Saturday, September 08, 2007

புனேவிலிருந்து விடைபெறுகிறேன்...

ஏப்ரல் 16, 2006ம் தேதியிலிருந்து புனேயில் வாழத்தொடங்கிய நான், செப்டம்பர் 11, 2007 அன்று புனேவிலிருந்து விடைபெறுகிறேன். புதிய அலுவலகம் சென்னையில் உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் வசிக்கப் போவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன்.



புனே மிகவும் அருமையான, அமைதியான ஊர். மலைகளுக்கு நடுவில் அற்புதமான க்ளைமேட்டுடன் கூடிய ஊர். போக்குவரத்து, சாலை வசதிகள் மட்டும் கொஞ்சம் குறைவு புனேயில். மற்றபடி அருமையான ஊர். இவ்வுளவு அருமையான ஊரை விட்டு வருவதும், நல்ல அலுவலகத்தை விட்டு வருவதும் சிறு வருத்தத்தை அளித்தாலும், தாய் தமிழ்நாட்டு மண்ணை மீண்டும் தழுவச் செல்வது அவ்வருத்தத்தை மறையச் செய்கிறது.



புனேயில் வசித்து வரும் அனைத்து தமிழ் வலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி & வாழ்த்துக்கள்!!



மீண்டும் உங்கள் அனைவரையும் சென்னையில் சந்திக்க விரும்புகிறேன், நன்றி & வணக்கம்!!

Wednesday, September 05, 2007

நம்ம ஊர் திருச்சி - பாகம் 3



திருச்சியைப் பற்றிய கடந்த பதிவுகள்

திருச்சி 1
திருச்சி 2


தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே, திருச்சியிலும் வெயில் அதிகம். வேண்டுமானால் பகலில் வெளியில் அதிகம் சுற்றாமல், சமாளித்துக் கொள்ளலாம்.

சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மெயின் கார்டு கேட், தெப்பக்குளம், என்.எஸ்.பி ரோடுகளில் நிறைய தரமான உணவுக் கூடங்கள் (ஹோட்டல்கள்) உள்ளன.ரகுநாத், ஆர்ய பவன், வஸந்த பவன், கேரளா மெஸ், பனானா லீப் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

பிரபல ஆபரணம் மற்றும் துணிக்கடைகள்
சாரதாஸ்
தைலாஸ்
ஆனந்தாஸ்
சென்னை சில்க்ஸ்
கல்யாணி கவரிங்
லஷ்மி ஜுவல்லர்ஸ்
தம்பு (செருப்புகள், பெல்ட்டுகள்)

இப்போது இன்னும் நிறைய கடைகள் வந்து விட்டன. என்.எஸ்.பி ரோடு சென்றால், தரமான துணிகளை நியாயமான விலைக்கு வாங்க வாய்ப்புகள்
நிறைய உள்ளன. அப்புறம் இப்ப திருச்சிக்கு சென்னை சில்க்ஸ் வந்துருச்சு, அதுவும் சாரதாஸ விடாத மக்கள் கூட நகரும் படிக்கட்டு(Esclater) பார்க்குற ஆசையில் துணிய அள்ளிட்டு போறாங்க.

திருச்சியின் நடுவே ஓடும் இரு பெரும் ஆறுகள் காவிரி மற்றும் கொள்ளிடம். மிகப் பிரமாண்டமான ஆறுகள், முழு வேகத்துடன் ஓடுவதை
கல்லணை மற்றும் முக்கொம்பில் ரசிக்கலாம். போன வருடம் பெய்த மழையின் போது இரு ஆறுகளும் நிரம்பி ஓடின என நண்பர்கள் தெரிவித்தனர். வெள்ளமேற்பட்டால் சமாளிப்பது சற்று கடினமே. ஆனால் வருடத்தில் பல நாட்கள் காவிரி, கொள்ளிடம் தண்ணீரே இல்லாமல் இருக்கும்.

பனானா லீப் ஹோட்டல் பற்றிக் கூறும்போது நண்பர் அருண்.சி 'Banana leaf do serve non-veg. Infact i go there only for non-veg. " என்று அந்த ஹோட்டல் அசைவ உணவு வகைகளையும் அருமையாக படைப்பதை நினைவு கூறுகிறார். இந்த ஹோட்டல் ஹோலிகிராஸ் காலேஜ் அருகே மெயின்கார்டு கேட் (பெரிய மலைக்கோட்டை கதவு) எதிரில் உள்ளது.

திருச்சி வெயிலைப் பற்றி நண்பி மலர் கூறும்போது "Trichy veyilum oru sorkkam than ...athu 0 degree kulirla vaduravangalukku than theriyum !!!" என்று பரவசப்படுகிறார். மலர் தற்போது ஜப்பானில் இருக்கிறார். 0 டிகிரியில் இருக்கும்போது, வெயிலின் அருமை புரியுமல்லாவா !

