Tuesday, March 31, 2009

வடபழனி சரவணபவன்

சரவணபவன் உணவகம் சென்னையில் நிறைய இடங்களில் உள்ளன. ஆனாலும் வடபழனியில் சாப்பிடுவது இன்னமும் விசேஷமானது.

பக்கத்திலேயே பிரசித்தமான வடபழனி முருகன் கோவில் உள்ளது. கோவில் தூய்மையாக, அழகாக உள்ளது. திவ்யமான, திருப்தியான தரிசனத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு மாலைகளை தவிர்ப்பது உத்தமம். நாங்கள் வியாழன் மாலை சென்றோம், அதிக கூட்டமில்லை, பொறுமையாக முருகனிடம் உரையாட முடிந்தது.

சரவணபவனில் தென்னிந்திய, வட இந்திய உணவுகளும் கிடைக்கின்றன. தமிழக உணவு வகைகளில் இட்லி, தோசை, வடை போன்றவைகள் விதவிதமாய் கிடைக்கின்றன. நாங்கள் நெய் சாம்பார் இட்லி (மினி இட்லி 14 - நெய் சாம்பாரில் விட்டு), இடியாப்பம் மசாலா கறியுடன், மினி டிபன் (மினி தோசை, நெய் சாம்பார் இட்லி, கேசரி, உப்புமா) எல்லாம் சாப்பிட்டோம். அற்புதமாக இருந்தது, 170 ரூபாய் பில். முன்பொரு முறை அசோக் நகர் சரவண பவனில், சாப்பாடு சாப்பிட்டோம், அதுவும் நன்றாக இருந்தது.

நீங்கள் தரமான தமிழக டிபன் வகையறாக்களை சாப்பிட, சரவண பவன் செல்லலாம்.

உணவகத்தில் வாரியாரின் வெவ்வேறு புகைப்படங்கள், பெரிதாக மாட்டப் பட்டு இருந்தன. ஓரிரண்டு புகைப்படங்களில் அண்ணாச்சியும், பின்னாளில் ஜீவஜோதிக்காக ஜெயில் செல்லப் போவது தெரியாமல் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

எனது முந்தைய உணவிட வழிகாட்டு பதிவுகள்
மழைக் காடு - அடையார் - சென்னை
அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..

Tuesday, March 24, 2009

சுஜா(தா) தாட்ஸ்

கடந்த ஒரு வாரமாக சுஜாதாட்ஸ் என்ற புத்தகத்தை படித்து வருகிறேன்.

விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள புத்தகம் சுஜாதாட்ஸ். ஜூனியர் போஸ்ட்டில் 1997 - 1998ல் சுஜாதா எழுதிய கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டு உள்ளனர்.

வழக்கம் போலவே எல்லா விஷயங்களையும் தொட்டிருக்கிறார் சுஜாதா.

தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து விட்டு, நிஜ வாழ்க்கையை கவனியுங்கள் என்கிறார் சுஜாதா. அவர் கேபிள் இணைப்பே வைத்துக் கொள்ளவில்லை என்கிறார், வியப்பாக இருக்கிறது.


இன்னுமொரு கட்டுரையில், தமிழ் சொற்களை பற்றி ஆராய்கிறார். எழுத்தாளன் என்கிறோம், கொலையாளன் என்பதில்லை, கொலையாளி என்கிறோம், ஏன்? என கேட்கிறார். நீங்கள் யாராவது கூற முடியுமா?

மல்ட்டி மீடியா என்பதற்கு தமிழ் வார்த்தையாக ‘பல்லூடகம்’ என்கிறார்.

சிறுகதை ஆரம்பத்திற்கு சில மோசமான உதாரணங்களை காட்டி இருக்கிறார்.
“டுமில் என்று துப்பாக்கி ஒரு முறை உமிழ்ந்தது, சுகரிதா செத்து விழுந்தாள்”.

பெரும்பாலும் முதல் பாராவிலேயே கதையை ஆரம்பித்து விடுங்கள், சுவாரசியமாய் ஆரம்பத்தை அமைத்து, படிப்பவர்களை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார், சிறுகதை எழுத்தாளர்கள் கவனிக்கவும்.

இந்திய நடனங்களை பற்றி இன்னொரு இடத்தில் கிண்டலடிக்கிறார், ம்யூட் செய்து நடனத்தை பாருங்கள், அபத்தமாக இருக்கும் என்கிறார்.

ஆனாலும், எல்லா கட்டுரைகளுமே சுவாரசியமாக இருக்கின்றன என கூற முடிய வில்லை. கற்றதும், பெற்றதும் கட்டுரைகள் அளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

எல்லோரும் ரசித்து படிக்க முடியும் புத்தகம்!! நீங்கள் படித்திருக்கிறீர்களா? உங்களது கருத்து என்ன??

ஜூனியர் போஸ்ட் இப்போதும் வருகிறதா? இது என்ன தனி இதழா அல்லது இணைப்பா?

Saturday, March 14, 2009

அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..

