Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, February 11, 2013

விஸ்வரூபம் - திரைப்பார்வை


ஒரு தமிழ் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் முன் பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வெளியாகும் என்றோ, அதனை நான் பார்த்து ரசிப்பேன் என்றோ கனவில் கூட நினைத்ததில்லை.

நான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன். கடந்த ஒரு வருடத்தில் நான் திரை அரங்கிற்கு சென்று பார்த்த ஒரே படம் 'பீட்சா'. அதுவும் சென்னைக்கு விடுமுறையில் (இரு மாதங்களுக்கு முன்பு) வந்த பொழுது மாயாஜாலில் பார்த்தது.

விஸ்வரூபம் டிடிஹெச் மற்றும் தமிழகத் தடையினால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஜனவரி 25 - வெள்ளியன்று அமெரிக்காவில் ரிலீசானாலும், எங்கள் நகரத்தில் ரிலீசாக வில்லை. 26 சனி காலை நண்பர் ஒருவர் குறுந்தகவல் கொடுத்திருந்தார், ப்ரைவேட் ஸ்க்ரீனிங்கில் அன்று இரு ஷோக்கள் (shows) உள்ளன என்று. டிக்கெட் விலை சற்று அதிகம்தான் $16. உடனே எடுத்து விட்டேன்.



தமிழகத்தில் மக்கள் நிறைய சிரமப்பட்டு ஆந்திராவிற்கோ, கேரளாவிற்கோ சென்று பார்த்துள்ளனர். ஆனால் எம்பெருமான் கருணையினால் எனக்கு அவ்வுளவு சிரமமில்லை. வீட்டிலிருந்து 8 மைல் தொலைவில் தியேட்டர். இரவு 9 மணி ஷோவிற்கு 8:30க்கு சென்று அமர்ந்தேன். நல்ல பெரிய தியேட்டர் (மல்ட்டிப்ளெக்ஸ்), 300 இருக்கைகள் இருக்கலாம். ஒலி, ஒளி அமைப்புகள் நன்றாக இருந்தன.

நிறைய எதிர்பார்ப்புகள் இல்லை. ஏற்கனவே வந்த விமர்சனங்களை படித்திருந்தேன். கமல் நன்றாக நடித்திருந்தார் என்று கூறுவது கடல் நீர் துவர்க்கிறது என்பதற்கு சமம். அதுதான் அனைவரும் அறிந்த விஷயமாயிற்றே! அறிமுகப் பாடலும், காட்சியமைப்பும் அருமை. 'பாப்பாத்தியம்மா - சிக்கன்' டயலாக்கை தவிர்த்திருக்கலாம், வலிந்து திணிக்கப் பட்டது போல் தோன்றுகிறது.

முதல் இருபது நிமிடங்கள் காமெடியாய் ஆரம்பித்தாலும், கமலின் விஸ்வரூப காட்சிக்கு பிறகு சீரியஸாகி விடுகிறது. அதன்பிறகு என் போன்ற சாதாரண ரசிகனை பிடித்து வைக்கக் கூடிய சுவாரசியங்கள் குறைவே.

ஆப்கானிஸ்தான் காட்சிகள் சற்று மெதுவாக நகர்கின்றன. அங்கே நடப்பதையும், அமெரிக்காவில் நடப்பதையும் மாற்றி மாற்றி காட்டும் உத்தி நன்று.

ஆனால் காட்சிகளை நாம் புரிந்து கொண்டு தொடர்வது சற்று கடினம்தான். இந்த சீசியம், ட்ர்ட்டி பாம், மைக்ரோவேவ் ஒவன் வைத்து பாம் வெடிப்பதை தவிர்ப்பது என்பதெல்லாம் மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு பாமர ரசிகனுக்கு புரியுமா என்பது சந்தேகம்தான். இதை அவனுக்கும் புரியவைக்க கமல் எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை.



படத்தில் நிறைய கேள்விகள் உள்ளன. சில முடிச்சுகள் சரியாக அவிழ்க்கப் படவில்லை. கமல் ஆரம்பத்தில் திட்டமிடும்போது இரு பாகங்களாக திட்டமிட்டிருக்க மாட்டார். எல்லாவற்றையும் எடுத்துவிட்டு எடிட் செய்யும் போது நிறைய காட்சிகள் இருந்திருக்கும், ஆதலால் இரு பாகங்கள் என நினைக்கிறேன். எனவை படத்தின் முடிச்சுகள் சில இரண்டாம் பாகத்தில் அவிழலாம். அப்பாகத்தையும் பார்த்தால் ஒரு முழுமையான உணர்வு நமக்கு கிடைக்கலாம்.

படத்தில் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகள் உள்ளன. தேவையான அளவுக்கு இசை, பின்னனியிசை. ஓலி, ஒளிப்பதிவு அபாரம். ஆனால் திரைக்கதை சரியாக அமையவில்லை. இன்னமும் சற்று தெளிவாக, சுவாரசியமாக, வேகமாக அமைத்திருக்கலாம். ஒரு திரில்லர் கதைக்குரிய வேகமோ, பரபரப்போ இல்லாதது சற்று ஏமாற்றம்தான்.

