான்மியூர் பீச் என்று ஏராளமான கடற்கரைகள் நம்மை வா, வாவென்று அழைக்கின்றன. அற்புதமான கடற்காற்று உங்களை ஆபீஸ் மேனெஜர் தொல்லை, project deadline (இதற்கு தமிழில் என்ன?) கவலைகள், வீட்டுக்காரன் மிரட்டல் போன்ற லவூதீக விஷயங்களை தற்காலிமாய் மறக்க வைக்கும் என்னதான் சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி, சோன்பப்டி வகையறாக்கள் வாங்கித் தின்றாலும், 100 ரூபாய்க்கு மேல் உத்தரவாதமாய் செலவில்லை.
இப்போது என் அனுபவத்தை சொல்கிறேன், கேளுங்கள் :-)
ஒரு ஜூன் மாத மழை பெய்யும் சனிக்கிழமை மாலையில் நாங்கள் வெளியே சென்று வர முடிவெடுத்தோம் (போன வாரந்தாங்க அந்த சனிக்கிழமை, ஒரு சுஜாதா effect측¸ இப்படி எழுதுறதுதான் இப்போ பேஷன் :-))
மாலை 5 மணிக்கு கிளம்பினோம், கிளம்பிய போது லேசாக தூறல் விழுந்தது, பத்து நிமிடம்தான். குளுகுளுவென்று சென்னை ஊட்டி போல் மாறிவிட்டது. பைக்கில் ராமாபுரத்திலிருந்து கிண்டி, அடையார் வழியே பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்றோம்.
டிராபிக் போலீசார் பீட் அமைத்து, டிராபிக்கை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். பைக் நிறுத்த தனியே இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. பைக்கை நிறுத்தி விட்டு, மாங்காய், பட்டாணி சுண்டல் 15 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டோம் (முன்பு 10 ரூபாய், இப்போது 15 ரூபாயாகி விட்டது, விற்றவரிடம் கேட்டால் விலைவாசி பற்றிய பொழிப்புரை கிடைக்குமென்பதால் வாயை மூடிக்கொண்டு நடையைக் கட்டினோம்).
அப்படியே ஹாயாக பீச்சில் நடந்து வந்து கடலோரமாய் அமர்ந்தோம். சுமார் ஒரு மணிநேரம் காற்று வாங்கிக் கொண்டே கதை பேசிக் கொண்டிருந்தோம். குழந்தைகளோடு வந்திருக்கும் குடும்பங்கள், மணலில் வீடு கட்டும் குழந்தைகள், இளம்பெண்ணை குதிரையில் ஏற்றிக்கொண்டு ஜாய்ரைடு (இந்த தலைப்பில் சுஜாதா கதையொன்று எழுதியிருக்கிறார், படித்திருக்கிறீர்களா?) செல்லும் குதிரைக்காரர், சுண்டல் விற்கும் பையன், வண்டியில் பெரிய பெட்ரோமாக்ஸை கட்டி மணியடித்துச் செல்லும் சோன்பப்டிகாரர், சோளத்தை சுட்டு தீயில் வித்தை காட்டும் வண்டிக்காரர் என்று பீச்சே குதூகாலமாய் இருந்தது.
சோன்பப்டி ஒன்று (10 ரூபாய் ஒரு பொட்டலம்) வாங்கி ருசித்தோம், சுமாராய்த்தான் இருந்தது. 10 ரூபாய் என்ற ரேட்டால் ஏற்கனவே என்னை திட்டிக் கொண்டிருந்த என் மனைவி (ஹிஹி, சும்மா செல்லமாத்தான் திட்டினாங்க) சோன்பப்டியின் சுமாரான டேஸ்ட்டால் பத்ரகாளியானாள், அதன்பின் நடந்ததை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் (எப்படித்தான் கரெக்டா ஏமாந்து போரீங்களோ, உங்க நெத்தியிலேயே எழுதியிருக்கே ஏமாற்றவர்ன்னு போன்ற வசனங்களை நீங்கள் யூகிக்கா விட்டால் நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை என்று அர்த்தம் :-)
8 மணிபோல் அங்கேயிருந்து கிளம்பி, பொடிநடையாய் நடந்து வந்து மாதா கோயில் அருகே உள்ள முருகன் இட்லி கடைக்கு சென்றோம். சுடச்சுட இட்லி, ஆனியன் ஊத்தாப்பம், ப்ளெயின் தோசை, மெதுவடை, வெள்ளைப் பனியாரம் போன்றவற்றை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சாம்பார் போன்றவைகளின் உதவியால் உள்ளே தள்ளினோம் :-) (என்ன இதுக்காகவே சென்னையில் இருக்கனும் போல் தோனுமே). பில் எவ்வுளவு தெரியும், 103 ரூபாய்தான். நன்றாக உட்டுக்கட்டி விட்டு, வீடு திரும்பினோம்.
