Tuesday, December 21, 2010

அலைவரிசை அமைச்சர் - ஸ்பெசல் கார்ட்டூன்

தமிழகத்தைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மத்திய அமைச்சர்களுக்கு ஏதோ பூர்வஜென்ம சாபம் தொடர்கிறது என்றே நினைக்கிறேன். முன்பு தயாநிதி மாறன், இப்பொழுது ராசா.



வாசகர் கரெக்சன்: அமைச்சரல்ல, முன்னாள் அமைச்சர் :-)

அவியல் – 21/12/2010: டெண்டுல்கர், சாரு நிவேதிதா & கடலை சட்னி

டெண்டுல்கர் 50-வது டெஸ்ட் செஞ்சுரியை அடித்து சாதனை செய்துள்ளார். வாழ்த்துக்கள்! ஆனால் செஞ்சுரியன் டெஸ்ட்டில் 4-வது நாள் இறுதியிலும், 5-ம் நாள் காலையிலும் டெயில் எண்டர்களை காப்பாற்றி இன்னிங்ஸை நீட்டிக்க எந்த வித முயற்சியையும் மேற்கொள்ள வில்லை. குறைந்த பட்சம் 5-ம் நாள் காலையில் பேட்டை கண்ணாபின்னாவென்று சுழற்றி இன்னும் கொஞ்சம் ரன்கள் சேர்த்திருக்க முயற்சித்து இருக்கலாம். இன்னிங்ஸ் தோல்வியையாவது தவிர்த்திருக்கலாமே? தென்னாப்ரிக்க கேப்டன் ஸ்மித் கூட இதையே மேட்ச் முடிந்ததும் கூறினார். என்னாச்சு டெண்டுல்கர் சார்??






சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழாவில் மிஸ்கின் நந்தலாலாவை பற்றி 20 நிமிடம் பேசிவிட்டு, போகிற போக்கில் சாருவின் தேகம் நாவலை சரோஜாதேவி புத்தகம் போலிருக்கிறது என்று பேசிவிட்டு சென்றது சாருவிற்கும், அவரது ரசிகர்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மிஸ்கின் செய்தது தவறுதான்.

சாரு தனது வலைத்தளத்தில் நந்தலாலாவில் இளையராஜா இசை பெரும்பாலான இடங்களில் கேவலமாய் இருந்தது என்று எழுதியதாகவும், அதனை மிஸ்கின் எடுத்து விடுமாறு சொன்னதால், வலைத்தளத்தில் இருந்து எடுத்து விட்டேன் என்றும் எழுதியிருக்கிறார். ஏன் எடுத்தீர்கள் சாரு? நீங்கள்தான் உங்களது எழுத்தில் எவருக்காகவும், எதற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்று இருப்பவராயிற்றே? உங்களது கருத்தை எதற்காக மிஷ்கினுக்காகவும், நந்தலாலா என்ற நல்ல படத்திற்காகவும் மாற்றிக் கொண்டீர்கள்? இதையே அடுத்தவர்கள் சமரசம் செய்து கொண்டால் உங்களது வலைத்தளத்தில் கிழித்து விடுவீர்கள் அல்லவா? என்னாச்சு சாரு சார்??




கடலை சட்னி சாப்பிட்டு இருக்கிறீர்களா? பச்சை வேர்க் கடலையை வறுத்து, உப்பு, புளி, மிளகாய் வைத்து அரைத்து சப்பாத்திக்கோ, இட்லிக்கோ தொட்டுக் கொள்ளலாம், சுவையாக இருக்கும், ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள், பிடித்து விடும்!!


Sunday, December 19, 2010

2010: எனக்குப் பிடித்த 10 திரைப்படங்கள்..

நான் புனேயிலிருந்து சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்ததற்கு தமிழ் திரைப்படங்களை நிறைய பார்க்க வேண்டுமென்பதும் ஓர் காரணம். ஆதலால் நிறைய தமிழ்ப் படங்களை பார்த்து விடுகிறேன். இந்த ஆண்டும் நிறைய படங்களைப் பார்த்தேன். ஒரு சமயத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து நான்கு தமிழ் படங்களைப் பார்த்து ரசித்தேன் (ஓர் இரவு என்ற வித்தியாசமான திகில் படத்தையும் சேர்த்து)..





இந்த வருடத்தில் நான் பார்த்து, ரசித்த எனக்குப் பிடித்த பத்து திரைப்படங்கள்:

1. மதராச பட்டிணம்
2. எந்திரன்
3. பாஸ் (எ) பாஸ்கரன்
4. அங்காடித் தெரு
5. விண்ணைத் தாண்டி வருவாயா
6. சிங்கம்
7. ஆயிரத்தில் ஒருவன்
8. ராவணன்
9. நந்தலாலா
10. மைனா




2010 தமிழ் சினிமாவிற்கு நல்ல வருடமென்றே நினைக்கிறேன், பெரிய பட்ஜெட் எந்திரனும், சிறிய பட்ஜெட் மைனா, அங்காடித் தெரு, நந்தலாலா போன்ற வித்தியாசமான திரைப்படங்களும் வந்து வெற்றி பெறுவதும்(?) ஆரோக்கியமான விஷயமல்லவா!!

Sunday, December 12, 2010

வரலஷ்மி நமோஸ்துதே என வேண்டவும் கூச்சமாயிருக்கிறது..







ஞா
சா
என எழுத்துக்கள்
கலைந்து கொண்டே இருக்கின்றன
எதை எழுதுவது
எதை விடுவிப்பது
எதை உதறுவது
என்று யோசிப்பதிலேயே
பொழுதுகள் கழிவதால்
கவிதை ஏதும் வரவில்லை..
வரலஷ்மி நமோஸ்துதே என
வேண்டவும் கூச்சமாயிருக்கிறது..
சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள்
சடுதியில் திரும்பி வருகிறேன்.
ஓர் நல்ல கவிதை
அடுத்த நொடிப்பொழுதில் கூட
உருப் பெறலாம்!!


Monday, December 06, 2010

கொஞ்சம் கவிதை, கொஞ்சம் அரசியல்..

அலுவலகத்தின்
கண்ணாடிச் சுவர்களில்
வழிந்தோடும்
மழைத்துளிகளுக்குத் புரியுமா
பொருளாதாரா நெருக்கடியும்
அதனால் ஆட்குறைப்புக்காட்பட்ட
துப்புரவுத் தொழிளாலர்களின் வலியும்?






ஸ்பெட்க்ரம் ஊழலிலினால் திமுகவின் மதிப்பு மக்களிடையே சரிந்து வருவதாகக் கூறுகின்றனர். ஆனால் இதற்கு முன்பிலிருந்தே திமுகவின் மதிப்பு மக்களிடம் சரிந்து வருகிறது. இலவச டிவியும், கேஸ் அடுப்பும் மக்களை கொஞ்சம் சாந்தப் படுத்தியிருந்தாலும் நிறைய அதிருப்தி இந்த அரசாங்கத்தின் மேல் உள்ளது.

நூறு நாள் வேலைத்திட்டம் காரணமாய் / ஒரு ரூபாய் அரிசி திட்டத்தினால், எங்கள் கிரமாத்தில் கூலி/விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாயுள்ளது. வருபவர்களும் அநியாய கூலி கேட்கின்றனர். முன்பு 100 ரூபாய், இப்போது 200 ரூபாய். இதனால் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்குபவர்களும், அந்த அரிசி தரமானதாய் இல்லை என்று கூறுகின்றனர். ஒரு சில நகரங்களைத் தவிர, பெரும்பாலான இடங்களில் அரிசி தரமுடையதாய் இல்லை.

நிறைய இலவசங்கள் கொடுப்பதன் மூலம், தேவையான முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள நிதிவசதி இல்லை. இப்போது மழையினால் பாதி தமிழகம் தவிக்கிறது, சரியான மழைநீர் வடிகால் வசதி சென்னையிலாவது உள்ளதா?

மின்சாரம் கேட்கவே வேண்டாம், சென்னை மக்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களும் மானாவாரியாக பாதிக்கப் பட்டுள்ளன.

குடும்ப அரசியல், மீடியாவை மொத்தமாக ஆக்ரமித்துள்ளது, என்கேபி ராஜா போன்றோரின் அயராத சமூகப் பணி, கனிமொழி, ராஜா, ராசாத்தி அம்மாளின் நீரா ராடியுவுடனான டெலிபோன் பேச்சுக்கள் என படு வலிமையான முட்கள் திமுக முன் குவிந்துள்ளன, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க ரொம்ப கஷ்டப் பட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்!!


Sunday, December 05, 2010

தேவர்மகன்: நிறைய மழை & கொஞ்சம் தேநீர்

தேவர்மகன் பாடல்

இஞ்சி இடுப்பழகி..
மஞ்ச சிவப்பழகி..
கள்ள சிரிப்பழகி..
மறக்க மனம் கூடுதில்லையே!!


மென்பொருளாளனின் கவிதை



வழமையான ஓர் ஞாயிறு பிற்பொழுதில்
மழைச் சாறல்கள் தெளிக்கும்
எம் வீட்டு சாளரத்திலிருந்து
தோட்டத்தையும்,
மழைத்துளிகள் சொட்டும் மரங்களையும்,
மலர்களோடு உறவாடும் செடிகளையும்
அதிலமர்ந்து விளையாடிக் களிக்கும் பறவைகளையும்
சூடான ஆவி பறக்கும் தேநீரை அருந்திக் கொண்டே
பார்த்து ரசிக்கும் போதும்
தோணுவதேயில்லை
பணிக்குச் செல்லும் மனைவிக்கும் ஞாயிறு ஓய்வுநாளே என்பது!!!


ஆரோசிக்ஹா – பாண்டிச்சேரி வாசனை

கடந்த வார இறுதியில் பாண்டிச்சேரி சென்றிருந்தோம். அரபிந்தோ ஆசிரமத்திற்கு அருகே இருக்கிறது இந்த கடை. நிறைய வகையான வாசனை ஊதுவத்திகள், வாசனை மெழுகுவர்த்திகள் இயற்கையான முறையில் அரபிந்தோ ஆசிரம வாசிகளால் தயார் செய்யப்பட்டு இங்கே விற்கப்படுகின்றன.




3 மணி நேரம் வரை எரியும் நாகலிங்க பூ வாசனை கொண்ட ஊதுவத்திகள், ரோஜா, மல்லிகை, காபி மணம் கொண்ட ஊதுவத்திகள், ‘சர்ப்பரைஸ்’ என்ற பெயரில் என்ன வாசனை என்று பிரித்து பற்ற வைற்றால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற வகை ஊதுபத்திகள் என்று நிறைய வகையான வாசனையாவியங்கள் உள்ளன.

கார்களில் வைக்கக்கூடிய காற்று புத்துணர்ச்சி அளிப்பான்கள், வீட்டில் பீரோ, துணிகளில் வைக்கக்கூடிய வாசனை புத்துணர்ச்சி அளிப்பான்கள் (Air Freshener types) என்று விதவிதமாய் நிறைய உள்ளன.