ஒரு காட்சியில் ஒரு ஆப்ரிக்க இளைஞன் (பிற்பாடு அவனே குண்டு வைக்கப் போகிறான்) ஒருவன் தனது உடம்பை, அந்தரங்க பாகத்தை ஷேவ் (shave) செய்து  கொள்கிறான். அதை எதற்கு காட்டுகிறார்? ஏதாவது கேரக்டரை ஸ்தாபிக்கிறாரா? இக்காட்சியில் மறைமுகக் குறீயீடு ஏதாவது உள்ளதா என்று புரியவில்லை.

ஆண்ட்ரியா, நாசர் போன்றோரின் கேரக்டர்களும், அவற்றின் தேவையும் சரியாக அமைய வில்லை. கிளைமேக்ஸ் பரபரப்பாய் இல்லாமல் சாதாரணமாக முடிந்து விடுவது ஏமாற்றமே.

வழக்கமான தமிழ் சினிமாவாய் குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த காமெடி இல்லாமல் ஒரு வித்தியாசமான கதைக் களத்துக்காகவும், டெக்னிக்கல் விஷயங்களுக்காகவும் கமலை பாராட்டலாம்! எனக்கு படம் பிடித்திருந்தது, எல்லோருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை!

Wednesday, August 22, 2012

ரஜினி இன்னும் எத்தனை நாளைக்கு ஹீரோவாக நடிக்கப் போகிறார்?




முன் குறிப்பு: ரஜினி ஹீரோவாய் நடிப்பதைப் பற்றிய எனது கருத்துக்கள், பதிவின் பிற்பகுதியில் உள்ளன.


ஈமு கோழிகளும், அரசாங்கமும்

தலைமறைவாயிருக்கும் பண்ணை உரிமையாளர்களால் கைவிடப்பட்ட ஈமு கோழிகளை அரசாங்கமே வளர்த்து, நன்கு வளர்ந்த பின் விற்று அதில் வரும் வருவாயில் வளர்த்ததற்கான செலவை ஈடு செய்து கொண்டு, அப் பண்ணையில் முதலீடு செய்தவர்களுக்கும் திருப்பித் தருமாம்.

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று புரியவில்லை. வளர்ந்த ஈமு கோழிகளை யார் வாங்குவர்? கறிக்காக வாங்க அதிகம் பேர் விரும்ப மாட்டார்கள். எத்தனை பேருக்கு ஈமு கறி பிடிக்கிறது? எத்தனை ஹோட்டல்களில் ஈமு கறி விற்கின்றனர்?

ஏற்கனவே அரசாங்கத்திற்கு இருக்கும் வேலைகள் போதாதென்று இதை வளர்ப்பதற்கு ஒரு துறை, வேலையாட்கள், அதிகாரிகள், தீவணம் வாங்குவதில் ஊழல் என்று இன்னும் நிறைய தலைவலிகள்தான் கிளம்பும்.

எனவே இப்படியெல்லாம் ஆகாயத்தில் கோட்டை கட்டாமல், இருக்கிற ஈமு கோழிகளையெல்லாம் இந்தியா முழுக்க இருக்கும் மிருகக் காட்சி சாலைகளுக்கு அனுப்பி விடலாம்!!



சிவாஜி 3D


சிவாஜி படத்தை 3-டியில் மறு உருவாக்கம் செய்திருப்பதாக செய்திகள் படித்தேன். நல்லது. கோச்சடையான் கூட 3-டி படம்தான் என கேள்விப் பட்டேன். இவ்வாறான 3-டி படங்களை தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்களில் பார்க்க இயலும்? என் கணிப்பில் சென்னை சத்யம், ஐமேக்ஸ் போன்று ஒரு 15 - 20 தியேட்டர்கள்தான் 3-டி வசதியுடன் இருக்கும். இவ்வுளவு செலவு செய்து 20 தியேட்டர்களில் மட்டும் வெளியிட்டால் தாங்குமா? அல்லது 3-டியுடன் 2-Dயும் எடுத்து வெளியிடுவார்களா? ஒரு நான்கைந்து வருடங்களில் எல்லா தியேட்டர்களும் 3-டியாக மாறிவிடும் என நினைக்கிறேன். அப்படி வந்தால் லத்திகா-பார்ட் 2 3-டியில் பார்க்க ஆவலாய் இருக்கிறென் :)




ரஜினி இன்னும் எத்தனை நாளைக்கு ஹீரோவாக நடிக்கப் போகிறார்?

ரஜினி - ஹீரோ? அனேகமாக டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெறப் போகிறார் என்பதற்கு சமமான இன்னொரு விடைதெரியா கேள்வி இது. இன்னும் எத்தனை படங்கள் காதலியுடன் மரத்தை சுற்றிவந்து பாடப் போகிறார்? 

ஹிந்தியில் அமிதாப் பச்சனை எடுத்துக் கொள்ளுங்களேன், எவ்வுளவு வித்தியாசமான, குணசித்திர வேடங்களில் நடித்து கலக்குகிறார் (பா, சீனி கம், பிளாக், சர்க்கார்)? இம்மாதிரி ரஜினியும் நடிக்கலாமே? கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் நிச்சயம் மக்கள் ரசிப்பார்கள். ஏன் ஹீரோவாகவே நடியுங்களேன், ஆனால் காதலியுடன் பூங்காவில் பாட்டுப் பாடி, முத்தம் வாங்க வேண்டாம் (எந்திரன்), ரசிக்க முடிய வில்லை. 

