Friday, July 21, 2006

இம்சை அரசனும், ஒசாமா பின்லேடனும் சந்திப்பு

ஒசாமா பின்லேடன், நமது இம்சை அரசன் 23-ம் புலிகேசியை சந்திக்க இந்தியா வருகிறார். இம்சை அரசனின் அரண்மணையில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர்.

ஒசாமா : அமெரிக்காவ, இந்த மேப்ல இருந்தே அழிச்சுடுணும்...

புலிகேசி : அந்த பொறுப்ப எங்கிட்ட விட்டுடு.... அமைச்சரோட அஞ்சாவது பொண்ணு ஸ்கூல் பேக்ல இருந்து திருடின ரப்பர் இன்னும் எங்கிட்டதான் இருக்கு...

ஒசாமா : !!!!!!!!!!




பின்குறிப்பு 1 : இதை எனக்கு மின்னஞ்சல் செய்த நண்பர் ராகவேந்திராவுக்கு நன்றி !!

பின்குறிப்பு 2 : இந்த இடுகைக்கும், தீவிரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ISP நண்பர்கள் அவசரப்பட்டு தடை செய்திட வேண்டாம் :-) !!

Thursday, July 13, 2006

இஸ்ரேலில் சோம்பேறி பையன் - பாகம் 2

முந்தைய பாகத்தில் : மும்பையிலிருந்து விமானத்தில் கிளம்பியது முதல் திறந்த வாய் மூடவில்லை (முதல் வெளிநாட்டு பயணமாச்சே). இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இறங்கி 'பசேல்' ஹோட்டலுக்கு நண்பர்களுடன் பயணிக்கிறேன். ஹோட்டல் ரிஷப்சனை அணுகிய போது...

'மன்னிக்கவும், உங்களுக்கு இந்த ஹோட்டலில் இடமில்லை..' அழகிய பெண் ரிசப்ஷனிஸ்ட் வாயசைத்ததை கேட்டு எனக்கு லேசாக மயக்கம் வந்தது. மயக்கம் தவிர்க்க கோலிசோடா தேடிக் கொண்டிருந்த நொடிகளில், ரிசப்ஷனிஸ்ட் தொடர்ந்தாள் "உங்களுக்கு 'தால்' ஹோட்டலில் ரூம் புக் செய்திருக்கிறோம், நீங்கள் இங்கிருந்து அங்கு போவதற்கு நாங்களே டாக்சி ஏற்பாடு செய்து விடுகிறோம், சிரமத்திற்கு மன்னியுங்கள்". 'இட்ஸ் ஓகே..ஹி..ஹி..' இது நான்.



இது டெல் அவிவ் கடற்கரை. ஹோட்டல் தால் (TAL) ஹயர்கான் வீதியில் கடற்கரை ஓரமாக உள்ளது. 10 தளங்களுடன் கூடிய அருமையான ஹோட்டல். இரு நிமிட நடையில் கடற்கரையை அடைந்து விடலாம். கடற்கரையை நம்மூர் மெரினாவுடனோ, மும்பை ஜூகுவுடனோ ஒப்பிட்டு நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை. ஒரே வரியில் சொன்னால் 'பூலோக சொர்க்கம்'.



மேலே நீங்கள் பார்ப்பது இஸ்ரேலில் ஓடும் பஸ். எல்லாமே அரசாங்கத்தைச் சேர்ந்ததுதான். தனியார் பஸ்கள் இல்லை. யுஎஸ் போலவே 'கீப் ரைட்' வண்டியோட்டும் நடைமுறை. பஸ், கார்களில் 'ஸ்டியரிங்' (தமிழ்ல என்னங்க) இடது முன்பக்கம் இருக்கின்றன. அழகான, புதிய, நன்கு பராமரிக்கப்படும் பஸ்கள். வழித்தடங்கள், இறங்கும் இடம் தெரிவிக்கும் பலகை அனைத்திலும் 'ஹீப்ரு' மொழியே. 20-25 பேர் மட்டுமே உட்கார முடியும்.



இது லாட்டரிக் கடை. பாருங்கள், எவ்வுளவு ஜோராக உள்ளதென்று. கடையின் முன் நிற்பது எனது நண்பர். இஸ்ரேலிலும் நம்பர் லாட்டரி உண்டு. ஒருநாள் அலுவலகம் முடிந்து திரும்பும் போது, சிறுமி ஒருவள் (8 அல்லது 9 வயது இருக்கும்) லாட்டரி வாங்கிக் கொண்டிருந்தாள். 'ஃபாரின் ஃபாரின்தான்' என்று நினைத்துக் கொண்டே நகர்ந்து விட்டேன்.



இரண்டு இஸ்ரேல் இளம்பெண்கள் ஒய்வெடுக்கின்றனர். இஸ்ரேலில் அனைத்து இளம்பெண்களும் அழகாக உள்ளனர் (அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறது). 18 வயதில் ராணுவத்திற்கு கட்டாயமாக அனுப்பப் படுவதாலும், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களாலும் எல்லாருமே 'ஜில்'லென்று உள்ளனர். (பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுமே ஸ்மார்ட்டாக, தொப்பையில்லாமல் சல்மான் கான் போலுள்ளனர்). பெண்கள் உடைகளும் ரொம்பவே மாடர்ன்தான், மிகக் குறைவான உடைகளை மட்டுமே நிறைய பெண்கள் அணிகின்றனர்.

இஸ்ரேலில் நிறைய தமிழ் வலைப்பதிவாளர்கள் இருப்பதாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்து வஜ்ரா சங்கர் இருக்கிறார். வேறு யாராவது இருப்பது தெரிந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். ஆனால் நான் அங்கே இருந்தபோது யாரையும் சந்திக்க இயலவில்லை. அடுத்த முறை பார்ப்போம்.


இஸ்ரேல் பற்றி நிறைய தமிழ் வலைப்பதிவுகள் வந்துள்ளன. சர்ச்சைக்குறிய விஷயங்களில்லாமல், இஸ்ரேலின் சுற்றுலாத்தளங்களை / பயண அனுபவங்களை பற்றிய பதிவுகள் குறைவே (என நினைக்கிறேன்).

வஜ்ரா சங்கர் தனது வலைப்பதிவில்புகைப்படத்துடன் சில இடுகைகளை, அருமையான விவரங்களுடன் இட்டுள்ளார். தள முகவரி http://sankarmanicka.blogspot.com/

வேறாதாவது தமிழ் வலைப்பதிவுகள் சுற்றுலா - இஸ்ரேல் பற்றி இருந்தால், நண்பர்கள் பின்னூட்டத்தில் முகவரி தரலாம்.

ஷபாத் பற்றியும், ஹோட் - ஹசரான் பற்றியும் அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாமே !!

Friday, July 07, 2006

இஸ்ரேலில் சோம்பேறி பையன் - பாகம் 1

'டெல் அவிவ் விமான நிலையத்தை நெருங்கி விட்டோம். பயணிகள் இடுப்புப் பட்டையை இறுக்கிக் கொள்ளுங்கள். இனிய இஸ்ரேலிய அனுபவத்திற்கு ராயல் ஜோர்டான் உங்களை வாழ்த்துகிறது..' விமானியின் குரல் ஒலிபெருக்கியில் மெலிதாக வழிந்தது. ஜோர்டான் நாட்டு தலைநகரம் அம்மானிலிருந்து கிளம்பிய முப்பது நிமிட பயணத்தில் டெல் அவிவ் நகரத்தை அடைந்து விட்டோம்.


புனேயிலுள்ள தொலைத்தொடர்பு மென்பொருள்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் சோதனையாளனாக வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில், அலுவலக வேலைக்காக இஸ்ரேல் செல்ல வேண்டியதாகி விட்டது (அட்ரா சோம்பேறி அட்ரா, ஆங்கிலக் கலப்பில்லாமல் எவ்ளோ பெரிய வாசகம்ம்ம்ம்).

புனேயிலிருந்து மும்பைக்கு சென்று, மும்பையிலிருந்து ஜோர்டானின் அம்மானுக்கு வந்திறங்கினோம். உடனடி இணைப்பு விமானத்தில் இடமில்லாததால், 30 மணிநேரம் அம்மானில் 'க்வீன் அலியா' விடுதியில் தங்கியிருந்து விட்டு இஸ்ரேலுக்கு பயணித்தோம். நான் சென்று திரும்பியது ஒரு மாதத்திற்கு முன்பு, தற்போதுள்ள அளவுக்கு நிலைமை அப்போது மோசமில்லை(?).

டெல் அவிவ் நகரத்தில் 'பென் குரியன்' விமான நிலையத்தில் இறங்கிய மறுவினாடியே விமான நிலையத்தின் பிரமாண்டம் இனம்புரியாத ஓர் உணர்ச்சிக் கலவையை ஏற்படுத்தியது. முதல் வெளிநாட்டு பயணம், சென்ற வேலையை நல்லபடியாக முடித்துவிட்டு திரும்ப வேண்டுமே என்று சிந்தனை ஓடியது. மிகப்பெரிய, சுத்தமான, அழகான, அமைதியான(!) விமான நிலையம் பென் குரியன். நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்ட 'பென் குரியன்' என்ற தலைவர் பெயர் விமான நிலையத்திற்கு வைக்கப் பட்டுள்ளது.

'நீங்கள் ஏதாவது பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளீர்களா ?' இமிக்ரேஷன் (இதற்கு தமிழில் என்ன?) அதிகாரி கேட்டபோது தூக்கி வாரிப் போட்டது. ஊரிலிருந்து புறப்படும்போதே அயல்நாட்டு கலாச்சார வகுப்புகளில் தெளிவாக சொல்லி இருந்தார்கள். இமிக்ரேஷன் கேள்விகளுக்கு அதிபுத்திசாலித்தனமாக ஏதாவது உளறி வைக்காமல் எளிமையாக பதிலை சொல்லவும் என்று. விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்தேன்.

இஸ்ரேல் நாட்டு தலைநகரம் ஜெருசலம். மிகச் சிறிய நாடு. மக்கள் தொகை 65 லட்சம் என கேள்விப் பட்டேன் (மும்பையை விடக் குறைவு). எப்போதும் பதட்டமான மத்திய கிழக்கு பகுதியின் அரசியல் சூழலில், சுற்றியுள்ள நாடுகளில் ஜோர்டானுடன் மட்டுமே நட்புறவு. பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சினை பற்றி நான் ஏதாவது கருத்து சொன்னால், பின்னி பெடலெடுக்க தமிழ்மணம் நண்பர்கள்(!) தயாராக உள்ளதால் 'நோ கமெண்ட்ஸ்'.

இஸ்ரேல் நாட்டு கரன்சி 'ஷக்கீல்' (ஷகீலா அல்ல..) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஷக்கீலின் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 10 ரூபாய். நமது ஊர் பைசா போல் அங்கு 'அகோரட்' நாணயம். 100 அகோரட், 1 ஷக்கிலுக்கு சமம். இஸ்ரேலுக்கு புறப்படும்போதே செலவுக்கு அலுவலகம் அமெரிக்க டாலர்கள் கொடுத்தனர் (அப்ப்ப்ப்பா, டாலரை தொட்டு பார்த்துட்டோம்ல..). விமான நிலையத்திலேயே கொஞ்சம் டாலரை ஷக்கீலாக மாற்றிக்கொண்டு வெளியே வந்து டாக்சி பிடித்து 'ஹயர்க்கான் ரோட்டுல ஹோட்டல் பேசல் போப்பா' என்றோம்.

டாக்சி டிரைவர் எங்களை ஏற இறங்க பார்த்து விட்டு, அப்படி ஒரு ஹோட்டலே இஸ்ரேலில் இல்லை என்று சூடமேற்றி சத்தியம் செய்யாத குறையாக சொன்னார். என்னாடா இது, அலுவலகத்தில் இந்த ஹோட்டலதான பதிவு பண்ணி அட்ரஸ் வேறு கொடுத்து விட்ருக்காங்க என்று மூளையை (இல்பொருள் உவமைதான்...) கசக்கிக் கொண்டிருந்த போது இஸ்ரேல்காரர் ஒருவர் சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு 'இது பேசல் அல்ல. ஹோட்டல் பசேல் (BASEL)' என்றார். 'சரிதான்..விளங்கிடும்டா...' என்று ஒருவழியாக ஹோட்டலை வந்தடைந்தோம்.

