Sunday, February 14, 2010

அசல் கவிதை - காதலர் (தொலைத்த) தினம்



தினமும் பல மணி நேரம் பேசி மகிழ்ந்த நாட்கள் எங்கே?
அன்பில் தோய்த்தெடுத்த மின்னஞ்சல்கள் எங்கே?
குறும்பு நிறைந்த குறுஞ்செய்திகள் எங்கே?
அடிக்கடி கொடுத்து மகிழ்ந்த பரிசுப் பொருட்கள் எங்கே?
என்ன உடை, என்ன உணவு, என்ன செய்கிறாய் என்ற குசல வினவுகள் எங்கே?
கிண்டல் பேச்சுக்கள் எங்கே?
செல்ல ஊடல்கள் எங்கே?
பொங்கி வழிந்த காதல் எங்கே?
என் மனைவியே, இத்தனையும் இரண்டு வருடத்தில் மறைந்தது எங்கே?

Saturday, February 06, 2010

இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் தொடர் முன்னோட்டம்

இந்தியாவில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் டீமில் ஒன்று தென் ஆப்ரிக்கா. வேறெந்த டீமை விடவும் அதிகமான வெற்றி சதவீதத்தை தென் ஆப்ரிக்கா இந்தியாவில் பெற்றுள்ளது. இப்போது வந்திருக்கும் டீமும் இன்னொரு சிறப்பான, கடுமையான போட்டியை இந்தியாவிற்கு தரப் போவதில் எந்த வித சந்தேகமும் இல்லை.




ஸ்மித், காலிஸ், அம்லா என்று பலமான பேட்டிங் உள்ளது. மற்றொரு பக்கத்தில் இந்தியா டிராவிட், ல்க்ஷ்மண், யுவராஜ் போன்றோர் இல்லாமல் தடுமாறும் என்றே தெரிகிறது. பந்துவீச்சில் மார்க்கெல், ஹாரிஸ், ஸ்டைன் என்று கலக்கக் காத்திருக்கிறார்கள். இந்தியா சார்பில் ஷகீர்கான் மற்றுமே நம்பிக்கை தருகிறார். ஹர்பஜன் பார்ம் இல்லாமல் தடுமாறி வருகிறார்.

இந்தியாவின் பேட்டிங் சேவக், கம்பீர், சச்சினை பெரிதும் சார்ந்துள்ளது. சேவக் பிரமாதமாக அடித்தால் பிழைக்கலாம்.

தற்போது நடந்து வரும் முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா முதல் நாள் தேநீர் இடைவேளையில் 193 ரன்கள், இரண்டு விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது. மிக பலமான நிலையில் உள்ளது. இந்தியா இந்த டெஸ்டில் பத்ரிநாத், சகா இருவரையும் புதிதாய் அறிமுகப் படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற நிறைய வாய்ப்புள்ளது.

நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!

Sunday, January 31, 2010

கோவா - வெற்றிப் படமா??

  • இயக்குநரின் முந்தைய இரு படங்களினால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கோவா எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை. சற்று ஏமாற்றம்தான்.
  • படம் மிக மெதுவாய் செல்கிறது. கோவா வந்ததிலிருந்தே பார்ட்டி, குடி, கும்மாளம் என்று தொடர்ந்து காட்சிகள் அதே தொனியிலேயே வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதை தெளிவானதாய், வலுவாய் இல்லை.
  • பிரேம்ஜிதான் படத்தில் நிஜ கதாநாயகன். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், அவரது காமெடி படத்திற்கு ஓவர்டோஸ்.
  • பிரேம்ஜி போடும் சண்டையில் புலி உறுமுது வேட்டைக்காரன் பாடலும், அவரது சண்டையும் சூப்பர். தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. இதேபோல் ஆங்காங்கே சில படங்களை நக்கல் அடித்திருக்கிறார்கள்.
  • ஹோமோசெக்ஸை முதன்முதலில் தமிழ் சினிமாவில் பார்க்கிறோம். ஓரளவுக்கு நகைச்சுவையாய் காண்பிக்க முயற்சித்து இருக்கிறார்கள். கொஞ்சம் ஆபாசத்தை தவிர்த்திருக்கலாம்.
  • படத்தின் பாடல்கள் ஒன்றுமே மனதில் ஒட்ட வில்லை. கோவா பாடல் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. படத்தின் ஆரம்ப பாடல் தமிழ் டிவி சீரியல்களை நினைவூட்டியது.
  • படம் நகரங்களில் கொஞ்சம் ஓடலாம். பி, சி செண்டர்களில் வரவேற்பு இருக்காது.
  • வெங்கட் பிரபு, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!

<<>>

படத்தை மாயாஜாலில் பார்த்தேன். டிக்கெட் விலை ரூ 120. இணையத்தில் பதிவு செய்தால் ரூ 140. 20 ரூபாய் கூடுதல் சற்று அதிகம்தான். சத்யம், அபிராமி, கமலா போன்றவற்றில் 10 ரூபாய்தான் அதிகம், இணையத்திற்கு. ஏன் இந்த அதிக விலை என்று தெரியவில்லை. டாய்லெட்டும் சரியாக பராமரிக்கப் பட வில்லை. சென்னையில் சத்யம் மட்டுமே ஒரு நிறைவான தியேட்டர் அனுபவத்தை தருகிறது.

Saturday, January 30, 2010

வார இறுதி கொத்து பரோட்டோ - 01/30

கோவா, தமிழ்படம் இரண்டுமே ரிலீஸாகி ஓரளவுக்கு பாஸிடிவ் விமர்சனங்களை பார்க்க, படிக்க, கேட்க முடிகிறது, இரண்டையுமே பார்க்க வேண்டும். இரண்டு படங்களுமே வழமையான தமிழ் சினிமா பார்முலாவிலாவிலிருந்து விலகி எடுக்கப் பட்ட படங்கள என்பது சுவாரசியமானதே. தமிழ் சினிமா நிஜமாகவே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்று நினைக்கிறேன் (ஆயிரத்தில் ஒருவன் இன்னொரு உதாரணம்).

<<>>

ஜோடி நம்பர் ஒன், ராஜா யாரு ராணி 6, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளின் மத்தியில், சில நல்ல டிவி நிகழ்ச்சிகளும் வருகின்றன. விஜய் டிவியின் நீயா, நானா விவாத நிகழ்ச்சி நான் விரும்பிப் பார்க்கும் ஒன்று. மற்றொன்று கலைஞர் டிவியில் வரும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி.

<<>>

நீயா நானா விவாதத்தில் வீட்டு வேலைக்காரிகள் அடுத்த வீட்டு விவகாரங்களை சொல்வதைப் பற்றியும், கிசுகிசுக்களை பரப்புவதைப் பற்றியுமான விவாதம் வந்தது. உங்கள் வீட்டு வேலைக்காரி எவ்வுளவு தூரம் பேசுகிறார் என்பது நீங்கள் அனுமதிப்பதை பொறுத்ததே என்றார் கோபிநாத். அருமையான கருத்தல்லவா? உங்களுக்கே அடுத்த வீட்டு விவகாரங்கள், கிசுகிசுக்களை கேட்க விருப்பமிருப்பதால்தானே, வேலைக்காரி அதைப் பற்றி கதை வைக்க அனுமதிக்கிறீர்கள்.