மாம்பழச்சாலை என்ற இடத்தில், உலகின் அனைத்து விதமான மாம்பழங்களும் சீசனின் போது கிடைக்கும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்தில் பேருந்தில் (லால்குடி, சமயபுரம், மண்ணச்ச நல்லூர்) சென்று விடலாம். திருச்சியில் கிடைக்கும் சிறப்பான உணவு வகைகளைப் பற்றி வலைப்பதிவர், நண்பர் தேசிகன் "ரமா கபே, ரமணா பேக்கரி, மாம்பழச்சாலை மாம்பழம், காந்தி மார்கேட், வசந்த பவன் பரோட்டா, பாலக்கரை பிரமனந்தா சர்பத் கடை, பிமநகர் மோர்கடை... என்று அடுக்கிக்கொண்டே போகலாம்" என்று நினைவூட்டுகிறார்.

திருச்சியிலுள்ள பிரபலமான கலைக் கல்லூரிகள் சிலவற்றுக்கு பட்டப் பெயர்கள் உண்டு. ஜெயில் - ஜோசப், பியூட்டி - பிஷப், ஜாலி - ஜெமால் என்று கல்லூரிகளுக்கு நிக் நேம் உண்டு என்றும் தேசிகன் சிலாகிக்கிறார். வேறு கல்லூரிகளின்/கல்விக் கூடங்களின் பட்டப் பெயர்கள் தெரிந்தால்,
நண்பர்கள் கூறலாம்.

திருச்சியை பொறுத்த வரை கல்லூரி மாணவர்கள் இரண்டு ஏரியா பஸ்களைப் பார்த்தாலே பரவசப் படுவார்கள். அவை பெல் (BHEL) மற்றும் கே.கே நகர் பஸ்களே. ஏனென்றால் இந்த ஏரியாக்களில்தான் பிகர்கள் அதிகம் (தற்போது எப்படியென்று ட்ரெண்ட் தெரியவில்லை). தனியார் பஸ்கள் நிறைய உண்டு. டிஎஸ்டி, எம்ஆர்ஜி போன்று நிறைய பஸ் நிறுவனங்கள் உள்ளன. பஸ்கள் எல்லாம் புதிதாக, டேப் ரிகார்டர், எப்.ம் என்று கலக்கலாக இருக்கும். உறையூர், தில்லை நகர், பாலக்கரை, ஸ்ரீரங்கம் போன்ற ஏரியாக்களுக்கு நிறைய பஸ்கள் உண்டு. எல்லா ஏரியாக்களுக்கும்
போதுமான பஸ்கள், தொடர்ந்து உள்ளன.

மாலை நேரங்களில், சத்திரம் பேருந்து நிலையத்திலும், என்.எஸ்.பி ரோட்டிலும் கூட்டம் அலைமோதும். ஏகப்பட்டு பிளாட்பார கடைகள் பாப்கார்ன் முதல் பாப் பாடல்கள் சிடி வரை விற்பார்கள். தெப்பக்குளத்தில் இப்போது போட் விட்டிருக்கிறார்கள். இளைஞர்கள் அவரவர்கள் ரேஞ்சுக்கு
டைட்டானிக் ஹீரோ போல் கற்பனையில், போட்டில் மிதக்கிறார்கள். சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் திருச்சியில் மிகப்பிரபலம். இவர்கள் வைத்திருக்கும் கேண்டீனில் இனிப்புப் போளி (தமிழ்மணம் போலி இல்லீங்கோவ், தின்பண்டம்), ஜாங்கிரி, சமோசா போன்றவைகள் ருசியாக
கிடைக்கும்.

மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை இப்போது திருச்சியில் நிறைய கிளைகளை திறந்துள்ளனர். ஆனால் ஐஸ்கிரிமின் தரம் தற்போது குறைந்து விட்டது என நண்பர்கள் பலரும் வருத்தப்படுகின்றனர்.

RTC Lodge ஹோட்டல் ரவா, வெங்காய ஊத்தப்பம், காபி, கந்தக பூமியின் காட்டமான வெய்யில், Golden Rock Loco shed, 80வயதான ஸ்டேட் பாங்க் ஆலமரம், 117 Infantry Battallion, அமெரிக்கன் ஆஸ்பத்திரி, பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டல் பரோட்டா, டவுன் ஸ்டேஷன் அய்யர்கடை இட்லி கடப்பா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டப படித்துறை, வருடமொருமுறை ஸ்ரீரங்கநாதர் வந்துபோகும் நாச்சியார் கோவில், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்,BHEL என்று திருச்சியைப் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளன. ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கநாதர் பல்லக்கில் வருடமொருமுறை நாச்சியாரைப் பார்க்க உறையூர் நாச்சியார் கோவிலுக்கு வந்து போவார்.

திருச்சியை பற்றிய விபரங்களை ஓரளவுக்கு தொகுத்திருக்கிறேன். மேற்சொன்ன விபரங்களில் விடுபட்டவை, மாற்ற வேண்டியவற்றை நண்பர்களே, பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மீண்டும் சந்திப்போம் !

புகைப்படங்கள், இணையத்தில் தேடி எடுக்கப் பட்டன. வல்பென், சுலேகா மற்றும் வேறு சில ஆதாரத் தளங்களுக்கு நன்றி!