பின் குறிப்பு: பெசண்ட் நகர் முருகன் இட்லி கடைக்கு பக்கத்தில் ஒரு பேராபத்து உள்ளது. அது என்னவென்றால், பக்கத்தில்தான் Fab India என்று ஒரு பேமஸ் துணிக்கடை உள்ளது. என் மனைவி சாப்பிட்டு விட்டு அங்கே செல்வோம் என்று கூறினாள், நல்ல வேளை நாங்கள் சென்றபோது (சனி இரவு 9:30 மணி) கடையை மூடி விட்டார்கள், ஹப்பாடா தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டேன் :-) ஆதலால் பீச்சிலிருந்து வெளியே வரும் நேரத்தை 8 மணிக்கு மேல் திட்டமிட்டால், நீங்கள் தப்பித்து விடலாம் :-)
இப்படியாக எங்கள் சனிக்கிழமை மாலை அவுட்டிங் (காதலிப்பவர்களுக்கு டேட்டிங்) நிறைவு பெற்றது. மொத்த செலவு பைக் பெட்ரோல் போக வர 25 கிமீ: 25 ரூபாய், சுண்டல் + சோன்பப்டி: 25 ரூபாய், நைட் டிபன் செலவு: 103 ரூபாய், ஆக மொத்தம் 153 ரூபாய் ஆகியிருந்தது.
இப்போ சொல்லுங்க, என்னோட வழி சரியானதுதானே!! என்ன ஒவ்வொரு வாரமும் பீச்சிற்கே செல்ல முடியாது. அதனாலென்ன, ஒரு வாரம் வண்டலூர் சூ (zoo) போங்க, இன்னொரு வாரம் முட்டுக்காடு போட்டிங் போங்க, இன்னொரு வாரம் காந்தி மண்டபம், கிண்டி பார்க் போய்ட்டு வாங்க, இப்படியாக போனால் இயற்கையை ரசித்த மாதிரியும் இருக்கும், செலவை குறைத்த மாதிரியும் இருக்கும் :-) அவ்ளோதாங்க, பொசுக்குன்னு விண்டோவை க்ளோஸ் பண்ணிடாதீங்க.. நீங்க உங்க அனுபவங்களையும், யோசனையையும் சொல்லிட்டு போங்க!! :-)
Sunday, June 28, 2009
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - இன்றைய கிரிக்கெட் போட்டி - முன்னோட்டம்
முதல் போட்டியின் யுவராஜ் பேட்டிங்கை பார்த்தீர்களா? சும்மா கிரிக்கெட் மட்டையை கதாயுதம் போல் கையாண்டு ரதகளப் படுத்தினார். ஜெரோம் டெய்லர் முதல் 5 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தவர், யுவராஜ் எனும் புயலில் சிக்கி ஆலை வாய் பட்ட கரும்பை போலாகி விட்டார். இரண்டு ஓவரில் 30 ரன்கள். இந்த போட்டியில் யுவராஜ் இறங்கினால், நான் விளையாட மாட்டேன் என்று அடம்பிடிகிறாராம் :-)
சரிதான், டெண்டுல்கர், சேவாக் இல்லை, பேட்டிங் வீக் என்று முடிவு செய்தவர்களுக்கு யுவராஜைத் தவிர தினேஷ் கார்த்திக், தோனி, பதான் போன்றவர்களும் தம் திறமையை நிரூபித்தனர். கம்பீர், ரோகித் ஷர்மாவும் நல்ல திறைமையான பேட்ஸ்மேன்களே, சீக்கிரம் பார்முக்கு வந்தால் இந்தியாவுக்கு நல்லது.
நமது பவுலிங்தான் வீக்காக உள்ளது. இஷாந்த் ஷர்மா சொதப்புகிறார், அவருக்கு பதிலாய் வேறு யாராவது வரலாம். ரவிந்திர ஜடேஜாவும் அவ்வுளவு எபெக்ட்டாக இல்லை, ரவி தேஜா வரலாம். பந்து வீச்சை பலப்படுத்தினால், தொடர் நமது பக்கம் எளிதாய் வந்து விழும்.
இன்றைய போட்டி இரவு 8 மணி இந்திய நேரத்துக்கு தொடங்குகிறது; பரபரப்பாய் இருக்குமென எதிர்பார்க்கலாம்! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!! :-)
Saturday, June 27, 2009
கால்டாக்சி - சென்னையின் வரப்பிரசாதம்
சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆட்டோகாரர்களின் அட்டகாசம் பற்றி எழுதியிருந்தேன். 7 கிமீ தூரத்திற்கு 120 ரூபாய் கூசாமல் கேட்கிறார்கள்.
இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன். அது என்னவென்றால் ஆட்டோவில் இனிமே முடிந்தவரை பயணிக்க கூடாது. எங்கே போனாலும் பைக் அல்லது கால் டாக்சியில் போவதென்று முடிவெடுத்தாயிற்று.
சென்ற வாரம் நுங்கம்பாக்கம் ஓட்டல் பாம்க்ரோவில் உறவினர் இல்ல திருமண ரிஷப்ஷன் இருந்தது. குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம் என முடிவெடுத்து கால் டாக்சி (FAST TRACK) புக் செய்தோம். கரெக்டான நேரத்திற்கு வந்து மொபைலில் அழைத்தார் டிரைவர்.
உள்ளே அமர்ந்தவுடனேயே மீட்டர் ஆன் செய்யப்பட்டது. வேறு பேச்சே இல்லை. முதல் 5 கிமீ தூரத்திற்கு 100 ரூபாய். மேற்கொண்டு ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் 10 ரூபாய். வெயிட்டிங் சார்ஜ் (டிராபிக் சிக்னலில் வண்டி நின்றபோது) ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய். எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம்) நுங்கம்பாக்கம் ஹோட்டலுக்கு 10 கிமீ தூரத்திற்கு மீட்டர் காட்டிய தொகை 157 ரூபாய் கட்டி நிகழ்ச்சிக்கு சென்றோம்.
அருமையான சேவை, டாக்சி புக் செய்தவுடன், வண்டி எண், டிரைவர் பெயருடன் அவரது மொபைல் நம்பர் போன்ற விபரங்களுடன் SMS வந்தது.
மனதிற்கு நிறைவாய் இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திரும்பவும் கால் டாக்சியிலே திரும்பி வந்தோம்.
நாங்க இனிமே எங்க போனாலும் கால் டாக்சிதான், அப்ப நீங்க??
Wednesday, May 27, 2009
ஐ.டி (IT) துறையின் அபத்தங்கள் - 1

ஐ.டி மற்றும் பிபிஓ துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஆபீஸ் கார்கள், பஸ்கள் நிறைய உண்டு. சென்னை OMR ரோட்டில் இவை சர் சர்ரென்று பறப்பதை காணலாம், இப்படி ஒரு வண்டிதான் பத்து மாதத்திற்கு முன்பு என்னை பைக்கில் இருந்து கீழே தள்ளியது.
இவற்றின் பின் புற கண்ணாடியில் பார்த்தால் ஒரு வாக்கியம் கண்ணுக்கு புலப்படாத பொடி எழுத்துக்களில் எழுதியிருக்கும். "If this vehicle is driven rashly, please inform us. Ph:22000000". ஒருவன் வண்டியை கன்னா பின்னா வேகத்தில் ஓட்டிச் செல்லும் போது நமக்கு இந்த வாக்கியம் எப்படி கண்ணில் தென்படும்? எப்படி மக்கள் படித்து, புகார் சொல்ல இயலும்? இந்த எழுத்துக்களை பக்கத்தில் சென்று படித்தாலே பத்து நிமிடம் ஆகும். இந்த லட்சணத்தில் இப்படி எழுதி வைக்கலாம் என்று யோசனை கொடுத்த அறிவாளி யார்? இதை விடவும் அபத்தமான செயல் இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்களேன், இப்படி எழுதி வைத்திருப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ??
Wednesday, May 13, 2009
ஐபிஎல் - அழகிகளின் ஆட்டம் -- கார்ட்டூன்
ஹலோ.. யாரு லலித்மோடிங்களா?? நாங்க குன்னாம்பட்டி மாரியம்மன் கோவில்ல இருந்து பேசறோம்.. இன்னைக்கு கொடையில ஆட வேண்டிய கரகாட்ட குரூப் வரலைங்க.. ஐபிஎல்ல ஆடற சீயர் லீடர்ஸை (cheer leaders) கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுங்களா??
ஐபிஎல் - கொல்கட்டா அணி - கார்ட்டூன்

ஹலோ.. யாரு ஷாருக்கானா பேசறது???
நாங்க கேகேநகர் மூனாவது குறுக்கு சந்து
ராமசாமி கிரிக்கெட் கிளப்பில இருந்து
பேசறோம்.. இன்னைக்கு மேட்ச்சுக்கு ரெண்டு
பேரு குறையறாங்க.. கொஞ்சம் கங்குலியையும்,
மெக்கல்லமையும் அனுப்பி வைக்க முடியுங்களா??