செட்டிநாடு வகை சிறப்பு பலகாரங்களை, சுவையாக சாப்பிட வேண்டுமென்றால், நீங்கள் அடையாறு சங்கீதா உணவகத்திற்கு செல்லலாம்.
கிண்டியிலிருந்து வரும்போது, அடையார் மத்தியகைலாஷ் சிக்னலை தாண்டி, இடது புற சர்வீஸ் சாலையில் நுழைந்தால், ஒரு நிமிடத்தில் சங்கீதாவை அணுகலாம்.

வார இறுதி மாலை, இரவுகளில் கார் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம். சர்வீஸ் சாலையில்தான் நிறுத்த வேண்டும். டூ விலரில் செல்வது உத்தமம்.

குழிப் பணியாரம், இடியாப்பம் வடைகறி, அடை அவியல், கேரட் ஹல்வா, பீட்ரூட் போண்டோ, மகாராஜா ஸ்பெசல் மசால் தோசை, பீன்ஸ் வடை, கேரட் வடை, பால் கொழுக்கட்டை, தேங்காய்பால் ஆப்பம் போன்ற பல வகையான உணவுகளை ஒரு பிடி பிடிக்கலாம்.

விலையும், ரொம்ப இருக்காது. இன்று நானும், என் மனைவியும் சென்று ஒரு ஆந்திரா பெசரட்டு, அடை அவியல், இடியாப்பம், குழிப் பனியாரம், பீட்ரூட் போண்டோ எல்லாம் சாப்பிட்டோம், 181 ரூபாய் பில்.

சங்கீதா அடையாறில் மட்டுமல்லாமல், சென்னையில் வேறு சில இடங்களிலும் இருக்கிறது. ஒருமுறை முயற்சித்து பாருங்களேன்..

என்னுடைய சென்ற வார உணவிட வழிகாட்டு பதிவு: மழைக்காடு, அடையார்

Sunday, March 08, 2009

என் மனைவிக்காக, ஓர் கவிதை

அருகிலிருந்தால்
எந்நிமிடமும் ஊடல்தான்..
சிறுசிறு நிகழ்வுகளுக்காய்
நீயும், நானும்
கோபப் படுவோம்..
நீ அருகிலில்லா
இஞ்ஞாயிறு
ஏனோ போரடிக்கிறது..
ஒவ்வொர் நிமிடமும்
மெதுவாய் நகர்கின்றது..
சீக்கிரம் வாயேன்
என்னருமை மனைவியே,
அடுத்த ஊடலை
உடனே அவதானிப்போம்..

மழைக் காடு - அடையார் - சென்னை

அடையார் சிக்னலில் (flyover கீழே) அமைந்துள்ள உணவு விடுதி Rain Forest. உணவும், விடுதியின் சுற்றுப்புற சூழலும், வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது.

விடுதியின் கதவே, ஒரு பாதாள அறைக்குள் செல்வது போல் sliding wood ஆக அமைந்துள்ளது. உள்ளே சென்றால் மான் தலை, பாம்புகள், பறவைக் கூடுகள் என அருமையான அலங்கார பொருட்கள்.

உணவும் சுவையாக உள்ளது. உங்களுக்கு south indian, north indian, chinese என்று விதவிதமான உணவு வகைகள் கிடைக்கின்றன. ஒரு சைட் டிஷ் (side dish) ன் விலை சராசரியாக 100 ரூபாய் ஆகிறது. அளவு நிறையவே கிடைக்கிறது (quantity).

இதைவிடவும் பிரமாதமான விஷயம், நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கரடி, ஒற்றைக் கண்ணன் பேய் போன்ற விதவிதமான வேடங்களில் ஒருவர் வருகிறார்.

உங்கள் மனைவியை பயமுறுத்த, இதை விடவும் அருமையான தருணம் மனித உரிமை பேசும் இக்காலத்தில் கிடைப்பது அரிது :-)

இருவர் சென்று 500 ரூபாய்க்குள் திருப்தியாய் சாப்பிட்டு வரலாம்.

என்னங்க மழைக்காடுக்கு கிளம்பிட்டீங்களா, இருங்க ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க..

எஜமான் காலடி மண்ணெடுத்து..

இன்று காலை கே டிவியில் எஜமான் படம் க்ளைமேக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். நெப்போலியனை அடித்துப் போட்டு, கத்தியை அவரது மார்புக்கு அருகே சொருகி விட்டு, "நான் என்னைக்குமே பதவி, புகழுக்கு அலைஞ்சதில்லை.." என்று பேசிவிட்டு திரும்பி செல்கிறார், பின்னனியில் எஜமான் காலடி மண்ணெடுத்து பாட்டு ஒலிக்கிறது.

வெட்கத்தை விட்டு சொல்கிறேன், நான் தீவிர ரஜினி விசிறி அல்ல, ஆனாலும் எனக்கு இந்த காட்சியை பார்த்த போது புல்லரித்தது. மிகவும் ரசித்தேன். ரஜினியிடம் என்னை மாதிரி சாதாரண ரசிகனையும் கவர்ந்து இழுக்கக் கூடிய சக்தி அவரது நடிப்பால் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உதயகுமார், திறமையாய் காட்சி அமைத்ததையும் குறிப்பிட வேண்டும்.