ஹயர்க்கான் டெல் அவிவ் நகர கடற்கரையை ஒட்டிய அழகான பெரிய வீதி. டெல் அவிவ்வின் பெரிய ஹோட்டல்கள் நிறைய இங்கே உள்ளன. நமது இந்திய தூதரகம் இங்கேதான் உள்ளது. ஹோட்டல் உள்ளே சென்றதும் நடக்கப்போகும் கூத்தை அறியாமல் உற்சாகமாக ரிசப்சனை அணுகுகிறோம். அப்ப்ப்பா, ஒருவழியா ஹோட்டலை வந்து சேர்ந்தாச்சு. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு உங்களையெல்லாம் பாகம் - 2ல் சந்திக்கிறேனே !!

பாகம் - 2ல்

இஸ்ரேலிலுள்ள தமிழ் வலைப்பதிவாளர்கள்
இஸ்ரேல் பற்றிய தமிழ் வலைப்பதிவுகள்
டெல் அவிவ் - ஜாபா சுற்றுப்பயணம்
ஹோட் ஹோசரானிலுள்ள அலுவலகத்தை பற்றி..
'ஷபாத்' என்றால் என்ன?

பின் குறிப்பு

இஸ்ரேல் பயண அனுபவங்களை தொடர்ந்து எழுதி இம்சை அரசன் 24ம் புலிகேசி ஆகலாம் என்று ஒரு உத்தேசம் உள்ளது. நண்பர்களின் பின்னூட்ட ஆதரவைப் பொறுத்து பாகங்கள் சுருக்கவோ, அதிகரிக்கவோ படும். ஆகவே அய்யா, அம்மா, நல்லதோ, கெட்டதோ ஏதாவது இரண்டு வரி பின்னூட்டம் போட்டு, வளர்கின்ற வலைப்பதிவாளரை(அட்ரா, அட்ரா.. 'வ'வுக்கு 'வ' எதுகை மோனை) தமிழ் மணத்தில் வாழ வையுங்கள் (திரும்பவும், 'வ'வுக்கு 'வ') !!

Saturday, April 08, 2006

IT திருக்குறள்கள்

திருக்குறளின் 134-வது அதிகாரம் சமீபத்தில் கண்டறியப் பட்டுள்ளது. அந்த அதிகாரத்தில் கணிணி, இணையம், மென்பொருள் மேம்பாடு போன்றவைகளைப் பற்றி திருக்குறள் அற்புதமாக விளக்குகின்றது. இந்த அதிகாரம் பின்வருமாறு..

Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்.

Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் Codingகெழுதியே சாவர்.

எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம்
Jobஇல்லை "C"யை மறந்தார்க்கு.

Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்.

Netடில் தேடி Copy அடிப்பதன்
மூளையிலிருந்து Logic யோசி.

பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu.

எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் Syntax Error.

எது தள்ளினும் Projectல் Requirement
தள்ளாமை மிகச் சிறப்பு.

Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று.

Bench Project Email இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.

பின்குறிப்பு : இந்த திருக்குறள்களை நண்பர் மணி, ஹைதராபாத்திலிருந்து இரு மாதங்களுக்கு முன்பு அனுப்பினார். அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. நண்பர்கள் மேலும் புதிய திருக்குறள்களை சிந்தித்து பின்னூட்டத்தில் இடலாம் !

Friday, February 24, 2006

சங்கிலித் தொடர் பதிவு - ஜோசப் & டோண்டுவிடமிருந்து

மூன்று நாட்களாய் அலுவலகத்தில் நிறைய வேலை இருந்ததால் தமிழ்மணம் பக்கம் வரமுடியவில்லை. திடீரென்று நேற்று மாலை தமிழ்மணத்தை திறந்த போது, சங்கிலித்தொடர் பதிவுகள் நிறைய தென்பட்டன. தெரிந்த விளையாட்டுதான், புது வடிவத்தில். சங்கிலித்தொடரில் என்னை அன்பால் இழுத்த ஜோசப் மற்றும் டோண்டுவிற்கு நன்றி !

பிடித்த நான்கு விஷயங்கள்

1. சினிமா பார்ப்பது / விமர்சிப்பது : சினிமா பெரும்பாலானோருக்கு பிடித்த பொழுதுபோக்குதான். சினிமா பார்ப்பதும், சினிமா பார்க்க வருபவர்களை பார்ப்பதும் எனக்கு இன்னமும் பிடித்தமான விஷயம்தான். ஆனால் தியேட்டரில்தான் சினிமா பார்க்க பிடிக்கும்.

2. கிரிக்கெட் பார்ப்பது / விளையாடுவது / விமர்சிப்பது : ஊரிலிருந்த வரை கிராமத்து கிரிக்கெட்டான கிட்டிப்புல்லின் ரசிகன் நான். திருச்சிக்கு படிக்க வந்தவுடன், கிரிக்கெட்டுக்கு மாறிவிட்டேன். இப்போதும் நமது கிரிக்கெட் பதிவுகளை 'கிரிக்கெட் கூட்டுப்பதிவில்' காணலாம்.

3. பழைய பாடல்கள் கேட்பது : பொதுவாக பாடல்கள் கேட்பது பிடிக்கும். பழைய பாடல்கள் இன்னும் ரொம்பவே பிடிக்கும். ஜெயா டிவியில் இரவு 11 மணியிலிருந்து 12 மணிவரை ஒலிபரப்பும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியின் பரம ரசிகன். நேற்று கூட 'கங்கைக் கரை தோட்டம்...' பாடலில் என்னையே மறந்தேன்.

4. தமிழ் வலைப்பதிவுகள் படிப்பது / படைப்பது : ஆறு மாதமாகத்தான் தமிழ்மணம் பழக்கம். தேசிகன் அறிமுகப் படுத்தினார். அவருதவியுடன் வலைப்பதிவையும் ஆரம்பித்தேன். முன்பெல்லாம் ஆனந்த விகடன், குமுதம், தினமலர், தினமணி, வெப் உலகம், ரீடிஃப் என்று எல்லா தமிழ் வலைத்தளங்களுக்கும் செல்வேன். இப்போதெல்லாம் தமிழ்மணத்திற்கே நேரம் போதவில்லை. டோண்டு சொல்வது போல், தமிழ்மணத்தைப் பார்க்காவிட்டால், கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. தமிழ்மணத்தை உருவாக்கி, நிர்வாகித்து, பங்களித்து வரும் நண்பர்கள், வலைப்பதிவர்கள் அனைவருக்கும் நன்றி !

பிடித்த நான்கு படங்கள்

1. அன்பே சிவம்
2. தவமாய் தவமிருந்து
3. குருதிப்புனல்
4. காக்க காக்க

பிடித்த நான்கு பாடல்கள்

1. சென்னை செந்தமிழ் (எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி)
2. நானொரு சிந்து (சிந்து பைரவி)
3. சின்ன சின்ன ஆசை (ரோஜா)
4. பச்சைக்கிளிகள் தோளோடு (இந்தியன்)

பிடித்த நான்கு இடங்கள்

1. டி. பழூர் (நான் பிறந்து வளர்ந்த கிராமம்)
2. திருச்சி (பள்ளி, கல்லூரி படிப்பு)
3. ஹைதராபாத் (முன்பு வேலை பார்த்த இடம் - 5 வருடங்கள்)
4. மும்பை (தற்போது வேலை பார்க்கும், வசிக்கும் இடம்)

பிடித்த வலைப்பதிவாளர்கள்

நிறைய பேரை பிடிக்குமென்பதால் வகைப்படுத்தி எழுதுகிறேன். இன்னும் நிறைய வலைப்பதிவுகள் ஞாபகத்தில் இல்லாததால், எழுத முடியவில்லை. நண்பர்கள், பொறுத்தருளுக.

அனுபவங்கள் / மீள் நினைவுகள் / சமூகம்

1. டோண்டு
2. டி.பி.ஆர்.ஜோசப்
3. தருமி
4. 'தாட்ஸ் இன் தமிழ்' பத்ரி

நகைச்சுவை / நையாண்டி

1. டுபுக்கு
2. இட்லி வடை
3. முத்து (தமிழினி)
4. பினாத்தல் சுரேஷ்

நிகழ்வுகள் / கதைகள் / பயண அனுபவங்கள்

1. தேசிகன்
2. புனே செப்புப் பட்டயம் மோகன்தாஸ்
3. கடற்புறத்தான் ஜோ
4. எண்ண கிறுக்கல்கள் செல்வராஜ்

சங்கிலித் தொடரில், நான் அழைக்க விரும்புபவர்கள்

1. தேசிகன்
2. ரஷ்யா இராமநாதன்
3. 'தாட்ஸ் இன் தமிழ்' பத்ரி
4. கோ. கணேஷ்

Thursday, February 16, 2006

கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்

தலைப்பை படித்தவுடன், அரசியலை எதிர்பார்த்து வரும் நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு. இது அரசியல் பற்றிய பதிவல்ல. சாப்பாட்டில் ஊறுகாய் போல், இப்பதிவிலும் அரசியல் உண்டு. பொறுமையாக படியுங்கள் !

தங்கையின் திருமணத்திற்காக 15 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றிருந்தேன். விடுமுறை நாட்களில் பல சுவையான, மகிழ்ச்சியான சம்பவங்களும், சில கசப்பான அனுபவங்களும் கிடைத்தன. அவற்றிலிருந்து இதோ உங்களுக்காக, சில செய்தித் துளிகள்.

மும்பையிலிருந்து சென்னைக்கு தாதர் விரைவுவண்டியிலும், சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு ராக்போர்ட் விரைவுவண்டியிலும் பதிவு செய்திருந்தேன். தாதர் பயணிகளுக்கான உணவு / திண்பண்டங்கள் வழங்கும் சேவையில் நன்றாக செயல்பட்டது. வண்டியும், கழிவறைகளும் ஓரளவுக்கு சுத்தமாக இருந்தன. ஆனால் ராக்போர்ட் விரைவுவண்டியில் முந்தைய நாளிரவும், மறுநாள் காலையிலும் திண்பண்டங்கள், பானங்கள் எதுவுமே வரவில்லை. காலையில் கும்பகோணம் 7:30 மணிக்கு வந்து சேரும் வரை காபி கூட அருந்த முடிய வில்லை.

கும்பகோணத்தில் ஆங்காங்கே சாலையமைக்கும் / செப்பனிடும் பணிகள் நடந்து வருகின்றன. எங்கள் ஊரில் கூட சிமெண்ட் சாலை அமைக்கப் பட்டுள்ளது. சாலைப் பணியாளர்கள் திரும்ப வந்ததாலா அல்லது தேர்தலுக்காகவா என்று புரியவில்லை.

எங்கள் கிராமத்தில் பள்ளி மாணவர்கள், மாணவிகள் நிறைய பேர் புது மிதிவண்டி வைத்திருந்தனர், அரசாங்கம் கொடுத்தது. சிலர் வெள்ள நிவாரண உதவித்தொகை, வேட்டி, சேலைகள் பெற்றிருந்தனர். இவை அனைத்தும் ஓட்டுகளாக மாறிவிடும் என்றே நினைக்கிறேன்.

சாலைப் பணியாளர்களை திரும்ப அழைத்தது, அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், கலைத்துறையினருக்கு விருதுகள் என அதிமுக அரசு 7 கட்சி கூட்டணிக்கு தலைவலியை கொடுத்து வருவதை கண்கூடாக பார்க்க முடிந்தது. மதிமுக வேறு மதில்மேல் பூனையாக இருந்து வருவது கருணாநிதிக்கு கவலையளிக்கும் விஷயமே.

நான் ஊரிலிருந்த போது எங்கள் கிராமத்திற்கு விஜயகாந்த் தேர்தல் சுற்றுப் பயணமாக வந்தார். 2000 பேர் கொண்ட கூட்டத்தில் தெளிவாக பேசினார். வேலையில்லா திண்டாட்டத்தை, லஞ்ச ஊழலை ஒழிப்பேன். சுகாதார வசதிகளை மேம்படுத்துவேன். ரேஷன் பொருட்களை வீடு வீடாக வினியோகிப்பேன், பட்டதாரி மாணவர்களுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்குவேன் என்றெல்லாம் கூறினார். மக்கள் வெங்காய பகோடா தின்று கொண்டே அனைத்தையும் கேட்டு, சில சமயங்களில் கைதட்டி விட்டு, மெட்டி ஒலி பார்க்க வீட்டுக்கு சென்று விட்டனர். அனைவரின்
முகத்திலும் (என்னையும் சேர்த்து) ஒரு சினிமா நட்த்திரத்தை பார்த்த பரவசம் (மட்டுமே) தெரிந்தது.