வில்லனாக நடியுங்களேன், நிச்சயம் அசத்துவீர்கள். சந்திரமுகியில் லக லக லகாவும், எந்திரனில் சிட்டியும்தான் (வில்லன்) எங்களுக்கு பிடித்திருந்தது. சும்மா கமர்ஷியல் காரணங்களை கூறி ஜல்லியடிக்க வேண்டாம், அதை தாண்டும் உயரம் உங்களுக்கு உள்ளது. முன்வருவாரா ரஜினி? அதை ஏற்றுக் கொள்வார்களா விசிலடிச்சான் குஞ்சுகள்?


விவசாயம் இனி மெல்ல சாகும்?

ஊரில் உள்ள உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், இன்னமும் மேட்டூர் அணை திறக்காதது பற்றியும், ஆற்றில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் (நெல் நடவு) செய்ய முடியாததை கூறி வருத்தப் பட்டார். ஜூன் மாதமே திறந்திருக்க வேண்டியது, 3 மாதங்களாகியும்   தண்ணீர் திறக்காதது வருத்தமானதே, வருண பகவான்தான் கருணை காட்ட வேண்டும். ஏற்கனவே இருக்கும் விளைநிலங்கள் எல்லாம் ப்ளாட்கள் ஆகும் போது, மிச்சமிருக்கும் விவசாயிகளை இயற்கை ரொம்பவே சோதிக்கிறது, நன்கு மழை பெய்து, அணை நிரம்பி, தண்ணீர் திறந்துவிட இறைவனை பிரார்திப்பதைத் தவிர வேறு என்ன செய்யலாம்?

Sunday, December 19, 2010

2010: எனக்குப் பிடித்த 10 திரைப்படங்கள்..

நான் புனேயிலிருந்து சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்ததற்கு தமிழ் திரைப்படங்களை நிறைய பார்க்க வேண்டுமென்பதும் ஓர் காரணம். ஆதலால் நிறைய தமிழ்ப் படங்களை பார்த்து விடுகிறேன். இந்த ஆண்டும் நிறைய படங்களைப் பார்த்தேன். ஒரு சமயத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து நான்கு தமிழ் படங்களைப் பார்த்து ரசித்தேன் (ஓர் இரவு என்ற வித்தியாசமான திகில் படத்தையும் சேர்த்து)..





இந்த வருடத்தில் நான் பார்த்து, ரசித்த எனக்குப் பிடித்த பத்து திரைப்படங்கள்:

1. மதராச பட்டிணம்
2. எந்திரன்
3. பாஸ் (எ) பாஸ்கரன்
4. அங்காடித் தெரு
5. விண்ணைத் தாண்டி வருவாயா
6. சிங்கம்
7. ஆயிரத்தில் ஒருவன்
8. ராவணன்
9. நந்தலாலா
10. மைனா




2010 தமிழ் சினிமாவிற்கு நல்ல வருடமென்றே நினைக்கிறேன், பெரிய பட்ஜெட் எந்திரனும், சிறிய பட்ஜெட் மைனா, அங்காடித் தெரு, நந்தலாலா போன்ற வித்தியாசமான திரைப்படங்களும் வந்து வெற்றி பெறுவதும்(?) ஆரோக்கியமான விஷயமல்லவா!!

Monday, November 22, 2010

எனக்குப் பிடித்த பத்து நடிகர்களின் பத்து திரைப்படங்கள்..

நான் எந்த நடிகரின் விசிறியோ, தீவிர ரசிகனோ அல்ல. தமிழ் சினிமாவுக்கு, நல்ல திரைப்படங்களுக்கு ரசிகன்.




நான் உலகத் திரைப்படங்களையோ, வேற்று மொழி திரைப்படங்களையோ நிறைய பார்த்தவன் இல்லை. மேட்ரிக்ஸ் படமே எனக்கு விஜய் டிவியில் தமிழில் பார்த்த பிறகுதான் பாதி புரிந்திருக்கிறது :-)


1. கமல் - அவ்வை சண்முகி
2. ரஜினி - எந்திரன்
3. சூர்யா - வாரணம் ஆயிரம்
4. ஆர்யா - மதராச பட்டினம்
5. வடிவேலு - வின்னர்
6. ஐஸ்வர்யா ராய் - ராவணன்
7. விக்ரம் - சாமி
8. திரிஷா - அபியும் நானும்
9. ஜாக்கிசான் - Rush Hour
10. அமிதாப் பச்சன் - சீனி கம்

இதை சாக்காக வைத்து பதிவர்கள் தொடர் பதிவு போட்டும், அனானிகள் இஷ்டத்திற்கு பின்னூட்டம் போட்டும் (கலாய்க்கலாம், ஆனால் நாகரிகமாக) கும்மியடிக்கலாம்!!! :-))

Monday, August 02, 2010

எந்திரன் பாடல்களின் மற்றுமோர் விமர்சனம்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கின்றன எந்திரன் பாடல்கள். மிக அதிகமான விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறது. இண்டர்நெட் டவுண்லோடு காலத்தில் இவ்வுளவு அதிகமான விலைக்கு வாங்கி எப்படி கட்டுப் படியாகும் என்று புரியவில்லை. FM ரேடியோக்கள், டிவி சானல்கள் ஒவ்வொரு முறை பாடல் ஒளிபரப்பும் போது ஏதாவது ராயல்டி தொகை கொடுக்குமா என்ன?