<<>>

சென்னையில் நிறைய மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் வந்து விட்டன. இருந்தாலும் இன்னமும் கிண்டி, போரூர், வேளச்சேரி, வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் ஏன் மல்ட்டிப்ளெக்ஸ்கள் எதுவும் வரவில்லை?

<<>>

வார இறுதியை அட்டகாசமாய் கொண்டாடுங்கள்!!
வெளிச் செல்லும் முன், உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே!!

Tuesday, January 26, 2010

நட்சத்திர பதிவாளர் ஸ்ரீதருக்கு, ஆயிரத்தில் ஒருவனின் பதில்கள்

ஆயிரத்தில் ஒருவனை ஏன் ஆதரிக்க வேண்டும்?

ஐயா, இந்த படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கலாம், இருந்தாலும் ஆதரியுங்கள். இல்லாவிடில் வேட்டைக்காரன்களிடமிருந்தும், ஆதவன்களிடமிருந்தும் தமிழ் சினிமாவை மீட்க இயலாது.

இதோ நட்சத்திர பதிவாளரின் கேள்விகளுக்கு பதில்கள்..

//தனது கடைசி வாரிசைக் காப்பாற்றுவதற்காகவும், சோழவம்சத்தை என்றென்றும் துலங்கச் செய்யவும், நினைக்கும் அந்த சோழ ராஜா எதற்காக பாண்டியரிடமிருந்து அபகரித்த அவர்களின் குல தெய்வச் சிலையையும் இளவலோடு சேர்த்து ஒளித்து வைக்க வேண்டும்? //

சோழருக்கும் பாண்டியருக்கும் ஏற்கனவே இருந்துவரும் பகையால் குலதெய்வ சிலை பாண்டியருக்கு கிடைக்கக் கூடாது என்று ஒளித்து வைக்கிறார்கள். அச்சிலை சோழரோடு இருந்தால்தானே அவர்களுக்கு பெருமை, எனவே சோழ இளவலோடு சிலையையும் எடுத்துச் செல்கின்றனர். மேலும் போரில் தோற்கும்போது வேறு இடத்தில் சிலையை ஒளித்து வைக்க சந்தர்ப்பம் இல்லாது இருந்திருக்கலாம்.

//அப்படியானால் முதலில் போன பிரதாப் ஆராய்ச்சி எதுவும் செய்யப் போகவில்லையா? வியட்நாமிற்கு சென்னையிலிருந்து கப்பலில்தான் போக வேண்டுமா? //

பிரதாப் போத்தன் ஆராய்ச்சி செய்து சோழரின் தீவை அடைந்து விட்டார், ஆனால் அங்கே சிறையில் மாட்டிக் கொண்டார். அவரைத் தேடிச் செல்வதாய் ரீமாசென் கூறினாலும், ரீமாவின் உண்மையான நோக்கம் அங்கே சென்று சோழரை அழிப்பதும், குலதெய்வ சிலையை மீட்பதும்தான். எனவேதான் மத்திய மந்திரியின் செல்வாக்கினாலும், ராணுவ உயர் அதிகாரி துணையுடனும் (இவர்களைனைவரும் பாண்டியர்கள்) பெரும் படையோடும், ஆயுதங்களோடும் செல்கிறார். எனவேதான் கப்பலில் செல்கின்றனர்.

//ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் இராணுவத்தினரின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது தொல்பொருள் ஆராய்ச்சி திட்டத் தலைவி அறிவிக்க முடியுமா? //

நியாயமான கேள்வி, இந்த வசனமே தேவையில்லை படத்திற்கு.

//ஜெராக்ஸ், மைக்ரோஃபிலிம், எல்லாம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கப்படாததா? பழைய கால அரிய ஓலைச்சுவடிகளை அப்படியே தூக்கிக்கொண்டு சுற்றுவதுதான் எந்தவகை ஆராய்ச்சி? //

அந்த ஓலைச்சுவடி ஆண்ட்ரியாவுடைய தனிப்பட்ட சொத்து, அதனால் அவர் எடுத்து வருகிறார். மேலும் காட்சியின் நம்பகத்தன்மைக்காக ஓலைச்சுவடியை காட்டுகிறார்கள். ஒருவேளை ஜெராக்ஸை காட்டியிருந்தால் நீங்கள் இதே கேள்வியை 'இவ்வுளவு செலவு செய்து படமெடுப்பவர்கள் ஓர் ஓலைச்சுவடியை காட்ட முடியாதா?' என்று கேட்டிருப்பீர்கள்.


//அப்படி அவர்கள் என்னதான் தொழில் செய்கிறார்கள்? வேளாண்மை, வணிகம், மீன்பிடிப்பது என்று எதுவும் செய்கிறார்களா? //

500 வருடங்களாக மழை பெய்யவில்லை. ஆதாலால் விவசாயமில்லை. இறைச்சியை வேட்டையாடி பகிர்ந்து உண்ணுகிறார்கள்.

//வீர சைவர்களான சோழர்கள் கல்வெட்டு வழக்கில் ‘லிங்க தரிசனம்’ என்றெல்லாம் வாமாச்சார வழக்குகள் பேசுவார்களா? //

ஏன், வீர சைவர்கள் இம்மாதிரி பேசக்கூடாதா? ஆபாசமாக ஒன்றும் பேசவில்லையே, நகைச்சுவையாகத்தானே சொல்கிறார்.

//சோழர்கள் பத்தாம் நூற்றாண்டிலும் கலப்பேயில்லாத சுத்த கருப்பு வண்ணதிலேயே இருக்கிறார்களாமா?//

ஒரு கற்பனைக்காக அப்படி இருக்கக் கூடாதா?

//வியட்நாம் பக்கத்திலிருக்கும் ஒரு ஆதிவாசிக் கூட்டம் கறுப்பாக இருக்கிறது. இன்னொரு ஆதிவாசிக் கூட்டம் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறார்களே? //

வேறேதாவது பகுதியின் ஆதிவாசிக் கூட்டமாயிருக்கலாம், அல்லது அவர்கள் ஏதேனும் சாயம் பூசிக் கொண்டிருக்கலாம்.

// கொலைசெய்யப் கத்தியோடு பாய்ந்து வரும ஆதிவாசிக் கூட்டத்தைப் பார்த்துவிட்டும் ‘hold fire' என்று சொல்லிக் கொண்டே இருக்கும் இராணுவ கமாண்டருக்கு எங்கே ட்ரெய்னிங் கொடுக்கிறார்கள்? இந்திய இராணுவத்தினரிடம் SLRம், கையெறி குண்டையும் தவிர வேறு ஆயுதமே இல்லையாமா? //

நல்ல கேள்வி, கமாண்டர், ஆதிவாசிகள் சும்மா பயமுறுத்துகிறார்கள் என்று நினைத்திருக்கலாம், கணித்தது தவறாய் இருந்திருக்கலாம்.