இவை தவிர்த்து ஊதுவத்தி ஸ்டாண்டுகளும், அலங்கார விளக்குகள் மற்றும் சில வகையான வாசனைப் பொருட்களும், வாசனை திரவியங்களும் கிடைக்கின்றன.

வகை, வகையாய் எங்களுக்கும், உறவினர்களுக்கும் வாங்கிக் கொண்டு காரில் ‘கேனல் ஸ்ட்ரீட்டில்’ திரும்பும் போது பாண்டிச்சேரியின் மணம் எங்களுக்கு நிரம்பவே பிடித்திருந்தது!!!

Monday, November 22, 2010

எனக்குப் பிடித்த பத்து நடிகர்களின் பத்து திரைப்படங்கள்..

நான் எந்த நடிகரின் விசிறியோ, தீவிர ரசிகனோ அல்ல. தமிழ் சினிமாவுக்கு, நல்ல திரைப்படங்களுக்கு ரசிகன்.




நான் உலகத் திரைப்படங்களையோ, வேற்று மொழி திரைப்படங்களையோ நிறைய பார்த்தவன் இல்லை. மேட்ரிக்ஸ் படமே எனக்கு விஜய் டிவியில் தமிழில் பார்த்த பிறகுதான் பாதி புரிந்திருக்கிறது :-)


1. கமல் - அவ்வை சண்முகி
2. ரஜினி - எந்திரன்
3. சூர்யா - வாரணம் ஆயிரம்
4. ஆர்யா - மதராச பட்டினம்
5. வடிவேலு - வின்னர்
6. ஐஸ்வர்யா ராய் - ராவணன்
7. விக்ரம் - சாமி
8. திரிஷா - அபியும் நானும்
9. ஜாக்கிசான் - Rush Hour
10. அமிதாப் பச்சன் - சீனி கம்

இதை சாக்காக வைத்து பதிவர்கள் தொடர் பதிவு போட்டும், அனானிகள் இஷ்டத்திற்கு பின்னூட்டம் போட்டும் (கலாய்க்கலாம், ஆனால் நாகரிகமாக) கும்மியடிக்கலாம்!!! :-))

Sunday, November 21, 2010

சென்னை பிசாஹட்டின் புதிரான போக்கு..

சென்னை சாலிகிராமம் ஆற்காடு ரோட்டில் பிசாஹட் (Pizza Hut) உள்ளது. எங்கள் வீட்டிற்கு அருகே இருப்பதால் பிஸ்ஸா (அல்லது பிசா.. இதற்கு தூய தமிழ்ப் பெயர் என்ன?) சாப்பிட நினைத்தால் இங்கேதான் செல்வோம்.

நேற்று சனி இரவு 10:10 மணிக்கு அங்கே சென்றோம். ஆனால் கடையை மூடிக் கொண்டிருப்பதாகவும், மேலும் சாப்பிட எதுவுமில்லை என்றும் கூறினர். சரியென்று நாங்கள் வெளியே வந்தபோது வாசலருகே போர்டில் வேலை நேரம் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை என்று போட்டிருந்தது. அதைப் பார்த்து விட்டு நாங்கள் திரும்பவும் உள்ளே சென்று ஏன் சீக்கிரம் மூடுகிறீர்கள் என்று கேட்டதற்கு சரியான பதிலில்லை. சனிக்கிழமை என்பதால் சீக்கிரம் மூடுகிறோம் என்றார்கள்.




நாங்கள் திரும்பி வரும்போது, ஒரு இளைஞர் கூட்டம் வேறு வந்து விசாரித்து விட்டு திரும்பினர்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைதானே மக்கள் நிறையபேர் வருவர். சனி இரவு என்பது வார இறுதியாதால் அப்போது கூடுதல் நேரம் கூட திறந்து வைக்கலாமே? ஏன் 11 மணிக்கு மூட வேண்டிய கடையை சீக்கிரம் மூட வேண்டும்?

நாங்கள் அருகிலுள்ள வேறு ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு 11 மணிக்கு திரும்பி வரும்போது இன்னமும் பிசாஹட்டில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஏன் இன்னமும் கடையை மூடவில்லை? வேறேதுனும் நடந்து கொண்டிருக்கிறதா?

இப்படி சந்தேகத்திற்கிடமான வகையில் எங்களை உணவருந்த அனுமதிக்காததை எதிர்த்து நுகர்வோர் கோர்ட்டில் முறையிட இயலுமா, அதற்கு என்ன ஆதாரம் எங்களிடமிருக்கிறது என்ற கேள்விகளுடன் காரை செலுத்திக் கொண்டிருந்து போது எப்.எம்மில் வழிந்தது 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே..' என்ற பாடல்!!!

Saturday, November 20, 2010

விஜய் டிவியின் சுவாரசியமான நிகழ்ச்சிகள்..

வழக்கமான சீரியல், சினிமாவை தவிர்த்து நிறைய வித்தியாசமான, சுவாரசியமான நிகழ்ச்சிகளை விஜய் டிவி தொடர்ந்து அளித்து வருகிறது. எனவேதான் எனக்கு தமிழ் தொலைக்காட்சி சானல்களிலேயே விஜய் டிவியை நிறைய பிடிக்கிறது.




எனக்கு பிடித்த சில நிகழ்ச்சிகள்

  • அது, இது, எது?
  • ஒரு வார்த்தை ஒரு லட்சம்
  • நீயா நானா?
  • சூப்பர் சிங்கர் (இதில் வரும் குட்டிப்பையன் ஸ்ரீகாந்தை எனக்கு நிறைய, இயல்பான இனிப்பான பாடகர் மனோவை இன்னும் நிறையவும் பிடிக்கும்.)
  • முன்பு தமிழ் பேச்சு என் உயிர் மூச்சு என்று ஒரு நிகழ்ச்சி வந்தது, இப்போது ஒளிபரப்பாகிறதா என்று தெரியவில்லை.

சன் டிவிக்கு சரியான போட்டியை அளிப்பது விஜய்தான் என்பது பொய்யில்லை அல்லவா?

Tuesday, August 24, 2010

கணவன் மனைவி விவாதத்தில் வெல்வது யார்?

இதோ இங்கே கீழிருக்கும் படத்தைப் பாருங்கள். கணவன் மனைவி விவாதத்தில் வெல்வது யார்? திருமணமானவுடனேயே கணவனின் பேச்சு செல்லாக் காசாகி விடுகிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சொல்லுங்களேன். ஒருவேளை, இப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள் :-))


Tuesday, August 10, 2010

கிரிக்கெட்: IND vs NZ - இன்றைய போட்டியில் யாரெல்லாம் கலக்குவார்கள்?

ஒருவழியாய் டெஸ்ட் தொடரை கஷ்டப்பட்டு இந்தியா சமன் செய்து விட்டது. ஆனாலும் தொடர் முழுதும் இலங்கை கையே ஓங்கியிருந்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இப்போது ஒருநாள் தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கிறேன்.



நியுசிலாந்து அணியில் வெட்டோரி, மெக்கல்லம், ரைடர் போன்றோர் இல்லை, கிட்டத்தட்ட அனுபவமில்லா ஒரு கத்துக்குட்டி அணி போலவே காட்சியளிக்கிறது. எனவே இந்தியா, இலங்கை இறுதிப் போட்டியை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியில் சேவக் ஏற்கனவே பயங்கர ஃபார்மில் இருப்பதால், ஒருநாள் தொடரில் தொடர்ந்து கலக்குவார் என நினைக்கிறேன். இன்றைய போட்டியில் சேவக், ஓஜா, ரெய்னா, ரோகித் சர்மா(?) போன்றோர் ஜொலிப்பார்கள் என நினைக்கிறேன். சேவக் ஒரு டபுள் செஞ்சுரி அடிச்சா நல்லாயிருக்கும். முதலில் பேட்டிங் எடுத்தால் ஜெயிக்க நிறைய வாய்ப்பு. பார்ப்போம். நீங்க என்ன நினைக்கிறீங்க?? இந்தியா ஜெயிச்சுடுமா? யார் மேன் ஆப் தி மேட்ச்?? சொல்லுங்களேன் J

Sunday, August 08, 2010

மெல்லியதாய் பெய்யும் மழை..

கவிதை: மெல்லியதாய் பெய்யும் மழை..





முன்னைப் போலில்லாமல்

மாலையில்

சடுதியில் வீடு திரும்ப முடிகிறது..

மெல்லியதாய் பெய்யும்

மழையை

நம் வீட்டின் முற்றத்தில்

ரசிக்க முடிகிறது..

ஓய்வு நேரங்களில்

புத்தகமோ, மெல்லிசையோ

வாசிக்க முடிகிறது..

நீ அருகிலில்லா

நினைவோடை

எக்கணமாவாது

தென்படும்போது

அப்பொழுதில்

முடிகிறது அந்நாள்!!

Thursday, August 05, 2010

தீவாளிக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு!!

இரண்டு மூன்று நாட்களாகவே ஒரே பரபரப்பாக இருந்தது. அலுவலகத்தில் எல்லோரும் தீபாவளிக்கு எப்போது ஊருக்கு போகிறீர்கள், பஸ்ஸா, ட்ரெயினா, காரா? டிக்கெட் புக் பண்ணியாச்சா என்று விசாரித்தவாறு இருந்தார்கள். செய்தித்தாள்களில் முந்தின நாட்களுக்கான டிக்கெட் காலியாயிடுச்சு என்று செய்திகள் வேறு.

என்னை மாதிரி தென் மாவட்டத்திலிருந்து வந்து சென்னையில் வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பெரிய சவால்தான். பண்டிகை காலங்களில் ஊருக்கு போக டிரெயின் டிக்கெட் புக் பண்ணுவது என்பது மிகப்பெரிய சாதனை. டிக்கெட் கிடைத்து விட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி J

நேரில் சென்று கவுண்டரில் புக் செய்ய காலையில் 5 மணிக்கே சென்று க்யூவில் நிற்க வேண்டும். அப்படியும் உங்கள் முறை வரும்போது டிக்கெட் கிடைக்காமல், வெயிட்டிங் லிஸ்ட் ஆகலாம். இண்டர்நெட்டில் புக் செய்யலாம், ஆனால் சமயத்தில் IRCTC வெப்சைட் காலை வாரிவிட்டு விடும். நம்ப முடியாது. ஏஜண்ட் புக் பண்ண காலை 8 முதல் 9 மணிவரை தடை செய்து விட்டதால் அங்கேயும் போக முடியாது.

எனவே சாபூத்ரி போட்டு இண்டர்நெட்டில் நமது அதிர்ஷ்டத்தை சோதனை செய்ய முடிவு செய்தேன். இரு நாட்களுக்கு முன்பே மொபைலில் ரிமைண்டர் எல்லாம் வைத்தாயிற்று J

இன்று காலை 715

படுக்கையிலிருந்து எழுந்தாச்சு, காலைக் கடன்களை முடித்துவிட்டு, அம்மா கையால் ஒரு ஸ்ட்ராங் டிகாஷன் காபி குடிச்சாச்சு, பேப்பர் ஹெட்லைன்ஸ் பாத்தாச்சு..