வழமையான ஏ.ஆர்.ரகுமான் பாடல்களைப் போலவே, நான்கைந்து முறை கேட்ட பிறகே பாடல்கள் பிடிபடுகின்றன, சில பாடல்கள் பிடிக்கின்றன J

அரிமா அரிமா

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் என அசத்தலான வரிகளுடன் நம்மை இப்பாடல் உள்ளிழுக்கிறது. வைரமுத்துவின் வைர வரிகளை ஹரிஹரன் கலக்கலாக வடித்திருக்கிறார். இசையும் அருமை.

பூம் பூம் ரோபோடா

கொஞ்சம் சுமாரான பாடல்தான், ஏதோ ஆங்கிலப் பாடலை கேட்பது போலிருக்கிறது. பெண் குரல் யாரென்று தெரியவில்லை, வித்தியாசமாக இருக்கிறது.

எந்திரன் தீம் சாங்

வித்தியாசமாய் மேற்கத்திய இசையையும், இந்திய பாரம்பரிய இசையையும் கலந்து ரகுமான் கலக்கியிருக்கிறார். கேட்க நன்றாக இருக்கிறது.

இரும்பிலே ஒரு இதயம்

இன்னுமொரு மேற்கத்திய பாணிப் பாடல். ஆங்கில வரிகளுடன் ஆரம்பிக்கின்றது. கொஞ்சம் பரவாயில்லை, பாடியது ரகுமான்(?) என நினைக்கிறேன். பெண் பாடகி யார்? தமிழ் வரிகளையும் ஆங்கிலம் போலவே பாடி கொலை செய்கிறார் J

காதல் அணுக்கள்

இந்த ஆல்பத்தின் சூப்பரான பாடல். அருமையான துள்ளலான மெலோடி. ஆரம்பமாகும் இசையும், குரலும் அற்புதம். வைரமுத்து இப்படத்தில் எழுதிய மூன்று பாடல்களில் இதுவும் ஒன்று என நினைக்கிறேன். எனக்கு நிரம்ப பிடித்த பாடல்.

கிளிமாஞ்சாரோ

அருமையான ஆரம்பம், ஏதோ தென்னமரிக்க பாடலைப் போல ஆரம்பமாகிறது. துள்ளலான பாடல். பாடகர்களின் குரல் அருமையாக செட்டாகிறது. ஆனால் எங்கோ கேட்டது போலிருக்கிறது J வழக்கம் போலவே தமிழ் வரிகளை கடித்துக் குதறும் டிரெண்ட் இதிலும் இருக்கிறது.

புதிய மனிதா

படத்தின் ஆரம்ப பாடலாய் இருக்கலாம். ரகுமான்(?) குரலில் ஆரம்பமாகிறது. கொஞ்சம் மெதுவான பாடல், பின்னனி இசை அருமையாக இணைந்து இருக்கிறது. நான் கற்றது ஆறறிவு என்று எஸ்பிபி கலக்கி இருக்கிறார். ஆனால் துள்ளல் கொஞ்சம் குறைவு. ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யுமா என்று தெரியவில்லை.

முடிவுரை

மொத்தத்தில் பாடல்கள் சுமார்தான். எனது எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை. மேற்கத்திய பாணி இசையை குறைத்து இந்திய இசை வடிவங்களை அதிகரித்து இருக்கலாம். ஷங்கரின் படங்களில் பாடல்கள் மிகப்பெரிய பலமாய் இருக்கும். ஆனால் சிவாஜி படத்தில் பாடல்கள் அவ்வுளவு பிரபலமாக வில்லை. அதே போல்தான் இப்படமும் அமைந்திருக்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா அளவுக்கு மற்றுமோர் இசை அற்புதத்தை ஷங்கர் இம்முறை ரகுமானிடம் வாங்க இயல வில்லை என்றே நினைக்கிறேன்!

எனக்கு பிடித்த பாடல்கள்: அரிமா அரிமா, காதல் அணுக்கள் J

Sunday, June 20, 2010

ராவணன் – சினிமா விமர்சனம்





எந்த தமிழ்படத்தையுமே முதல் வாரத்தில் பார்ப்பதை நான் விரும்புவதில்லை. படம் பார்த்த நான்கு நண்பர்களை கேட்டு விட்டோ, வலைப்பதிவிலோ, டிவியிலோ, வாரப் புத்தகங்களில் வரும் விமர்சனங்களை கேட்டு விட்டு நல்ல, வித்தியாசமான படம் என்றால்தான் செல்வேன். ஆனால் ராவணன் பற்றிய எதிர்பார்ப்புகள், மணிரத்னம், ரெஹ்மான், விக்ரம் கூட்டணி என்னை சற்றே சஞ்சலப் படுத்தியது. படம் நிச்சயம் வித்தியாசமாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சற்றே அசட்டையாய் கடந்த புதன் இரவு வலையில் மேய்ந்த போது கிடைத்தது வடபழனி கமலாவில் டிக்கெட்.

எதிர்பார்ப்பை ஏமாற்ற வில்லை ராவணன். அருமையாய் இருக்கிறது படம். நான் முழுக்க முழுக்க ரசித்தேன்.