இவ்வுளவுதான் எனது பதில்கள். இவை அனைத்துமே நான் யோசித்து, அனுமானப் படுத்தியதுதான். இவற்றிற்கு வேறுவிதமான விளக்கங்களும் இருக்கலாம். எனக்கும் சில கேள்விகள் உள்ளன, சில பகுதிகள் தெளிவாய் புரியவில்லை.

இருப்பினும் நாம் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும், வேட்டைக்காரன்களிடமிருந்தும், ஆதவன்களிடமிருந்தும் தமிழ் சினிமாவை மீட்பதற்காக!!

Thursday, January 14, 2010

தமிழ் தொலைக்காட்சிகளின் பொங்கல்

வலைப் பதிவாளர்களுக்கு, வலைப்பதிவு வாசகர்களுக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எல்லா தொலைக்காட்சிகளிலுமே ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்தான். காலை 6 - 7 மங்கல இசை, 7 - 8 நாட்டுப் புற பாடல்கள், 8 - 9 ஏதாவது ஒரு நடிகரின் பேட்டி
9 - 10 பட்டிமன்றம், 10 -ல் இருந்து திரைப்படங்கள், மாலை பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படங்களின் படைப்பாளிகள்/நடிக நடிகையர்களின் பேட்டிகள்.

காலையில் புஷ்பவனம் குப்புசாமி - அனிதாவின் நாட்டுப் புற பாடல்கள் நிகழ்ச்சி நன்றாக இருந்தது (ஜெயா டிவி என்று நினைக்கிறேன்). பாலிமர் டிவியில் லியோனி தலைமையிலான பட்டிமன்றம் சுவாரசியாக இருந்தது. விஜய் டிவியில் 12 மணிக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. எனக்கு இம்மாதிரியான பாடல், டான்ஸ் நிகழ்ச்சிகள் பிடிக்கவே பிடிக்காது. மனைவி ஆவலாய் பார்த்ததால் விட்டுக் கொடுத்து விட்டேன்.

மாலையில் சன் டிவியில் போக்கிரி, கலைஞர் டிவியில் குருவி போடுகிறார்களாம். விஜய் டிவியில் காஞ்சிவரம் படம். இப்படியாக ஒரு வழியாக பொங்கல் நிகழ்ச்சிகள் முடிந்து விடும்.

நீங்கள் என்னென்ன நிகழ்ச்சிகள் பார்க்கிறீர்கள்?

பொங்கலுக்கு குட்டி, நாணயம், ஆயிரத்தில் ஒருவன் என்று மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆயிரத்தில் ஒருவனை பார்க்க வேண்டும். மற்ற இரண்டும் வழமையான மசாலாவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன், பார்ப்போம்!!

Sunday, January 03, 2010

அவதார் - இப்படியொரு திரைப்படம் தமிழில் வருமா?

அனைவருக்கும் எனது இதயங் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த புத்தாண்டில் நான் வழக்கமாய் செய்யும் சிலவற்றை செய்யவில்லை.


1. 31-ம் தேதி இரவு 12 மணிவரை கண்விழித்திருக்க வில்லை. மாலையில் எங்களது அடுக்ககத்தில் (Apartment) சில கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜாங்கிட் வந்திருந்தார். இரவு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு உறங்கி விட்டேன்.

2. புத்தாண்டு முதல் தேதியில் எவருக்கும் தொலைபேசியில் வாழ்த்து சொல்ல வில்லை. என்னை பொருத்த வரை புத்தாண்டின் முதல் நாளும் மற்ற எந்தவொரு நாளைப் போல் சாதாரணமானதே.

3. கோவிலுக்கு செல்ல வில்லை. வீட்டிலேயே கடவுளை வழிபட்டேன்.

<<>>



இன்று மதியம் சத்யம் - சாந்தம் தியேட்டரில் அவதார் திரைப்படத்தை கண்டு ரசித்தோம். டிக்கெட் 120 ரூபாய், இணையத்தில் பதிவு செய்திருந்தோம். தியேட்டரில் 3D கண்ணாடிக்கென 20 ரூபாய் தனியே வாங்கிக் கொண்டனர். இதை டிக்கெட்டுடனேயே வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது. இணையத்தில் அவ்வசதி இல்லையோ?

அற்புதமான திரைப்படம் அவதார். வித்தியாசமான கதை, விறுவிறுப்பான தெளிவான திரைக்கதை. இப்படியெல்லாம் ஹாலிவுட் திரைஉலகினர் எப்படி சிந்திக்கிறார்கள் என்று பொறாமையும், ஏக்கமும் படவைக்கிறது. பாண்டாரா கிரகம், அதில் வாழும் மனிதர்கள், மிருகங்கள் என கிராபிக்ஸில் புகுந்து விளையாடி உள்ளனர். இப்படம் தயாரிக்க பத்து வருடம் ஆனதாம், அந்த உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

3Dயில் பார்த்தது ஓர் அற்புதமான அனுபவம். ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு மிஞ்சுகின்றன. பாண்டாரா காட்டில் ஹீரோ ஓடும்போதும், தாண்டும்போதும் நாமும் கூடவே தாண்டுவது போல் உணர்வு ஏற்பட்டது. இப்படியொரு ஆக்-ஷன் திரைப்படத்தில் அழகாக ஒரு காதலையும் சொல்லியிருக்கின்றனர்.

காட்சிகள் ஏற்படுத்திய பிரமிப்பினாலும், மொழி உச்சரிப்பினாலும் எனக்கு ஒரு சில இடங்களில் வசனம் புரியவில்லை, இருந்தாலும் ரசிக்க முடிந்தது. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பிரமாண்டமான வேட்டைக்காரன், ஆதவன் போஸ்டர்கள் கண்ணில் பட்டதும் என்னுள் எழுந்தது கழிவிரக்கமா / சோகமா / கோபமா என்று சொல்லத்தெரிய வில்லை.

இப்படியொரு படம் தமிழில் வருமா? ஏன் அறிவியல் / தொழில்நுட்பம் / வானவியல் தொடர்பான திரைப்படங்களை தமிழில் எவரும் தயாரிக்க வில்லை? அதற்கான சூழ்நிலை இங்கே இல்லையா? உலக அளவிலான மார்க்கெட் (viewer ship) இல்லாததுதான் காரணமா?

Sunday, November 29, 2009

கற்றது தமிழ் (மட்டுமல்ல)

இன்று மாலை கலைஞர் தொலைக்காட்சியில் 'கற்றது தமிழ்' திரைப்படத்தை ஒளிபரப்பினார்கள். சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

சில காட்சிகள், வசனங்கள் நன்றாக இருந்தன, இருந்தாலும் ஒரு டாகுமெண்டரி படம் போலத்தான் இருந்தது.

கருணாஸ் ஜீவாவிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதும், தப்பிக்க வழி தேடுவதும், நண்பரிடம் மொபைலில் பேசுவதும் இயல்பாய் இருந்தது.