கொள்ளிடம் ஆற்றில் நிறைய தண்ணீர். ஆனால் திருச்சியில் காவரி ஆறு வறண்டு காணப்படுகிறது. எங்கே போயிற்று அத்தனை நீரும், கடலுக்கா என்று தெரியவில்லை. எங்கள் கிராமத்திலும், சுற்றுப் புறங்களிலும், விவசாயத்தில் ஓரளவுக்கு நல்ல விளைச்சல்.

எங்கள் ஊரில் பி.ஸ்.என்.எல் டவர் போட்டு விட்டதால் பெரும்பாலோர் கையில் செல்போன் காணப்பட்டது. எஸ்.எம்.ஸ், மிஸ்டு கால், டாக் டைம் போன்ற பதங்களை பெரும்பாலோர் தெரிந்தும், தெரியாமலும் உபயோகித்து கொண்டிருந்தனர்.

கும்பகோணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களை பற்றி விசாரித்தேன். தவமாய் தவமிருந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. டிஷ்யூம் பரவாயில்லை. ஆதி அவுட் என்ற தகவல்கள் கிடைத்தன. இதில் ஆதியை பற்றி நிறைய கிண்டல் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு வந்த ஓர் குறுஞ்செய்தி "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.. ஆதி பார்த்தால் அன்றே சாவு !!!"


ஊரில் இருந்த போது, ஒரு மாலைப்பொழுதில் தமிழ்மணத்தைப் பார்க்கும் ஆவல் எழுந்ததால், ஊரிலிருந்த ஒரே இணையகத்திற்கு (Browsing Center)சென்றேன். இரண்டு கணிப்பொறிகள். ஓர் இளம்பெண், பள்ளி மாணவி ஒருவருக்கு எம்.ஸ் வோர்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். 'ப்ரவுசிங் பண்ணலாமா ??' இது நான். கைலி, சட்டை, ஸ்லிப்பர் செருப்புடன் நின்று கொண்டிருந்தேன். அந்த பெண் நம்பமுடியாமல் 'என்ன ? என்ன வேணும் உங்களுக்கு ?' என்றார். 'இல்ல.. ப்ரவுசிங் பண்ணனும்.. சிஸ்டம் இருக்கா ??' என்றேன். அரை மனதாக 'இருக்கு.. அம்பது ரூவா ஒரு மண்நேரத்துக்கு.. ஆனா அப்பப்ப டிஸ்கனெக்ட் ஆயிடும்.. போன் லைன் சரியில்ல.. பரவாயில்லயா ??' என்றார். அவர் அம்பது ரூவா என்று சொல்லும்போதே நான் திரும்ப ஆரம்பித்து விட்டேன், தமிழ்மணத்திற்கு என்ன, மும்பை சென்று பார்த்துக் கொள்ளலாம் !

எங்கள் ஊரான டி. பழூரிலிருந்து கும்பகோணம் செல்ல சாதரணமாக 75 நிமிடங்கள் ஆகும். தீபாவளி சமயத்தில் பெய்த மழையினால் சாலைகள் படுமோசமாக இருந்ததால், 120 நிமிடங்கள் பயணமாகி விட்டது. சண்முகம் பேருந்தில் இரண்டு டிவி பெட்டிகள் வைக்கப்பட்டு சிடி ப்ளேயரில் ரஜினி தேவுடா.. தேவுடா என்று ஆடிக் கொண்டிருந்தார். திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்ததில் கும்பகோணம் வந்ததே தெரியவில்லை. பக்கத்தில் உட்கார்த்திருந்த பால்காரர் '1234' எஸ்.எம்.எஸ் / குறுஞ்செய்தி கொடுத்து வந்த பதிலில் 'இந்தியா 120 ஃபார் 2, 24 ஒவர், டெண்டுல்கர் விளையாடறான்..' என்று நண்பருக்கு ரன்னிங் கமெண்ட்டரி கொடுத்தார். இந்தியா முன்னேறி வருகிறது என்று எனக்கு தோன்றிய போது சாலையில் 'கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்' என்ற விஜயகாந்த் போஸ்டர் கண்ணில் பட்டது !

Wednesday, January 18, 2006

சோம்பேறி பையனுக்கு கவிதை எழுத தெரியுமா ?

நமக்கு கல்லூரி காலத்திலிருந்தே கவிதைகள் எழுத பிடிக்கும். கவிதைகள் ஏதாவது கிறுக்கி, அதை வைரமுத்து அளவுக்கு நான்கு முறை கரடுமுரடாக படித்து கருத்து கேட்பதால், நண்பர்கள் இப்போதும் என்னிடம் சற்று கவனமாகத்தான் இருப்பர். நமது டி.பி.ஆர். ஜோசப் 'சூரியன்' தொடர்கதை எழுதுகிறார் அல்லவா, அவர் தொடர்கதையின் அத்தியாயங்களுக்கு கவிதைகள் எழுதித் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தேன். இரு நாட்கள் முன்பு ஆறாம் அத்தியாயத்தை அனுப்பி அதற்கு தோதான ஓர் கவிதை கேட்டிருந்தார். நான் வழக்கம் போல் சோம்பேறித் தனமாக கூகுல் மின்னஞ்சல் பெட்டியை இரண்டு நாட்களாக திறவாமல், இன்றே பார்த்தேன். உடனே அவருக்கு ஓர் கவிதை அனுப்பி வைத்தேன். அது, இங்கே உங்கள் பார்வைக்கு..


சூரியன் முகம் பார்க்காது
தாமரை மலராது தெரியுமா
உன் முகம் பார்க்காமல்
நான் மலர மாட்டேன், தெரியுமா ?

தலைவனும், தலைவியும்
ஊடலோடு காதல் புரியும்
அகநானூற்று கவிதைகள் பலவுண்டு..
எதையேனும் தெரிந்திருப்பாயா ?

தெரிந்திருந்தால்
என்னை முழுமையாய்
புரிந்திருப்பாயோ ??

விளையாட்டாய் புரிந்த செயல்
வினையாய் முடிந்த வருத்தத்தில்
மனதார கேட்கிறேன், மன்னிப்பு
மலர்வாயா, மறப்பேன் என் தப்பு !

தலைவன் ஊரிலில்லாத பொழுது
பசலை நோயில் ஏங்கும்
தலைவி போல், ஏங்குகிறேன்
நான்உன் புறக்கணிப்பால்...

உன்னைக் காட்டிலும் எனக்கு
உன் திறமை பிடிக்கும்...
உன் கர்வம் பிடிக்கும்..
உன் திமிர் பிடிக்கும்..
உன் ஆணாதிக்கம் பிடிக்கும்..
உன் கோபம் பிடிக்கும்..
இத்தனையும் மீறி
உன் நற்குணம் பிடிக்கும்...

இத்தனையும் பிடித்ததாலேயே
உன்னை எனக்கு பிடித்தது...
உன்னையே எண்ணி தவிக்கும்
என்னை பிடிக்குமா, உனக்கு ?

Friday, December 30, 2005

விருதுகள் - 2005

ஒவ்வோரு ஆண்டின் இறுதியிலும் செய்தி ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த ஆண்டின் சிறந்தவைகளை பட்டியலிடுவது வழக்கம். இதோ நமது பட்டியல் !

தமிழ் திரையுலகம்
  • திரைப்படம் - தவமாய் தவமிருந்து
  • குணசித்திர நடிகர் - ராஜ்கிரன் (தவமாய் தவமிருந்து)
  • நகைச்சுவை நடிகர் - விவேக் (அன்னியன்)
  • கதாநாயகன் - விக்ரம் (அன்னியன்)
  • கதாநாயகி - அசின் (கஜினி)
  • திரைப்பட இசை - ஹாரிஸ் ஜெயராஜ் (அன்னியன்)
  • பாடல் - மயிலிறகே - வாலி (அ..ஆ)
  • இயக்குனர் - சேரன் (தவமாய் தவமிருந்து)
  • திரைக்கதை - சந்திரமுகி (வாசு)

விளையாட்டு
  • கிரிக்கெட் வீரர் - இர்ஃபான் பதான்
  • டென்னிஸ் வீராங்கனை - சானியா மிர்சா
தொலைக்காட்சி
  • நீள்தொடர் - மெட்டி ஒலி (சன்)
  • தொடர் - சிதம்பர ரகசியம் (சன்)
  • நகைச்சுவை காட்சிகள் - ஷோ டைம் (ஜெயா)
  • செய்திகள் - என்.டி.டிவி
  • விளையாட்டு - சீ. ஸ்போர்ட்ஸ்
  • நிகழ் தொடர் - அரட்டை அரங்கம் (சன்)
  • பழைய பாடல்கள் - தேனமுது (ஜெயா)
  • பாடல் வரிசையமப்பு - சூப்பர் 10 (சன்)

அரசியல் & சமூகம்
  • அமைப்பு - இந்திய தேர்தல் ஆணையம் (பீகார் தேர்தலுக்காக)
  • நகரம் - மும்பை (26/7 பேரழிவிலிருந்து மீண்டு வந்ததற்காக), பெங்களூர் (கணினி தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள்)
  • ஏழை மக்கள் மறுவாழ்வு - மும்பை (சேரி மக்களுக்கு 53000 வீடுகளை கட்டிக்கொடுத்ததற்காக)
  • தொலைபேசி நிறுவனம் - ரிலையன்ஸ் (இந்திய அளவில்), ஏர்செல் (தமிழக அளவில்), டாடா (வாழ்நாள் இலவசம் - உள்வரும் அழைப்புகள்)
  • மென்பொருள் நிறுவனம் - இன்ஃபோசிஸ்
  • நிர்வாகத் தலைவர் - நாராயணமூர்த்தி (இன்ஃபோசிஸ்)
  • மாநிலம் - தமிழகம் (சாலை வசதிகள், தூய்மையான கோயம்பேடு பேருந்து நிலையம், அரசு நிர்வாகம் மற்றும் ஒரளவுக்கு திறம்பட செயல்பட்ட
    பேரழிவு நிவாரணப் பணிகள் மற்றும் சமாளிப்பிற்காக (வெள்ள நிவாரண சாவுகள் தவிர்த்து))

பின்குறிப்பு : இவை முழுவதும் என் கவனத்திற்குள்ளான செய்திகளின் / ரசனைகளின் மீதான மதிப்பீடு மட்டுமே. இவைகளிலிருந்து நீங்கள் மாறுபட்டால் பின்னூட்டங்களில் உங்கள் கருத்துகளை இடலாம். மேலும் விருதுகளை தெரிவிக்கலாம் !!

Tuesday, December 27, 2005

வாசனையுடன் ஓர் பதிவு

வலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ! கடுமையான வேலைப்பளுவின் காரணமாக நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின் இப்போது பதிவிடுகிறேன்.

கடந்த இருபது நாட்களில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. இந்தியா, இலங்கையை கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக வென்றது. சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகளில் மரண அடி வாங்கியுள்ளது. பாரளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பதவி பறிபோயுள்ளது. சுனாமி நினைவுதினமன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளை வெளியிட்டன. தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணம் வாங்க வந்தவர்களிடம் கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிறைய பேர் இறந்தனர். வழக்கம்போல் அரசு தொலைக்காட்சியும், எதிர்க்கட்சி தொலைக்காட்சியும் இதை முடிந்த அளவுக்கு அரசியலாக்கின.வலைப்பதிவுகள் வழக்கம்போல் வெளிவந்தன.


2005ம் வருடத்தில் இந்தியாவில் நிறைய சோக சம்பவங்கள் நடந்து விட்டன. மும்பையில் மழை, வெள்ள அழிவுகள், காஷ்மீரில் பூகம்பம், குஜராத், ஒரிஸ்ஸாவில் மழை, வெள்ளம், தமிழ்நாட்டில் வெள்ள அழிவுகள், கூட்ட நெரிசல் பலிகள், பாரளுமன்ற பிரதிநிதிகள் பதிவிபறிப்பு என நிறைய
சம்பவங்கள் நடந்து விட்டன. இவைகளிலிருந்து மக்களும், அரசாங்கமும் பாடம் கற்று, எதிர்காலத்திலாவது இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள ஓரளவாவது தயார்நிலையில் இருக்க வேண்டும். 2006ம் வருடம் உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தர இறைவனை பிரர்த்திப்போம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் !


கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்குவது வழக்கம். இதோ வாசனைக் கவிதையை வாசியுங்கள், ஏதாவது புரிந்தால் பின்னூட்டத்தில் கெட்ட வார்த்தைகள் தவிர்த்து, மற்ற வார்த்தைகளில் எனக்கு எழுதுங்கள் !


வாசனை


தூக்கம் வர மறுத்த ஓரிரவில்

ஞாபகம் வந்தது உன் வாசனை..

பேருந்தில் உன் தோள் மேல் கைபோட்டு

நெருங்கி உட்கார்ந்திருந்த போது வந்த வாசனை..

வாசனைத் திரவியங்கள் உபயோகப் படுத்தும்

பழக்கமில்லாத உன்னை, உன் வாசனையினால்

இன்னும் பிடித்துப் போனது, எனக்கு...

உன் பெயரை எங்காவது பார்க்கும்போதும்

படிக்கும்போதும், ஞாபகத்தில் வருவது

உன் உருவமும், வாசனையும்தான்..

இன்றும் கூட எப்போதாவது தொலைபேசியில்

உன்னுடன் பேசினால், பேசி முடித்து விட்டு

முகர்ந்து பார்க்கிறேன், உன் வாசனையை...

எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம்..

ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்தோம்..

உனக்கும், எனக்கும் நம்மை பிடிக்கும் முன்பே

பிரிந்து விலகினோம்...எதனால் நாம் பிரிந்தோம்..

மறுபடியும் சேருவோமா..காரணம்

தெரிய வில்லை, புரிய வில்லை...

இருப்பினும் தூக்கம் வராத இரவுகளில்,

இன்னமும் நுகர்கிறேன், உன் வாசனையை !!!

Thursday, December 08, 2005

கிரிக்கெட் - திருச்சி - கணிப்பொறி - பயணம்

நண்பர் 'பத்ரி' தொடங்கியிருக்கும் கிரிக்கெட் வலைப்பதிவில் நானும் உறுப்பினராகி விட்டேன். இன்று ஒரு பதிவு சச்சினைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி இங்கே 'சச்சின் - டெல்லி - 35 ?'

திருச்சியைப் பற்றி எழுதிய பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பதிவின் இரண்டாம் பாகம் தயாரகிறது. கூடிய சீக்கிரம் வெளியிட்டு விடலாம்.

நேற்று இரவு என்.டி.டிவியில் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் - இன்போசிஸ் நாராயணமூர்த்தி - பிரணாய் ராயின் கலந்துரையாடல் ஒளிபரப்பானது. 1.7 பில்லியன் டாலர் மைக்ரோசாப்ட் இந்தியாவில் முதலீடு செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. பில்கேட்ஸின் பேச்சில் செயற்கை தன்மை நிறைய இருப்பது போல் எனக்கு தோன்றியது. மூர்த்தி இயல்பாக பேசினார். கொஞ்ச நேரம் பார்த்து விட்டு ஜெயா டிவி 'ஷோ டைம்' நிகழ்ச்சிக்கு சென்று விட்டோம்.

மும்பையில் கன்சோலியிலிருந்து சான்படாவிற்கு மாறி விட்டேன். தினமும் அலுவலகத்திற்கு மின்சார தொடர்வண்டியில்தான் (ட்ரெயின்) வருகிறேன். பயணம் சுவாரசியமாக இருக்கின்றது, கூட்டமே இல்லை. இத்தடம் (தானே - வாஷி) புதிதாகையால் கூட்டம் இல்லை.

7 வருடங்கள் கழித்து கல்லூரி நண்பனை சந்திக்க முடிந்தது. தற்போது இவர் என்னுடனே தங்கியிருக்கிறார். மும்பை பன்னாட்டு வங்கி ஒன்றில் பணி புரிகிறார். தினமும் கல்லூரி நாட்களைப் பற்றி பேசி நினைவலைகளில் நனைந்து கொண்டிருக்கிறோம். சுவாரசியமான சம்பவங்கள் பதிவுகளாக வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவுகள் கலக்கிக் கொண்டிருக்கின்றன. தருமி, கோ. கணேஷ், ஜோ போன்றவர்களின் ராஜபாட்டையை தொடர்ந்து குழலியும் இந்த வாரம் கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் நட்சத்திரமாய் கலக்கியவர்களுக்கும், கலக்கப் போகின்றவர்களுக்கும் !!!

Saturday, November 26, 2005

நம்ம ஊர் திருச்சி

மலைக்கோட்டை மாநகரம் திருச்சிராப்பள்ளியைப் பத்தித்தாங்க பேசப் போறேன். ரொம்ப நாளாச்சுங்க நம்ம ஊரைப் பத்தி பேசி. அதான் கொஞ்சம் நினைவலைகளில் நனையலாமேன்னு உங்ககிட்ட பேசறேன். நான் பொறந்தது ஜெயங்கொண்டம் பக்கத்துல ஒரு கிராமத்துலங்க. திருச்சியிலதான் படிச்சேன். 1991 -லிருந்து 1998 வரைக்கும் அங்கதாங்க இருந்தேன். வாங்க, நடந்துகிட்டே பேசுவோம்!

ஏங்க, திருச்சின்னா உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும் ? மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், காவேரி, முக்கொம்பு, கல்லணைன்னு எதுவாச்சும் ஞாபகத்துக்கு வருதுல்லியா ? எனக்கு ஒரு ஐஸ்கீரீம் கடைதாங்க ஞாபகத்துக்கு வரும்.
  • வனிலா ஐஸ்கீரீம் ரூ 1.50
  • சாக்லேட் ஐஸ்கீரீம் ரூ 2.00
  • புரூட்சாலட் ஐஸ்கீரீம் ரூ 2.00
இதுதாங்க ஐஸ்கீரீம் மெனு. எங்கே தெரியுமா ? திருச்சி தெப்பக்குளம் போஸ்ட் ஆபிஸ் பக்கத்துல 'மைக்கேல்ஸ் & சன்'னுன்னு ஒரு கடை இருக்குங்க (இப்ப கூட இருக்குதுங்க, இப்ப திருச்சியிலேயே நிறைய இடங்கள்ள கிளைகள் திறந்துட்டாங்க). இந்த கடை ரொம்ப பிரபலங்க. சின்ன கடைதான். ஒரு இருபது பேர்தான் உட்காரலாம் ஒரே சமயத்தில. ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் ஐஸ்கீரீம். நாங்கல்லாம் ஸ்கூல் படிக்கிறப்ப தினமும் சாயந்திரம் இங்க வந்துருவோம்.

நான் செயிண்ட் ஜோஸப் காலேஜ்லதாங்க படிச்சேன். காலேஜ் படிச்சப்பவும் இங்கதாங்க வருவோம். இந்த கடைக்கு பின்னாடி ஹோலிகிராஸ் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி, எதிர்த்தாப்ல பிசப் ஹிபர் பள்ளி, பக்கத்துல செயிண்ட் ஜோஸப் பள்ளி மற்றும் கல்லூரின்னு ஓரே இளைஞர்கள் கூட்டமாத்தான் இருக்கும் எப்பவும். பக்கத்துலதான் மலைக்கோட்டை. அங்க சுத்திப் பாக்க வர்ரவுங்க கூட இங்கே வருவாங்க. இப்ப ஒரு ரூவா விலை ஏத்தியிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு உலகத்துலேயே குறைந்த விலைக்கு தரமான ஐஸ்கீரீம் கிடைக்கிற இடம் இதுதான் நினைக்கிறேங்க. நீங்க திருச்சிதானா ? இல்லைன்னா ஒரு தடவை திருச்சி போயிட்டு வாங்களேன், சூப்பர் ஊருங்க !

என் கல்யாணத்துக்கு இந்த ஐஸ்கீரிம் கடையில்தான் டீரிட் கொடுக்கலாம்னு இருக்கேன். 100 பேர் சாப்பிட்டாலும் ரூ 1000க்கும் மேல பில் வராது. என்ன சொல்றீங்க ?

இந்த கடைக்கு பின்னால இருக்குற தெருவுலதாங்க 'பனானா லீஃப்' ன்னு ஒரு ஹோட்டல் இருக்குங்க. சாப்பாடு தலை வாழை இலைல சூப்பரா போடுவாங்க. எல்லா வெரைட்டிஸூம் இங்க கிடைக்கும்ங்க. ஆனா அசைவம் கிடையாதுன்னு நினைக்கிறேன். சரியா ஞாபகம் இல்லீங்க !

திருச்சியில நிறைய தரமான ஹோட்டல்கள் இருக்குங்க. இருந்தாலும் ரோட்டோர நைட் கடைகளும் நிறைய இருக்குங்க. இந்த மாதிரி ரோட்டு கடையில இட்லி, தோசை, பரோட்டா எல்லாம் சாப்பிட்டு ஒரு நாலு ஆம்லெட், ஆஃப்பாயில் சாப்பிடற சுகமே சுகந்தாங்க. அவ்வுளவு அருமையா இருக்கும் !

என்னடா இவன் சாப்பாடைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கானேன்னு பாக்குறீங்களா ? கோச்சுக்காதீங்க, எனக்கு சாப்பாடைப் பத்தித்தான் எப்பவும் நினைவு.

இப்ப திருச்சியில உள்ள சுற்றுலா தளங்கள் பற்றி பேசுவோமா ? மலைக்கோட்டைதாங்க முதல்ல. நீங்க மெயின்கார்டுகேட்ல இறங்கனீங்கன்னா அப்படியே எதிர்த்தாப்ல நடந்து போயிறலாம். மலைவாசல் கீழே டிக்கெட் வாங்கிகிட்டு (ரூ 2) விநாயகர் ஒருத்தரு இருப்பாரு, அவர கும்புட்டுட்டு அப்படியே படிகள்ள ஏறீனீங்கன்னா, தாயுமானவர் கோயில் வருங்க. நல்லா பொறுமையா சுத்திப்பாத்துட்டு இன்னும் கொஞ்சம் மேல ஏறீனீங்கன்னா மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு வந்துருவீங்க. மொத்தம் 470 படியோ என்னமோ. மேல ஏறினப்புறம் திருச்சியவே பாக்கலாம். பிரமாண்டமா இருக்கும். காத்து பிச்சிகிட்டு வரும் பாருங்க, இதாங்க பூலோக சொர்க்கம் !

மெயின்கார்டுகேட் எதிர்த்தாப்ல, எங்க செயிண்ட் ஜோஸப் கல்லூரி வளாகத்துலேயே ஒரு பெரிய பழமையான சர்ச் இருக்குங்க. நான் காலேஜ் படிச்சப்ப அடிக்கடி இங்க போவோம். ரொம்ப உயரமானது. மலைக்கோட்டை உயரம் வரும்னு நினைக்கிறேன். இந்த சர்ச்சும் ரொம்ப நல்லா இருக்கும்ங்க.

அப்புறம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுங்க. ஆசியாவிலேயே உயரமான கோபுரம்ன்னு சொல்றாங்க. நல்லா இருக்கும்ங்க கோயில். அரங்கநாதர் பள்ளிகொண்ட நிலையில் பரவசப் படுத்துவாருங்க. நம்ம சுஜாதா சார் ஸ்ரீரங்கம் பத்தி நிறைய சொல்லியிருக்கார், நீங்க படிச்சிருக்கிங்களா ? நம்ம தேசிகன் கூட ஸ்ரீரங்கம் சொக்கப்பானைன்னு ஒரு பதிவு போட்ருந்தாருங்க. சூப்பர் கோயிலுங்க, நீங்க பார்த்தே ஆகனும்.

திருவானைக்காவல் சிவன் கோயிலும் பெரிய, பழைமையான கோயில். இங்க சிவபெருமான் நிலத்துக்கு கீழ எப்பவும் தண்ணீருக்கு மத்தியில் இருப்பாருங்க. சூப்பரா இருக்கும். அப்புறம் மதியம் 12 மணிக்கு இங்க கோமாதா பூஜை ஒன்னு செய்வாங்க, ஐயர் புடவை கட்டிட்டு வந்து செய்வாருங்க. நமக்கு இது பத்தி மேம்போக்காதாங்க தெரியும்.