ஆரம்ப காட்சியே அமர்க்களம், அவ்வுளவு பெரிய போட்டில் விக்ரம் வந்து ஐஸ்வர்யா இருக்கும் சிறிய போட்டை மூழ்கடிக்கும் போது, நாமே மூழ்கிப்போவது போல் ஓர் உணர்வு. படத்தில் பெரும்பாலான காட்சிகளில் தண்ணீர். மழை, நீர்விழ்ச்சி, மலைகள் என ஒளிப்பதிவாளர் அசத்தியிருக்கிறார். புனே பக்கத்தில்தான் எங்கோ படம் பிடித்திருக்கிறார்கள். மஹாராஷ்ராவில் இம்மாதிரி நிறைய பசுமையான மலைகளும், மலை சார்ந்த இடங்களும் உண்டு.

ஒரு காட்சியில் பஸ் வரும், ஐஸ்வர்யா அதில் ஏறி விக்ரமை சந்திக்க வருவார். அந்த பஸ் மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் (BEST) என்று நினைக்கிறேன், பஸ் கலர் நான் 4 ஆண்டுகள் மும்பையிலும், புனேயிலும் வசித்தபோது பரிச்சயம்.

கதை சாதாரண கடத்தல் கதைதான். ஆனால் அதை எடுத்த விதமும், திரைக்கதையும், தொழில் நுட்பமும் அசத்தல். இந்திய சினிமாவை நிச்சயமாய் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல முயற்ச்சிகிறது. ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, கலை என்று அனைவரும் சிரத்தையாய் உழைத்திருக்கிறார்கள்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் மூன்று பேருமை நன்றாக நடித்திருக்கிறார்கள். விக்ரம் வழக்கம்போலவே வீரா கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். டண்டண் டண் டண்டனக்கா என்று அவர் சொல்லும்போது தியேட்டரே அதிர்கிறது, ரசிக்க முடிகிறது. அற்புதமான முகபாவங்கள், உடல் மொழிகள் என மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார் இன்றைய அடைமொழி சூரப்புலிகளின் முன்பு. ஐஸ்வர்யா ராயும், விக்ரமிற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். அவருடைய கண்கள்தான் எத்தனை கதைகள் பேசுகின்றன?? எவ்வுளவு அருமையாய் நடனமாடுகிறார்? குரல் கொடுத்தவர் ரோகினியா? கொஞ்சம் பொருந்தவில்லை.

கார்த்திக், பிரபு இருவரும் தனக்கு கொடுத்த வேலையை சரியாய் செய்திருக்கிறார்கள், இருந்தாலும் கார்த்திக்கை மரத்துக்கு மரம் தாவ விட்டதெல்லாம், கொஞ்சம் ஓவர். பாடல்கள் அனைத்தும் முன்பே ஹிட், தியேட்டரில் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. குறைகளே இல்லையா? இருக்கிறது, முதல்பாதி சற்று விறுவிறுப்பு குறைவு. இருப்பினும் படத்தை பார்த்து ரசிக்கலாம். நிச்சயம் இந்திய சினிமா பெருமைப் படக்கூடிய படம். இந்தியில் அபிஷேக்கும், விக்ரமும் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது, பார்த்து விட்டு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்!!

Saturday, June 19, 2010

துரைசிங்கம் -- Stole my heart

நான் சூர்யாவின் ரசிகன் அல்ல. வழமையான மசாலா படங்களை விரும்பி பார்ப்பவனும் அல்ல. அதனால் சிங்கம் படத்தை இத்தனை நாளும் பார்க்க வில்லை. இப்படி ஒரு வார இறுதி வெள்ளி மாலையில் சிங்கத்தை பார்ப்பேனென்று ஒரு திட்டமும் இல்லை.


ஏற்கனவே நிறைய வலைப்பதிவுகளிலும், புத்தகங்களிலும் விமர்சனம் படித்து விட்டதால் அதிக எதிர்பார்ப்பில்லாமல் சென்றேன். வடபழனி கமலா தியேட்டர் - ஸ்கீரின் 2 ஓர் சிறிய நல்ல தியேட்டர். நீங்கள் எப்போது கமலா தியேட்டர் சென்றாலும் அதன் அதிபர் வி.என். சிதம்பரத்தை பார்க்கலாம். இன்றும் அவரைப் பார்த்தேன். யாரோ ஒரு நண்பருக்கு தியேட்டரை சுற்றிக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தார்.

சிங்கம் முழுக்க முழுக்க சூர்யாவின் படம். படம் முழுக்க அவரது ஆதிக்கம்தான். சூர்யா ஓரு உண்மையான போலிஸ் ஆபிசர் போல் அட்டகாசமாய் இருக்கிறார். நன்றாக உடற்பயிற்சி செய்து உடம்பை டிரிம்மாக டெவலப் செய்து வைத்திருக்கிறார். துரைசிங்கம் பாத்திரத்தில் நச்சென்று பொருந்தி இருக்கிறார். வசனங்களை பேசுவதிலும், காதல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் தூள் கிளப்பி இருக்கிறார்.