எப்போது எஜமான் வந்தது, என தெரிய வில்லை. 1990ல் வந்திருக்கலாம். இன்றும் அந்த படத்தை பார்த்து ஒன்றி ரசிக்க முடிகிறது.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில், நான் படித்துக் கொண்டிருந்த போது ஒருமுறை டைரக்டர் உதயகுமர் ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார்.

எஜமான பட நினைவுகளை பற்றி கேட்கும்போது, ரஜினி மீனாவின் பேச்சை கேட்டு பட்டாம் பூச்சி புடிக்க செல்வாரல்லவா, அப்போது கிராம மக்களில் ஒருவர் 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா எதை வேணாலும் புடிப்பாரு' என்ற வசனம் வரும். ஆரம்பத்தில் அந்த வசனத்தை 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா கோட்டையையே புடிப்பாரு' என்றே உதயகுமார் அமைத்திருந்தாராம், ஆனால் ரஜினி கேட்டுக் கொண்டதால் மாற்றப் பட்டதாம்.

காலடி மண்ணெடுத்து வழிபடுவது போல் காட்டுவது ஓவராக தனிமனித வழிபாடாய் இருக்கிறதே என்று கேட்டோம், சரியாக பதிலளிக்காமல் நழுவி விட்டார்.

என்ன இருந்தாலும், ரஜினி இந்த படத்தில் கலக்கி விட்டார் அல்லவா??

NZ vs IND - இன்றைய போட்டியில் ஜெயிக்குமா இந்தியா?

இன்றைய ஞாயிற்றுக்கிழமை அற்புதமாக ஆரம்பித்தது. காலையில் அலாரம் வைத்து, 6 மணிக்கே எழுந்து விட்டேன். மேட்ச் துவங்கிய முதல் பாலிலிருந்து டிவியை விட்டு அங்கே இங்கே நகரவில்லை. சேவக் ஏமாற்றினாலும், சச்சின், யுவராஜ், தோனி, ரெய்னா என்று நியுசியை துவம்சம் செய்து விட்டர்கள். இந்தியா எடுத்த பேட்டிங் பவர்ப்ளேயில் 69 ரன்கள் குவித்ததெ, ஆட்டத்தின் திருப்பு முனை என கருதுகிறேன்.

இந்தியாவின் இறுதி ஸ்கோர் - 392/4. நியுசிலாந்து இதை சேஸ் செய்வது மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். வெட்டோரி இல்லாதது, அவர்களுக்கு ஒரு இழப்பே. முதல் போட்டியாதலால், அனுபவமில்லா கேப்டன் பவுலிங்கை மேனேஜ் செய்ய ரொம்பவும் கஷ்டப் பட்டார்.

பார்ப்போம், நியூசியின் பேட்டிங் வலுவானது, எனவே போட்டி சவாலாய் இருக்குமென நினைக்கிறேன். தற்போதைய ஸ்கோர் NZ: 203/5 (30.3 ov)

ஒரு பல்வலியும், சில பின்குறிப்புகளும்

ஒரு சுபயோக வெள்ளிக்கிழமை காலையில் எனக்கு பல்வலி ஆரம்பித்தது. மதியம் சாப்பிடவே முடியவில்லை, முதலில் சூட்டுக்கட்டி ஏதாவது வந்திருக்கும் என நினைத்தேன். வெள்ளி இரவு, வலி அதிகம் ஆனது. ஜூஸ் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன்.

சனிக்கிழமை மாலையில் பல் டாக்டரிடம் சென்றேன். வெற்றிச்செல்வன் இளைஞர், டாக்டர் என்றே நம்ப முடியவில்லை. ஆனால் அற்புதமாக என்னை கையாண்டார். பல் நோயாளிகளை பரிசோதிக்கும் இருக்கையில் என்னை சாய்மானமாக படுக்க வைத்து, சில பல கருவிகளை, மின் ஒளியின் ஊடே
கையாண்டு அங்கெ இங்கே தொட்டு அவனித்தார்.

பிறகு இருக்கைக்கு வந்து எனக்கு பொறுமையாய் படம் வரைந்து விளக்கினார். இப்போது பலருக்கும் தாடை அளவு குறுகி விட்டதால், 31,32 வது பற்கள் வெளிவருவதில்லையாம். இவற்றை ஞானப்பற்கள் (wisdom teeth) என்பார்களாம். சாதாரணமாய் இவை ஒரு மனிதனின் 25 வயதில் வெளிவந்து விடுமாம். ஆனால் தற்போது 10-ல் 7 பேருக்கு இவை வெளியே வருவதில்லையாம்.

நாம் பல் சுகாதாரத்தை முழுமையாய் கடைப்பிடிக்கா விடில், இப்பற்களில் ஒவ்வாமை (infection) ஏற்படுமாம். அப்படி ஏற்பட்ட ஒவ்வாமையால் இப்பகுதி எனக்கு கொஞ்சம் வீங்கி உள்ளது.

கொஞ்சம் சுகாதாரமாய் பல்லை பேணி வருமாறும், எனக்கு 2 tablets (Hagan - antibiatic, Nimulid - pain killer) - ம், tantrum oral rinse -ம் கொடுத்து தினமும் மூன்று முறை வாய் கொப்பளிக்க கூறினார்.

