Wednesday, August 29, 2012

கிரிக்கெட்: அஸ்வின் சுழலில் தடுமாறிய நியுசி - ஒரு அலசல்


அஸ்வின் - உங்களையும், என்னையும் போன்ற ஓர் சாதரண குடும்பத்து பையன். நமது பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம், பேட்டிகளிலோ, இண்டர்வியூ கொடுக்கும்போதோ இயல்பாக, உண்மையாக பேசுவார், சின்சியாரிட்டி தெரியவரும்.

அருமையான சுழற்பந்து வீச்சாளர். ஹர்பஜனுக்கு பிறகு என்ன என்ற கேள்விக்கு சரியான விடையாக இந்திய அணியில் உருவாகி வருகிறார்.

நிறைய ஒருநாள் (இதுவரை 40 போட்டிகள்), டி20 கிரிக்கெட் விளையாடியுள்ளதால் ஒன் - டே ஸ்பெசலிஸ்டாக கருதப் பட்டார். ஆனால் 2011 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 22 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அவ்வளவாக சோபிக்க வில்லை. தற்போது நியுசிக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 12 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.



இதுவரை இந்தியாவில் அஸ்வின் விளையாடிய 4 போட்டிகளில், 43 விக்கெட்டுகள் வீழ்த்தி, 3 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். இதுவே ஒரு பெரிய சாதனைதான். இவரும் ஓஜாவும் சேர்ந்து இந்த 4 போட்டிகளில் 60 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். கும்ப்ளே - ஹர்பஜன் போல அஸ்வின் - ஓஜா ஜோடியும் தொடர்ந்து பல போட்டிகளில் அசத்துவார்கள் என ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர்.

பந்து வீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் அஸ்வின் ஜொலிக்கிறார். இப்போது நடந்த் முடிந்த போட்டியில் கூட அவர் எடுத்த 37 ரன்கள் அணிக்கு ஒரு பெரிய ஸ்கோரை தந்து, நியுசிலாந்தை பயப்படுத்தியது.

டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள், டி20 போட்டிகளிலும் ஒரு அட்டாக்கிங், அக்ரெசிவ் பவுலராக உருவெடுத்துள்ளார் அஸ்வின். எந்த போட்டியிலும் முதல் ஐந்து-ஆறு ஓவர்களில் நிறைய ரன்கள் போய்விட்டால், தோனி இவரைத்தான் பந்து வீச அழைப்பார். எதிரணி ரன்கள் குவிப்பதை குறைத்து, விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுவார்.

டெஸ்ட் போட்டிகளில் இவரது பவுலிங் ஆவரேஜ்: 26.83, பேட்டிங் ஆவரெஜ்: 35.66. இதுவே இவரது திறமைக்கு சான்று. இவர் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது, ஆனாலும் நமது அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் அஸ்வின். இவர் மென்மேலும் வெற்றிகளைப் பெற வாழ்த்துவோம்!

நன்றி: படம் மற்றும் தகவல் உதவி - கிரிக் இன்ஃபோ வலைத்தளம்

Friday, August 24, 2012

சிக்கன் 65 - பெயர்க் காரணம்



அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ பண்டம் சிக்கன் 65. இன்னொன்று தந்தூரி சிக்கன். இந்த சிக்கன் 65 பெயர் எப்படி வந்தது என்று விக்கிபீடியாவில் துளாவிய பொழுது கிடைத்த தகவல்கள் கீழே...

இந்த பெயர் எப்படி வந்தது என்பதற்கு நிறைய கதைகள் உள்ளன, ஆனால் எது உண்மையான காரணம் என்று நிரூபிக்கப் படவில்லை.