ஆனந்தியின் 'நிஜமாத்தான் சொல்றீயா?' வசனமும், காட்சிப் படுத்திய விதமும் அருமை!




மகாராஷ்டிராவில் ஒரு குக்கிராமத்துக்கு ஆனந்தியை தேடிச் செல்வதும் நன்றாக காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. நானும் முன்பு மகாராஷ்டிராவில் (மும்பை மற்றும் புனே) பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு சில கிராமங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு காட்சியில் மகாராஷ்டிரா மாநில சிவப்பு நிற அரசு பேருந்தை பார்த்தவுடன் எனக்கு நிறைய பழைய ஞாபகங்கள் வந்து அலை மோதின.

படத்தில் தமிழை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள நினைப்பவனையும், அதனை சமூகம் ஏளனப் படுத்துவதையும் காட்டியிருக்கிறார்கள். அக் கருத்து உண்மைதானல்லவா? இன்று தமிழ் மட்டும் படித்தவனுக்கு என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது. எம். ஏ, எம் பில் தமிழ் படித்தால் ஏதேனும் பல்கலைக்கோ, கல்லூரிக்கோ பேரசிரியாராய் செல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவல்லவா? சினிமாவுக்கு பாட்டெழுத தமிழ் பட்டப் படிப்பு தேவையில்லை என நினைக்கிறேன். தமிழ் மட்டுமே படித்து தற்காலத்தில் பிழைக்க முடியாது என்றே கருதுகிறேன்.

ஆதலால் ஏதேனும் தொழில் நுட்ப அறிவு அவசியம் தேவை. பிற மாநில/நாட்டு மக்களுடன் உரையாடுவதற்கு ஆங்கில மொழியறிவும் அவசியம் என்றே கருதுகிறேன்.

தமிழ் மட்டுமே படித்தவருக்கு வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் இருக்கிறதா என்று கூறுங்களேன்!

Sunday, November 22, 2009

யாருமற்ற ஞாயிறு

மதிய வெயில்
மவுனமாய் பொழியும்
ஞாயிறன்று
இணையத்தில்
அர்த்தமற்று தேடும்போதுதான்
உணர்ந்தேன்
உந்தன் பிரிவை!!

<<>>

நீ
நான்
மற்றும்
வேறு எவரிமில்லா
பிரபஞ்சம்
இவை போதுமெனக்கு,
வெறெதுவும் வேண்டாம்!

<<>>

என் உயிரில்லாவிடினும்
நான் உயிர் வாழ்வேன்,
உன் உயிர் என்னிலல்லவா
கலந்திருக்கிறது!

<<>>

பணம்,
புகழ்,
அழகு,
செல்வாக்கு
அதிகாரம்
மது
மாது
சூதாடுதல்
என
எல்லா போதைகளையும்
விட
அதிகமானது
காதலெனும் போதை!

Sunday, November 15, 2009

சன் டிவி - பெப்ஸி கலை நிகழ்ச்சிகள் - சில கேள்விகள்

சன் டிவி சனி, ஞாயிறு என்று ப்ரைம் டையத்தில் ஒளிபரப்ப இருந்த போதே நினைத்தேன், விளம்பர மழை பொழியப் போகிறதென்று! அதேதான் நடந்தது! இரண்டு நிகழ்வுகளுக்கொரு முறை விளம்பரம், இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கு முன்பு அடுத்து வரப்போவது என்று இரண்டு நிமிடங்களுக்கு ப்ரீவியு கொடுத்ததுதான் :-)

என்ன செய்வது, என் சகதர்மினி இதைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். வெளியே வேறு மழை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. சுஜாதாவின் வண்ணத்துப் பூச்சியின் வேட்டை புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டேன்.

டி. ராஜேந்தர் மேடையில் கலக்கினார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வந்ததை குறிப்பிட்ட அவர், முதல் படமான உயிரில்லவரை உஷாவிலிருந்து ஒரு பாடலைப் பாடி, பிறகு வாயாலும் ம்யூசிக் கொடுத்து திகிலடித்தார். பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, விஜயிலிருந்து ஸ்ரேயா வரை விழுந்து விழுந்து ஏன் சிரித்தனர், என்று புரியவில்லை :-)

கவுண்டமணி வந்து எல்லோருக்கும் நன்றி சொல்லி, அவர் ஸ்டைலில் சலம்பினார், உற்சாகபானம் சாப்பிட்டிருப்பார் போல் தெரிந்தது.

சிம்புவும், நயன் தாராவும் அருகருகே உட்கார்ந்து கொண்டு, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன திரும்பவும் ராசியாகி விட்டார்களா என்று தெரியவில்லை :-) இன்னொரு வல்லவன் படம் வருமா?

திடிரென்று பார்த்தால் ஆர்யா நயன் தாரவுக்கும், ஸ்ரேயாவுக்கும் மத்தியில் உட்கார்ந்து கொண்டிருந்தார், சிம்பு பாதியில் சென்று விட்டாரா?

விழா மொத்தமே 3 மணி நேரம் தான் நடந்திருக்கும், அதை 7 மணி நேரத்திற்கு ஓளிபரப்பும் திறமை சன் டிவிக்கு மட்டுமே வரும்!!

நடுவில் திடிரென்று நளினி, குயிலி, அனுராதா போன்ற முன்னாள் நாயகிகள் நடனமாடி பயமுறுத்தினார்கள். இந்த ஐடியா யார் கொடுத்தது என்று தெரியவில்லை, நிச்சயமாய் சண்டிவியில் பேப்பர் போட்டிருப்பார் (ரிசைனிங் லெட்டர் கொடுத்து, ரிலிவீங் பீரியடில் இருப்பவர்) என்று நினைக்கிறேன் :-)

நடுவில் பிரபு வந்து ஏதோ கோபமாய் பேசினார் (என்னவென்று சரியாக புரியவில்லை). என்னால்தான் விஜய், சூர்யா வந்தார்கள் என்றார். அவர்களை கேமிராவில் காமியுங்கள் என்றார். வஞ்சப் புகழ்ச்சி அணியா??

இந்த கலைநிகழ்ச்சிகளின் மூலம் வசூலான பணத்தைக் கொண்டு, ஏழைத் தொழிலாளர்களுக்காக ஏதோ கட்டடம் கட்டப் போகிறார்கள் என நினைக்கிறேன், நோக்கம் நல்ல விதமாய் நிறைவேறினால் சரி!!

Sunday, August 30, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

சில நேரங்களில் இணையம்
சில நேரங்களில் தொலைக்காட்சி
சில நேரங்களில் சுஜாதா நாவல்கள்
சில நேரங்களில் செல்பேசியில் உரையாடல்கள்
சில நேரங்களில் வண்டியில் பயணம்
சில நேரங்களில் உணவருந்துதல்
இத்தனை இருப்பினும்
எந்நேரமும் உன் நினைவுதான்,
சீக்கிரம் வாடி என்னருமை மனைவியே
செல்ல சண்டைகளை
விட்ட இடத்திலிருந்து தொடரலாம்!