பாடல்கள் எல்லாம் சுமார்தான். சிங்கம், சிங்கம் பாட்டு நன்றாக இருக்கிறது. சூர்யா இவ்வுளவு நன்றாக நடிப்பார் என்று எதிர்பார்க்க வில்லை. என்னைக் கேட்டால் இதுதான் சூர்யாவின் பெஸ்ட் படம் என்பேன்.

அனுஷ்கா அழகாய் இருக்கிறார், நன்றாக ஆடுகிறார். உயரம்தான் சூர்யாவுடன் ஒத்துவர வில்லை. இருந்தாலும் எப்படியோ சமாளித்திருக்கிறார்கள்.

ஆதவனில் வடிவேலு என்றால் இதில் விவேக்குடன் வெளுத்துக் கட்டி இருக்கிறார். அளவான காமெடி, செண்டிமெண்ட், காதல், ஆக்சன் காட்சிகள் என ஒரு சூப்பர் விறுவிறுப்பான மசாலைவை கொடுத்திருக்கிறார் ஹரி. வாழ்த்துக்கள்!! படம் சூப்பர் ஹிட்டாகி விட்டது. கமலாவில் இன்று மாலையும் அரங்கு நிரம்பி இருந்தது.

Sunday, January 31, 2010

கோவா - வெற்றிப் படமா??

  • இயக்குநரின் முந்தைய இரு படங்களினால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கோவா எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை. சற்று ஏமாற்றம்தான்.
  • படம் மிக மெதுவாய் செல்கிறது. கோவா வந்ததிலிருந்தே பார்ட்டி, குடி, கும்மாளம் என்று தொடர்ந்து காட்சிகள் அதே தொனியிலேயே வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதை தெளிவானதாய், வலுவாய் இல்லை.
  • பிரேம்ஜிதான் படத்தில் நிஜ கதாநாயகன். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், அவரது காமெடி படத்திற்கு ஓவர்டோஸ்.
  • பிரேம்ஜி போடும் சண்டையில் புலி உறுமுது வேட்டைக்காரன் பாடலும், அவரது சண்டையும் சூப்பர். தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. இதேபோல் ஆங்காங்கே சில படங்களை நக்கல் அடித்திருக்கிறார்கள்.
  • ஹோமோசெக்ஸை முதன்முதலில் தமிழ் சினிமாவில் பார்க்கிறோம். ஓரளவுக்கு நகைச்சுவையாய் காண்பிக்க முயற்சித்து இருக்கிறார்கள். கொஞ்சம் ஆபாசத்தை தவிர்த்திருக்கலாம்.
  • படத்தின் பாடல்கள் ஒன்றுமே மனதில் ஒட்ட வில்லை. கோவா பாடல் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. படத்தின் ஆரம்ப பாடல் தமிழ் டிவி சீரியல்களை நினைவூட்டியது.
  • படம் நகரங்களில் கொஞ்சம் ஓடலாம். பி, சி செண்டர்களில் வரவேற்பு இருக்காது.
  • வெங்கட் பிரபு, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!

<<>>

படத்தை மாயாஜாலில் பார்த்தேன். டிக்கெட் விலை ரூ 120. இணையத்தில் பதிவு செய்தால் ரூ 140. 20 ரூபாய் கூடுதல் சற்று அதிகம்தான். சத்யம், அபிராமி, கமலா போன்றவற்றில் 10 ரூபாய்தான் அதிகம், இணையத்திற்கு. ஏன் இந்த அதிக விலை என்று தெரியவில்லை. டாய்லெட்டும் சரியாக பராமரிக்கப் பட வில்லை. சென்னையில் சத்யம் மட்டுமே ஒரு நிறைவான தியேட்டர் அனுபவத்தை தருகிறது.

Friday, April 10, 2009

யாவரும் நலம் - திரைப்பார்வை

சத்யம் தியேட்டரில், நாங்களும் படத்தை பார்த்து விட்டோம்.

+
நல்ல, இயல்பான திரைக்கதை
பாசாங்கில்லாத, இயல்பான நடிப்பு
வித்தியாசமான கதை
திறமையான ஒலி, ஒளிப்பதிவு

-
ஏற்கனவே பலரும் கூறிய இரு சிறு தவறுகள்:
1. ஒரு பாட்டில், பீச்சில் மாதவன் குடும்பத்தினர் விளையாடும் போது வரும் காட்சியில் அருகில் உள்ள சாட் கடையில், ஹிந்தியில் பெயர் பலகை, மும்பையில் வசித்த எனக்கு ஜூஹூ பீச் என்று அப்பட்டமாக தெரிகிறது
2. மருத்துவமனையில், மாதவன் ஹிந்து பேப்பரை வாங்கி டிவி நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது தமிழில் தெரியும் நிகழ்ச்சி நிரல்

வேறொன்றும் தோன்றவில்லை, வித்தியாசமான, இயல்பான திகில் படம், நன்றாக எடுத்திருக்கிறார்கள்!

Sunday, March 08, 2009

எஜமான் காலடி மண்ணெடுத்து..

இன்று காலை கே டிவியில் எஜமான் படம் க்ளைமேக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். நெப்போலியனை அடித்துப் போட்டு, கத்தியை அவரது மார்புக்கு அருகே சொருகி விட்டு, "நான் என்னைக்குமே பதவி, புகழுக்கு அலைஞ்சதில்லை.." என்று பேசிவிட்டு திரும்பி செல்கிறார், பின்னனியில் எஜமான் காலடி மண்ணெடுத்து பாட்டு ஒலிக்கிறது.