மேலும், எப்போதும் சாப்பிட்ட உடன், வாய் கொப்பளிக்க கூறினார். தினமும், காலை & மாலையில் பல் விளக்க கூறினார். வாய் கழுவுவதற்காக இருக்கும் oral rinser, mouth vash உபயோகப் படுத்த கூறினார்.

நாம் பின்பற்றப் போகிறேன், மக்களே நீங்களும் கவனமாய் பல்லை பேணுங்கள், வாழ்க்கையை அனுபவியுங்கள்!!

Wednesday, March 04, 2009

கவாஸ்கர் - இப்ப என்ன சொல்றீங்க?

இந்தியா இரு டி௨0 போட்டிகளிலும் தோற்றபோது, சுனில் கவாஸ்கர் கூறினார் (தினமலரில்), இந்தியாவிற்கு புதிய விதமான உடை (கரு ஊதா கலர்) ராசியில்லை, அதனால் தோற்று விட்டார்கள், இதனை பழைய விதமான உடைக்கே மாற்றி விட வேண்டும் என்று. இதை விடவும் அபத்தமான கருத்து இருக்க முடியாது.

இப்போது இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று விட்டது, அதே புதிய உடையில். இப்போது கவாஸ்கர் என்ன சொல்கிறார்??

உண்மையான காரணம், டி௨0 போட்டிகளில், நாம் போதுமான ரன்கள் எடுக்கவில்லை, பவுலிங்கும் எடுபட வில்லை. எனவே தோற்றோம்!!

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??

Saturday, February 28, 2009

ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சுஜாதா

இரண்டு நாட்களாய் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் சிறுகதைத் தொகுப்பை படித்து வருகிறேன். அனைத்து கதைகளுமே அட்டகாசமாய் இருக்கின்றன.

கதையை படிக்கும்போது, நம்மையுமே ஸ்ரீரங்கத்து சித்திரை வீதிகளிலும், தேரடி முட்டியிலும் கூடவே கூட்டிச் செல்கிறார். ஏதோ அவரது பக்கத்து வீட்டில் இருந்து அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

கடைசி இரண்டு கதைகளான காதல் கடிதம் மற்றும் மறு' வில் அவரது பாட்டியின் கேரக்டரைஷேஷன் அற்புதமானது, அது கதையல்ல நிஜமென்றே தோன்றுகிறது.

தெருமுனை விளையாட்டுகளை, முக்கியமாக தெரு கிரிக்கெட்டை மிக சுவாரசியமாக சுஜாதா ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும் என தோன்றுகிறது.

ரங்கு, அவரது கடை, கோபாலன், மல்லிகா, பத்தனா ஐயர், குண்டு ரமணி, வரது, வீர ராகவன், கிருஷ்ண மூர்த்தி போன்ற அவரது பாத்திரங்கள், இப்பதிவு எழுதும்போதும், இன்னும் வெகு நாட்களுக்கும் என் நினைவில் இருப்பார்கள்.

சுஜாதாவின் மற்ற நாவல்கள் சிலதையும் நான் படித்திருக்கிறேன், படித்து கொண்டிருக்கிறேன். எனக்கென்னவோ, மற்ற அவரது நாவல்களை விட ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு படி மேல் என்னை குதுகலப் படுத்துவதாகவே தோன்றுகிறது. இதில் வரும் நகைச்சுவை, சமூகப் பார்வைகள், நேரடி வர்ணணைகள், கதாபாத்திரங்கள் எல்லாமே மிகவும் பரிச்சயப் பட்டவை, நாம் நேரில் சந்தித்தவையாக இருக்கின்றன. மேலும் நம் அனைவரது சிறுவயது வாழ்க்கையை நினைவுபடுத்துவதும், ஒரு காரணம்.

என்றாவது ஒருநாள் பூவுலகை விடுத்து, மேலுலகு செல்லும் போது, நான் அங்கு சுஜாதாவை சந்திக்க நேர்ந்தால், இவ்வுளவு அற்புதமான வாசிப்பனுபவம் கொடுத்தற்காக, அவருக்கு சொல்லுவேன் "தேங்க்ஸ், ஸார்!!!".

Thursday, February 26, 2009

கிசுகிசு என்பது தமிழ்ச் சொல்லா??

இன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் போது பேருந்தில் பண்பலை வானொலி கேட்டுக் கொண்டிருந்தேன்.

பெரும் மோசடி செய்த பிரபல் ஐடி கம்பெனியின் பேரில் படமெடுத்த ஹீரோவை வைத்து அடுத்த படம் செய்ய யாரும் முன்வரவில்லையாம், அதனால் அவரே சொந்த படம் திரும்பவும் எடுக்கிறாராம்.

சரி அந்த கதையை விடுங்கள்.

கிசுகிசு என்பது தமிழ்ச்சொல்லா? இல்லையெனில், இதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன?

துணுக்கு - என்பதற்கான தமிழ்ச்சொல் என்ன?

கேரட் என்ற காய்கறியின் தமிழ்ச் சொல் என்ன? அப்படி ஏதும் இல்லையெனில், ஏன் இல்லை? கேரட், ஆப்பிள், பீன்ஸ் போன்ற காய்கறிகளுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்க வில்லை?