Friday, July 24, 2009

சில நிகழ்வுகள் & சில எண்ணங்கள்

1. ஆஷஸ் சீரிஸ்
முதல் போட்டியை தட்டுத்தடுமாறி இங்கிலாந்து டிரா செய்த போது, இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வெல்லும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் ப்ளிண்ட்டாப்பின் 5 விக்கெட்டுகள், ஸ்வானின் 4 விக்கெட்டுகள், ஸ்டாராசின் முதல் இன்னிங்ஸ் 161 போன்றவை இங்கிலாந்தின் ஹைலைட்ஸ். மொத்தத்தில் 2005 போல் இன்னொரு விறுவிறுப்பான ஆஷஸ் தொடர் நமக்காக காத்திருக்கிறது. இங்கிலாந்து இதை வென்று, ஓய்வு பெறும் பிளிண்ட்டாப்புக்கு பரிசாய் தருமா?

2. அச்சமுண்டு & நாடோடிகள்
இரண்டுமே சமீபத்தில் வந்து வரவேற்பை பெற்றுள்ள நல்ல படங்கள். இன்னும் நான் பார்க்க வில்லை. இம்மாதிரியான வித்தியாசமான, நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பது ஆரோக்கியமான நிகழ்வு. இந்த வார இறுதியில் பார்க்கலாமென்று சத்யம், ஐநாக்ஸ் இணைய தளத்தில் பார்த்தால் டிக்கெட் கிடைக்க வில்லை. இரு படங்களுமே இரு தியேட்டர்களிலும் ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே இருக்கிறது. அது ஏனென்று புரியவில்லை. இன்னும் கூடுதலாக வார இறுதிகளிலாவது காட்சிகள் வைக்கலாமே?

3. முதல்வரின் வீடு மருத்துவமனையாகிறது
இன்றுதான் செய்தித்தாளில் பார்த்தேன். முதல்வர் மற்றும் அவரது மனைவியின் வாழ்நாளிற்கு பிறகு, அவரது வீடு ஏழைகளுக்கு இலவசமாய் மருத்துவ வசதி அளிக்கும் மருத்துவமனையாய் மாறுகிறது. இதற்கு முதல்வர் அவரது குடும்பத்தினரிடமும் ஒப்புதல் பெற்று விட்டாராம். மிக அருமையான காரியத்தை செய்திருக்கும் முதல்வருக்கு, மனமார்ந்த பாராட்டுகள், இது ஒரு நல்ல தொடக்கமாய் இருக்கட்டும்.

4. பீகாரில் பெண் துன்புறுத்தல்
இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன விஷயமென்று தெளிவாய் தெரியவில்லை. ஒரு பெண்ணை நிறைய ஆண்கள் சேர்ந்து கொண்டு, மார்க்கெட் போன்ற ஒரு பகுதியில் துன்புறுத்துகிறார்கள். ஒருவர் கையை இழுக்கிறார், ஒருவர் அடிக்கிறார். டிராபிக் போலீஸ்காரர் வேறு வேடிக்கை பார்க்கிறார். அந்த பெண் தவறு செய்திருந்தாலும், காவல்துறையில் புகார் செய்யலாமே தவிர, நாமே சட்டத்தை கையில் எடுக்கலாமா? பெண் என்று இல்லை, ஆணாக இருந்தாலும் நாம் கும்பலாய் சேர்ந்து கொண்டு துன்புறுத்த சட்டத்தில் இடமில்லையை, மனிதாபிமானத்திலும் இடமில்லையே!!

Thursday, July 02, 2009

பசங்க - யதார்த்தமான படமா?

படம் வந்து ஒரு மாதமாகி விட்டதால், உதயம் தியேட்டரில் அதிக கூட்டமில்லை. பின் மூன்று வரிசைகள் மட்டுமே நிறைந்திருந்தது. இப்படி கொஞ்ச நாள் கழித்துச் செல்வதில் சில சவுகரியங்கள் உள்ளன. ப்ளாக்கில் டிக்கெட் வாங்கத் தேவையில்லை. தியேட்டர் டிக்கெட் க்யூவில் நெரிசலில் நின்று அடிபடத் தேவையில்லை. படம் பார்க்கும் போது விசிலடிச்சான் குஞ்சுகளில் தொல்லை இருக்காது. கூட்டத்தால், தியேட்டர் ஏசி எபெக்ட் குறைந்து காணப் படாது.

படத்தை பற்றி நிறைய விமர்சனங்களை படித்திருந்ததால் ஓரளவுக்கு கதையின் போக்கு முன்பே தெரியும், அதனால் சில விஷயங்களை முழுமையாய் ரசிக்க முடிவதில்லை.

படம் முழுவதும் சற்றே மிகைப் படுத்தப் பட்ட யதார்த்தம் தெரிகிறது (உதாரணமாய் வீட்டின் சொந்தக்காரர் பார்க்கும் போது, பையன்கள் பூந்தொட்டிகள் வைத்து அழகு படுத்துவது, பட ஆரம்பத்தில் பையன்களை பற்றி கிராமத்து பெரிசுகள் போலிஸ் ஸ்டேசனில் கம்ப்ளெயிண்ட் செய்வது, சடாரென்று மனம்மாறி அன்புகரசுவின் அப்பா, அம்மா சமாதானாமாய் செல்வது)

இருந்தாலும் படத்தை ரசிக்க முடிகிறது. அன்புக்கரசு ஐஏஸ் என்று சிறுவன் சொல்வதும், போதும் பொண்ணு, பக்கடா போன்ற பெயர்களும், அவற்றிற்கான பெயர்க் காரணங்களும் ரசிக்க வைக்கின்றன.

கதையின் ஊடே வரும் காதல் நன்றாக இருக்கிறது. இருந்தாலும், இருவருக்குமிடையே காதல் வருவதற்கான காரணங்கள் பலமானதாயில்லை. அடுத்தடுத்து வரும் சம்பங்கள் படத்தை அழகாய் நகர்த்திச் செல்கின்றன.

கிளைமேக்ஸ் படு சினிமாத்தனம், எப்படி வில்லனாய் வரும் சிறுவன் திடிரென்று மனம் திருந்துகிறான்?

வெளியே வரும்போது, நல்லதொரு படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது.

Tuesday, June 30, 2009

சன் டிவியே, உன் அழும்புக்கு எல்லையில்லையா?

சன் டிவி டாப்டென் சென்ற ஞாயிற்றுக்கிழமை யாராவது பார்த்தீர்களா? நான் பார்க்க வில்லை. இன்று மதியம் பெங்களூரிலிருந்து நண்பர் அருண் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

சன் டிவியின் டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியில், மாசிலாமணி முதலிடமாம். கடவுளே, இந்த கொடுமையை கேட்பாரில்லையா?? கொஞ்ச நாள் முன்பு தெனாவட்டு, ஆயுதம் செய்வோம் போன்ற படங்களையும் இதே மாதிரிதான் முதலிடத்தில் 'வைத்து' இருந்தனர் என நினைக்கிறேன்.