வெட்கத்தை விட்டு சொல்கிறேன், நான் தீவிர ரஜினி விசிறி அல்ல, ஆனாலும் எனக்கு இந்த காட்சியை பார்த்த போது புல்லரித்தது. மிகவும் ரசித்தேன். ரஜினியிடம் என்னை மாதிரி சாதாரண ரசிகனையும் கவர்ந்து இழுக்கக் கூடிய சக்தி அவரது நடிப்பால் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உதயகுமார், திறமையாய் காட்சி அமைத்ததையும் குறிப்பிட வேண்டும்.

எப்போது எஜமான் வந்தது, என தெரிய வில்லை. 1990ல் வந்திருக்கலாம். இன்றும் அந்த படத்தை பார்த்து ஒன்றி ரசிக்க முடிகிறது.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில், நான் படித்துக் கொண்டிருந்த போது ஒருமுறை டைரக்டர் உதயகுமர் ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார்.

எஜமான பட நினைவுகளை பற்றி கேட்கும்போது, ரஜினி மீனாவின் பேச்சை கேட்டு பட்டாம் பூச்சி புடிக்க செல்வாரல்லவா, அப்போது கிராம மக்களில் ஒருவர் 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா எதை வேணாலும் புடிப்பாரு' என்ற வசனம் வரும். ஆரம்பத்தில் அந்த வசனத்தை 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா கோட்டையையே புடிப்பாரு' என்றே உதயகுமார் அமைத்திருந்தாராம், ஆனால் ரஜினி கேட்டுக் கொண்டதால் மாற்றப் பட்டதாம்.

காலடி மண்ணெடுத்து வழிபடுவது போல் காட்டுவது ஓவராக தனிமனித வழிபாடாய் இருக்கிறதே என்று கேட்டோம், சரியாக பதிலளிக்காமல் நழுவி விட்டார்.

என்ன இருந்தாலும், ரஜினி இந்த படத்தில் கலக்கி விட்டார் அல்லவா??

Saturday, February 21, 2009

அஹம் பிரம்மாஸ்மி ? - நான் கடவுளா? - படம் குறித்த கேள்விகள்

1. ஆர்யா அட்டகாசமாக நடித்திருக்கிறார் அல்லது வாழ்ந்திருக்கிறார், ஆனால் அவரது கேரக்டர் முழுமை பெறாதது போல் தோன்றுகிறதல்லவா?

2. பூஜா, பாலாவின் முந்தைய கதாநாயகிகளையே ஞாபகப்படுத்துகிறார், முக்கியமாக பல இடங்களில், நந்தாவின் லைலாவையே பார்க்கும் படி இருப்பது, படத்தின் பலமா அல்லது பலவீனமா?

3. காவல் நிலையத்தில் நடக்கும் காமெடி காட்சி (மிமிக்ரி, எம்ஜிஆர் - சிவாஜி - நயந்தாரா டான்ஸ்) படத்தில் எவ்விதத்திலும் ஒட்ட வில்லையே?

4. பூஜா பாடுவதாக தோன்றும் சில பாடல்கள், வெவ்வேறு குரல்களில் வருகின்றனவே (வயதான குரல் பாடல்) அவருக்கு பொருந்த வில்லையல்லவா?

5. கிளைமேக்ஸில் பூஜாவின் சிதைந்த முகத்தில் மேக்கப் என்பது அப்பட்டமாக தெரிகிறதே, ஏன் இந்த இடறல்?

6. கடைசி காட்சியில் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான், எங்கே அவனது அடிப்பொடிகள், இன்ஸ்பெக்டர்?

இதற்கெல்லாம் பாலாதான் பதில் சொல்லவேண்டும் என்பதில்லை, இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்களேன்..

Wednesday, February 18, 2009

வெண்ணிலா கபடி குழு - விமர்சனம் அல்ல

சென்னை ராமாபுரத்தில் இருப்பவர்களுக்கு மிக அருகே உயர்தர மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் எதுவும் கிடையாது. சத்யம் 12 km, ஐநாக்ஸ் 14 km, மாயாஜால் 30 km. கிண்டியிலோ, போரூரிலோ ஏன் எதுவும் இல்லை?

உதயம் 5 km ல் உள்ளது. இதை விட்டால், சாதாரண ஆனால் நல்ல தியேட்டர் வடபழனி கமலா, சாலிகிராமம் ஏவிஎம் ராஜேஸ்வரி என இரண்டும் உள்ளன.

இதில் கமலா தியேட்டருக்கு மட்டும் online booking வசதி உள்ளது (தற்போதிய படம்: வில்லு). உதயம் தியேட்டரில் வார இறுதியில் புதிய படம் பார்க்க, 2 - 3 நாட்கள் முன்பே நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் அனைத்து மல்டிப்ளெக்ஸ் மற்றும் சாதா தியேட்டர்களிலும் பைக் நிறுத்த Rs 10 டிக்கெட். ஐநாக்ஸில் Rs 15 என நினைக்கிறேன்.