எல்லோரும் வந்து பதில் சொல்லுங்கள், விவாதிக்கலாம்!!

Wednesday, February 25, 2009

டி-௨0 கிரிக்கெட் - இந்தியா தோற்றது ஏன்?

  • சேவக் - கம்பிர் தொடக்க ஜோடி சரியாக விளையாடி ரன்கள் குவிக்க இயலாதது. கடந்த இரு ஆண்டுகளில், இந்தியா வெற்றிபெற்ற போட்டிகளில், இந்த ஜோடியின் பங்களிப்பு மகத்தானது.
  • இரண்டு போட்டியிலும் டாஸ் தோற்று, இந்தியா ஸ்கோர் சேஸ் பண்ண முடியாமல் போனது.
  • தோனியிடமிருந்து பெரிய அளவில் பங்களிப்பு இல்லை, அவரது டைமிங் இரண்டாவது போட்டியில், படு மோசம், முப்பது பந்துகளில், இருபத்தெட்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அவரால்.
  • சரியான திட்டமிடல் இல்லாதது. இரு போட்டிகளிலுமே பேட்டிங் ப்ளான் இல்லை.
  • இஷாந்த் ஷர்மா, ஷகீர் கான் கூட்டணி எதிர்பார்த்த அளவில் சோபிக்காதது.
  • ஒரு சரியான ஆல்ரவுண்டர் இல்லாதது.
  • பின் குறிப்பு: சில விமர்சனங்களில், இந்தியாவின் புதிய உடை ராசியில்லை என்று கூறுகிறார்கள். இன்று சுனில் கவாஸ்கர் கூட இதையே கூறி இருக்கிறார். இதை விட அபத்தமான காரணம் வேறெதுவும் இருக்க முடியாது.

Tuesday, February 24, 2009

எங்கே எனது கவிதை??

அருகருகே குடியிருந்தோம்..
நித்தமும்
ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்போம்..
வழமையாய் காலையில்
ஒரே மிதிவண்டியில் ஆற்றுக்கு செல்வோம்
செல்லும் போது நீயும்,
திரும்பும் போது நானும் ஓட்டுவோம்,
கேட்டால் எதிர்காற்றில் உன்னால் அழுத்த முடியாதென்பாய்..
என் பேனா மூடியில் பேப்பர் அடைத்து
கொண்டபோது, நீயே தண்ணீர் ஊற்றி எடுத்துத் தந்தாய்..
கிட்டிப் புல் விளையாடும் போது,
நான் எதிரணியில் இருந்தால்,
மெதுவாய் அடிப்பாய் நான் கேட்ச் பிடிக்க வசதியாய்..
ஏதாவது ஒரு பலகாரம் உங்கள் வீட்டில் செய்தால்,
உடனே எனக்கு கொடுக்க ஓடோடி வருவாய்..
உனக்கு ஓர் பம்பரம் வாங்கினால்,
எனக்கும் ஒன்று வாங்கி வருவாய் நான் கேட்காமலே..
வீட்டுப் பாடம் எழுத நேரமில்லா
சில மதிய உணவு இடைவேளைகளில்
எனக்காக நீ அவசரமாய் வாய்ப்பாட்டை சிலேட்டில் கிறுக்குவாய்..
உன் வீட்டிற்கு வரும் உறவினர் குழந்தைகளை
என் வீட்டிற்கும் அழைத்து வந்து
என்னை அறிமுகப் படுத்துவாய்..
பள்ளிக் கூடத்தில் எப்போதும் என்னருகே
அமர்ந்திருப்பாய்..
கோயிலுக்கும், சினிமாவுக்கும்,
சந்தைக்கும், விளையாட்டிற்கும்
நானில்லாமல் எங்கும் தனியாய் சென்றதில்லை நீ..
கல்லூரி பருவத்தில்
வேறிடத்தில் நீ படிக்க நேரிட்ட போதும்,
என்னுடன் தினமும் உரையாடுவாய்.
தினசரி கதைகளை தெரிவிப்பாய்..
இருவரும் நகரத்திற்கு வந்து
வேலையில் சேர்ந்தும் தொடர்பில் இருந்தோம்..
திருமணம், பிள்ளைப்பேறு,
வளைகாப்பு, மகளின் மஞ்சள் நீராட்டு
என வைபவங்கள்
உன் வீட்டிலும், என் வீட்டிலும் நடந்தேறின..
ஒவ்வொன்றிலும் என் ஆலோசனையை கேட்டாய் நீ..
இப்படியாய் நம் வாழ்வு
செவ்வனே சென்று கொண்டிருந்த போது
திடிரென, பூவுலகு எய்தினாய் நீ!!
நண்பா,
இத்தனை நாளாய் தினம் தினம்
பார்த்து, பழகிய உன் அருகாமை இல்லாமல்
வெறுமையாய் நகர்கிறது என் வாழ்வு,
எப்போது நாம் மீண்டும் சந்திப்போம்,
சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ?

Sunday, February 22, 2009

சன் டிவியே, மனசாட்சி இருக்கிறதா??