உறையூர் வெக்காளி அம்மன் கோயில் (அம்மன் மேற்கூரையின்றி வெட்டவெளியில் இருப்பாள்), பஞ்சவர்ணசுவாமி கோயில்
போன்ற கோயில்களும் நல்லா இருக்கும்ங்க. அப்புறம் சமயபுரம் மாரியம்மன் கோயில், சொல்லி தெரிய வேண்டியதில்லை. அருமையான திருத்தலம், போயி பார்த்துட்டு வாங்க. குணசீலம், திருப்பைஞ்சலி கோயில்களும் பிராமாதனமானவை.

இன்னும் நிறைய கோயில்கள் இருக்குங்க திருச்சியில. யாராவது சொந்தக்காரங்க இருந்தாங்கன்னா, போய் ஒரு பத்து நாள் இருந்து சுத்திப் பாத்துட்டு வாங்க. கோயில்கள் மட்டுமில்லைங்க. முக்கொம்பு சூப்பரான சுற்றுலாத் தளம். கல்லணை பிரமாண்டமா இருக்கும். அதுவும் இப்ப காவிரியில் வேற தண்ணீர் முழுமையா ஓடிக்கிட்டிருக்கு, போய் பாத்தீங்கன்னா அசந்துருவீங்க !

திருச்சியில துணிக்கடைகள் பிரபலம்ங்க. சாரதாஸ், ஆனந்தாஸ், தைலா, சென்னை சில்க்ஸ், பாம்பே டையிங் ஷோரூம்ன்னு சின்னகடை வீதி போனீங்கன்னாலே கூட்டம் அலை மோதும்ங்க. தரமான துணிகளை குறைந்த விலைக்கு வாங்கலாங்க. மலைக்கோட்டை போற வழியிலதான் இவை அனைத்தும் இருக்குதுங்க.

சினிமா தியேட்டர்களுக்கு என்ன குறைச்சலா திருச்சியில ? நிறைய தியேட்டர்கள் இருக்குங்க. ஒரே காம்ப்ளெக்ஸ்ல (மாரீஸ்) 5 தியேட்டர்கள் இருக்குங்க. அப்புறம் ரம்பா, ஊர்வசி, சிப்பி, சோனா, மீனா, காவிரி இன்னும் நிறைய தியேட்டர்கள் ஞாபகம் இல்லைங்க.

நீங்க புதுப்படம் பாக்கணும்ன்னா மேல சொன்ன தியேட்டர்களுக்கு போகலாம், இல்ல செகண்ட் ரவுண்ட் ஓடற படம் பாக்கணும்னா லிட்டில் அருணா, ருக்மணி, ராமகிருஷ்ணா, வெங்கடேசா இப்படி தியேட்டர்கள் இருக்கு. ஆங்கிலப் படங்கள் பார்க்கனுமா, அதுக்கு சிப்பி, பிளாஸா இருக்குங்க. சீன் படம் பாக்கணுமா, முல்லை, கோஹீனூர் இருக்குங்க. இல்ல நீங்க தியேட்டர் போகப் பிடிக்கலையா, விசிடி நிறைய கிடைக்கும்ங்க, அப்புறம் என்ன, ஜமாய்க்க வேண்டியதுதான் !

இது எல்லாத்தையும் விடுங்க. படிப்புக்கு சிறந்த இடம் திருச்சிதாங்க. ஆண்களுக்காக செயிண்ட் ஜோஸப் பள்ளி மற்றும் கல்லூரி, பிசப் ஹீபர் பள்ளி மற்றும் கல்லூரி, நேசனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, இ.ஆர் பள்ளிகள் இருக்குங்க. பெண்களுக்காக ஹோலி கிராஸ், இந்திரா காந்தி, எஸ்.ஆர்.சின்னு நிறைய இருக்குங்க. ஓரளவுக்கும் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள்ள தரமாவே படிப்பு சொல்லித் தராங்க. என்ன ஒன்னு, பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் கோ-எட் கிடையாது. அது ஒன்னுதாங்க எனக்கு வருத்தம். இது மட்டுமல்லாமல் கணிப்பொறி படிப்பிற்கான தனியார் கல்விக்கூடங்களும் இருக்குதுங்க.

சொல்ல மறந்துட்டேன் பாருங்க, தரமான மருத்துவ கூடங்கள் (ஆஸ்பிடல்ஸ்) திருச்சியில் நிறைய இருக்குங்க. உறையூர்ல சி.எஸ்.ஐ அப்படின்னு ஒரு ஹாஸ்பிடல் இருக்குங்க. சூப்பரான ஹாஸ்பிடல். தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த நியாயமான செலவில் கிடைக்கும். அப்புறம் சீ.ஹார்ஸ் பணக்காரங்களுக்கு. கண் மருத்துவமனைகளும் நிறைய. இன்னும் நிறைய நல்ல ஹாஸ்பிடல்ஸ் இருக்குங்க.

ரோடுகள் எல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கும். வன்முறை, ரவுடித்தனம் அதிகம் இருக்காதுங்க. நல்ல ஊரு, சுத்தமான காத்து, காவிரித் தண்ணி, குறைந்த விலைவாசி (மற்ற தமிழக நகரங்களை ஒப்பிட்டால்), அமைதியான, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடைய மக்கள் இதெல்லாம்தாங்க திருச்சி.

இப்ப சொல்லுங்க நீங்களே, திருச்சி பூலோக சொர்க்கம்தானே ? இதுவரைக்கும் திருச்சிக்கு போனதில்லைன்னா உடனே போயிட்டு வந்துருங்க. உங்களுக்கும் திருச்சியை புடிச்சுடுச்சுன்னா '+'ல்ல ஒரு குத்து விட்டுட்டு போங்களேன், புண்ணியமாப் போவும் !

Saturday, November 12, 2005

இந்திய கிரிக்கெட் அணியின் (திடீர்) முன்னேற்றம்

போன தொடர் வரை அடிமேல் அடி வாங்கி சாதனை படைத்து வந்த இந்திய அணி திடீரென்று வீறு கொண்டு எழுந்து, தற்போது நடக்கும் ஒருநாள் தொடரில் இலங்கை அணியை துவைத்து எடுக்கின்றது. இதற்கான காரணங்கள் என்ன என்று செய்தித் தாள்களும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அலசி ஆராய்கின்றன. நாமும் நம் பங்குக்கு ஏதாவது ஆராய்ந்து வைப்போம்!

ஓர் அணியின் திறமையை ஒரு தொடரை வைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றாலும் இந்திய அணியின் தற்போதைய முன்னேற்றத்துக்கு பின்வருவனவற்றை காரணமாகச் சொல்லலாம்.
  • டிராவிட் - சேப்பல் கூட்டணியின் அணித்தலைமை
  • இளைஞர்களின் வரவும், இதனால் அணிக்கு கிடைத்த புத்துணர்ச்சியும்
  • எதிர்பாராத ஆட்ட வியூகங்கள்
  • ஒரு திட்டம் தோற்கும்போது, மாற்றுத்திட்டம் வைத்திருப்பது
  • அணி வீரர்களிடம் காணப்படும் போராட்ட குணம் மற்றும் தன்னம்பிக்கை
  • முன்னின்று வழிநடத்தும் டிராவிட்டின் பொறுப்பான அணுகுமுறை

இருந்தாலும் இவை அனைத்தும் இத்தொடரோடு முடிந்து விடுமா அல்லது இந்திய அணி தொடர்ந்து ஜொலிக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். சவுரவ் கங்குலி அணிக்கு திரும்புவாரா, சேவக் மீண்டும் விலாசுவாரா என்று நிறைய கேள்விகளுக்கும் கொஞ்ச நாட்களில் பதில் தெரிய வரும். அதுவரைக்கும் வேறெதையும் பற்றி கவலைப் படாமல் நமது அணியின் சிறப்பான ஆட்டத்தை கண்டுகளிக்க நான் தயார், நீங்கள் தயாரா?

Saturday, October 22, 2005

கிரிக்கெட்டுக்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு ?

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நாளை தீபாவளிக்காக ஊருக்கு கிளம்புகிறேன். எங்கள் ஊரில் இணைய வசதிகள் இல்லாததால், அடுத்த பத்து நாட்களுக்கு வலைப்பதிவு பக்கம் வர இயலாது. எனவே நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

()

சூப்பர் (டூபாக்கூர்) சீரிஸ் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா அணிக்கும் மற்ற அனைத்து நாடுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் கொண்ட உலக அணிக்கும் சூப்பர் சீரிஸ் கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் நடந்து முடிந்தது. ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் உலக அணியை அடித்து துவைத்த ஆஸ்திரேலியா, டெஸ்ட் போட்டியிலும் உலக அணியை துவைத்து காயப் போட்டது. இத்தனைக்கும் உலகின் சிறந்த வீரர்களை கொண்டது உலக அணி. டிராவிட், லாரா, இன்சாமம், காலிஸ், பிளிண்டாப் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் அடிமேல் அடி வாங்கியது உலக அணி. ஒவ்வொரு போட்டியிலும் படு மோசமாக தோல்வி பெற்று சாதனை படைத்தது. இவ்வுளவு அடி வாங்கயதைப் பற்றி கவலையே படாமல் உலக அணி வீரர்கள் ஷாப்பிங், பிக்னிக், டின்னர் என்று (டூரில் இருந்த போது) பொழுது போக்கி அவரவர் ஊருக்கு சென்று/வந்து 'இது ஒரு சிறந்த அனுபவம்' என்று பேட்டி கொடுக்கின்றனர். இதையெல்லாம் பற்றி கவலைப் படாமல் கிரிக்கெட் ரசிகர்களாகிய நாம் தொடர்ந்து நமது அணியை ஆதரிப்போம் !

()

பின்குறிப்பு : கிரிக்கெட்டுக்கும் தீபாவளிக்கும் தொடர்பு ஏதாவது உள்ளதா என்பதை பற்றி நண்பர்கள் தெரியப் படுத்தலாம். கெட்டவார்த்தையில் திட்டி மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்.

Tuesday, October 11, 2005

கஜினி, தாண்டியா மற்றும் சில கவிதைகள் V 2.0 - Reloaded

மும்பை வாஷி மேகராஜில், நண்பர்களுடன் சென்று 'கஜினி'யையும், கஜினியைப் பார்க்க வந்தவர்களையும் பார்த்தோம். இதோ கஜினி பற்றிய திரைத் துளிகள்.

  • 'அன்னியன்' படத்துக்கு ரூ. 85 ஆக இருந்த டிக்கெட் விலை, 'கஜினி' படத்துக்கு ரூ. 100 ஆக எகிறி விட்டது.
  • தியேட்டரில் ஒலி அமைப்பு (சவுண்ட் சிஸ்டம்) சரியில்லை.
  • படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பெயர் போடும்போது, சூர்யாவை விட அஸினுக்கு அதிக விஸில்கள் கிடைத்தன.
  • இடைவேளையில் தின்ற சமோசா சூப்பர், இதற்காகவே இன்னொரு படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
  • படம் இடைவேளைக்கு பிறகு சுவாரசியமாக இல்லை. கிளைமேக்ஸ் ஏமாற்றம்.
  • சூர்யா - அஸின் காதல் காட்சிகள் பிரமாதம், சூர்யா கலக்கியிருக்கிறார். நயன்தாராவைப் பற்றி சொல்ல எதுவுமில்லை.
  • 'சுற்றும் விழிச் சுடரே' மற்றும் 'ஒரு மாலை இளவெயில் நேரம்' பாடல்கள் அருமை. மற்ற பாடல்கள் வீண்.

நயன்தாராவை பற்றி எதுவும் சொல்லாததற்கு நிறைய நண்பர்கள் வருத்தப் பட்டனர். அவர்களுக்காக மேலும் சில திரைத் துளிகள் Version 2.0 வில் சேர்க்கப் பட்டன.

  • ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை எப்படியெல்லாம் காட்டக் கூடாதோ, அப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
  • கிளைமேக்ஸ் காட்சியில் வரும் மழையில் நயன்தாராவை நனையவிட்டு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்கள்.
  • சந்திரமுகி, ஐயா போன்ற படங்களில் வந்து நாகரீகமாக நடித்த நயன்தாராவை வெறும் கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்தியிருப்பது வருந்தத் தக்கது.

மொத்தத்தில் 'கஜினி' வெற்றியா, தோல்வியா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் இது இன்னொரு 'ரமணா' இல்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.