இப்படி பகிரங்கமாய் மோசடி செய்கின்றனரே, இதற்கு பேசாமல் இந்த நிகழ்ச்சியையே நிறுத்தி விடலாமே!! மக்கள் யாராவது இதை (இந்த ரேட்டிங்கை) நம்புகிறார்களா? என்னை பொறுத்த வரை, நான் நீண்ட நாட்களுக்கு முன்பே இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். மாசிலாமணி, நிஜமாகவே முதலிடத்திற்கு தகுதிதானா? பசங்க, நாடோடிகள் போன்ற படங்களுக்கு சன் டிவி கொடுத்த ரேட்டிங் என்ன? யாராவது பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.

இப்படியே போனால், இன்னும் ஒரு வருடத்தில் டாப் டென் படங்களுமே சன் குழுமம் தயாரித்த படங்களே பிடித்து விடுமே! மக்கள் நம்பிக்கை இழந்து இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விடுவார்கள் என்று சன் டிவிக்கு தெரியாதா??

இதேபோல் விகடன் குழுமம் தயாரித்த வால்மீகி படத்துக்கு ஆனந்த விகடனில் வழங்கப்பட்ட மார்க் என்ன? விமர்சனம் வந்து விட்டதா? படம் சரியில்லை என கேள்விப்பட்டேன், சிவா மனசில சக்தி என்ற மொக்கைக்கே ஆனந்த விகடன் 40க்கு மேல் மதிப்பெண் அளித்ததாக ஒரு ப்ளாக்கில் படித்தேன், உண்மைதானா?

இம்மாதிரி ஊடகங்கள் தயாரிக்கும் படங்களுக்கு அவர்களே விமர்சனம், ரேட்டிங் போன்றவற்றை தரக்கூடாது என சட்டமியற்ற இயலுமா, சாத்தியாமா சொல்லுங்களேன்!

Monday, June 29, 2009

சென்னை - ஒரு பொன்மாலைப் பொழுதில்..

நீங்கள் புதிதாய்/சமீபத்தில் திருமணமானவரா? சமீபத்தில் என்றால் பத்து வருடங்களுக்குள்ளா? ஒரு வாரயிறுதி மாலைப்பொழுதை, அதிக செலவில்லாமல் மகிழ்ச்சியாய் வெளியில் சென்று அனுபவிக்க ஆசைப்படுபவரா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானதே, மேலே படியுங்கள்! :-)

பெரும்பாலான பன்னாட்டு, உள்நாட்டு ஐடி, தொழில் நுட்ப கம்பெனிகளில், அரசு அலுவலகங்களில் சனி, ஞாயிறு இரு நாட்களும் விடுமுறை அளிக்கின்றனர். சனிக்கிழமை மாலையே உங்கள் துணைவியுடன், குழந்தைகளுடன் (இருந்தால்) வெளியே சென்று வர ஏற்ற சமயம். சனி மாலையென்றால் எல்லா தொ(ல்)லைக் காட்சி சானல்களிலும் உருப்படாத படங்களையும், எரிச்சலூட்டும் பாட்டு, டான்ஸ், அரட்டை நிகழ்ச்சிகளையும் போடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி வெளியே சென்று வருவதுதான் :-)

சரி வெளியே செல்லலாம் என்றால் எங்கே செல்வது? நீங்கள் ஸ்பென்சர், சிட்டி செண்டர் போன்ற மெகாமால்களுக்கு செல்லலாம், ஆனால் அங்கே சென்று வந்தால் நமது பர்ஸ் காலியாவது நிச்சயம். என்னதான், உங்களது மனைவி ‘சும்மா சென்று வரலாம், விண்டோ ஷாப்பிங் செய்வோம்’ என்று சொன்னாலும் மயங்கி விடாதீர்கள். அங்கெ சென்றால் ஆயிரத்தெட்டு offers போட்டிருப்பார்கள், அதாவது 4 ஜீன்ஸ் வாங்கினால் ஒரு ஜீன்ஸ் இலவசம் (4 ஜீன்ஸின் விலை ரூ 4000) மற்றும் 2 டிசைனர் சாரி வாங்கினால் ஒன்று இலவசம் (இரண்டு சாரியின் விலை ரூ 8000) போன்ற உட்டாலக்கடி offerகள்.

கழுதை, அதைக்கண்டால் நீங்களும் உங்கள் மனைவியும் மதிமயங்கி கண்டது, கடையது வாங்கித் தள்ளி விடுவீர்கள். கிரெடிட் கார்டு என்றொரு பூதம் இருப்பதால், நமக்கும் செலவழிப்பது தெரியாமல் கன்னாபின்னாவென்று ஸ்வைப் (ஸ்வைப் செய்வது - இதற்கு தமிழ்ச்சொல் என்ன?) செய்து விடுவோம். அதுவும் குழந்தைகளோடு சென்றால் கேட்கவே வேண்டாம், சும்மா அந்த பொம்மையை வாங்கிக்கொடு, இந்த டீசர்ட்டை வாங்கிக்கொடு என்று பிய்த்து பீராய்ந்து விடுவார்கள். இது மட்டுமல்லாமல், ஏதாவது திண்பண்டம் வேறு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஐஸ்கிரீம் எதை எடுத்தாலும், 50 ரூபாய்க்கு கீழே இருக்காது. என்னடா இது உலகமென்று, தர்க்க ரீதியாக யோசிக்கத் துவங்கி விடுவீர்கள் :-)

இதை விட்டுத் தள்ளுங்கள், சினிமாவிற்கு செல்லலாம் என்றால், அதுவும் அபாயகரமான யோசனைதான். சத்யம், மாயாஜால் போன்ற மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களுக்கு என்றால் உங்கள் கதி அதோ கதிதான், டிக்கெட் ஒன்றில் விலை 120 ரூபாய், குடும்பத்தில் 4 பேர் என்றால் 500 ரூபாய் காலி, இண்டர்வெல்லில் வழக்கம்போல் குழந்தைகளுக்காகவோ, மனைவிக்காகவோ கூல்டிரிங்க்ஸ், பாப்கார்ன், ஸ்னாக்ஸ் வகையறாக்கள் 200 ரூபாயாவது ஆகிவிடும். உதயம், கமலா போன்ற மிடில்கிளாஸ் தியேட்டர்களுக்கு சென்றால் ஒரளவுக்கு தப்பிக்கலாம் :-)

இதற்கெல்லாம் உள்ள ஒரே உத்தமமான மாற்று வழி கடற்கரைக்கு செல்வதுதான், சென்னை மக்களுக்கு கடவுள் தந்த செலவில்லாத மகத்தான பொழுதுபோக்கு தலம் பீச்தான்.
மெரினா பீச், சாந்தோம் பீச், பெசண்ட் நகர் பீச், திருவான்மியூர் பீச் என்று ஏராளமான கடற்கரைகள் நம்மை வா, வாவென்று அழைக்கின்றன. அற்புதமான கடற்காற்று உங்களை ஆபீஸ் மேனெஜர் தொல்லை, project deadline (இதற்கு தமிழில் என்ன?) கவலைகள், வீட்டுக்காரன் மிரட்டல் போன்ற லவூதீக விஷயங்களை தற்காலிமாய் மறக்க வைக்கும்  என்னதான் சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி, சோன்பப்டி வகையறாக்கள் வாங்கித் தின்றாலும், 100 ரூபாய்க்கு மேல் உத்தரவாதமாய் செலவில்லை.