காலை 750

லேப்டாப் ஆன் பண்ணி, IRCTC சைட் திறந்தேன். ஆஹா, சைட் பிரச்சினை பண்ணாம ஓப்பன் ஆயிடுச்சே.. இன்று இனிய நாள்தான் என்று மனதுக்குள் சுகிசிவம் சொன்னார் J

காலை 756

3 நவம்பர்க்கான மலைக்கோட்டை show availability முயற்சி செய்தபோது இன்னும் டைம் ஆகவில்லை என்றது

காலை 801

திரும்பவும் show availability, 470 டிக்கெட்டுகள் என்றது.. ஆஹா..

காலை 802

உடனே மலைக்கோட்டை எக்ஸ்பிரஸை தேர்வு செய்து, புக் செய்தேன்.. பேரெல்லாம் கொடுத்த பிறகு பார்த்தால் 428 டிக்கெட் என்றது. ஐயோ, புக்காகி விட வேண்டுமே ஒரே டென்ஷன். சிலசமயம் பணம் எடுக்கும்போது சொதப்பி விடும். அப்பா ஒரு வழியா பேங்க் டிரான்சாக்ஷன் எல்லாம் முடிந்து, சரியா புக் ஆயிடுச்சு.. ஹூர்ர்ர்ர்ர்ரேரேரே J

அப்பா ஒருவழியா 3 நவம்பர் நைட் டிரெயின் புக் பண்ணியாச்சு, திரும்ப ரிட்டர்னுக்கு வரும் திங்களன்று ட்ரை பண்ணனும். முக்கியமா ஒரு விஷயம், ஆபிசில் நவம்பர் 5 மட்டும்தான் ஹாலிடே, 4ம் தேதி லீவு கொடுக்கனும், மேனேஜர் கால்லயவாது விழுந்துரலாம், எம்பெருமானே காப்பாத்துப்பா J

பின் குறிப்பு: இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்கள் எல்லாருக்கும் ஏதாவது ஒரு ட்ரெயினில் டிக்கெட் கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்ள இருக்கிறேன், ஆதலால்...... J

Tuesday, August 03, 2010

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவுக்கு தேவையா?

ஏகப்பட்ட அமளிகளுக்கு இடையே காமன்வெல்த் போட்டிகள் இன்னும் இரு மாதங்களில் இந்தியாவில் தொடங்க இருக்கின்றன. இன்னும் சில மைதானங்கள் முழுமையாக தயாராக வில்லை. ஏற்கனவே தயாரன மைதானங்களில் வசதிகள் உலகத்தரத்தில் முழுமையாய் இல்லை என ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன.

நம் போன்ற ஓர் ஏழை (வளர்ந்து வரும்) நாட்டுக்கு இந்த போட்டிகளை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்ன பெரிய புடலங்காய் பெருமை இப்போட்டிகளை நடத்துவதில்? நம் நாட்டு மக்கள் அனைவரும் அனைத்திலும் தன்னிறைவு அடைந்து விட்டனரா?

முதலில் அரசாங்கம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் தர முடிகிறதா? இந்தியா முழுவதிலும் மின் பற்றாக்குறை உள்ளது. இங்கே சென்னையில் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது, ஆனால் ஜெயங்கொண்டம் அருகே உள்ள எங்கள் கிராமத்தில் தினமும் பலமணி நேரங்கள் மின் தடை இப்பவும் ஏற்படுகிறது. இந்த லட்சணத்தில் காமன்வெல்த் போட்டிகளை இவ்வுளவு மக்கள் வரிப்பணத்தை செலவழித்து நடத்த வேண்டுமா? இதற்கு ஆகும் செலவில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தலாமே?

புதிய மைதானங்கள் தயாராகின்றன. ஏற்கனவே இருக்கும் மைதானங்கள் மேம்படுத்த படுகின்றனவாம். இன்னும் நிறைய கட்டமைப்புகள் உருவாகின்றன. இதற்கு ஆகும் செலவில் இந்தியா முழுவதும் முக்கியமான நதிகளை இணைக்கலாமே, இதன்மூலம் விவசாயம் செழிக்க உதவலாமல்லவா? விளையாட்டு முக்கியமா அல்லது நாட்டு மக்களின் வாழ்வாதாரம் முக்கியமா? சரியான சத்துணவு இல்லாமல் 42 கோடி பேர் நம் நாட்டில் வாழ்கின்றனராம். இதற்கு ஏதாவது செய்யலாமே? வயிற்றில் ஈரத்துணி போட்டுக் கொண்டு தடகளப் போட்டிகளை நாம் பார்த்து ரசிக்க முடியுமா?

சரி, இச்செலவுகளை ஒழுங்காக செய்கின்றனாரா என்றால் அதுவும் இல்லை. நிறைய ஊழல் நடந்துள்ளதாக செய்தித்தாள்களில் படிக்கின்றோம். 7 லட்சம் விலையுடைய வாஷிங்மெஷினை 45 நாட்கள் வாடகைக்கு எடுக்க 9 லட்சம் கொடுத்துள்ளார்களாம், என்ன கொடுமைங்க இது? சுரேஷ் கல்மாடியை கேட்டால் எனக்கு எதுவும் தெரியாது, எல்லாம் ஒழுங்காத்தான் இருக்கு என்கிறார்.

இன்னும் சில மைதானங்கள் தயாரகவில்லை. சில மைதானங்களில் மேற்கூரை ஒழுகுகிறது, வெளிப்புற பாதைகளில் டைல்ஸ் ஒட்டப் பட வில்லை. ஒரே குப்பையும், கூளமுமாக இருக்கிறது. இப்படியெல்லாம் அரைகுறை வசதிகளுடன் காமன்வெல்த் போட்டிகளை நடத்தினால், உலக அரங்கில் நம் மானம் காற்றில் பறக்கும்.

இந்த லட்சணத்தில் ஒலிம்பிக் போட்டிகளை வேறு நடத்த நம்நாடு ஆசைப்படுகிறது, முதலில் காஷ்மிரையும், நக்சலைட்களையும் கவனிக்கலாம், பிறகு ஒலிம்பிக் குறித்து யோசிப்போம்!!

Monday, August 02, 2010

எந்திரன் பாடல்களின் மற்றுமோர் விமர்சனம்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கின்றன எந்திரன் பாடல்கள். மிக அதிகமான விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறது. இண்டர்நெட் டவுண்லோடு காலத்தில் இவ்வுளவு அதிகமான விலைக்கு வாங்கி எப்படி கட்டுப் படியாகும் என்று புரியவில்லை. FM ரேடியோக்கள், டிவி சானல்கள் ஒவ்வொரு முறை பாடல் ஒளிபரப்பும் போது ஏதாவது ராயல்டி தொகை கொடுக்குமா என்ன?

வழமையான ஏ.ஆர்.ரகுமான் பாடல்களைப் போலவே, நான்கைந்து முறை கேட்ட பிறகே பாடல்கள் பிடிபடுகின்றன, சில பாடல்கள் பிடிக்கின்றன J

அரிமா அரிமா

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் என அசத்தலான வரிகளுடன் நம்மை இப்பாடல் உள்ளிழுக்கிறது. வைரமுத்துவின் வைர வரிகளை ஹரிஹரன் கலக்கலாக வடித்திருக்கிறார். இசையும் அருமை.

பூம் பூம் ரோபோடா

கொஞ்சம் சுமாரான பாடல்தான், ஏதோ ஆங்கிலப் பாடலை கேட்பது போலிருக்கிறது. பெண் குரல் யாரென்று தெரியவில்லை, வித்தியாசமாக இருக்கிறது.

எந்திரன் தீம் சாங்

வித்தியாசமாய் மேற்கத்திய இசையையும், இந்திய பாரம்பரிய இசையையும் கலந்து ரகுமான் கலக்கியிருக்கிறார். கேட்க நன்றாக இருக்கிறது.

இரும்பிலே ஒரு இதயம்

இன்னுமொரு மேற்கத்திய பாணிப் பாடல். ஆங்கில வரிகளுடன் ஆரம்பிக்கின்றது. கொஞ்சம் பரவாயில்லை, பாடியது ரகுமான்(?) என நினைக்கிறேன். பெண் பாடகி யார்? தமிழ் வரிகளையும் ஆங்கிலம் போலவே பாடி கொலை செய்கிறார் J

காதல் அணுக்கள்

இந்த ஆல்பத்தின் சூப்பரான பாடல். அருமையான துள்ளலான மெலோடி. ஆரம்பமாகும் இசையும், குரலும் அற்புதம். வைரமுத்து இப்படத்தில் எழுதிய மூன்று பாடல்களில் இதுவும் ஒன்று என நினைக்கிறேன். எனக்கு நிரம்ப பிடித்த பாடல்.

கிளிமாஞ்சாரோ

அருமையான ஆரம்பம், ஏதோ தென்னமரிக்க பாடலைப் போல ஆரம்பமாகிறது. துள்ளலான பாடல். பாடகர்களின் குரல் அருமையாக செட்டாகிறது. ஆனால் எங்கோ கேட்டது போலிருக்கிறது J வழக்கம் போலவே தமிழ் வரிகளை கடித்துக் குதறும் டிரெண்ட் இதிலும் இருக்கிறது.

புதிய மனிதா

படத்தின் ஆரம்ப பாடலாய் இருக்கலாம். ரகுமான்(?) குரலில் ஆரம்பமாகிறது. கொஞ்சம் மெதுவான பாடல், பின்னனி இசை அருமையாக இணைந்து இருக்கிறது. நான் கற்றது ஆறறிவு என்று எஸ்பிபி கலக்கி இருக்கிறார். ஆனால் துள்ளல் கொஞ்சம் குறைவு. ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யுமா என்று தெரியவில்லை.

முடிவுரை

மொத்தத்தில் பாடல்கள் சுமார்தான். எனது எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை. மேற்கத்திய பாணி இசையை குறைத்து இந்திய இசை வடிவங்களை அதிகரித்து இருக்கலாம். ஷங்கரின் படங்களில் பாடல்கள் மிகப்பெரிய பலமாய் இருக்கும். ஆனால் சிவாஜி படத்தில் பாடல்கள் அவ்வுளவு பிரபலமாக வில்லை. அதே போல்தான் இப்படமும் அமைந்திருக்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா அளவுக்கு மற்றுமோர் இசை அற்புதத்தை ஷங்கர் இம்முறை ரகுமானிடம் வாங்க இயல வில்லை என்றே நினைக்கிறேன்!