தினமலரில் என் பெயர் வந்ததை மும்பையில் பாதி பேருக்கும், சொந்த ஊரான டீ. பழூரில் எல்லோருக்கும் தம்பட்டம் அடித்தாயிற்று. அலுவலகத்தில் சக ஊழியர்களும், நண்பர்களும் சற்று மரியாதையாக பார்க்கின்றார்கள். முடிந்தால் சன் டீவியில் ஒரு பேட்டி கொடுத்து விடலாமென்று இருக்கிறேன். பார்க்கலாம், சன் டீவிக்கு சீரியில்கள் நடுவே என் பேட்டியை ஒளிபரப்ப நேரமிருக்குமா, என்று.

நவராத்திரி விழாவை மும்பை மக்கள் 'தாண்டியா' நடனமாடி கொண்டாடி வருகின்றனர். எங்கள் பகுதியிலும் 'தாண்டியா' ஆடிவரும் இடத்திற்கு சென்றிருந்தேன். லேட்டஸ்ட் ஹிந்தி பாடல்களை (தாண்டியாவிற்கான பிரத்யோகமான இசையும் உண்டு) லோக்கல் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாட, மக்கள் படு உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர். M டீவி, V டீவி சானல்களைத் தாண்டி இளைஞர்களும், மெகா சீரியல்களைத் தாண்டி பெண்களும் வந்திருந்ததை வரவேற்க வேண்டும். நவராத்திரி விழாவின் பத்து நாட்களும், கோலாகலமாக மக்கள் பொது இடங்களில் கூடி விழாவைக் கொண்டாடுகின்றனர்.

கவிதை - 1 (உருவாக்கம் : நண்பர் அரவிந்த்)

தீக்குச்சி தீப்பெட்டியிடம் கேட்டதாம்,
உரசிக்கொள்வது நாமாக இருப்பினும்
பற்றிக்கொள்வது நான் மட்டுமா?

கவிதை - 2 (உருவாக்கம் : சோம்பேறி பையன்)

கைத்தொலைபேசியில் வரும் அழைப்புகளும்
சிற்சிறு (SMS) செய்திகளும்
கணினியில் வரும் மின்னஞ்சல்களும்
ஞாபகப் படுத்தா விட்டாலும்
எங்காவது உன் பெயரை பார்க்கும் போதும்
உனக்கு பிடித்த பாடலை கேட்கும் போதும்
மூழ்குகிறேன், உன் நினைவுகளால்!

Tuesday, October 04, 2005

என் பேரும் தினமலர்ல வந்துருச்சே...

தினமலர் 24 செப்டம்பர் செய்தித் தாளில் 'அறிவியல் ஆயிரம்' பகுதியில் சோம்பேறி பையனின் வலைப்பதிவைப் பற்றிய செய்திவந்துள்ளது. தொடர்பு சுட்டி http://dinamalar.com/2005sep24/flash.asp

நண்பர் 'கார்த்திக்' தொலைபேசியில் கூறியபோது நம்ப வில்லை. இணையத்தில் சென்று பார்த்தவுடன் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். பல வாழ்த்துகளும், சில வசவுகளும் வந்தன. இரண்டு மணி நேரத்திற்கு ஒரே மஜாவாக இருந்தது. 'சுற்றும் விழிச் சுடரே..' என்று ஜீன்ஸ், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு 'கஜினி' அஸினோடு பாட்டு பாடுவது போல் கனா கண்டேன்.

தினமலருக்கு நன்றிகள் பல. கேர்ள் ப்ரண்ட்ஸிடம் 'பெரிய எழுத்தாளராக்கும்' என்று தைரியமாக கதை விட ஆதாரம் கிடைத்து விட்டது. ஊருக்கு போன் செய்து, 24ம் தேதியிட்ட தினமலரை எடுத்து வைக்க சொல்ல வேண்டும். பெரிய கண்ணாடி ப்ரேம் போட்டு, ஹாலில் மாட்டலாம் என்று எண்ணம்.

இது சம்பந்தமான கோ. கணெஷின் வலைப்பதிவைப் படித்தேன். அவரது வலைப்பதிவைப் பற்றியும் மற்றும் வேறு சில நண்பர்களின் வலைப் பதிவுகளைப் பற்றியும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. வலைப் பதிவுகளைப் பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது, அறிவியல் ஆயிரத்தை தினமும் கவனியுங்கள், நண்பர்களே.

ஆக மொத்தம், வலைப் பதிவர்களுக்கு பத்திரிக்கைகள் அங்கீகாரம் அளிக்க ஆரம்பித்துள்ள போக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால் வலைப்பதிவர்களின் பொறுப்பும் கூடியுள்ளது. வித்தியாசமான, உபயோகமான தகவல்களை அளிக்க வேண்டும். தனி மனித துவேஷம் கூடாது. கிண்டலிலும் பிறர் மனம் புண்படாதவாறு எழுத வேண்டும். பார்ப்போம், கடைப் பிடிக்க முடிகிறதா என்று!

இன்றைய டுபாக்கூர் கவிதை

மழைத் துளிகளின் நடுவே
சூரியன் தேடி அலைந்த
போதுதான் பார்த்தேன்,
சூரியன் உன்
செல்போனில் FM-ஆக இருப்பதை!

பின் குறிப்பு : இந்த கவிதையைப் பாராட்டி பின்னூட்டம் போடும் நண்பர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் பிளாஸ்டிக் குடம் பரிசளிக்கப் படும்!

Friday, September 30, 2005

என் பெயர் 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' V 2.0 - Reloaded

இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலிக்கும் ட்வெண்ட்டி செகண்ட்ஸிற்கும் என்ன சம்பந்தம் என்பதை கடைசி பாராவில் கண்டு பிடிக்கலாம். "ட்வெண்ட்டி செகண்ட்ஸ், எப்படிய்யா இருக்க?" என்று நண்பரிடமிருந்து எனக்கு வந்த ஓரு தொலைபேசி அழைப்பே இந்த பதிவுக்கு காரணம்.

அலுவலகத்தில் முன்பிருந்த இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாறி விட்டேன். அதாவது இடம் எண் 1W59-ல் இருந்து 1W41-க்கு மாறி விட்டேன். 1W41-ல் 4+1 = 5. எண் கணிதம்(நியூமராலஜி) எல்லாம் பார்த்ததில் சாதகமாக ஒன்றும் இல்லாததால், எண் கணிதம் எல்லாம் டுபாக்கூர் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். இந்த இட மாற்றத்தால், இரண்டு மூன்று நாட்களாக வேலை நிறைய இருந்ததால் வலைப்பதிவு பக்கம் வர முடியவில்லை.

கங்குலி - சேப்பல் விவகாரம் படு ஜோராக போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகள் இது தொடர்பாக வெளிவருகின்றன. சேப்பல் கிரிக்கெட் போர்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலை நண்பர் ஒருவர் எனக்கு முன் செலுத்தினார்(Forward). அதில் உள்ள விஷயங்களைப் படித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இந்திய கிரிக்கெட் வாழ்க!

சென்ற முறை தீபாவளிக்கு, ஊருக்கு புகைவண்டியில் நண்பர்களுடன் சென்றேன். மும்பையிலிருந்து சென்னைக்கு 24 மணிநேரப் பயணம் (சென்னை - தாதர் எக்ஸ்பிரஸ்). எங்களது குழுவில் 13 பேர். பொழுது போவதற்காக 'பாட்டுக்கு பாட்டு' (அந்தாக்ஸரி) விளையாடினோம். கர்ண கொடூரமாக பாடி புகைவண்டியயே கதிகலங்க வைத்ததில், சென்னை வருவதற்குள் மிகவும் பிரபலமாகி விட்டேன்!

'பாட்டுக்கு பாட்டு' போதாதென்று 'சைகை மொழி' (Dumb Charades) வேறு விளையாடினோம். ஆடுபவர்கள் இரு குழுவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். குழுவிலுள்ள ஒருவருக்கு மற்றொரு குழு ரகசியமாக ஓர் திரைப்படத்தின் பெயரைச் சொல்லும். அவர் சைகை மூலமாக அவர் குழுவிலுள்ள மற்றவர்களுக்கு படத்தின் பெயரை புரிவிக்க வேண்டும். புரிந்து கொண்டு சரியாக படத்தின் பெயரைச் சொன்னால் ஒரு பாயிண்ட் (மதிப்பெண்) கிடைக்கும். பிறகு இந்த குழு சொல்ல மற்றொரு குழு கண்டுபிடிக்கும்.

சிக்கலான சில விதிமுறைகளும் உண்டு. வாயசைக்கக் கூடாது. எழுத்துக்களை சைகை முறையில் காண்பிக்கக் கூடாது. இந்த விளையாட்டில்தான் நான் சலம்பிக் கொண்டிருந்தேன். எங்கள் குழுவில் வேண்டுமென்றே 'குலே பகவாலி' போன்ற பழைய புரிவிக்க கடினமான திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்தோம். எதிரணி கேள்விப் பட்டிராத ஆங்கில திரைப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்தது.

ஒருமுறை எதிரணி 'Raiders of the Lost Ark' என்ற ஆங்கிலப் படத்தை என்னிடம் கூறி எனது அணிக்கு சைகையில் புரிவிக்ககூறினர். நமக்கு தமிழே தடுமாறும் இதில் ஆங்கிலம் வேறா என்று நொந்து கொண்டே, எனது அணிக்கு இந்த படத்தை புரிவிக்கமுயற்சி செய்தேன். இதில் 'Raiders' மற்றும் 'Lost' வார்த்தைகளை புரிவித்து விட்டேன். ஆனால் 'Ark' என்பதை புரிவிக்க அரை மணி நேரம் போராடினேன். வில் மாதிரியெல்லாம் சைகை செய்தேன். அணியிலுள்ளவர்களுக்கு புரிய வில்லை.

அப்போது எதிரணியைச் சேர்ந்த நண்பி ஒருவர் 'அரக்கோணம்' வந்துருச்சிடா என்றார் (புகைவண்டி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது). உடனே அந்த வார்த்தையை சுட்டிக்காட்டி அதிலிருந்து 'Ark' என்ற வார்த்தையை எடுத்தோம். இப்படி அரக்கோணத்திலிருந்து 'Ark' எடுத்ததற்காக எனக்கு ஒரு விருது கொடுத்தால் நன்றாயிருக்கும்.


இந்த விளையாட்டில்தான் எதிரணியிடம் சவால் விட்டோம் / விட்டேன், "எந்த படப்பெயரை வேண்டுமானாலும் கூறுங்கள், 20 செகண்ட்ஸில் கண்டு பிடிக்கிறோம்". ஒவ்வொரு முறை ஆடும் போது, கை சொடுக்கிக் கொண்டே '20 செகண்ட்ஸ்தான், முடிக்கிறோம்' என்று கூறியதால் எனக்கு 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' என்று நண்பர்கள் பெயர் வைத்து விட்டார்கள். இப்போதும் நண்பர்களின் கைத்தொலைபேசியில் (Cell phone) பார்த்தால் எனது கைத்தொலைபேசி எண் 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' என்றே சேமிக்கப் பட்டிருக்கும்!

இந்த 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' என்ற பெயர் நம்ம கிரிக்கெட் கேப்டன் 'கங்குலி'க்கும் பொருந்தும். ஏனென்றால் நம்ம தலைவர் இப்ப எல்லாம் பேட்டிங் பிடிக்கப் போனால் 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்தான்' அதற்கு மேல் நிற்பதில்லை, அவுட்டாகி டிரஸ்ஸிங் ரூமுக்கு ஓடி வந்து ஜூஸ் குடிக்கிறார். அதனால் கங்குலிதான் தற்போதைக்கு 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' ! என்ன, நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள்தானே?

இந்த வாரக் கவிதை (கவிதைக்கு சொந்தக்காரர் நண்பர் அரவிந்த்)

செருப்பு

பாதங்களைக் காக்கும்
கடவுளுக்கு இடம்
கோயிலுக்கு வெளியில் !