இதை எல்லாம் அலசி ஆராய்ந்து ஏவிஎம் போக முடிவெடுத்தோம். ஒரு ஞாயிறு மாலை முதல் வகுப்பு டிக்கெட் Rs. 40 க்கு வாங்கி சென்றால் அரங்கமே நிரம்பி வழிகிறது. சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள் என்று கலந்து பட்ட கூட்டத்தில் படம் பார்ப்பதே ஓர் அற்புதமான அனுபவம்.

ஒரு வருடத்திற்கு முன்பு படம் பெயரை கேள்விப் பட்ட போதே படத்தை பார்க்க வேண்டும் என நினைத்து இருந்தேன். படத் தயாரிப்பாளர் ஒரு NRI யாம். எனது நண்பரின் நண்பராம்.

தியேட்டரில் இருக்கைகள் சற்று குறுகலாக உள்ளன. முன் சீட்டுகாரர் தலை மறைக்கிறது. ஆனால் காற்று நன்றாக வருகிறது. சரி, 40 ரூபாய்க்கு புஷ்பேக் சீட்டா கிடைக்கும் என்று சமாதானம் செய்து கொண்டேன்.

சரி படத்திற்கு வருவோம். படம் 35 mm மில் ஆரம்பித்த போது பயந்து விட்டேன், சரிதான் சின்ன பட்ஜெட் படம் என்று 35 mm மில் எடுத்து விட்டார்களா. ஆனால் கொஞ்ச நேரத்தில் ஆய் போகும் பசங்கள் பெரியவர்கள் ஆகும் போது விரியும் ஸ்க்ரீன் அழகு.

ஹீரோவும், ஹீரோயினும் கண்களால் பேசிக் கொள்வதை ரசிக்கலாம். ஒரு சில விமர்சனங்களில், இதை கிண்டல் செய்கிறார்கள். இதுதானே இயல்பு, இப்படித்தானே எங்கள் கிராமத்தில் இப்போதும் இளசுகள் பேசிக் கொள்கின்றன. அது போல் ஹீரோயின் கிராமத்து பெண்ணாயிருப்பினும் வாயாடிக்க வில்லையாம். யார் சொன்னது, எல்லா கிராமத்து பெண்களும் வாயாடிகள் என்று? பாதி கிராமத்து பெண்கள் அடக்கமான, அமைதியானவர்களே, நிறைய வெட்க படுபவர்களே. வேண்டுமானால் எங்கள் கிராமத்திற்கு வந்து பாருங்கள். மேலும் இந்த படத்தில் ஹீரோயின் மதுரை, டவுன் பெண்ணல்லவா.


கபடி ஆட்டத்தை இன்னும் பிரமாதமாய் காட்டியிருக்கலாம். ஒரே பாட்டில் சாதா அணி, சூப்பர் டீம் ஆவது சினிமாவில் மட்டுமே நடக்கும். ஹீரோ இயல்பாய் நடித்து இருக்கிறார். காமெடி நன்றாக இருக்கிறது. யதர்த்தமான கதை, திரைக்கதை. மக்களை குடும்பத்துடன் திரை அரங்கிற்கு அழைத்து வந்திருப்பது இயக்குனரின் வெற்றி.


திருவிழா கொண்டாட்டங்கள் அழகு. ஜாதி பற்றிய வசனங்கள் கைதட்டலை அள்ளுகின்றன. இசை, பரவாயில்லை.

படத்தின் ஊடே வரும் விரசமில்லா காமெடியை வாய் விட்டு சிரித்து ரசிக்கலாம். எல்லோரும் சொல்வது போல் பரோட்டா காமெடிதான் சூப்பர் என்றாலும், மேலும் நிறைய உள்ளன. ஸ்லோ சைக்கிள் ரேசில் படு வேகமாய் ஓட்டும் சீன், உரியடிக்கும் சீனில் மாமியார் மண்டையை உடைப்பது, படாத இடத்தில் பட்டுடப் போகுது என்று மனைவி சொல்லும் இடம், கபடி வீரரின் உறவு முறையை சொல்லும் மதுரைக் காரர் என அமர்க்களப் படுத்தியுள்ளனர்.

கபடி கோச் ஆக வருபவர் அசத்தி இருக்கிறார், "என்னடே சொல்லுதே, நீ ஆடுறியா" என்ற மொழி பிரயோகமும், உடல் அசைவுக்களுமாய் இயல்பாய் நடித்து இருக்கிறார்.

நடுவில் பக்கத்து ஊர் காரர்கள், பழைய பகையை தீர்க்க தண்ணி அடித்து கொண்டு சலம்பி கொண்டிருப்பதை அடிக்கடி காட்டும் போதே தெரிந்து விடுகிறது, அவர்கள் அடிக்க போவதில்லை என்று, இந்த சீன்களை வெட்டி இருக்கலாம்.

வழக்கமாய் துடுக்கு பெண்ணாய் வரும் சரண்யா, இதில் அடக்கமாய் வருவது வித்தியாசமாய், ரசிக்கும் படியாய் இருக்கிறது, well done madam!

கடைசியில் ஹீரோ ஏன் சாகிறார் என்று யாரும் தலையை பிய்த்து கொள்ள வேண்டாம், ஏதோ டைரக்டர் ஆசை பட்டு விட்டார், விட்டு விடுங்கள்.

வெண்ணிலா கபடி குழு - நின்று விளையாடி இருக்கிறது!!!