சென்னை - திருச்சி: ஒரு மோசமான பேருந்து பிரயாணம்
சென்னையிலிருந்து திருச்சிக்கு வழக்கமாய் ரயிலில்தான் பயணம் செய்வோம். எப்போதாவது டிக்கெட் இல்லாவிட்டால் கேபிஎன்னில் புக் செய்து பயணிப்போம். இம்முறை திடீரென்று ஒரு வாரத்திற்கு முன்புதான் திருச்சி செல்லலாமென்று முடிவு செய்து வலையில் தேடினால் எதிலும் டிக்கெட் இல்லை.
அரசாங்க SETC யில் புக் செய்ய நேரில் செல்ல வேண்டும், மேலும் மே 1 - வெள்ளி, சனி, ஞாயிறு நீண்ட வாரயிறுதி ஆதலால் SETCயிலும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு குறைவே. இது போன்ற சமயங்களில் ரெட் பஸ் வெப்சைட்டில்தான் வழக்கமாய் ஆம்னி பஸ் புக் செய்வோம்.
சரியென்று நீண்ட நேரம் தேடி SSCM டிராவல்ஸ் என்ற பஸ்ஸில் வியாழன் இரவு 10 மணி பஸ், திரும்பி வர ஞாயிறு இரவு 10 மணி பஸ்ஸையும் புக் செய்து விட்டோம். எங்கள் போதாத நேரம் ஓரே சீட்டையே (எண் 7 & 8) செல்வதற்கும், திரும்பி வரவும் தேர்ந்து எடுத்திருந்தேன்.
வியாழன் இரவு சென்னை - அசோக் பில்லர் நிறுத்தத்தில் 10:15 க்கு ஏறிக்கொள்ள பதிவு செய்திருந்தோம். 10:15க்கு வரவேண்டிய பஸ், 11 மணிக்குத்தான் வந்தது, போன் செய்து கேட்டால் கோயம்பேடில் டிராபிக், அதனால்தான் லேட் என்றனர். அசோக் பில்லர் ஆம்னி பஸ் நிறுத்ததில் ஒரு வசதியும் இல்லை. கிட்டத்தட்ட 500 பேர் அந்த இரவில் நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு நிழற்குடை, சேர்கள் எதுவுமில்லாமல் இருக்கிறது.
ஒரு வழியாக வந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் அடுத்த தலைவலி ஆரம்பித்தது. சீட் எண் 7-ல் புஷ்பேக் வசதி சரியாக வேலை செய்யவில்லை. உட்கார்ந்து கொண்டே இரவு நேர பிரயாணம் என்பது கொடுமையான அனுபவம். கஷ்டப்பட்டு பிரயாணம் செய்தோம். பஸ்ஸின் உரிமையாளரும் அப்போது இருந்தார், அவரிடம் பிரச்சனையை கூறி பிறகு சரி செய்யக் கூறினேன். சரியென்று தலையாட்டினார். பிறகு பஸ் சென்னையை சுற்றி வேளச்சேரி சென்றது. அங்கிருந்து மேடவாக்கம் வழியே தாம்பரம் செல்ல 12 மணியாகி விட்டது.
இப்படியே ஊர் சுற்றிக் கொண்டு மெல்ல சென்று காலை 745 மணிக்கு திருச்சி தில்லைநகரில் இறக்கி விட்டனர். இரவு 11 மணிக்கு ஏறி காலை 745 வரை, கிட்டத்தட்ட 9 மணி நேரம் பயணம். இத்தனைக்கும் தூரமென்னவோ 300 கிமீ தான். மிகவும் மோசமான பயணம். இறங்கும் போது, டிரைவரிடமிடமும் புஷ்பேக் பிரச்சினையை சொல்லி சரி செய்ய நினைவு படுத்தினோம்.
ஞாயிறு இரவு திரும்பவும் அதே பஸ், அதே இருக்கையில் பயணித்தோம். சீட் சரி செய்யப் படவில்லை. டிரைவரும், செல்போனில் காண்டாக்ட் செய்த ஓனரும் சரியான பதில் தரவில்லை. திரும்பி வரும் போதும் இரவு 1030க்கு திருச்சியில் எடுத்து, காலை 8 மணிக்கு சென்னையில் இறக்கி விட்டனர்.
போதுமடா இந்த பிழைப்பு என்றாகி விட்டது. திரும்பவும் வாழ்க்கையில் SSCM டிராவல்ஸ் ஏறக்கூடாது என முடிவு செய்தேன். ரெட் பஸ் வெப்சைட்டில் மோசமான ரிவியூ கமெண்ட்டுகளை பதிவு செய்தேன். இதற்கு கன்ஸூயுமர் கோர்ட்டில் புகார் செய்யலாமா, அப்படி செய்தால் சீட் சரியில்லாததற்கு என்ன ஆதாரம் காட்ட முடியும் என்று சொல்லுங்களேன், எங்களிடம் டிக்கெட் பிரிண்டவுட் மட்டுமே இருக்கிறது.