எனக்கு பிடித்த பாடல்கள்: அரிமா அரிமா, காதல் அணுக்கள் J

Wednesday, July 28, 2010

மருத்துவமும் வியபாரமா? -- நண்பருக்கு நேர்ந்த உண்மை அனுபவம்

எனது அலுவலக நண்பருக்கு சொத்தைப் பல். ஒரு வருடத்திற்கு முன்பு சென்னை - போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். இங்கே ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி கடைசி வருட மாணவர்களும் பணிபுரிவர் (இண்டர்ன்ஷிப்). பீஸ் கிடையாது, 20 ரூபாய் குடுத்து பதிவு செய்து கொண்டால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் (நண்பரின் கூற்று). சொத்தைப் பல்லை எடுத்து விட்டு, அவ்விடத்தில் சிமெண்ட் வைத்து அடைத்தார்களாம் (சிமெண்ட்டுக்கு மட்டும் 70 ரூபாய் கொடுத்தார், வேறெதுவும் செலவில்லை).

இப்போது ஒரு மாதத்திற்கு முன்பு சிமெண்ட் எடுத்துக்கொண்டு வந்து விட்டது. நண்பருக்கு சற்று பயம் திரும்பவும் ராமச்சந்திரா செல்ல. சரி, வேறு ஏதாவது மருத்துவமனைக்கு செல்லலாம் என்று நண்பர்களிடம் விசாரித்து இருக்கிறார்.

ஒரு நண்பரின் மூலமாக தாம்பரத்தில் இருக்கும் ஒரு பல் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். தலைமை மருத்துவர், அந்த நண்பருக்கு தெரிந்தவராம். போய் பல்லைக் காட்டியிருக்கிறார். எக்ஸ்ரே எடுத்திருக்கிறார்கள். தலைமை மருத்துவர் பார்த்து விட்டு, சொத்தைப் பல் எடுத்த பகுதிக்கு கீழேயும் பாதிக்கப் பட்டிருக்கிறது, இன்னும் சிறிது நாட்களில் வேர் வரை பரவி விட்டால், தாங்க முடியா வலி ஏற்படும், எனவே ரூட் கானல் ட்ரீட்மெண்ட் செய்து கொள்ளுங்கள் என்றாராம். நண்பர் எவ்வுளவு செலவாகும் என்று கேட்டிருக்கிறார். 3000 ரூபாய் ஆகும் என்றிருக்கிறார் டாக்டர்.

இவர் எனக்கு தற்போது ரூட் கானல் டிரீட்மெண்ட் தேவையில்லை. சொத்தைப் பல் இருந்த இடத்தை மட்டும் அடைத்து விடுங்கள் என்றிருக்கிறார், வலி வந்தால் பிறகு வந்து அந்த் ட்ரீட்மெண்ட் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். டாக்டர் ஒத்துக் கொள்ளவில்லை. நிறைய பேசி நண்பரை கன்வின்ஸ் செய்ய முயற்சித்து இருக்கிறார். அரை மணி நேரத்திற்கு பிறகு, அரை மனதோடு சரி, அடுத்த வாரம் வாருங்கள், சொத்தைப் பல் இருந்த இடத்தை அடைத்து விடலாம் என்று வரச் சொல்லி இருக்கிறார். நண்பர் திரும்பி வரும் முன், ரிசப்ஷனிஸ்ட்டிடமும் ரூட் கானல் ட்ரீட்மெண்ட்டுக்கு எவ்வுளவு செலவாகும் என்று கேட்டார். ரிசப்ஷனிஸ்ட் 2500லிருந்து 3000 வரை செலவாகும் என்றாராம்.

திரும்பவும் அடுத்த வாரம் நண்பர் மருத்துவமனைக்கு சென்ற போது, தலைமை மருத்துவர் இல்லை. வேறு ஒரு உதவி மருத்துவர் நண்பரையும், எக்ஸ்ரேவையும் சோதனை செய்திருக்கிறார். பார்த்து விட்டு, அவரும் ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்து கொள்ளுங்கள் என்றிருக்கிறார். நண்பரோ “இல்லை, பிறகு பார்த்துக் கொள்கிறேன், தலைமை மருத்துவரிடம் ஏற்கனவே கூறிவிட்டேன், அவரும் சொத்தைப் பல் இருந்த இடத்தை மட்டும் அடைக்க ஒப்புக்கொண்டு இப்போது வரக் கூறினார்” என்றார். டாக்டர் ஒத்துக் கொள்ள வில்லை. இல்லை, உங்களுக்கு சொத்தை நிரம்ப புரையோடி இருக்கிறது, நீங்கள் ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்து கொள்வதுதான் நல்லது என்று என்னென்னவோ ஒரு மணி நேரம் பேசி நண்பரை கன்வின்ஸ் செய்து விட்டார். நண்பர் திரும்பவும் அதற்கு ஆகும் செலவை டாக்டரிடமும், ரிசப்ஷனிட்டிடமும் கன்பர்ம் செய்து கொண்டு (ரூபாய் 3000) முதல் சிட்டிங் (ரூ 500 கொடுத்து விட்டு) செய்து கொண்டார். 4 முதல் 5 சிட்டிங் வரவேண்டுமாம். 4-வது சிட்டிங்கின் போது 2000 ரூபாய் கட்டி இருக்கிறார்.

கடைசி சிட்டிங்கின் போது பீஸ் கட்ட சென்ற போது இன்னும் 1500 ரூபாய் பேலன்ஸ் தர வேண்டும் என்றார்களாம் (ஏற்கனவே 2500 கட்டி விட்டார், ஆரம்பத்தில் கூறிய செலவு தொகையான 3000 ரூபாய்க்கு இன்னும் 500 ரூபாயே மீதி தரவேண்டும்). நண்பர் அதிர்ச்சி அடைந்து எதற்கு 1500, இன்னும் 500 தானே தரவேண்டும் என்று கேட்டதற்கு ரிசப்ஷனிஸ்ட் கூலாக 3000 ரூபாய் ட்ரிட்மெண்ட்டுக்கு, 1000 ரூபாய் டாக்டர் பீஸ் (ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்ய சர்வீஸ் சார்ஜ்) என்றிருக்கிறார்.

நண்பருக்கோ சரியான ஆத்திரம். ஆரம்பத்தில் ஏன் சொல்லவில்லை, மொத்தம் 3000 ரூபாய்தானே ஆகும் என்றீர்கள், தலைமை மருத்துவர் கூட அதுதானே கூறினார் என்று சண்டை போட்டு இருக்கிறார். ரிசப்ஷனிஸ்ட் ஒத்துக் கொள்ள வில்லையாம். அங்கிருந்த மற்ற ஊழியர்களும் ஒத்துக் கொள்ள வில்லையாம். ஒரு மணி நேர விவாதத்திற்கு பிறகு நண்பர் தலைமை மருத்துவருக்கு மொபைலில் பேசி இருக்கிறார். அவரும் ஆமாம் 4000 ரூபாய்தான் என்று இருக்கிறார். நண்பருக்கு அவரிடம் சண்டை போட விருப்பமில்லை (அவரது நண்பருக்கு தெரிந்தவர், மேலும் மெத்தப் படித்த டாக்டர்). சிறிது நேர உரையாடலுக்கு பின்பு, சரி 500 ரூபாய் குறைத்துக் கொண்டு, 3500 ரூபாய்க்கு செட்டில் செய்து விடுங்கள் என்றிருக்கிறார் தலைமை மருத்துவர். விதியை நொந்து கொண்டு நண்பர் பணத்தை செட்டில் செய்து விட்டு வந்திருக்கிறார். என்னிடம் சென்ற வாரம் இந்த கதையைக் கூறி புலம்பினார். சரி இதனை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளலாம், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறி இப்போது எழுதி இருக்கிறேன்,

நண்பர்களே, எனது கேள்விகள் சில

  1. நண்பர் சொத்தைப் பல் இருந்த இடத்தை அடைக்க மட்டுமே சென்றிருக்கிறார். அவரை எக்ஸ்ரே அது, இதுவென்று பயமுறுத்தி ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்து கொள்ள கட்டாயப் படுத்தியது ஏன்?
  2. அவருடைய மெடிக்கல் கண்டிஷனுக்கு நிஜமாகவே ரூட் கானல் டிரீட்மெண்ட் அவசியமா? அதை எப்படி நாம் உறுதி படுத்திக் கொள்ளலாம்? இம்மாதிரி மருத்துவ விஷய்ங்களை நாம் எப்படி cross verify பண்ணலாம்? நம்முடைய அறியாமையை பயன்படுத்தி பணம் பண்ணும் நோக்கத்துடன் டாக்டர்கள் விளையாடலாமா?
  3. முந்தின வாரம் தலைமை டாக்டர் சொத்தைப் பல் இருந்த இடத்தை அடைக்க ஒப்புக்கொண்டு விட்ட பிறகு திரும்பவும் ஏன் அடுத்த வாரம், உதவி டாக்டர் பழைய பல்லவியை (ரூட் கானல் டிரீட்மெண்ட்) பாடியிருக்கிறார்? ஏன் ஒரு மணி நேரம் வாதடி, நண்பரை கன்வின்ஸ் செய்திருக்கிறார்?
  4. ஆரம்பத்தில் ஏன் மருத்துவமனையில் 3000 ரூபாய்தான் செலவாகும் என்றார்கள்? இந்த செலவை எப்படி நிர்ணயிக்கிறார்கள். ஏதாவது standard உள்ளதா? ரூட் கானல் டிரீட்மெண்ட்டுக்கு நிஜமாகவே 3000 ரூபாய் என்பது நியாயமான தொகைதானா? இதை நாம் எப்படி cross verify செய்யலாம்?
  5. ஆரம்பத்தில் 3000 ரூபாய்தான் என்று சொல்லிவிட்டும், டிரிட்மெண்ட்டின் கடைசி கட்டத்தில் ஏன் 4000 ரூபாய் என்றார்கள்? (1000 ரூபாய் டாக்டர் பீஸை ஏன் முன்பே தெளிவாய் சொல்ல வில்லை?. இப்படி மறைமுகமாய் கட்டணம் பிடுங்கவது ஒரு மருத்துவமனைக்கு அழகா?
  6. 4000 ரூபாய் என்ற பீஸ் எப்படி தலைமை மருத்துவரிடம் மொபைலில் பேசியவுடன் 3500 என்று குறைந்தது? உண்மையான தொகை என்ன?

இதுதான் இன்றைய மருத்துவத்தின் உண்மையான நிலை. நிறைய மருத்துவமனைகள் (எல்லாமும் அல்ல) வியபார மையங்களாகி விட்டன. எதையும் நம்ப முடியவில்லை. சென்னையில் இருக்கும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கோ சென்றால், நீங்கள் காலி என்பதே உண்மை. அரசாங்கம் இதெயெல்லாம் முறைப்படுத்த இயலுமா? இதற்கெல்லாம் தீர்வு காணாமால், இலவச காப்பீட்டுத் திட்டங்களால் பெரிய பயன் இல்லை!!

Saturday, July 10, 2010

சாரு நிவேதிதா: DON’T STARE AT MY SHOES

இன்று மாலை சென்னை தேவநேயப் பாவணர் அரங்கில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கருத்தரங்கு நடைபெற்றது. அந்நிகழ்ச்சித் துளிகள்..

மாலை 5:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப் பட்டிருந்த விழா, தமிழ் கலாச்சாரத்தின் படி சரியாக 630 மணிக்கு துவங்கியது.