சிக்கன் 65 - பெயருக்கு காரணங்களாக கூறப்படுபவை:
  • சிக்கன் 65 என்ற இந்த உணவு 1965 ஆண்டில் சென்னை புஹாரி ஹோட்டலில் அறிமுகப் படுத்தப் பட்டது. அறிமுகப் படுத்தப் பட்ட ஆண்டு பெயருடன் இணைந்து விட்டது.
  • சிக்கன் 65 தயாரிக்க உதவும் மசாலா 65 நாட்கள் ஊற வைக்கப் பட்டு, சிக்கனின் மேல் தடவப் படுகிறது.
  • சிக்கன் 65 உணவு 1965ம் ஆண்டு இந்திய போர் வீரர்களுக்கு சிறந்த, எளிய உணவாக அறிமுகப் படுத்தப் பட்டது.
  • சிக்கன் 65 உணவு, 65 மிளகாய்களை உள்ளடக்கி சமைக்கப் படுகிறது.
  • சிக்கன் 65 தயாரிக்க பயன்படும் கோழி 65 நாட்கள் வயதுடையது.
  • வட இந்திய போர் வீரர்கள் சென்னையில் பயிற்சி பெறும்போது அங்குள்ள மிலிட்டரி கேண்டீனில் உணவு வகைகள் தமிழில் எழுதப் பட்டிருக்கும். வீரர்கள் படிக்கத் தெரியாததால், மெனுவில் உணவு எழுதப் பட்டிருக்கும் நம்பரை (65) சொல்லி ஆர்டர் செய்வார்கள். அப்படியாக சிக்கன் 65 என்றாகி விட்டது.
என்ன நண்பர்களே, சிக்கன் 65 சாப்பிட தயாராகி விட்டீர்களா? இதில் என்ன காரணம் உண்மையாக இருக்கக் கூடும் (அல்லது) வேறு ஏதேனும் காரணம் உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் கூறுங்களேன்.

பெயரை விட்டுத் தள்ளுங்கப்பா, என்னவாய் இருந்தால் என்ன? கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா சரிதான் என்கிறீர்களா, அதுவும் சரிதான்!!

அடுத்த முறை ஹோட்டலில் சிக்கன் 65 சாப்பிடும் பொழுது, சர்வரிடம் பெயர்க் காரணம் கேளுங்களேன், என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!!

நன்றி: விக்கிபீடியா
படம் உதவி:mommyscuisine.com

Wednesday, August 22, 2012

ரஜினி இன்னும் எத்தனை நாளைக்கு ஹீரோவாக நடிக்கப் போகிறார்?




முன் குறிப்பு: ரஜினி ஹீரோவாய் நடிப்பதைப் பற்றிய எனது கருத்துக்கள், பதிவின் பிற்பகுதியில் உள்ளன.


ஈமு கோழிகளும், அரசாங்கமும்

தலைமறைவாயிருக்கும் பண்ணை உரிமையாளர்களால் கைவிடப்பட்ட ஈமு கோழிகளை அரசாங்கமே வளர்த்து, நன்கு வளர்ந்த பின் விற்று அதில் வரும் வருவாயில் வளர்த்ததற்கான செலவை ஈடு செய்து கொண்டு, அப் பண்ணையில் முதலீடு செய்தவர்களுக்கும் திருப்பித் தருமாம்.

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று புரியவில்லை. வளர்ந்த ஈமு கோழிகளை யார் வாங்குவர்? கறிக்காக வாங்க அதிகம் பேர் விரும்ப மாட்டார்கள். எத்தனை பேருக்கு ஈமு கறி பிடிக்கிறது? எத்தனை ஹோட்டல்களில் ஈமு கறி விற்கின்றனர்?

ஏற்கனவே அரசாங்கத்திற்கு இருக்கும் வேலைகள் போதாதென்று இதை வளர்ப்பதற்கு ஒரு துறை, வேலையாட்கள், அதிகாரிகள், தீவணம் வாங்குவதில் ஊழல் என்று இன்னும் நிறைய தலைவலிகள்தான் கிளம்பும்.

எனவே இப்படியெல்லாம் ஆகாயத்தில் கோட்டை கட்டாமல், இருக்கிற ஈமு கோழிகளையெல்லாம் இந்தியா முழுக்க இருக்கும் மிருகக் காட்சி சாலைகளுக்கு அனுப்பி விடலாம்!!



