சென்னை சாலிகிராமம் ஆற்காடு ரோட்டில் பிசாஹட் (Pizza Hut) உள்ளது. எங்கள் வீட்டிற்கு அருகே இருப்பதால் பிஸ்ஸா (அல்லது பிசா.. இதற்கு தூய தமிழ்ப் பெயர் என்ன?) சாப்பிட நினைத்தால் இங்கேதான் செல்வோம்.
நேற்று சனி இரவு 10:10 மணிக்கு அங்கே சென்றோம். ஆனால் கடையை மூடிக் கொண்டிருப்பதாகவும், மேலும் சாப்பிட எதுவுமில்லை என்றும் கூறினர். சரியென்று நாங்கள் வெளியே வந்தபோது வாசலருகே போர்டில் வேலை நேரம் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை என்று போட்டிருந்தது. அதைப் பார்த்து விட்டு நாங்கள் திரும்பவும் உள்ளே சென்று ஏன் சீக்கிரம் மூடுகிறீர்கள் என்று கேட்டதற்கு சரியான பதிலில்லை. சனிக்கிழமை என்பதால் சீக்கிரம் மூடுகிறோம் என்றார்கள்.
நாங்கள் திரும்பி வரும்போது, ஒரு இளைஞர் கூட்டம் வேறு வந்து விசாரித்து விட்டு திரும்பினர்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைதானே மக்கள் நிறையபேர் வருவர். சனி இரவு என்பது வார இறுதியாதால் அப்போது கூடுதல் நேரம் கூட திறந்து வைக்கலாமே? ஏன் 11 மணிக்கு மூட வேண்டிய கடையை சீக்கிரம் மூட வேண்டும்?
நாங்கள் அருகிலுள்ள வேறு ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு 11 மணிக்கு திரும்பி வரும்போது இன்னமும் பிசாஹட்டில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஏன் இன்னமும் கடையை மூடவில்லை? வேறேதுனும் நடந்து கொண்டிருக்கிறதா?
இப்படி சந்தேகத்திற்கிடமான வகையில் எங்களை உணவருந்த அனுமதிக்காததை எதிர்த்து நுகர்வோர் கோர்ட்டில் முறையிட இயலுமா, அதற்கு என்ன ஆதாரம் எங்களிடமிருக்கிறது என்ற கேள்விகளுடன் காரை செலுத்திக் கொண்டிருந்து போது எப்.எம்மில் வழிந்தது 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே..' என்ற பாடல்!!!