நான் 6 மணிக்கு சென்றபோது, மனுஷ்யபுத்திரன் தேநீர் அருந்தி கொண்டிருந்தார், அவருக்கு வணக்கம் தெரிவித்து அரங்கின் உள்ளே சென்றேன். கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டீ, தண்ணீர் பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என நினைக்கிறேன், நான் தேநீர் அருந்த வில்லை.

அரங்கு எளிமையாய், அழகாய் இருந்தது, ஏசி செய்யப் பட்டது. இருக்கைகள் சத்யம் தியேட்டர் போல் வசதியாய் இருந்தன. இவ்வுளவு செலவழித்து ஒரு எழுத்தாளருக்கு பாராட்டு விழா நடத்திய உயிர்மை மற்றும் மணற்கேணி பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள் பலகோடி!!

இந்திரா பார்த்தசாரதி மற்றும் ஞானக்கூத்தன் முன்பே வந்து விட்டனர். மற்ற விருந்தினர்கள், சிறப்பு பேச்சாளர்கள் சற்று தாமதமாக வந்தனர். இந்திரா (வேறோரு பெண்மணி), ஞானக்கூத்தன், அ.ராமசாமி, இமையம், எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், ரவிக்குமார் (மணற்கேணி ஆசிரியர்) ஆகியோர் இந்திரா பார்த்தசாரதியை பற்றியும், அவரது படைப்புகளைப் பற்றியும் பாராட்டிப் பேசினர்.

இ.பா ஏற்புரை வழங்கி நகைச்சுவையாய் பேசினார்.

விழாவிற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா சரியாய் துவங்கும் நேரத்திற்கு சற்று முன்பே வந்தார். விழா முடிவதற்கு சற்று முன்பே கிளம்பி போய் விட்டார். அவருடன் பேசலாம் என்று நினைத்து ஏமாற்றமடைந்தேன்.

சாரு நிவேதிதா வெகு இளமையாய் இருந்தார். ரவுண்ட் நெக் டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட், ரிம்லெஸ் கண்ணாடி என்று படு யூத்தாக இருந்தார். அவரது டி-ஷர்ட்டில் “DON’T STARE AT MY SHOES” என்று போட்டிருந்தது, அப்படி என்ன என்று ஷூவை எட்டிப் பார்ப்பதற்குள் என்னை கடந்து சென்று விட்டார்.

எஸ். ராமகிருஷ்ணன் கூட சாரு எப்போதும் இளமையாய் காட்சியளிக்கிறார் என்று பேச்சிலேயே பொறாமைப் பட்டார்.

ஞானக்கூத்தன் சாருவுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள் என்று நகைச்சுவையாய் பேசினார், சாரு ரசித்திருப்பார் என நினைக்கிறேன்.

மனுஷ்ய புத்திரன் “சாரு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாய் உடனே பேசி விடுவார்” என்று கூறி பாராட்டினார்.

அரங்கில் பேசிய அனைவருமே, தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பத்தில்லை என்று வருத்தப் பட்டனர்.

இந்திரா பார்த்தசாரதியின் போலந்து அனுபவங்கள் பற்றிய நாவலையும், நந்தன் கதை போன்ற நாடகங்களையும் அனைவரும் சிலாகித்தனர். அவரது படைப்புகள் எதையும் நான் படித்ததில்லை. ஆனால் இனிமேல் படிப்பேன், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த கருத்தரங்கு உண்டாக்கியது, அதுவே இக்கருத்தரங்கின் வெற்றி! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க, இ.பா!!

Wednesday, July 07, 2010

BSNL தந்த இன்ப அதிர்ச்சி!

நான் BSNLன் அகல அலைவரிசை இணைய இணைப்பு பெற்றுள்ளேன். இரு வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். சேவை திருப்திகரமாகவே உள்ளது. நான் வைத்திருப்பது Home Combo 299 என்கிற ப்ளான்.

கடந்த இரு வாரங்களாக Broadband அடிக்கடி disconnect ஆகி வந்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒருமுறை disconnect ஆகி விடும். பொறுத்து பொறுத்து பார்த்து மூன்று நாட்களுக்கு முன்பு இரவு 11 மணிக்கு வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்தேன். முதல் ஆச்சரியம், லைனில் பேசியவர் பொறுமையாக, அன்பாக பேசினார். என்ன பிரச்சினை என்று கேட்டுக் கொண்டு நிச்சயம் சரி செய்து விடுகிறோம் சார், 24 மணிநேரத்தில் உங்களுக்கு ஸ்டேட்டஸ் தெரிவிக்கிறோம் என்றார். கம்ப்ளெயிண்ட் நம்பரை நான் கேட்காமலேயே கொடுத்தார்.

மறுநாள் 10 மணிக்கு எனக்கு மொபைலில் கால் வந்தது, நான் மீட்டிங்கில் இருந்ததால் எடுக்க வில்லை. 12 மணிக்கு திரும்பவும் கால் வந்தது, BSNL ராமாபுரத்தில் (எனது ஏரியாவில் இருந்து) இருந்து பேசி விபரம் கேட்டார்கள். என்னவென்று பார்க்கிறோம் சார், உங்கள் லைனில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்றார்கள். மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது மாலை 630 மணி, அபார்ட்மெண்ட் வாசலில் ரோட்டோரமாக இருக்கும் BSNL இணைப்புப் பெட்டியைத் திறந்து இருவர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

சாலையில் வெளிச்சம் குறைவால், கையில் டார்ச்சுடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். நூற்றுக் கணக்கான ஒயர்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன. ஏதோ அபார்ட்மெண்ட் அருகில் பூமியில் கேபிள் அறுந்து கிடந்ததால், மாற்று கேபிள் பொறுத்தி அதிலிருந்து இணைப்பு கொடுத்தார்கள். நான் அருகே சென்று விசாரித்த போது, அபார்ட்மெண்ட்டில் உள்ள பாதி இணைப்புகளை சரி செய்து விட்டதாகவும் (மொத்தம் 256 வீடுகள்), மீதி வீடுகளின் இணைப்புகளை நாளை சரி செய்து விடுவதாகவும், பொறுமையாகவும், பொறுப்பாகவும் பதில் கூறினர்.

நான் எனது தொலைபேசி எண்ணைக் கூறி, அதை கொஞ்சம் சோதனை செய்யுங்கள், சரி செய்து விட்டீர்களா என்று கேட்டேன். ஏற்கனவே இருட்டி விட்டது, அவர்கள் கிளம்பும் நிலையில் சோர்வாக இருந்த போதும், எனது வேண்டுகோளை தட்டாமல், 5 நிமிடத்தில் எனது இனைப்பையும் சரி செய்தார்கள், உடனடியாக எனது இல்லத்திற்கு போன் செய்து சோதனை செய்யக் கூறினர், நான் போன் செய்து பார்த்து இயங்குவதை உறுதி செய்தேன். அவர்களுக்கு நன்றி கூறி வீட்டுக்கு வந்தேன்.

மறுநாள் காலை மறுபடியும் போன் செய்து, எனது புகார் திருப்திகரமாய் சரி செய்யப் பட்டு விட்டதா என்று உறுதி செய்து கொண்டனர், வேறு ஏதாவது புகார் இருந்தாலும் தெரிவிக்குமாறு கூறினர். அன்றிலிருந்து இணைய இணைப்பும் பக்காவாகி விட்டது. ஜிமெயிலில் ஜி என்று டைப் செய்தாலே ஜிமெயிலே திறந்து விடுகிறது. அவ்வுளவு வேகம், அருமை! மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது, வாழ்க BSNL! எதற்கெடுத்தாலும் பொதுத்துறையை, அவர்களின் சேவையை திட்டுபவர்களே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்??

பின் குறிப்பு: ஆனாலும் தொலைத்தொடர்பில் தனியார் உள்ளே வந்து போட்டி அதிகமாகி விட்ட நிலையில், தங்களை, தங்கள் வேலை, எதிர்காலத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் BSNL தொழிலாளர்களை இப்படி மாற்றி இருக்கலாம், எப்படி இருந்தாலும் அவர்களளப் பாராட்டலாம் அல்லவா?

Friday, July 02, 2010

தூய தமிழ் சொற்கள் நடைமுறைக்கு ஒத்துவருமா?

ஒரு வாரம் முன்பு தினமலரில் படித்தேன். சென்னையில் அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவு போட்டுள்ளதாம். அதையொட்டி கடைக்காரர்களும் தூய தமிழில் பெயர் வைக்கிறார்களாம்.

ஐஸ்கிரீம் என்பதற்கு பனிக்குழையம் என்று போட்டிருந்தார்கள். பனிக்கூழ்/பனிக்குழையம் எந்த சொல் சரியானது? இப்படி எழுதினால் எத்தனை மக்களுக்கு புரியும்? எதனால் தமிழ் சொற்கள் தமிழ் மக்களுக்கே புரியாத நிலை வந்தது? ஒருவேளை இப்படி ஒரு பத்து ஆண்டுகள் தூய தமிழை எங்கும் நடைமுறைப் படுத்தினால் அனைவரும் பழக்கப் படுத்திக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அலுவலக விஷயமாக இஸ்ரேல் சென்றிருந்தேன். அங்கு ஹீப்ரூ மொழி நடைமுறையில் உள்ளது. ஹீப்ரூவும் தமிழ் மொழி போன்றே பழைமையான மொழியே. அங்கே மக்கள் அனைவரும் அனைத்திலும் ஹீப்ரூவையே பயன் படுத்துகின்றனர். கடைகள், கணிப்பொறிகள், மொபைல் போன்கள், பில்கள் அனைத்திலும் ஹீப்ரூ. விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் ஹீப்ரு மொழியில் உள்ளது. ஆனால் தமிழில் இல்லை. இது வருத்தமளிக்கக் கூடியது. இதற்கு காரணம் எனக்கு தெரிய வில்லை.

நம்மால் ஏன் தமிழ் மொழியை எங்கும் பயன்படுத்த முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என கருதுகிறேன். நமது ஆங்கில மோகம், தமிழில் படித்தால், பயன் படுத்தினால் கேவலம் என்று நினைக்கிறோம். மொபைல் போனில் (கைப்பேசியில்) குறுஞ்செய்திகள் தமிழில் அனுப்பலாம், ஆனால் எத்தனை போன்கள் இவ்வசதியை பெற்றுள்ளன? எத்தனை மக்கள் பயன்படுத்துகிறார்கள்?

தமிழ் படங்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இப்போது கேளிக்கை வரி விலக்கால் எல்லா படங்களும் தூய தமிழில் பெயர் வைக்கின்றன. இல்லா விட்டால் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், வாரணம் ஆயிரம், பெண் சிங்கம் போன்ற பெயர்களெல்லாம் வந்திருக்குமா? ஆனால் படத்தில் பெயரில் மட்டுமே தமிழ். மற்றபடி காட்சிகள் எல்லாம் மேல்நாட்டு கவர்ச்சி கலாச்சாரம்தான்.