சிவாஜி 3D


சிவாஜி படத்தை 3-டியில் மறு உருவாக்கம் செய்திருப்பதாக செய்திகள் படித்தேன். நல்லது. கோச்சடையான் கூட 3-டி படம்தான் என கேள்விப் பட்டேன். இவ்வாறான 3-டி படங்களை தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்களில் பார்க்க இயலும்? என் கணிப்பில் சென்னை சத்யம், ஐமேக்ஸ் போன்று ஒரு 15 - 20 தியேட்டர்கள்தான் 3-டி வசதியுடன் இருக்கும். இவ்வுளவு செலவு செய்து 20 தியேட்டர்களில் மட்டும் வெளியிட்டால் தாங்குமா? அல்லது 3-டியுடன் 2-Dயும் எடுத்து வெளியிடுவார்களா? ஒரு நான்கைந்து வருடங்களில் எல்லா தியேட்டர்களும் 3-டியாக மாறிவிடும் என நினைக்கிறேன். அப்படி வந்தால் லத்திகா-பார்ட் 2 3-டியில் பார்க்க ஆவலாய் இருக்கிறென் :)




ரஜினி இன்னும் எத்தனை நாளைக்கு ஹீரோவாக நடிக்கப் போகிறார்?

ரஜினி - ஹீரோ? அனேகமாக டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெறப் போகிறார் என்பதற்கு சமமான இன்னொரு விடைதெரியா கேள்வி இது. இன்னும் எத்தனை படங்கள் காதலியுடன் மரத்தை சுற்றிவந்து பாடப் போகிறார்? 

ஹிந்தியில் அமிதாப் பச்சனை எடுத்துக் கொள்ளுங்களேன், எவ்வுளவு வித்தியாசமான, குணசித்திர வேடங்களில் நடித்து கலக்குகிறார் (பா, சீனி கம், பிளாக், சர்க்கார்)? இம்மாதிரி ரஜினியும் நடிக்கலாமே? கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் நிச்சயம் மக்கள் ரசிப்பார்கள். ஏன் ஹீரோவாகவே நடியுங்களேன், ஆனால் காதலியுடன் பூங்காவில் பாட்டுப் பாடி, முத்தம் வாங்க வேண்டாம் (எந்திரன்), ரசிக்க முடிய வில்லை. 

வில்லனாக நடியுங்களேன், நிச்சயம் அசத்துவீர்கள். சந்திரமுகியில் லக லக லகாவும், எந்திரனில் சிட்டியும்தான் (வில்லன்) எங்களுக்கு பிடித்திருந்தது. சும்மா கமர்ஷியல் காரணங்களை கூறி ஜல்லியடிக்க வேண்டாம், அதை தாண்டும் உயரம் உங்களுக்கு உள்ளது. முன்வருவாரா ரஜினி? அதை ஏற்றுக் கொள்வார்களா விசிலடிச்சான் குஞ்சுகள்?


விவசாயம் இனி மெல்ல சாகும்?

ஊரில் உள்ள உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், இன்னமும் மேட்டூர் அணை திறக்காதது பற்றியும், ஆற்றில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் (நெல் நடவு) செய்ய முடியாததை கூறி வருத்தப் பட்டார். ஜூன் மாதமே திறந்திருக்க வேண்டியது, 3 மாதங்களாகியும்   தண்ணீர் திறக்காதது வருத்தமானதே, வருண பகவான்தான் கருணை காட்ட வேண்டும். ஏற்கனவே இருக்கும் விளைநிலங்கள் எல்லாம் ப்ளாட்கள் ஆகும் போது, மிச்சமிருக்கும் விவசாயிகளை இயற்கை ரொம்பவே சோதிக்கிறது, நன்கு மழை பெய்து, அணை நிரம்பி, தண்ணீர் திறந்துவிட இறைவனை பிரார்திப்பதைத் தவிர வேறு என்ன செய்யலாம்?

Monday, August 20, 2012

காராச்சேவு - மோகன்குமார் vs வவ்வால், நீங்கள் யார் பக்கம்?

நீங்கள் காராசாரமான விவாதத்தை எதிர்பார்த்து வந்திருந்தால் பதிவின் பிற்பகுதிக்கு செல்லுங்கள், முதலில் கொஞ்சம் ஸ்வீட், பிறகு காரம்....



