இப்படியெல்லாம் தலைப்பு வைத்து நானும் ஒரு பிரபல பதிவராகலாம்னு முடிவு பண்ணி விட்டேன் (அத நீ முடிவு பண்ண கூடாதுய்யா, நாங்கதான் முடிவு பண்ணனும் என்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது :) )
காதலர் தினம்னா என்ன? அதன் பின்னனி என்ன? நமது கலாச்சாரத்திற்கு இம்மாதிரி கொண்டாட்டங்கள் தேவையா, என்ன மாதிரி பரிசு வழங்கலாம் போன்ற விஷயங்களை கீழே பார்ப்போம்..
காதலர் தினம் பிறந்த கதை
காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர் களத்திற்கு அழைத்தார். அதற்கு வரவேற்பில்லாததால், அவர்களின் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், இதற்கு மாறாக வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார் எனவும், ஆத்திரமடைந்த அரசர், வேலன்டைனுக்கு மரண தண்டனை விதித்ததாகவும் கூறப்படுகிறது. பின் அவரது நினைவு நாளையே "வேலன்டைன் தினமாக' இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான், வேலன்டைன் தினம் முழுவதும் காதலர் தினமாக மாறியது. (நன்றி: தினமலர்)
இந்தியாவில் காதலர் தினம்
மேற்கத்திய நாடுகளில் நீண்ட நாட்களாக கொண்டாடிக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் சமீப காலத்தில்தான் பிரபலமாகி வருகிறது. கணினி யுகத்தில், உலகலாவிய இணைய இணைப்பில் கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. காதலர்கள், இளைஞர்கள் மத்தியிலும், மீடியா, வணிக நிறுவனங்களும் நன்றாக கல்லா கட்ட ஆரம்பித்திருக்கின்றன. சில தான்தோன்றி கலாச்சார காவல் அமைப்புகள் இக் கொண்டாட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி '15 நிமிட புகழுக்கு' ஆசைப் படுகின்றன.
காதலர் தினம் இந்தியாவிற்கு தேவையா?
நிச்சயமா தேவைதாங்க. மேல்நாட்டு கலாச்சாரங்களில் நல்லவையும் இருக்கின்றன, கெட்டவையும் இருக்கின்றன. நாம் நல்லவைகளை எடுத்துக் கொண்டு, தீயவைகளை ஒதுக்குவோமே. நம் காதலியுடனோ, மனைவியுடனோ (அ) துணைவியுடனோ அன்பை பரிமாறிக் கொள்வதில் என்ன தவறு இருக்கு? இனிப்பு, சாக்லேட்டுகள், வாழ்த்து அட்டைகள், ட்ரஸ், பரிசுப் பொருட்களை நமது வாழ்க்கைத் துணைக்கு வாங்கிக் கொடுத்து அன்பை, அன்னியோன்யத்தை வளர்த்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. திருமணமாகாமல் தற்போது காதலித்து வரும் காதலர்களும் இதை நாகரீகமாக கொண்டாடுவதை தடை செய்யக் கூடாது.
காதலர் தின ஜோக்குகள்
காதலர் தினத்திற்கு என்ன பரிசு வழங்கலாம்?
இதைப் படிக்கிற நீங்களும் ஒரு ப்ளாக்கர் (blogger) என்றால் கவிதை ஒன்றை எழுதி காதலருக்கு தாருங்கள், அதுதான் அருமையான பரிசு (ஏதோ காசு மிச்சும் புடிக்க வழின்னு நினைக்காதீங்க, மத்த பொருட்களை கடையில் வாங்கலாம், ஆனால் கவிதையை வாங்க முடியுமா?). இதோடு வேறு பரிசுப் பொருட்களும் கொடுக்கலாம்.
- வாழ்த்து அட்டைகள்
- இனிப்பு/சாக்லேட்டுகள்
- ட்ரஸ்
- கைக் கடிகாரம்
- மொபைல்/டேப்ளட்
- கவிதை
நமக்குத்தான் கல்யாணமாயிடுச்சே, இனிமே என்ன காதலர் தினம்னு அலட்சியமா இருந்திடாதீங்க? உங்க கணவனுக்கோ/மனைவிக்கோ காதலோட ஒரு காஃபி போட்டுக் குடுத்தா, அது கூட ஒரு பரிசுதான். காலையில மனைவி எழும்முன் சீக்கிரம் எழுந்து சூடா ஒரு காஃபி போட்டு மனைவியை எழுப்பி கொடுத்து 'ஐ லவ் யூ'ன்னு சொல்லுங்களேன், அப்புறம் பாருங்க, வாழ்க்கையே சந்தோஷமாயிடும்.
கடைசியா ஒன்னு, இந்த காதல்/அன்பு/அக்கறை எல்லாம் இன்னைக்கு ஒருநாள் மட்டுமல்ல, எல்லா நாளிலும் கடைப் பிடிச்சீங்கன்னா உங்க வாழ்க்கையே சூப்பராயிடும்! வாழ்க்கைத் துணையை மட்டுமல்ல, சக மனிதர்களையும் மதியுங்க, நேசிங்க! காதலர் தினத்துக்கு மரியாதை செலுத்துங்க!
காதலர் தின வாழ்த்துகள்!