பள்ளிக்கூடங்கள், நம்மில் எத்தனை பேர் குழந்தைகள் தமிழ்வழிக் கல்வி கற்க வைக்கிறோம்? அப்படி படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை அரசாங்கம் உறுதி செய்யுமா? இப்போது கூட செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அறிவித்து இருக்கிறார்கள்.

தமிழில் எல்லாவித கல்வியும் கற்க முடியுமா? ஒரு உதாரணத்திற்கு கணிப்பொறியியல் தமிழில் கற்க முடியுமா? அதற்கான அனைத்து தொழில்நுட்ப கலைச்சொற்களும் நம்மிடம் உள்ளனவா? Operating System, Business Analysis, Optimization Techniques, Sorting, Random number போன்றவற்றிற்கு சரியான தமிழ் கலைச்சொற்கள் என்ன? அவை எத்தனை தூரம் பிரபலமாயிருக்கின்றன?

ஒருவேளை அப்படியே தமிழில் கல்வி கற்கும் வாய்ப்பிருந்தாலும், அதை படித்து வருபவர்களுக்கு எவ்விதமான வேலை வாய்ப்புகள் உள்ளன? மேல்நாட்டு, அந்நிய கம்பெனிகளில் தமிழ் வழி டிகிரி செல்லுபடியாகுமா? நிச்சயமாக ஆங்கிலம் அறிந்தவர்கள், ஆங்கில வழிக் கல்வியை அல்லவா அவர்கள் விரும்புவார்கள்.

எனவே நடைமுறையில் தூயதமிழ் சொற்கள் என்பது கானல் நீரே.

என்னிடம் மேற்சொன்ன கேள்விகளுக்கெல்லம் விடையில்லை. உங்களிடமும் இல்லாமலிருக்கலாம். ஆனால் இக்கேள்விகளுக்கான பதிலை தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்றே தோன்றுகிறது!!

Sunday, June 20, 2010

ராவணன் – சினிமா விமர்சனம்





எந்த தமிழ்படத்தையுமே முதல் வாரத்தில் பார்ப்பதை நான் விரும்புவதில்லை. படம் பார்த்த நான்கு நண்பர்களை கேட்டு விட்டோ, வலைப்பதிவிலோ, டிவியிலோ, வாரப் புத்தகங்களில் வரும் விமர்சனங்களை கேட்டு விட்டு நல்ல, வித்தியாசமான படம் என்றால்தான் செல்வேன். ஆனால் ராவணன் பற்றிய எதிர்பார்ப்புகள், மணிரத்னம், ரெஹ்மான், விக்ரம் கூட்டணி என்னை சற்றே சஞ்சலப் படுத்தியது. படம் நிச்சயம் வித்தியாசமாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சற்றே அசட்டையாய் கடந்த புதன் இரவு வலையில் மேய்ந்த போது கிடைத்தது வடபழனி கமலாவில் டிக்கெட்.

எதிர்பார்ப்பை ஏமாற்ற வில்லை ராவணன். அருமையாய் இருக்கிறது படம். நான் முழுக்க முழுக்க ரசித்தேன்.

ஆரம்ப காட்சியே அமர்க்களம், அவ்வுளவு பெரிய போட்டில் விக்ரம் வந்து ஐஸ்வர்யா இருக்கும் சிறிய போட்டை மூழ்கடிக்கும் போது, நாமே மூழ்கிப்போவது போல் ஓர் உணர்வு. படத்தில் பெரும்பாலான காட்சிகளில் தண்ணீர். மழை, நீர்விழ்ச்சி, மலைகள் என ஒளிப்பதிவாளர் அசத்தியிருக்கிறார். புனே பக்கத்தில்தான் எங்கோ படம் பிடித்திருக்கிறார்கள். மஹாராஷ்ராவில் இம்மாதிரி நிறைய பசுமையான மலைகளும், மலை சார்ந்த இடங்களும் உண்டு.

ஒரு காட்சியில் பஸ் வரும், ஐஸ்வர்யா அதில் ஏறி விக்ரமை சந்திக்க வருவார். அந்த பஸ் மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் (BEST) என்று நினைக்கிறேன், பஸ் கலர் நான் 4 ஆண்டுகள் மும்பையிலும், புனேயிலும் வசித்தபோது பரிச்சயம்.

கதை சாதாரண கடத்தல் கதைதான். ஆனால் அதை எடுத்த விதமும், திரைக்கதையும், தொழில் நுட்பமும் அசத்தல். இந்திய சினிமாவை நிச்சயமாய் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல முயற்ச்சிகிறது. ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, கலை என்று அனைவரும் சிரத்தையாய் உழைத்திருக்கிறார்கள்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் மூன்று பேருமை நன்றாக நடித்திருக்கிறார்கள். விக்ரம் வழக்கம்போலவே வீரா கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். டண்டண் டண் டண்டனக்கா என்று அவர் சொல்லும்போது தியேட்டரே அதிர்கிறது, ரசிக்க முடிகிறது. அற்புதமான முகபாவங்கள், உடல் மொழிகள் என மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார் இன்றைய அடைமொழி சூரப்புலிகளின் முன்பு. ஐஸ்வர்யா ராயும், விக்ரமிற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். அவருடைய கண்கள்தான் எத்தனை கதைகள் பேசுகின்றன?? எவ்வுளவு அருமையாய் நடனமாடுகிறார்? குரல் கொடுத்தவர் ரோகினியா? கொஞ்சம் பொருந்தவில்லை.

கார்த்திக், பிரபு இருவரும் தனக்கு கொடுத்த வேலையை சரியாய் செய்திருக்கிறார்கள், இருந்தாலும் கார்த்திக்கை மரத்துக்கு மரம் தாவ விட்டதெல்லாம், கொஞ்சம் ஓவர். பாடல்கள் அனைத்தும் முன்பே ஹிட், தியேட்டரில் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. குறைகளே இல்லையா? இருக்கிறது, முதல்பாதி சற்று விறுவிறுப்பு குறைவு. இருப்பினும் படத்தை பார்த்து ரசிக்கலாம். நிச்சயம் இந்திய சினிமா பெருமைப் படக்கூடிய படம். இந்தியில் அபிஷேக்கும், விக்ரமும் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது, பார்த்து விட்டு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்!!

Saturday, June 19, 2010

துரைசிங்கம் -- Stole my heart

நான் சூர்யாவின் ரசிகன் அல்ல. வழமையான மசாலா படங்களை விரும்பி பார்ப்பவனும் அல்ல. அதனால் சிங்கம் படத்தை இத்தனை நாளும் பார்க்க வில்லை. இப்படி ஒரு வார இறுதி வெள்ளி மாலையில் சிங்கத்தை பார்ப்பேனென்று ஒரு திட்டமும் இல்லை.


ஏற்கனவே நிறைய வலைப்பதிவுகளிலும், புத்தகங்களிலும் விமர்சனம் படித்து விட்டதால் அதிக எதிர்பார்ப்பில்லாமல் சென்றேன். வடபழனி கமலா தியேட்டர் - ஸ்கீரின் 2 ஓர் சிறிய நல்ல தியேட்டர். நீங்கள் எப்போது கமலா தியேட்டர் சென்றாலும் அதன் அதிபர் வி.என். சிதம்பரத்தை பார்க்கலாம். இன்றும் அவரைப் பார்த்தேன். யாரோ ஒரு நண்பருக்கு தியேட்டரை சுற்றிக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தார்.

சிங்கம் முழுக்க முழுக்க சூர்யாவின் படம். படம் முழுக்க அவரது ஆதிக்கம்தான். சூர்யா ஓரு உண்மையான போலிஸ் ஆபிசர் போல் அட்டகாசமாய் இருக்கிறார். நன்றாக உடற்பயிற்சி செய்து உடம்பை டிரிம்மாக டெவலப் செய்து வைத்திருக்கிறார். துரைசிங்கம் பாத்திரத்தில் நச்சென்று பொருந்தி இருக்கிறார். வசனங்களை பேசுவதிலும், காதல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் தூள் கிளப்பி இருக்கிறார்.

பாடல்கள் எல்லாம் சுமார்தான். சிங்கம், சிங்கம் பாட்டு நன்றாக இருக்கிறது. சூர்யா இவ்வுளவு நன்றாக நடிப்பார் என்று எதிர்பார்க்க வில்லை. என்னைக் கேட்டால் இதுதான் சூர்யாவின் பெஸ்ட் படம் என்பேன்.

அனுஷ்கா அழகாய் இருக்கிறார், நன்றாக ஆடுகிறார். உயரம்தான் சூர்யாவுடன் ஒத்துவர வில்லை. இருந்தாலும் எப்படியோ சமாளித்திருக்கிறார்கள்.

ஆதவனில் வடிவேலு என்றால் இதில் விவேக்குடன் வெளுத்துக் கட்டி இருக்கிறார். அளவான காமெடி, செண்டிமெண்ட், காதல், ஆக்சன் காட்சிகள் என ஒரு சூப்பர் விறுவிறுப்பான மசாலைவை கொடுத்திருக்கிறார் ஹரி. வாழ்த்துக்கள்!! படம் சூப்பர் ஹிட்டாகி விட்டது. கமலாவில் இன்று மாலையும் அரங்கு நிரம்பி இருந்தது.

Sunday, June 06, 2010

யாஹூ மெசேஞ்சர் அனுபவம்

என் பெயர் சாமிங்க. எனக்கு பாட்சா ரஜினி மாதிரி இன்னொரு பெயர் உண்டுங்க. அது ஆறுச்சாமி இல்லைங்க, அறுவைச் சாமி! என்னோட நண்பர்கள் என்னை செல்லமா மொக்கச் சாமின்னு கூப்பிடுவாங்க. இன்னும் வேற மாதிரியில்லாமும் கூப்பிடுவாங்க, அதெல்லாம் சபையில சொல்ல முடியாதுங்க :-)

என்னோட திறமை என்னான்னா எந்த விஷயமுமே இல்லாம என்னால தொடர்ந்து பலமணி நேரம் மொக்க போட முடியுங்க. இதுக்கும் நான் இப்ப பிசினஸ் அனலிஸ்டா வேலையில் இருக்கறதுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையான்னு தெரியலிங்க.

நான் வந்து 2001 ல் யாஹூ அக்கவுண்ட் ஆரம்பிச்சேங்க. 2003ல் ரிலையன்ஸ் பாம்பேயில் ஜாயின் பன்ண பிறவுதான் டெயில் யாஹூ மெயில், சாட் எல்லாம் உபயோகப் படுத்த ஆரம்பிச்சேங்க. ஒரு ஆர்வத்தில் எல்லா நண்பர்களோட யாஹூ அட்ரஸையும் வாங்கி என்னோட சேத்துக்கிட்டேங்க.