இது ஒரு பொன்மாலைப் பொழுது - பாடல்

நிழல்கள் படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு மிக பிடித்தமான பாடல்களில் ஒன்று, இளையராஜா இசையில், எஸ்.பி.பி பாடிய அற்புதங்களில் ஒன்று, வைரமுத்துவின் வைர வரிகள் அருமையாக, இனிமையாக, அர்த்தம் பொருந்தியதாக இருக்கும். 'ஒய் திஸ் கொலைவெறி'யை ரசிக்கும் இன்றைய யு.டியூப் தலைமுறையினக்கு இப்பாடலின் அற்புதம் புரியாமல் போகலாம். பாடலில் வரிகள் ஆரம்பிக்கும் முன் வரும் இசையை கவனித்து ரசியுங்களேன், சுகமான துள்ளலாய் ஆரம்பித்து 'ஹே ஹோ ஹூம் லலல்லா....' என்ற ஹம்மிங்கில் ஆரம்பமாகும்.

பாடல் வரிகளை கவனியுங்கள்,

'வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்'
.....
'வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது'
....

எவ்வுளவு அர்த்தம் பொதிந்த வரிகள், நீங்களும் கேட்டு ரசியுங்கள்..





அசிலி பிசிலி கவிஞர்கள் கொஞ்சம் செவி சாய்ப்பார்களா??

இப்பாடலில் வரும் நாயகன் 'ராஜசேகர்' இப்போது 'சரவணன் மீனாட்சி' தொலைக்காட்சி தொடரில் சரவணனுக்கு அப்பாவாய் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பத்து, பதினைந்து வருடங்கள் கழித்து சரவணன் வேறெதாவது நடிகருக்கு அப்பாவாய் நடிக்கும் பொழுதும், ரஜினிகாந்த் ஹீரோவொய் 'எந்திரன் - பார்ட் 2'வில் நடித்துக் கொண்டிருக்கலாம். உலகம் முழுக்க 2000 தியேட்டரில் ரிலிசாகி, ஒரே நாளில் லாபம் சம்பாதித்து, மறுநாள் சன் டிவியில் ஒளிபரப்பாகலாம். தமிழ் சினிமா வாழ்க!!




மோகன்குமார் vs வவ்வால், நீங்கள் யார் பக்கம்?


நண்பர் 'வீடு திரும்பல்' மோகன்குமார் சிறிது நாட்களுக்கு முன்பு 'போலீஸின் புதிய விதிகளை ஏமாற்ற பள்ளி வேன்காரர்கள் புது டெக்னிக்' என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் அவரது கருத்துகளுக்கு வவ்வால் பதில் கூறி, விவாதம் செய்திருந்தார்.

தொடர்ந்து சில பின்னூட்டங்களின் மூலம் விவாதத்திற்கு பின்பு மோகன்குமார் திடீரென்று 'எனது நண்பர்களைக் கிண்டல் அடித்துள்ளீர்கள், அதனால் என்னுடைய பதிவில் நீங்கள் இனிமேல் கமெண்ட் இடக் கூடாது' என்று கூறி வவ்வாலின் அடுத்த பின்னூட்டத்தை டெலிட் செய்து விட்டார்.

வவ்வால் ஆபாசமாகவோ, வன்முறையாகவோ பேசவில்லை, சற்று எரிச்சலூட்டும் படியான, தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டுள்ளார், பதிவர் வெறும் ஹிட்ஸுக்குத்தான் எழுதியுள்ளார், உண்மையான சமூக அக்கறையெல்லாம் இல்லை, நிஜமாகத் தீர்வை எதிர்நோக்கவும் இல்லை என்று வவ்வால் பின்னூட்டங்களில் பதிலளித்துள்ளார்.

'உங்களது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை' என்று மோகன்குமார் பதிலளித்து, கடந்து சென்றிருக்கலாம், அதை தவிர்த்து, ஒருவருடைய கருத்தை ஒட்டுமொத்தமாக தடை செய்வது, கமெண்ட் போடக்க்கூடாது என்று சர்வாதிகாரம் செய்வது, நியாயமான செயலாக முடியாது.

சிறப்பான பல்சுவைப் பதிவுகளை தந்து, பதிவுலகத்தையே தன்பால் திருப்பியிருக்கும் பிரபல பதிவர் மோகன்குமார், தனது தவற்றை திருத்திக் கொண்டு, தொடர்ந்து வெற்றிநடை போடுவார் என்றே நான் நம்புகிறேன், நீங்களுமா?