இன்று (ஞாயிறு) காலையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். தர்ம பத்தினியின் தொணதொணப்பு தாங்காமல் (ஹிஹிஹி, எப்போதும் கணிப்பொறியை கட்டிக் கொண்டு மாரடிக்கிறேனாம்), சற்று நேரம் கணிப்பொறியை மூடிவிட்டு, டிவியை ஆன் செய்தேன். நேரம் காலை ஒன்பது ஐம்பத்தைந்து.

சன் டிவியில் டாப் டென் மூவிஸ் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டாம் இடம் 'வெண்ணிலா கபடி குழு'வை பார்த்து ரசித்தேன். நல்ல படம்தான். அடுத்ததாக முதலிடம் பிடித்த படத்தை காட்டியபோது மிகுந்த அதிர்ச்சி. ஹார்ட் அட்டாக் வந்தது போலிருந்தது, கண்ணீர் கொட்டியது. ஏனென்றால் முதலிடமென் சன் டிவி அறிவித்த படம் 'படிக்காதவன்'.

படு மொக்கையான படம். பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. சன் டிவி பிக்சர்ஸ் வெளியீடு என்பதற்காக என்ன வேண்டுமானாலும் ரேங்கிக் குடுப்பதா? என்ன அநியாயம் இது? எப்படி ரேங்கிங்கை நிர்ணயிக்கிறார்கள்? இப்படித்தான் சில நாட்கள் முன்பு தெனாவட்டு, திண்டுக்கல் சாரதியையும் முதலிடத்தில் அறிவித்தார்கள்.

சன் டிவியே, உனக்கு மனசாட்சியே இல்லையா????

தேன்கூடு திரட்டி என்னானது?

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வலைப்பதிவு உலகத்திற்கு வந்திருக்கிறேன். எனது முந்தைய பதிவில் வலைப்பதிவு உலகத்தின் இந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி வினவி இருந்தேன். அதில் எவரும் தேன்கூடு திரட்டி பற்றி சொல்லவில்லை. யாராவது சொல்லுங்களேன், என்னானது இத்தளம்? 2007ல் தேன்கூடு திரட்டி மிக அருமையாக செயல் பட்டுக் கொண்டிருந்ததே, நிறைய போட்டிகள் எல்லாம் வைத்தார்களே. எங்கே போயிற்று தேன்கூடு?

Saturday, February 21, 2009

அஹம் பிரம்மாஸ்மி ? - நான் கடவுளா? - படம் குறித்த கேள்விகள்

1. ஆர்யா அட்டகாசமாக நடித்திருக்கிறார் அல்லது வாழ்ந்திருக்கிறார், ஆனால் அவரது கேரக்டர் முழுமை பெறாதது போல் தோன்றுகிறதல்லவா?

2. பூஜா, பாலாவின் முந்தைய கதாநாயகிகளையே ஞாபகப்படுத்துகிறார், முக்கியமாக பல இடங்களில், நந்தாவின் லைலாவையே பார்க்கும் படி இருப்பது, படத்தின் பலமா அல்லது பலவீனமா?

3. காவல் நிலையத்தில் நடக்கும் காமெடி காட்சி (மிமிக்ரி, எம்ஜிஆர் - சிவாஜி - நயந்தாரா டான்ஸ்) படத்தில் எவ்விதத்திலும் ஒட்ட வில்லையே?

4. பூஜா பாடுவதாக தோன்றும் சில பாடல்கள், வெவ்வேறு குரல்களில் வருகின்றனவே (வயதான குரல் பாடல்) அவருக்கு பொருந்த வில்லையல்லவா?

5. கிளைமேக்ஸில் பூஜாவின் சிதைந்த முகத்தில் மேக்கப் என்பது அப்பட்டமாக தெரிகிறதே, ஏன் இந்த இடறல்?

6. கடைசி காட்சியில் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான், எங்கே அவனது அடிப்பொடிகள், இன்ஸ்பெக்டர்?

இதற்கெல்லாம் பாலாதான் பதில் சொல்லவேண்டும் என்பதில்லை, இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்களேன்..

Thursday, February 19, 2009

பழைய பதிவர்களெல்லாம் எங்கே??

தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்து இருக்கிறேன், 2005-2006 ல் பார்த்து, படித்து பழகிய நிறைய பதிவர்களை தற்போதைய இடுகைகளில் சந்திக்க முடியவில்லை. அவர்க்ளெல்லாம் எங்கே சென்றார்கள், இன்றும் எழுதுகிறீர்களா??

1. கோ. கணெஷ்
2. டி.பி.ஆர். ஜோசப்
3. தருமி
4. துளசி கோபால்
5. ஞான வெட்டியான்
6. டுபுக்கு

இன்னும் பல பதிவர்கள் ஞாபகம் வரவில்லை. இவர்களின் links கொடுக்க முடியுமா?

தேன்கூடு திரட்டி தளம் என்னானது? தமிழ்மணத்தை தவிர வேறு aggregators வந்து பிரபலமாகி உள்ளதா??

போலி பிரச்சினை தீர்ந்து விட்டதா??

தமிழ் வலைப் பதிவில் வேறு ஏதாவது முன்னேற்றங்கள்? Improvements/updates/rules?