ஆனா பாருங்க, நான் எப்ப மெசேஞ்சர் உள்ள நுழைஞ்சாலும் (sign in), onlineல இருக்கிற எல்லா நண்பர்களையும் காட்டும். ஆனா பாருங்க ஒரே நிமிஷத்தில் எல்லா மஞ்ச விளக்கும் அணைஞ்சு போய்டும், எல்லா நண்பர்களும் காணாம போனமாதிரி காட்டும். நானும் ரொம்ப நாளைக்கு இது ஏதோ சாப்ட்வேர் ப்ரச்சினை, நம்ம கம்பெனியில் ப்ளாக் பண்ணியிருக்காங்க போல அப்ப்டின்னு நினைச்சுட்டேன்.

அன்னைக்கு ஒரு நாளு ப்ரவுசிங் செண்டருக்கு போய், யாஹூ மெசேஞ்சருக்குள்ள போனா அங்கயும் இப்படித்தான் நடந்தது. எல்லா நண்பர்களுமே ஒரே நிமிஷத்தில ஆப்லைன் போய்ட்டாங்க. அப்பதாங்க புரிஞ்சுது, இந்த பயபுள்ளைக (என் நண்பர்கள்தான்) என்னை ஆன்லைன்ல பாத்தவுடனே “அய்யய்யோ சாமி வந்துட்டான், சாமி வந்துட்டான்” அப்பிடின்னு அடிச்சு புடிச்சு லாக் ஆப் ஆயிடாறங்க இல்லைன்னா இன்விசிபிள் போயிடறாங்க. இப்ப கூட கீழே பாருங்க, இந்த சோகத்தை..



அப்படியே எவனாவது ஆன்லைன்ல மறந்து போய் இருந்தாலும், நான் ஹாய் அப்படின்னு அடிச்சு வுடனேயே idle ஆயிடறாங்க. இவங்களை எப்படி வழிக்கு கொண்டு வரலாம்னு சொல்லுங்களேன், ப்ளீஸ்!!!

Sunday, February 14, 2010

அசல் கவிதை - காதலர் (தொலைத்த) தினம்



தினமும் பல மணி நேரம் பேசி மகிழ்ந்த நாட்கள் எங்கே?
அன்பில் தோய்த்தெடுத்த மின்னஞ்சல்கள் எங்கே?
குறும்பு நிறைந்த குறுஞ்செய்திகள் எங்கே?
அடிக்கடி கொடுத்து மகிழ்ந்த பரிசுப் பொருட்கள் எங்கே?
என்ன உடை, என்ன உணவு, என்ன செய்கிறாய் என்ற குசல வினவுகள் எங்கே?
கிண்டல் பேச்சுக்கள் எங்கே?
செல்ல ஊடல்கள் எங்கே?
பொங்கி வழிந்த காதல் எங்கே?
என் மனைவியே, இத்தனையும் இரண்டு வருடத்தில் மறைந்தது எங்கே?

Saturday, February 06, 2010

இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் தொடர் முன்னோட்டம்

இந்தியாவில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் டீமில் ஒன்று தென் ஆப்ரிக்கா. வேறெந்த டீமை விடவும் அதிகமான வெற்றி சதவீதத்தை தென் ஆப்ரிக்கா இந்தியாவில் பெற்றுள்ளது. இப்போது வந்திருக்கும் டீமும் இன்னொரு சிறப்பான, கடுமையான போட்டியை இந்தியாவிற்கு தரப் போவதில் எந்த வித சந்தேகமும் இல்லை.




ஸ்மித், காலிஸ், அம்லா என்று பலமான பேட்டிங் உள்ளது. மற்றொரு பக்கத்தில் இந்தியா டிராவிட், ல்க்ஷ்மண், யுவராஜ் போன்றோர் இல்லாமல் தடுமாறும் என்றே தெரிகிறது. பந்துவீச்சில் மார்க்கெல், ஹாரிஸ், ஸ்டைன் என்று கலக்கக் காத்திருக்கிறார்கள். இந்தியா சார்பில் ஷகீர்கான் மற்றுமே நம்பிக்கை தருகிறார். ஹர்பஜன் பார்ம் இல்லாமல் தடுமாறி வருகிறார்.

இந்தியாவின் பேட்டிங் சேவக், கம்பீர், சச்சினை பெரிதும் சார்ந்துள்ளது. சேவக் பிரமாதமாக அடித்தால் பிழைக்கலாம்.

தற்போது நடந்து வரும் முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா முதல் நாள் தேநீர் இடைவேளையில் 193 ரன்கள், இரண்டு விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது. மிக பலமான நிலையில் உள்ளது. இந்தியா இந்த டெஸ்டில் பத்ரிநாத், சகா இருவரையும் புதிதாய் அறிமுகப் படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற நிறைய வாய்ப்புள்ளது.

நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!

Sunday, January 31, 2010

கோவா - வெற்றிப் படமா??

  • இயக்குநரின் முந்தைய இரு படங்களினால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கோவா எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை. சற்று ஏமாற்றம்தான்.
  • படம் மிக மெதுவாய் செல்கிறது. கோவா வந்ததிலிருந்தே பார்ட்டி, குடி, கும்மாளம் என்று தொடர்ந்து காட்சிகள் அதே தொனியிலேயே வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதை தெளிவானதாய், வலுவாய் இல்லை.
  • பிரேம்ஜிதான் படத்தில் நிஜ கதாநாயகன். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், அவரது காமெடி படத்திற்கு ஓவர்டோஸ்.
  • பிரேம்ஜி போடும் சண்டையில் புலி உறுமுது வேட்டைக்காரன் பாடலும், அவரது சண்டையும் சூப்பர். தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. இதேபோல் ஆங்காங்கே சில படங்களை நக்கல் அடித்திருக்கிறார்கள்.
  • ஹோமோசெக்ஸை முதன்முதலில் தமிழ் சினிமாவில் பார்க்கிறோம். ஓரளவுக்கு நகைச்சுவையாய் காண்பிக்க முயற்சித்து இருக்கிறார்கள். கொஞ்சம் ஆபாசத்தை தவிர்த்திருக்கலாம்.
  • படத்தின் பாடல்கள் ஒன்றுமே மனதில் ஒட்ட வில்லை. கோவா பாடல் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. படத்தின் ஆரம்ப பாடல் தமிழ் டிவி சீரியல்களை நினைவூட்டியது.
  • படம் நகரங்களில் கொஞ்சம் ஓடலாம். பி, சி செண்டர்களில் வரவேற்பு இருக்காது.
  • வெங்கட் பிரபு, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!

<<>>

படத்தை மாயாஜாலில் பார்த்தேன். டிக்கெட் விலை ரூ 120. இணையத்தில் பதிவு செய்தால் ரூ 140. 20 ரூபாய் கூடுதல் சற்று அதிகம்தான். சத்யம், அபிராமி, கமலா போன்றவற்றில் 10 ரூபாய்தான் அதிகம், இணையத்திற்கு. ஏன் இந்த அதிக விலை என்று தெரியவில்லை. டாய்லெட்டும் சரியாக பராமரிக்கப் பட வில்லை. சென்னையில் சத்யம் மட்டுமே ஒரு நிறைவான தியேட்டர் அனுபவத்தை தருகிறது.

Saturday, January 30, 2010

வார இறுதி கொத்து பரோட்டோ - 01/30

கோவா, தமிழ்படம் இரண்டுமே ரிலீஸாகி ஓரளவுக்கு பாஸிடிவ் விமர்சனங்களை பார்க்க, படிக்க, கேட்க முடிகிறது, இரண்டையுமே பார்க்க வேண்டும். இரண்டு படங்களுமே வழமையான தமிழ் சினிமா பார்முலாவிலாவிலிருந்து விலகி எடுக்கப் பட்ட படங்கள என்பது சுவாரசியமானதே. தமிழ் சினிமா நிஜமாகவே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்று நினைக்கிறேன் (ஆயிரத்தில் ஒருவன் இன்னொரு உதாரணம்).

<<>>

ஜோடி நம்பர் ஒன், ராஜா யாரு ராணி 6, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளின் மத்தியில், சில நல்ல டிவி நிகழ்ச்சிகளும் வருகின்றன. விஜய் டிவியின் நீயா, நானா விவாத நிகழ்ச்சி நான் விரும்பிப் பார்க்கும் ஒன்று. மற்றொன்று கலைஞர் டிவியில் வரும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி.

<<>>

நீயா நானா விவாதத்தில் வீட்டு வேலைக்காரிகள் அடுத்த வீட்டு விவகாரங்களை சொல்வதைப் பற்றியும், கிசுகிசுக்களை பரப்புவதைப் பற்றியுமான விவாதம் வந்தது. உங்கள் வீட்டு வேலைக்காரி எவ்வுளவு தூரம் பேசுகிறார் என்பது நீங்கள் அனுமதிப்பதை பொறுத்ததே என்றார் கோபிநாத். அருமையான கருத்தல்லவா? உங்களுக்கே அடுத்த வீட்டு விவகாரங்கள், கிசுகிசுக்களை கேட்க விருப்பமிருப்பதால்தானே, வேலைக்காரி அதைப் பற்றி கதை வைக்க அனுமதிக்கிறீர்கள்.

<<>>

சென்னையில் நிறைய மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் வந்து விட்டன. இருந்தாலும் இன்னமும் கிண்டி, போரூர், வேளச்சேரி, வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் ஏன் மல்ட்டிப்ளெக்ஸ்கள் எதுவும் வரவில்லை?

<<>>

வார இறுதியை அட்டகாசமாய் கொண்டாடுங்கள்!!
வெளிச் செல்லும் முன், உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே!!

Tuesday, January 26, 2010

நட்சத்திர பதிவாளர் ஸ்ரீதருக்கு, ஆயிரத்தில் ஒருவனின் பதில்கள்

ஆயிரத்தில் ஒருவனை ஏன் ஆதரிக்க வேண்டும்?

ஐயா, இந்த படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கலாம், இருந்தாலும் ஆதரியுங்கள். இல்லாவிடில் வேட்டைக்காரன்களிடமிருந்தும், ஆதவன்களிடமிருந்தும் தமிழ் சினிமாவை மீட்க இயலாது.

இதோ நட்சத்திர பதிவாளரின் கேள்விகளுக்கு பதில்கள்..

//தனது கடைசி வாரிசைக் காப்பாற்றுவதற்காகவும், சோழவம்சத்தை என்றென்றும் துலங்கச் செய்யவும், நினைக்கும் அந்த சோழ ராஜா எதற்காக பாண்டியரிடமிருந்து அபகரித்த அவர்களின் குல தெய்வச் சிலையையும் இளவலோடு சேர்த்து ஒளித்து வைக்க வேண்டும்? //

சோழருக்கும் பாண்டியருக்கும் ஏற்கனவே இருந்துவரும் பகையால் குலதெய்வ சிலை பாண்டியருக்கு கிடைக்கக் கூடாது என்று ஒளித்து வைக்கிறார்கள். அச்சிலை சோழரோடு இருந்தால்தானே அவர்களுக்கு பெருமை, எனவே சோழ இளவலோடு சிலையையும் எடுத்துச் செல்கின்றனர். மேலும் போரில் தோற்கும்போது வேறு இடத்தில் சிலையை ஒளித்து வைக்க சந்தர்ப்பம் இல்லாது இருந்திருக்கலாம்.