Wednesday, September 21, 2005

ஸிம்பாப்வே கிரிக்கெட் அணி கலைப்பு

சற்றுமுன் கிடைத்த தகவல். கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி. ஸிம்பாப்வே கிரிக்கெட் அணி மொத்தமும், நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் தொடர் முடிந்ததும் கலைக்கப் பட உள்ளது. வருங்காலத்தில் கிரிக்கெட் என்ற சொல்லே ஸிம்பாப்வேயில் இருக்காது. ஸிம்பாப்வே கிரிக்கெட் கூட்டமைப்பும் (ZCU) இத்துடன் கலைக்கப் படுகிறது. ஸிம்பாப்வே அணியின் கேப்டன் 'தைபு'வும், மூத்த வீரர் 'ஸ்டீரிக்'கும், இது குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டனர். ஸிம்பாப்வே நாட்டின் தலைவர் (பிரசிடண்ட்) 'ராபர்ட் முகபே' இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்த நாள் ஸிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு ஒரு சோகமான, மறக்க முடியாத நாள்" என்று குறிப்பிட்டு உள்ளார். இதற்கான காரணத்தை கேட்கையில் அவர் கூறியதாவது "இது ஸிம்பாப்வே நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு, கிரிக்கெட் அணி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தேசமும் இதற்காக வேதனைப் படுகிறது. ஸிம்பாப்வே மக்கள் மனமொடிந்து போயுள்ளனர். வரிசையாக எல்லா அணிகளிடமும் மோசமாகத் தோற்றாலும், நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்திருப்போம், ஆனால் இந்திய அணியின் கேப்டன் 'கங்குலி' எங்களுக்கு எதிராக சதம் (செஞ்சுரி) அடித்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதை, எங்களால் தாங்க இயலவில்லை! இதை மட்டுமே இப்போது, என்னால் கூற இயலும்."

ஆதாரம் : ரியுட்டர்ஸ் செய்தி நிறுவனம்

பின் குறிப்பு : இந்த தகவல் எனக்கு மின்னஞ்சலில் முன்செலுத்தப்(Forward) பட்டது. உபயம் : நண்பர் அருண்.

Saturday, September 17, 2005

சானியா மிர்சாவும், பனி விழும் மலர் வனமும்

இந்த மாதிரி குண்டக்க, மண்டக்க என்று தலைப்பு வைப்பதின் ஒரே நோக்கம், தலைப்பு வித்தியாசமாய் இருக்கிறதே என்றாவது நிறைய பேர் வந்து பார்ப்பார்கள் அல்லவா? இருந்தாலும் தலைப்பை நியாயப் படுத்தும் வகையில் அது சம்பந்தமாய் ஏதாவது எழுதி விடுவேன், நம்புங்கள்!

வலைப்பதிவு துவங்கும் போது, என்ன பெயர் வைக்கலாம் என்று சன் டிவியில் இரவு 11 மணிக்கு வரும் 'புத்தம் புதுசு' பார்த்துக் கொண்டே யோசித்தேன். 'பனி விழும் மலர் வனம்', 'வசந்த முல்லை', 'வெண்ணிலா' என்று நிறைய பெயர்களை யோசித்தேன். இந்த மாதிரியெல்லாம் இலக்கியத் தரமாக பெயர் வைத்தால், நமது இமேஜிற்கு ஒத்து வராது என்று 'சோம்பேறி பையனின் எண்ணங்கள்' என்று வைத்து விட்டேன்!

பெருவாரியான இந்திய விளையாட்டு ரசிகர்களைப் போலவே, எனக்கும் கிரிக்கெட் என்றால் ரொம்ப பிடிக்கும். இருந்தாலும் சமீப காலமாக இந்திய அணி விளையாடுவதைப் பார்த்தால், கருடபுராணத்தில் இம்மாதிரி விளையாடுவதற்கு ஏதாவது தண்டனை இருக்குமா என்று தேடத் தோன்றுகிறது. இப்போது கூட இந்தியா ஸிம்பாப்வேயில் தடவித் தடவிதான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள், பேசாமல் டென்னிஸுக்கு மாறிவிடலாம என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சானியா மிர்சா வேறு அழகாய் இருக்கிறார். சர்வதேசப் பட்டியலில் 34வது இடத்திற்கு வந்து, கலக்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் என் கனவில் வந்து 'ராரா..' என்று சந்திரமுகி ஜோதிகா போல் ஆடினாலும் ஆடுவார் என்று பட்சி சொல்லுகிறது!

சென்ற பதிவில் குறிப்பிட்ட பஞ்சாப் பைங்கிளியிடம் இன்னும் கிரிட்டிங்ஸ் கார்டு கொடுக்க வில்லை. ஒருவேளை ஒத்து வராவிட்டால், அடுத்த விண்ணப்பம் சானியா மிர்சாவிடம் போடலாம் என்று உத்தேசம். ஆந்திரா அல்லுடுவாகி விடலாம். யாராவது அவரது மின்னஞ்சல் முகவரி வைத்திருந்தால் கொடுங்களேன், முயற்சி செய்கிறேன். ஓர் தமிழ் வலைப்பதிவு எழுத்தாளனுக்கு இத்தனை சோதனையா? 'பாரடி பராசக்தி' என்று பாரதி ரேஞ்சில் கவிதை பாட நாக்கு துடிக்கிறது!

சென்ற வாரம் நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். நண்பர் தமிழ்நாட்டில் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். அவருக்கு சமீபத்தில் (5 மாதம் முன்பு) பெண் குழந்தை பிறந்து , இப்போதுதான் மும்பைக்கு அழைத்து வந்துள்ளார். அந்த குழந்தையைப் பார்க்கச் சென்றேன். போனவன் சும்மா இல்லாமல் தமிழில் வாழ்த்துப்பா ஒன்றையும் (நாந்தான் பெரிய கவிஞனாச்சே...) எழுதி எடுத்துச் சென்றேன்.

மகாமகக் கரையில் பிறந்து
மகாராஷ்டிரா மண்ணை மிதித்திருக்கும்
மலரே, வருக !

இதே அந்த வாழ்த்துப்பாவின் ஆரம்பம். இந்த ஸ்டைலில் இரண்டு பக்கத்திற்கு எழுதி இருந்தேன். முழு கவிதையையும் இங்கே வெளியிட்டால் நீங்கள் ஆல்ட் F4 போட்டு விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

வாழ்த்துப்பா கஷ்டப்பட்டு சொந்தமாக எழுதியது என்பதால் அதன் முதல் இரண்டு மூன்று அடிகளை மட்டும் குழந்தையின் காதில் வேதம் ஓதுவது போல் ஓதினேன். அப்போது அழ ஆரம்பித்த குழந்தைதான், இன்னும் அழுகையை நிறுத்தவில்லையாம். நண்பர் இப்போதெல்லாம் தள்ளி நின்றே என்னை நலம் விசாரிக்கிறார். ஆதலால் தற்காலிகமாக கவிதை எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன். உங்கள் நல்ல நேரம், பிழைத்தீர்கள்!

இங்கிலாந்து அட்டகாசமாய் ஆடி 'ஆஷஸ்' கிரிக்கெட் தொடரை, 18 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுள்ளனர். லண்டனில் பெரிய வெற்றி ஊர்வலமெல்லாம் கூட நடந்தது. இந்தியா ஸிம்பாப்வேயுடன் டெஸ்ட் தொடரை வென்று வந்தால், இங்கே கூட இந்த மாதிரி வெற்றி பேரணியெல்லாம் நடத்தலாம், ஏனென்றால் தற்போதைய நிலைமைக்கு ஸிம்பாப்வேயை வென்றாலே, இந்தியாவுக்கு பெரிய சாதனைதான்!

என்னமோ போங்க, நானும் ஒவ்வொரு கிரிக்கெட் தொடரையும் விழுந்து விழுந்து பார்க்கிறேன். இந்தியா கோப்பை வாங்கறதத்தான் பார்க்க முடியவில்லை. இப்படி தொடர்ந்து பார்த்து, இந்திய கிரிக்கெட்டை ஆதரிக்கின்ற எனக்கு, யாராவது விருது கொடுத்தா தேவலை!

Sunday, September 11, 2005

* அண்டங்காக்கா கொண்டக்காரி *

போன வாரம் வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்த்ததும் ஆபிஸில் இருக்கும் நண்பர்களுக்கு போன் செய்து தெரிவித்தேன். ஆகா.. நல்ல காரியம் செய்தாய், நாங்கள் படும் கஷ்டத்தை (எனது பதிவுகளை படிப்பதை) தமிழ் கூறும் (வலைப்பதிவர்) நல்லுலகமும் படட்டும் என்று ஆசி வழங்கினார்கள். போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் என்று நோட்பேடை திறந்து இந்த பதிவை எழுத ஆரம்பித்து விட்டேன்.

பதிவு ஆரம்பித்ததைக் கொண்டாட நண்பர்களுக்கு டீ (சத்தியமாக டீ மட்டும்தான்..) வாங்கிக் கொடுத்தது, நன்றாகவே வேலை செய்தது. அப்படியே அரசல் புரசலாக செய்தி பரவி, ஹிந்திக் காரர்கள் கூட வந்து கை கொடுத்தார்கள். பெரிய எழுத்தாளன் நான், கவிதையெல்லாம் கூட எழுதுவேன்(!) என்று அடித்து விட்டதில் பக்கத்து சீட்டு பஞ்சாபி பைங்கிளி 'நைஸ் டு ஸி யு ரைட்டிங் யா..' என்றது. இதற்கு என்ன அர்த்தம் என்று 'ஆர்ச்சிஸ்' கிரிட்டிங் கார்டு (ஐ லவ் யூ என்று ரோஜாப்பூ படம் போட்டிருக்கிறது) வாங்கி யோசித்துக் கொண்டிருக்கிறேன். ராகுகாலம் எமகண்டம் எல்லாம் பார்த்து, சுபயோக சுபதினத்தில் பைங்கிளியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அடி வாங்காமல் பிழைத்திருந்தால், அடுத்த பதிவை எழுதுகிறேன்.

மூளையை ரொம்ப கசக்கி, நிறைய டீ, தம் எல்லாம் அடித்து ஹைக்கூ கவிதை ஒன்றை உருவாக்கினேன். ஒரிஜினல் ஹைக்கூ கவிஞர்கள் கவிதையைப் பார்க்காமல் உடனடியாக அடுத்த பாரவுக்கு செல்லவும்.

நண்பனின் காதலி
அழகாய் இருப்பதை பார்த்ததும்
நட்பை மறந்தது மனசு...

இந்த ஹைக்கூவை படித்துவிட்டு பாராட்டி பின்னூட்டம் போடும் நண்பர்களுக்கு சீக்கிரம் கேர்ள் பிரண்டோ / பாய் பிரண்டோ கிடைக்க மும்பை சித்தி விநாயகரிடம் வேண்டிக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறேன். திருமணமானவர்கள் முயற்சி செய்யவேண்டாம்.

தீபாவளிக்கு ஊருக்குப் போக டிரெயின் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டேன். இன்னும் 40 நாட்களே உள்ளன, ஊருக்கு போக. ஊருக்கு போவது என்றாலே ஒரே ஜாலிதான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று பொழுது போகும். மிச்சமிருக்கும் நேரத்தில் நண்பர்களிடம் மும்பையை பற்றி நிறைய கதை விட வேண்டும். என்னிடம் ஆதிகால மொபைல் போன் ஒன்று (சின்ன ஆன்ட்டனா கூட இருக்கும், ஆபிஸில் கொடுத்த போன்) உள்ளது. எங்க ஊர் அப்பாவியான நல்ல மக்கள் நிறைய பேர் இருக்கிற ஊர். அங்கே இந்த மொபைல் போனை எடுத்துட்டு போய், கிடைக்கிற கால்வாசி சிக்னலில் நாலு மிஸ்கால், நாலு மெஸெஜ் அனுப்புற சுகமே தனிதான்... அப்புறம் நமக்கு தெரிஞ்ச ஆங்கில வார்த்தையெல்லாம் மொபைல்ல பேசறப்ப எடுத்து விடனும்.. 'துரை இங்கிலிபீஸ் எல்லாம் பேசுது'ன்னு கோவை சரளா ஒரு படத்தில் சொல்வாரே, அப்படி சொல்லி வியப்பார்கள் எனது ஊர் மக்கள், ரொம்ப வெள்ளந்தியானவர்கள் !