இப்போது என் அனுபவத்தை சொல்கிறேன், கேளுங்கள் :-)

ஒரு ஜூன் மாத மழை பெய்யும் சனிக்கிழமை மாலையில் நாங்கள் வெளியே சென்று வர முடிவெடுத்தோம் (போன வாரந்தாங்க அந்த சனிக்கிழமை, ஒரு சுஜாதா effect측¸ இப்படி எழுதுறதுதான் இப்போ பேஷன் :-))

மாலை 5 மணிக்கு கிளம்பினோம், கிளம்பிய போது லேசாக தூறல் விழுந்தது, பத்து நிமிடம்தான். குளுகுளுவென்று சென்னை ஊட்டி போல் மாறிவிட்டது. பைக்கில் ராமாபுரத்திலிருந்து கிண்டி, அடையார் வழியே பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்றோம்.

டிராபிக் போலீசார் பீட் அமைத்து, டிராபிக்கை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். பைக் நிறுத்த தனியே இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. பைக்கை நிறுத்தி விட்டு, மாங்காய், பட்டாணி சுண்டல் 15 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டோம் (முன்பு 10 ரூபாய், இப்போது 15 ரூபாயாகி விட்டது, விற்றவரிடம் கேட்டால் விலைவாசி பற்றிய பொழிப்புரை கிடைக்குமென்பதால் வாயை மூடிக்கொண்டு நடையைக் கட்டினோம்).

அப்படியே ஹாயாக பீச்சில் நடந்து வந்து கடலோரமாய் அமர்ந்தோம். சுமார் ஒரு மணிநேரம் காற்று வாங்கிக் கொண்டே கதை பேசிக் கொண்டிருந்தோம். குழந்தைகளோடு வந்திருக்கும் குடும்பங்கள், மணலில் வீடு கட்டும் குழந்தைகள், இளம்பெண்ணை குதிரையில் ஏற்றிக்கொண்டு ஜாய்ரைடு (இந்த தலைப்பில் சுஜாதா கதையொன்று எழுதியிருக்கிறார், படித்திருக்கிறீர்களா?) செல்லும் குதிரைக்காரர், சுண்டல் விற்கும் பையன், வண்டியில் பெரிய பெட்ரோமாக்ஸை கட்டி மணியடித்துச் செல்லும் சோன்பப்டிகாரர், சோளத்தை சுட்டு தீயில் வித்தை காட்டும் வண்டிக்காரர் என்று பீச்சே குதூகாலமாய் இருந்தது.

சோன்பப்டி ஒன்று (10 ரூபாய் ஒரு பொட்டலம்) வாங்கி ருசித்தோம், சுமாராய்த்தான் இருந்தது. 10 ரூபாய் என்ற ரேட்டால் ஏற்கனவே என்னை திட்டிக் கொண்டிருந்த என் மனைவி (ஹிஹி, சும்மா செல்லமாத்தான் திட்டினாங்க) சோன்பப்டியின் சுமாரான டேஸ்ட்டால் பத்ரகாளியானாள், அதன்பின் நடந்ததை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் (எப்படித்தான் கரெக்டா ஏமாந்து போரீங்களோ, உங்க நெத்தியிலேயே எழுதியிருக்கே ஏமாற்றவர்ன்னு போன்ற வசனங்களை நீங்கள் யூகிக்கா விட்டால் நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை என்று அர்த்தம் :-)

8 மணிபோல் அங்கேயிருந்து கிளம்பி, பொடிநடையாய் நடந்து வந்து மாதா கோயில் அருகே உள்ள முருகன் இட்லி கடைக்கு சென்றோம். சுடச்சுட இட்லி, ஆனியன் ஊத்தாப்பம், ப்ளெயின் தோசை, மெதுவடை, வெள்ளைப் பனியாரம் போன்றவற்றை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சாம்பார் போன்றவைகளின் உதவியால் உள்ளே தள்ளினோம் :-) (என்ன இதுக்காகவே சென்னையில் இருக்கனும் போல் தோனுமே). பில் எவ்வுளவு தெரியும், 103 ரூபாய்தான். நன்றாக உட்டுக்கட்டி விட்டு, வீடு திரும்பினோம்.

பின் குறிப்பு: பெசண்ட் நகர் முருகன் இட்லி கடைக்கு பக்கத்தில் ஒரு பேராபத்து உள்ளது. அது என்னவென்றால், பக்கத்தில்தான் Fab India என்று ஒரு பேமஸ் துணிக்கடை உள்ளது. என் மனைவி சாப்பிட்டு விட்டு அங்கே செல்வோம் என்று கூறினாள், நல்ல வேளை நாங்கள் சென்றபோது (சனி இரவு 9:30 மணி) கடையை மூடி விட்டார்கள், ஹப்பாடா தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டேன் :-) ஆதலால் பீச்சிலிருந்து வெளியே வரும் நேரத்தை 8 மணிக்கு மேல் திட்டமிட்டால், நீங்கள் தப்பித்து விடலாம் :-)

இப்படியாக எங்கள் சனிக்கிழமை மாலை அவுட்டிங் (காதலிப்பவர்களுக்கு டேட்டிங்) நிறைவு பெற்றது. மொத்த செலவு பைக் பெட்ரோல் போக வர 25 கிமீ: 25 ரூபாய், சுண்டல் + சோன்பப்டி: 25 ரூபாய், நைட் டிபன் செலவு: 103 ரூபாய், ஆக மொத்தம் 153 ரூபாய் ஆகியிருந்தது.

இப்போ சொல்லுங்க, என்னோட வழி சரியானதுதானே!! என்ன ஒவ்வொரு வாரமும் பீச்சிற்கே செல்ல முடியாது. அதனாலென்ன, ஒரு வாரம் வண்டலூர் சூ (zoo) போங்க, இன்னொரு வாரம் முட்டுக்காடு போட்டிங் போங்க, இன்னொரு வாரம் காந்தி மண்டபம், கிண்டி பார்க் போய்ட்டு வாங்க, இப்படியாக போனால் இயற்கையை ரசித்த மாதிரியும் இருக்கும், செலவை குறைத்த மாதிரியும் இருக்கும் :-) அவ்ளோதாங்க, பொசுக்குன்னு விண்டோவை க்ளோஸ் பண்ணிடாதீங்க.. நீங்க உங்க அனுபவங்களையும், யோசனையையும் சொல்லிட்டு போங்க!! :-)

Sunday, June 28, 2009

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - இன்றைய கிரிக்கெட் போட்டி - முன்னோட்டம்

இந்தியா டிவெண்ட்டி20 உலகக் கோப்பைத் தொடரில் சீக்கிரம் தோற்று வெளியேறிய போது வானத்திற்கும், பூமிக்குமாய் எகிறிக் குதித்தவர்களே, எங்கே இருக்கறீர்கள் நீங்களெல்லாம்? இப்போது சொல்லுங்கள், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் போட்டியை இந்தியா வென்று விட்டது. அநேகமாய் தொடரை வெல்லவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.