//அப்படியானால் முதலில் போன பிரதாப் ஆராய்ச்சி எதுவும் செய்யப் போகவில்லையா? வியட்நாமிற்கு சென்னையிலிருந்து கப்பலில்தான் போக வேண்டுமா? //

பிரதாப் போத்தன் ஆராய்ச்சி செய்து சோழரின் தீவை அடைந்து விட்டார், ஆனால் அங்கே சிறையில் மாட்டிக் கொண்டார். அவரைத் தேடிச் செல்வதாய் ரீமாசென் கூறினாலும், ரீமாவின் உண்மையான நோக்கம் அங்கே சென்று சோழரை அழிப்பதும், குலதெய்வ சிலையை மீட்பதும்தான். எனவேதான் மத்திய மந்திரியின் செல்வாக்கினாலும், ராணுவ உயர் அதிகாரி துணையுடனும் (இவர்களைனைவரும் பாண்டியர்கள்) பெரும் படையோடும், ஆயுதங்களோடும் செல்கிறார். எனவேதான் கப்பலில் செல்கின்றனர்.

//ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் இராணுவத்தினரின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது தொல்பொருள் ஆராய்ச்சி திட்டத் தலைவி அறிவிக்க முடியுமா? //

நியாயமான கேள்வி, இந்த வசனமே தேவையில்லை படத்திற்கு.

//ஜெராக்ஸ், மைக்ரோஃபிலிம், எல்லாம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கப்படாததா? பழைய கால அரிய ஓலைச்சுவடிகளை அப்படியே தூக்கிக்கொண்டு சுற்றுவதுதான் எந்தவகை ஆராய்ச்சி? //

அந்த ஓலைச்சுவடி ஆண்ட்ரியாவுடைய தனிப்பட்ட சொத்து, அதனால் அவர் எடுத்து வருகிறார். மேலும் காட்சியின் நம்பகத்தன்மைக்காக ஓலைச்சுவடியை காட்டுகிறார்கள். ஒருவேளை ஜெராக்ஸை காட்டியிருந்தால் நீங்கள் இதே கேள்வியை 'இவ்வுளவு செலவு செய்து படமெடுப்பவர்கள் ஓர் ஓலைச்சுவடியை காட்ட முடியாதா?' என்று கேட்டிருப்பீர்கள்.


//அப்படி அவர்கள் என்னதான் தொழில் செய்கிறார்கள்? வேளாண்மை, வணிகம், மீன்பிடிப்பது என்று எதுவும் செய்கிறார்களா? //

500 வருடங்களாக மழை பெய்யவில்லை. ஆதாலால் விவசாயமில்லை. இறைச்சியை வேட்டையாடி பகிர்ந்து உண்ணுகிறார்கள்.

//வீர சைவர்களான சோழர்கள் கல்வெட்டு வழக்கில் ‘லிங்க தரிசனம்’ என்றெல்லாம் வாமாச்சார வழக்குகள் பேசுவார்களா? //

ஏன், வீர சைவர்கள் இம்மாதிரி பேசக்கூடாதா? ஆபாசமாக ஒன்றும் பேசவில்லையே, நகைச்சுவையாகத்தானே சொல்கிறார்.

//சோழர்கள் பத்தாம் நூற்றாண்டிலும் கலப்பேயில்லாத சுத்த கருப்பு வண்ணதிலேயே இருக்கிறார்களாமா?//

ஒரு கற்பனைக்காக அப்படி இருக்கக் கூடாதா?

//வியட்நாம் பக்கத்திலிருக்கும் ஒரு ஆதிவாசிக் கூட்டம் கறுப்பாக இருக்கிறது. இன்னொரு ஆதிவாசிக் கூட்டம் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறார்களே? //

வேறேதாவது பகுதியின் ஆதிவாசிக் கூட்டமாயிருக்கலாம், அல்லது அவர்கள் ஏதேனும் சாயம் பூசிக் கொண்டிருக்கலாம்.

// கொலைசெய்யப் கத்தியோடு பாய்ந்து வரும ஆதிவாசிக் கூட்டத்தைப் பார்த்துவிட்டும் ‘hold fire' என்று சொல்லிக் கொண்டே இருக்கும் இராணுவ கமாண்டருக்கு எங்கே ட்ரெய்னிங் கொடுக்கிறார்கள்? இந்திய இராணுவத்தினரிடம் SLRம், கையெறி குண்டையும் தவிர வேறு ஆயுதமே இல்லையாமா? //

நல்ல கேள்வி, கமாண்டர், ஆதிவாசிகள் சும்மா பயமுறுத்துகிறார்கள் என்று நினைத்திருக்கலாம், கணித்தது தவறாய் இருந்திருக்கலாம்.

இவ்வுளவுதான் எனது பதில்கள். இவை அனைத்துமே நான் யோசித்து, அனுமானப் படுத்தியதுதான். இவற்றிற்கு வேறுவிதமான விளக்கங்களும் இருக்கலாம். எனக்கும் சில கேள்விகள் உள்ளன, சில பகுதிகள் தெளிவாய் புரியவில்லை.

இருப்பினும் நாம் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும், வேட்டைக்காரன்களிடமிருந்தும், ஆதவன்களிடமிருந்தும் தமிழ் சினிமாவை மீட்பதற்காக!!

Thursday, January 14, 2010

தமிழ் தொலைக்காட்சிகளின் பொங்கல்

வலைப் பதிவாளர்களுக்கு, வலைப்பதிவு வாசகர்களுக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எல்லா தொலைக்காட்சிகளிலுமே ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்தான். காலை 6 - 7 மங்கல இசை, 7 - 8 நாட்டுப் புற பாடல்கள், 8 - 9 ஏதாவது ஒரு நடிகரின் பேட்டி
9 - 10 பட்டிமன்றம், 10 -ல் இருந்து திரைப்படங்கள், மாலை பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படங்களின் படைப்பாளிகள்/நடிக நடிகையர்களின் பேட்டிகள்.

காலையில் புஷ்பவனம் குப்புசாமி - அனிதாவின் நாட்டுப் புற பாடல்கள் நிகழ்ச்சி நன்றாக இருந்தது (ஜெயா டிவி என்று நினைக்கிறேன்). பாலிமர் டிவியில் லியோனி தலைமையிலான பட்டிமன்றம் சுவாரசியாக இருந்தது. விஜய் டிவியில் 12 மணிக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. எனக்கு இம்மாதிரியான பாடல், டான்ஸ் நிகழ்ச்சிகள் பிடிக்கவே பிடிக்காது. மனைவி ஆவலாய் பார்த்ததால் விட்டுக் கொடுத்து விட்டேன்.

மாலையில் சன் டிவியில் போக்கிரி, கலைஞர் டிவியில் குருவி போடுகிறார்களாம். விஜய் டிவியில் காஞ்சிவரம் படம். இப்படியாக ஒரு வழியாக பொங்கல் நிகழ்ச்சிகள் முடிந்து விடும்.

நீங்கள் என்னென்ன நிகழ்ச்சிகள் பார்க்கிறீர்கள்?

பொங்கலுக்கு குட்டி, நாணயம், ஆயிரத்தில் ஒருவன் என்று மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆயிரத்தில் ஒருவனை பார்க்க வேண்டும். மற்ற இரண்டும் வழமையான மசாலாவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன், பார்ப்போம்!!

Sunday, January 03, 2010

அவதார் - இப்படியொரு திரைப்படம் தமிழில் வருமா?

அனைவருக்கும் எனது இதயங் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த புத்தாண்டில் நான் வழக்கமாய் செய்யும் சிலவற்றை செய்யவில்லை.


1. 31-ம் தேதி இரவு 12 மணிவரை கண்விழித்திருக்க வில்லை. மாலையில் எங்களது அடுக்ககத்தில் (Apartment) சில கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜாங்கிட் வந்திருந்தார். இரவு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு உறங்கி விட்டேன்.

2. புத்தாண்டு முதல் தேதியில் எவருக்கும் தொலைபேசியில் வாழ்த்து சொல்ல வில்லை. என்னை பொருத்த வரை புத்தாண்டின் முதல் நாளும் மற்ற எந்தவொரு நாளைப் போல் சாதாரணமானதே.

3. கோவிலுக்கு செல்ல வில்லை. வீட்டிலேயே கடவுளை வழிபட்டேன்.

<<>>



இன்று மதியம் சத்யம் - சாந்தம் தியேட்டரில் அவதார் திரைப்படத்தை கண்டு ரசித்தோம். டிக்கெட் 120 ரூபாய், இணையத்தில் பதிவு செய்திருந்தோம். தியேட்டரில் 3D கண்ணாடிக்கென 20 ரூபாய் தனியே வாங்கிக் கொண்டனர். இதை டிக்கெட்டுடனேயே வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது. இணையத்தில் அவ்வசதி இல்லையோ?

அற்புதமான திரைப்படம் அவதார். வித்தியாசமான கதை, விறுவிறுப்பான தெளிவான திரைக்கதை. இப்படியெல்லாம் ஹாலிவுட் திரைஉலகினர் எப்படி சிந்திக்கிறார்கள் என்று பொறாமையும், ஏக்கமும் படவைக்கிறது. பாண்டாரா கிரகம், அதில் வாழும் மனிதர்கள், மிருகங்கள் என கிராபிக்ஸில் புகுந்து விளையாடி உள்ளனர். இப்படம் தயாரிக்க பத்து வருடம் ஆனதாம், அந்த உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

3Dயில் பார்த்தது ஓர் அற்புதமான அனுபவம். ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு மிஞ்சுகின்றன. பாண்டாரா காட்டில் ஹீரோ ஓடும்போதும், தாண்டும்போதும் நாமும் கூடவே தாண்டுவது போல் உணர்வு ஏற்பட்டது. இப்படியொரு ஆக்-ஷன் திரைப்படத்தில் அழகாக ஒரு காதலையும் சொல்லியிருக்கின்றனர்.

காட்சிகள் ஏற்படுத்திய பிரமிப்பினாலும், மொழி உச்சரிப்பினாலும் எனக்கு ஒரு சில இடங்களில் வசனம் புரியவில்லை, இருந்தாலும் ரசிக்க முடிந்தது. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பிரமாண்டமான வேட்டைக்காரன், ஆதவன் போஸ்டர்கள் கண்ணில் பட்டதும் என்னுள் எழுந்தது கழிவிரக்கமா / சோகமா / கோபமா என்று சொல்லத்தெரிய வில்லை.

இப்படியொரு படம் தமிழில் வருமா? ஏன் அறிவியல் / தொழில்நுட்பம் / வானவியல் தொடர்பான திரைப்படங்களை தமிழில் எவரும் தயாரிக்க வில்லை? அதற்கான சூழ்நிலை இங்கே இல்லையா? உலக அளவிலான மார்க்கெட் (viewer ship) இல்லாததுதான் காரணமா?