போன முறை ஊருக்கு ப்ளைட்டில் போனேன், ப்ளைட்டில் ஏறியவுடன் ஒரே மஜாவாக இருந்தது. என்னை, சார் என்று ரொம்ப மரியாதையாக கூப்பிட்ட போது கூச்சமாக இருந்தது. மூன்று முறை என்னை திட்டிக் கொண்டே (எந்த ஊருய்யா உனக்கு) கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்தார்கள். என்ன ஒரே குறை, ப்ளைட் பறக்கும்போது, நல்லா காற்று வருமென்று சைடு ஜன்னலை திறந்து விட சொன்னேன், கடைசி வரை திறந்து விடவே இல்லை. குட்டை பாவாடையில் அழகாக இருந்த 'ரீட்டா' என்ற பணிப்பெண்ணை எனக்கு மிகவும் பிடித்திருந்தது (யாரத்தான் பிடிக்காது உனக்கு? - மனசாட்சியின் குரல்). மொபைல் நம்பரோ, இ-மெயில் அட்ரஸோ கேட்கலாம் என நினைத்தேன். ப்ளைட் நின்றவுடன் ஆள் வைத்து அடிப்பார்களோ என்று பயம் வந்ததால், ஜெண்டில்மேன் ஆகி விட்டேன்.

பதிவுகளைப் படித்த நண்பர்கள் ஏன் ஒரே சொந்த கதை, சோகக் கதையாய் எழுதுகிறாய், நிகழ்கால சம்பவங்களை எழுதலாமே என்று கேட்டார்கள். நிகழ்கால சம்பங்களை பிறர் மனம் புண்படாதவாறு விமர்சித்து எழுதுவது கஷ்டம். நான் அறிவுரை கூறும்படியோ, விளையாட்டு விமர்சனத்தையோ, திரைப்பட விமர்சனத்தையோ எழுதினால், நண்பர்கள் ஆல்ட் + F4 போட்டு விட்டு கருடபுராணம் படிக்க போய்விடுவார்கள். என் கடந்த காலத்தை எழுதும்போது, இஷ்டம் போல் கதை விடலாம். ஆதலால் நான் பார்த்த, ரசித்த, அனுபவித்த சம்பவங்களை கொஞ்சம் கற்பனை கலந்து, நகைச்சுவையாய் எழுதலாம் என நினைக்கிறேன். அவ்வப்போது திரைப்படங்களையும், விளையாட்டையும் தொட்டுக் கொள்கிறேன்!

மும்பையில் நண்பர்கள் அவ்வப்போது வாஷி மேகராஜ், முலுண்ட் ஆட்லேப்ஸ் என்று ஆங்கிலப்படம் பார்க்கச் செல்வார்கள், நான் அந்த பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன். போய் பார்த்தாலும் புரியாதென்பதே காரணம். நான் பார்த்து புரிந்து கொண்ட ஒரே ஆங்கிலப் படம் 'டைட்டானிக்' தான். அது கூட சன் டிவியில் டப் பண்ணிப் போட்ட போது பார்த்த பிறகுதான் புரிந்தது. இந்த 'மேட்ரிக்ஸ்' படத்தை இதுவரைக்கும் 13 தடவை ஸ்டார் மூவிஸ்ஸிலும், ஹச்பிஓவிலும் பார்த்து விட்டேன். ஒரு மண்ணும் புரியவில்லை. ஒருவேளை சன் டிவியில் போடறப்போ புரியுமோ என்னவோ?

பதிவை முடிக்கும் வேளை வந்து விட்டது. என்னடா இவன் 'அண்டங்காக்கா கொண்டக்காரி' என்று தலைப்பை வைத்துவிட்டு அதைப் பற்றி எதுவுமே எழுதவில்லையே என்று அடிக்க வர வேண்டாம். இரண்டாவது பாரவில் பஞ்சாபி பைங்கிளியிடம் கிரிட்டிங்ஸ் கார்டு கொடுக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? ஒருவேளை பார்ட்டி ஒர்க்கவுட் ஆகிவிட்டால், 'ரெமோ' விக்ரம் போல் 'அண்டங்காக்கா கொண்டக்காரி..ரண்டக்க..ரண்டக்க' என்று டூயட் பாடலாம் என்று இருக்கிறேன். ஒர்க்கவுட் ஆகாவிட்டால், 'எங்கே செல்லும் இந்த பாதை...' என்று 'சேது' விக்ரமாகி விட வேண்டியதுதான் !!!

Wednesday, September 07, 2005

பெய்யெனப் பெய்யும் மழை

இந்த கட்டுரை ஒரு மாதத்திற்கு முன்பு எழுதப் பட்டது. இப்போதுதான் இந்த வலைப் பக்கத்தில் இடம் பெறுகிறது.


26/07/2005 05:12 PM


ஜூலை 26ம் தேதி, மாலை 4 மணிக்கு அலுவலகத்தில் எங்கள் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் வந்தது, கனமழையின் காரணமாக மாலை 4:30 மணிக்கு ஊழியர்கள் வீடு திரும்பலாம் என்று. மும்பையில் வசிப்பவர்களுக்கு மழைக்காலத்தில் இது வழக்கமான ஒன்றுதான். 5 மணிக்கு சக ஊழியர் ஒருவரின் காரில் கிளம்பி விட்டேன். கேட் நம்பர் ஒன்றின் வழியே வெளியே போனால், தண்ணீர் அதிகமாக உள்ளது என்று தகவல் வந்ததால், கேட் நம்பர் மூன்றின் வழியே வெளிவந்தவுடன், மழையின் உக்கிரம் புரிந்து விட்டது. கேட்டின் வலதுபுறம், கார் திரும்பியவுடன் ஒன்றரை அடிக்கு தண்ணீர் இருந்தது. சிறிது நேரத் தயக்கத்திற்கு பிறகு நண்பர் தைரியமாக வெள்ளத்தின் நடுவே காரை செலுத்தினார். கடந்து வந்து, கன்சோலியின் ஜான்'ஸ் பிரிட்ஜ் நிறுத்தத்தில் இறங்கினேன். கன்சோலியின் கூவம் கரை புரண்டு ஒடிக் கொண்டிருந்தது. மழை மிகத் தீவிரமாக பெய்து கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரம் மழை தொடர்ந்து பெய்தால், கன்சோலியில் வெள்ளம் வந்து விடும். யோசிக்கிறேன், என்ன செய்யலாம் ?

28/07/2005 11:01 AM


டைம்ஸ் ஆப் இண்டியா வலைத்தளத்தில் தலைப்புச் செய்தி : மும்பையில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட கார்களில் இருந்து வெளியே வர முடியாமல், 21 பேர் பலி. கார்களில் உள்ள செண்ட்ரல் ஆட்டோ லாக்கிங் சிஸ்டம் மற்றும் பவர் விண்டோ சிஸ்டம் செயலற்றுப் போனதால் வெளியே வர முடிய வில்லை. சில கார்களில் ஏசி சிஸ்டம் வெடித்ததுள்ளன. நினைத்துப் பாருங்கள், காரின் வெளியே வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது, கார் கதவுகள் திறக்க முடியவில்லை. கண்ணாடிகளை உடைக்க முடிய வில்லை, மூச்சு முட்டுகிறது. வாழ்வின் கடைசி நொடிகளில், அவர்கள் என்ன வேதனை அனுபவதிருப்பார்கள் ?


26/07/2005 06:30 PM


கன்சோலியில் வீட்டுக்கு சென்ற போது, வீட்டில் மின்சாரம் இல்லை. காலையிலிருந்து மின்சாரம் இல்லை என்று தெரிய வந்தது. உடனே வீட்டிலுள்ள எல்லா வாளிகளிலும் தண்ணீர் பிடித்து வைத்து விட்டு, உடை மாற்றிக் கொண்டு, கோப்பர்கைரனேயில் நண்பர்களின் வீட்டிற்கு சென்று விட்டேன். நடந்து செல்லும் போது, சாலைகளில் ஒரடிக்கு மேல்வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம். சாலைகளில் நிறைய பேர் நடந்து செல்கின்றனர். மழை கனமாக பெய்கிறது. எங்கும் மின்சாரம் இல்லை. பிரளயம் வந்து விட்டதா?


29/07/2005 10:25 AM


டைம்ஸ் ஆப் இண்டியா வலைத்தளத்தில் செய்தி : வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட மக்களுக்கு/பயணிகளுக்கு சகபயணிகள், அருகாமையில் வசிக்கும் மக்கள் உதவி செய்தனர். பேருந்துகள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட பகுதிகளில் அருகாமையில் வசிக்கும் சிலர் தங்கள் வீடுகளிலிருந்து, பிஸ்கட், பிரட் மற்றும் பழங்களை கொடுத்து உதவியுள்ளனர். சிலர் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு, உணவு சமைத்து கொடுத்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் ஒருவொருக்கருவர் உதவி செய்து, மீண்டு வந்துள்ளனர். மக்களிடையே உதவும் மனப்பான்மை குறைய வில்லை என்பதுமனதுக்கு ஆறுதலளிக்கும் செய்தி.

26/07/2005 10:00 PM


கோப்பர்கைரனே நண்பர்களுடன் சாப்பிடக் கிளம்புகின்றேன். மழை மிகத் தீவிரமாக பெய்கிறது. உணவு விடுதியில் கூட்டம் இல்லை. மின்சாரமும் இல்லை. சாப்பிட்டு விட்டு திரும்பும் போது, குடை பிடித்திருந்தாலும், உடம்பு முழுவதும் நனைந்து விட்டது. திரும்பும் போது நினைத்துக் கொள்கிறேன் : வீடில்லாமல் தெருவில், நடைபாதையில் வசிப்பவர்களுக்கு எவ்வளவு சிரமம் இருக்கும், இம்மாதிரி சூழ்நிலையில் எங்கே போயிருப்பார்கள், அனைவரும் ?


28/07/2005 11:20 AM


மும்பை கோரேகான், அந்தேரி பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி 2500 எருமைகள் பலி. எருமைகள் நன்கு நீந்தக் கூடியவைதான். ஆனால் அவைகள் சங்கிலியுடன் பிணைக்கப் பட்டிருந்ததால் தப்பிக்க முடிய வில்லை. எருமைப் பண்ணை உரிமையாளர்கள் ஏன் எருமைகளை விடுவிக்க வில்லை? மனிதர்களின் சுயநலத்திற்கு வாயில்லா ஜீவன்கள் பலியாகி விட்டன. இது தவிர 15000 ஆடுகளும் பலியாகி விட்டதாக கேள்வி.


பின் குறிப்பு


இவை தவிர, இன்னும் பற்பல செய்திகளை நீங்கள் செய்தித் தாள்களின் மூலமும், தொலைக்காட்சியின் மூலமும்அறிந்திருப்பீர்கள். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் என்னைப் பாதித்தவைகளில் சில. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு எத்தனையோ மக்கள் உயிரிழந்தனர். வீடிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. மகாரஷ்டிராவின் மேற்கு பகுதி முழுவதும் பாதிக்கப் பட்டாலும், மாநிலத் தலைநகரான மும்பையின் பாதிப்புக்களுக்கே செய்தி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. நிறைய நிலச் சரிவுகள் ஏற்பட்டன. மூன்று நாட்களுக்கு மும்பை வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப் பட்டது.15000 கோடி நஷ்டம் என்று செய்தி வந்துள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது அரசாங்கம் விரைந்து செயல்பட வில்லை என்று கருத்துகள் எழுந்துள்ளன. இப்பேரழிவிற்கு முக்கியமாக பின்வருபவனற்றை காரணமாகக் கூறலாம்.


* மும்பையின் பாதாள சாக்கடைகள் பழமையானவை. டிரைனேஜ் சிஸ்டம் சரியாக இல்லை.

* நீரை உறியும் சக்தியுடைய கடலோர மாங்குரோவ் காடுகள் ஆக்ரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டு விட்டன.

* கடந்த நூறாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான மழைப்பொழிவு.

* விரைந்து செயல்பட முடியாத அரசாங்கம்

* பெருகிவரும் மக்கள் தொகை, அதனால் ஏற்படும் ஆக்ரமிப்புகள்

* நிலச்சரிவு ஏற்படும் அபாயமறிந்தும், முறையற்ற குடியுருப்புகளை ஏற்படுத்தும் மக்களின் அறியாமை மற்றும் ஏழ்மை.


மும்பையில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் மும்பை இழந்த உற்சாகத்தைப் பெறக்கூடும். ஆனால் வெள்ளத்தினால் உயிரழந்தவர்களின்/பாதிக்கப் பட்டவர்களின் வீடுகளில் இயல்பு நிலை திரும்புமா? எவ்வாறு அவர்களின் வாழ்க்கைப் பயணம் அமையப் போகிறது ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் !