முதல் போட்டியின் யுவராஜ் பேட்டிங்கை பார்த்தீர்களா? சும்மா கிரிக்கெட் மட்டையை கதாயுதம் போல் கையாண்டு ரதகளப் படுத்தினார். ஜெரோம் டெய்லர் முதல் 5 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தவர், யுவராஜ் எனும் புயலில் சிக்கி ஆலை வாய் பட்ட கரும்பை போலாகி விட்டார். இரண்டு ஓவரில் 30 ரன்கள். இந்த போட்டியில் யுவராஜ் இறங்கினால், நான் விளையாட மாட்டேன் என்று அடம்பிடிகிறாராம் :-)

சரிதான், டெண்டுல்கர், சேவாக் இல்லை, பேட்டிங் வீக் என்று முடிவு செய்தவர்களுக்கு யுவராஜைத் தவிர தினேஷ் கார்த்திக், தோனி, பதான் போன்றவர்களும் தம் திறமையை நிரூபித்தனர். கம்பீர், ரோகித் ஷர்மாவும் நல்ல திறைமையான பேட்ஸ்மேன்களே, சீக்கிரம் பார்முக்கு வந்தால் இந்தியாவுக்கு நல்லது.

நமது பவுலிங்தான் வீக்காக உள்ளது. இஷாந்த் ஷர்மா சொதப்புகிறார், அவருக்கு பதிலாய் வேறு யாராவது வரலாம். ரவிந்திர ஜடேஜாவும் அவ்வுளவு எபெக்ட்டாக இல்லை, ரவி தேஜா வரலாம். பந்து வீச்சை பலப்படுத்தினால், தொடர் நமது பக்கம் எளிதாய் வந்து விழும்.

இன்றைய போட்டி இரவு 8 மணி இந்திய நேரத்துக்கு தொடங்குகிறது; பரபரப்பாய் இருக்குமென எதிர்பார்க்கலாம்! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!! :-)

Saturday, June 27, 2009

கால்டாக்சி - சென்னையின் வரப்பிரசாதம்

கால்டாக்சி என்பதற்கு தமிழில் என்ன என்று சொல்லுங்களேன். அழைப்பு சிற்றுந்து எனலாமா?

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆட்டோகாரர்களின் அட்டகாசம் பற்றி எழுதியிருந்தேன். 7 கிமீ தூரத்திற்கு 120 ரூபாய் கூசாமல் கேட்கிறார்கள்.

இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன். அது என்னவென்றால் ஆட்டோவில் இனிமே முடிந்தவரை பயணிக்க கூடாது. எங்கே போனாலும் பைக் அல்லது கால் டாக்சியில் போவதென்று முடிவெடுத்தாயிற்று.

சென்ற வாரம் நுங்கம்பாக்கம் ஓட்டல் பாம்க்ரோவில் உறவினர் இல்ல திருமண ரிஷப்ஷன் இருந்தது. குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம் என முடிவெடுத்து கால் டாக்சி (FAST TRACK) புக் செய்தோம். கரெக்டான நேரத்திற்கு வந்து மொபைலில் அழைத்தார் டிரைவர்.

உள்ளே அமர்ந்தவுடனேயே மீட்டர் ஆன் செய்யப்பட்டது. வேறு பேச்சே இல்லை. முதல் 5 கிமீ தூரத்திற்கு 100 ரூபாய். மேற்கொண்டு ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் 10 ரூபாய். வெயிட்டிங் சார்ஜ் (டிராபிக் சிக்னலில் வண்டி நின்றபோது) ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய். எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம்) நுங்கம்பாக்கம் ஹோட்டலுக்கு 10 கிமீ தூரத்திற்கு மீட்டர் காட்டிய தொகை 157 ரூபாய் கட்டி நிகழ்ச்சிக்கு சென்றோம்.

அருமையான சேவை, டாக்சி புக் செய்தவுடன், வண்டி எண், டிரைவர் பெயருடன் அவரது மொபைல் நம்பர் போன்ற விபரங்களுடன் SMS வந்தது.

மனதிற்கு நிறைவாய் இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திரும்பவும் கால் டாக்சியிலே திரும்பி வந்தோம்.

நாங்க இனிமே எங்க போனாலும் கால் டாக்சிதான், அப்ப நீங்க??

Wednesday, May 27, 2009

ஐ.டி (IT) துறையின் அபத்தங்கள் - 1




ஐ.டி மற்றும் பிபிஓ துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஆபீஸ் கார்கள், பஸ்கள் நிறைய உண்டு. சென்னை OMR ரோட்டில் இவை சர் சர்ரென்று பறப்பதை காணலாம், இப்படி ஒரு வண்டிதான் பத்து மாதத்திற்கு முன்பு என்னை பைக்கில் இருந்து கீழே தள்ளியது.

இவற்றின் பின் புற கண்ணாடியில் பார்த்தால் ஒரு வாக்கியம் கண்ணுக்கு புலப்படாத பொடி எழுத்துக்களில் எழுதியிருக்கும். "If this vehicle is driven rashly, please inform us. Ph:22000000". ஒருவன் வண்டியை கன்னா பின்னா வேகத்தில் ஓட்டிச் செல்லும் போது நமக்கு இந்த வாக்கியம் எப்படி கண்ணில் தென்படும்? எப்படி மக்கள் படித்து, புகார் சொல்ல இயலும்? இந்த எழுத்துக்களை பக்கத்தில் சென்று படித்தாலே பத்து நிமிடம் ஆகும். இந்த லட்சணத்தில் இப்படி எழுதி வைக்கலாம் என்று யோசனை கொடுத்த அறிவாளி யார்? இதை விடவும் அபத்தமான செயல் இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்களேன், இப்படி எழுதி வைத்திருப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ??

Wednesday, May 13, 2009

ஐபிஎல் - அழகிகளின் ஆட்டம் -- கார்ட்டூன்



ஹலோ.. யாரு லலித்மோடிங்களா?? நாங்க குன்னாம்பட்டி மாரியம்மன் கோவில்ல இருந்து பேசறோம்.. இன்னைக்கு கொடையில ஆட வேண்டிய கரகாட்ட குரூப் வரலைங்க.. ஐபிஎல்ல ஆடற சீயர் லீடர்ஸை (cheer leaders) கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுங்களா??

ஐபிஎல் - கொல்கட்டா அணி - கார்ட்டூன்




ஹலோ.. யாரு ஷாருக்கானா பேசறது???
நாங்க கேகேநகர் மூனாவது குறுக்கு சந்து
ராமசாமி கிரிக்கெட் கிளப்பில இருந்து
பேசறோம்.. இன்னைக்கு மேட்ச்சுக்கு ரெண்டு
பேரு குறையறாங்க.. கொஞ்சம் கங்குலியையும்,
மெக்கல்லமையும் அனுப்பி வைக்க முடியுங்களா??