தயவுசெய்து சொல்லுங்களேன்...

Wednesday, February 18, 2009

வெண்ணிலா கபடி குழு - விமர்சனம் அல்ல

சென்னை ராமாபுரத்தில் இருப்பவர்களுக்கு மிக அருகே உயர்தர மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் எதுவும் கிடையாது. சத்யம் 12 km, ஐநாக்ஸ் 14 km, மாயாஜால் 30 km. கிண்டியிலோ, போரூரிலோ ஏன் எதுவும் இல்லை?

உதயம் 5 km ல் உள்ளது. இதை விட்டால், சாதாரண ஆனால் நல்ல தியேட்டர் வடபழனி கமலா, சாலிகிராமம் ஏவிஎம் ராஜேஸ்வரி என இரண்டும் உள்ளன.

இதில் கமலா தியேட்டருக்கு மட்டும் online booking வசதி உள்ளது (தற்போதிய படம்: வில்லு). உதயம் தியேட்டரில் வார இறுதியில் புதிய படம் பார்க்க, 2 - 3 நாட்கள் முன்பே நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் அனைத்து மல்டிப்ளெக்ஸ் மற்றும் சாதா தியேட்டர்களிலும் பைக் நிறுத்த Rs 10 டிக்கெட். ஐநாக்ஸில் Rs 15 என நினைக்கிறேன்.

இதை எல்லாம் அலசி ஆராய்ந்து ஏவிஎம் போக முடிவெடுத்தோம். ஒரு ஞாயிறு மாலை முதல் வகுப்பு டிக்கெட் Rs. 40 க்கு வாங்கி சென்றால் அரங்கமே நிரம்பி வழிகிறது. சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள் என்று கலந்து பட்ட கூட்டத்தில் படம் பார்ப்பதே ஓர் அற்புதமான அனுபவம்.

ஒரு வருடத்திற்கு முன்பு படம் பெயரை கேள்விப் பட்ட போதே படத்தை பார்க்க வேண்டும் என நினைத்து இருந்தேன். படத் தயாரிப்பாளர் ஒரு NRI யாம். எனது நண்பரின் நண்பராம்.

தியேட்டரில் இருக்கைகள் சற்று குறுகலாக உள்ளன. முன் சீட்டுகாரர் தலை மறைக்கிறது. ஆனால் காற்று நன்றாக வருகிறது. சரி, 40 ரூபாய்க்கு புஷ்பேக் சீட்டா கிடைக்கும் என்று சமாதானம் செய்து கொண்டேன்.

சரி படத்திற்கு வருவோம். படம் 35 mm மில் ஆரம்பித்த போது பயந்து விட்டேன், சரிதான் சின்ன பட்ஜெட் படம் என்று 35 mm மில் எடுத்து விட்டார்களா. ஆனால் கொஞ்ச நேரத்தில் ஆய் போகும் பசங்கள் பெரியவர்கள் ஆகும் போது விரியும் ஸ்க்ரீன் அழகு.

ஹீரோவும், ஹீரோயினும் கண்களால் பேசிக் கொள்வதை ரசிக்கலாம். ஒரு சில விமர்சனங்களில், இதை கிண்டல் செய்கிறார்கள். இதுதானே இயல்பு, இப்படித்தானே எங்கள் கிராமத்தில் இப்போதும் இளசுகள் பேசிக் கொள்கின்றன. அது போல் ஹீரோயின் கிராமத்து பெண்ணாயிருப்பினும் வாயாடிக்க வில்லையாம். யார் சொன்னது, எல்லா கிராமத்து பெண்களும் வாயாடிகள் என்று? பாதி கிராமத்து பெண்கள் அடக்கமான, அமைதியானவர்களே, நிறைய வெட்க படுபவர்களே. வேண்டுமானால் எங்கள் கிராமத்திற்கு வந்து பாருங்கள். மேலும் இந்த படத்தில் ஹீரோயின் மதுரை, டவுன் பெண்ணல்லவா.


கபடி ஆட்டத்தை இன்னும் பிரமாதமாய் காட்டியிருக்கலாம். ஒரே பாட்டில் சாதா அணி, சூப்பர் டீம் ஆவது சினிமாவில் மட்டுமே நடக்கும். ஹீரோ இயல்பாய் நடித்து இருக்கிறார். காமெடி நன்றாக இருக்கிறது. யதர்த்தமான கதை, திரைக்கதை. மக்களை குடும்பத்துடன் திரை அரங்கிற்கு அழைத்து வந்திருப்பது இயக்குனரின் வெற்றி.


திருவிழா கொண்டாட்டங்கள் அழகு. ஜாதி பற்றிய வசனங்கள் கைதட்டலை அள்ளுகின்றன. இசை, பரவாயில்லை.

படத்தின் ஊடே வரும் விரசமில்லா காமெடியை வாய் விட்டு சிரித்து ரசிக்கலாம். எல்லோரும் சொல்வது போல் பரோட்டா காமெடிதான் சூப்பர் என்றாலும், மேலும் நிறைய உள்ளன. ஸ்லோ சைக்கிள் ரேசில் படு வேகமாய் ஓட்டும் சீன், உரியடிக்கும் சீனில் மாமியார் மண்டையை உடைப்பது, படாத இடத்தில் பட்டுடப் போகுது என்று மனைவி சொல்லும் இடம், கபடி வீரரின் உறவு முறையை சொல்லும் மதுரைக் காரர் என அமர்க்களப் படுத்தியுள்ளனர்.

கபடி கோச் ஆக வருபவர் அசத்தி இருக்கிறார், "என்னடே சொல்லுதே, நீ ஆடுறியா" என்ற மொழி பிரயோகமும், உடல் அசைவுக்களுமாய் இயல்பாய் நடித்து இருக்கிறார்.

நடுவில் பக்கத்து ஊர் காரர்கள், பழைய பகையை தீர்க்க தண்ணி அடித்து கொண்டு சலம்பி கொண்டிருப்பதை அடிக்கடி காட்டும் போதே தெரிந்து விடுகிறது, அவர்கள் அடிக்க போவதில்லை என்று, இந்த சீன்களை வெட்டி இருக்கலாம்.

வழக்கமாய் துடுக்கு பெண்ணாய் வரும் சரண்யா, இதில் அடக்கமாய் வருவது வித்தியாசமாய், ரசிக்கும் படியாய் இருக்கிறது, well done madam!

கடைசியில் ஹீரோ ஏன் சாகிறார் என்று யாரும் தலையை பிய்த்து கொள்ள வேண்டாம், ஏதோ டைரக்டர் ஆசை பட்டு விட்டார், விட்டு விடுங்கள்.

வெண்ணிலா கபடி குழு - நின்று விளையாடி இருக்கிறது!!!

Tuesday, August 26, 2008

இரு மனங்கள் இணையும் திருமணம்

வாரத்தில் ஏதாவது ஒரு நாளில்
எப்போதாவது ஓரிரு மணித்துளிகள்
சந்தித்து, அவசர அவசரமாய்
நிறைய பேசி, சிரித்து, விளையாடி
சண்டை போட்டு, சமாதானமாகி
சாப்பிட்டு விட்டு பிரியும்
நிலை மாறி
இன்று சற்றேற்குறைய
ஒரு நாளின் இருபத்து நான்கு
மணி நேரமும்
இருவரும் இணைந்தே இருக்கிறோம்!
கணவன் மனைவியாய் இணைந்து
ஆரம்பித்துள்ள இல்வாழ்க்கை
இனிமையாய் தொடர
குறைகளை தவிர்த்து, திருத்தி
நிறைகளை நிரப்பி
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து
மகிழ்ச்சியாய் வாழ
இறைவனை பிரார்திப்போம்!!

Saturday, February 16, 2008

நீ சிரிக்கும் போதெல்லாம் கவிதைகள்!!

கண்ணே
நீ சிரிக்கும் போதெல்லாம்
மணிகள் கலகலவென
உருண்டோடும்
சத்தம் கேட்கிறேனே,
என் காதிலே ஏதும் கோளாறா??

<<>>

கண்கள் சுழற்றும்
நள்ளிரவு
பனி பொழியும்
அதிகாலை
சுட்டெரிக்கும் வெயிலில்
மதியம்
கடற்காற்று வீசும்
மாலை
என
பொழுதுகள் புலர்ந்து
பொழுதுகள் மறைகின்றன..
பேசிக் கொண்டேயிருக்கிறோம்
மின்னஞ்சலில்..
மின் அரட்டையில்..
செல்பேசியில்..
நேரில்..
பேசப் பேச
விஷயங்களுக்கு குறைவில்லை..
கிண்டல்,
கேலி,
மகிழ்ச்சி,
சோகம்,
அதிர்ச்சி,
நிம்மதி
என உரையாடல்கள்
மாறுகின்றன..
உணர்வுகள் மாறுகின்றன..
அன்பும், பாசமும், அக்கறையும்
எள்ளளவும் குறையவில்லை
அந்நாளிலில் இருந்து
இந்நாள் வரைக்கும்..
என்றாவது ஒருநாள்
நம் உரையாடல்கள் நின்றால்
அந்நாளில்
என் உயிரோ அல்லது உன் உயிரோ
பிரிந்திருக்கும்!!!
சொர்க்கத்திலோ, நரகத்திலோ
மீண்டும் சந்தித்துக் கொண்டால்
தொடர்வோம் நம் உரையாடலை!!

<<>>

பனி பொழியும்
அதிகாலையில்
என் அறைக்கு
முன்புள்ள சிறியதொரு
தோட்டத்தில்
மலரும் வெளிர்மஞ்சள்
பூக்கள்
உன் முகத்தை
நினைவு படுத்துகின்றன..
பார்க்கும் போதெல்லாம்
உன்னை நினைத்து
சிரிக்கின்றேன்..
என்றாவது ஒருநாள்
பூக்கள் மலராத தருணத்தில்
சோகம் தழுவுகிறது
உன்னை காணாதது போல்..
பூத்துக் குலுங்கும் மலர்களாய்
நாமிருவரும் அருகருகே
வாழும் தருணம்
வாய்ப்பது எப்போது??