Tuesday, March 24, 2009

சுஜா(தா) தாட்ஸ்

கடந்த ஒரு வாரமாக சுஜாதாட்ஸ் என்ற புத்தகத்தை படித்து வருகிறேன்.

விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள புத்தகம் சுஜாதாட்ஸ். ஜூனியர் போஸ்ட்டில் 1997 - 1998ல் சுஜாதா எழுதிய கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டு உள்ளனர்.

வழக்கம் போலவே எல்லா விஷயங்களையும் தொட்டிருக்கிறார் சுஜாதா.

தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து விட்டு, நிஜ வாழ்க்கையை கவனியுங்கள் என்கிறார் சுஜாதா. அவர் கேபிள் இணைப்பே வைத்துக் கொள்ளவில்லை என்கிறார், வியப்பாக இருக்கிறது.


இன்னுமொரு கட்டுரையில், தமிழ் சொற்களை பற்றி ஆராய்கிறார். எழுத்தாளன் என்கிறோம், கொலையாளன் என்பதில்லை, கொலையாளி என்கிறோம், ஏன்? என கேட்கிறார். நீங்கள் யாராவது கூற முடியுமா?

மல்ட்டி மீடியா என்பதற்கு தமிழ் வார்த்தையாக ‘பல்லூடகம்’ என்கிறார்.

சிறுகதை ஆரம்பத்திற்கு சில மோசமான உதாரணங்களை காட்டி இருக்கிறார்.
“டுமில் என்று துப்பாக்கி ஒரு முறை உமிழ்ந்தது, சுகரிதா செத்து விழுந்தாள்”.

பெரும்பாலும் முதல் பாராவிலேயே கதையை ஆரம்பித்து விடுங்கள், சுவாரசியமாய் ஆரம்பத்தை அமைத்து, படிப்பவர்களை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார், சிறுகதை எழுத்தாளர்கள் கவனிக்கவும்.

இந்திய நடனங்களை பற்றி இன்னொரு இடத்தில் கிண்டலடிக்கிறார், ம்யூட் செய்து நடனத்தை பாருங்கள், அபத்தமாக இருக்கும் என்கிறார்.

ஆனாலும், எல்லா கட்டுரைகளுமே சுவாரசியமாக இருக்கின்றன என கூற முடிய வில்லை. கற்றதும், பெற்றதும் கட்டுரைகள் அளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

எல்லோரும் ரசித்து படிக்க முடியும் புத்தகம்!! நீங்கள் படித்திருக்கிறீர்களா? உங்களது கருத்து என்ன??

ஜூனியர் போஸ்ட் இப்போதும் வருகிறதா? இது என்ன தனி இதழா அல்லது இணைப்பா?

7 comments:

நிகழ்காலத்தில்... said...

\\இந்திய நடனங்களை பற்றி இன்னொரு இடத்தில் கிண்டலடிக்கிறார், ம்யூட் செய்து நடனத்தை பாருங்கள், அபத்தமாக இருக்கும் என்கிறார்.\\

உண்மைதான். இவரைப் படித்து நானும் அப்படி பார்க்க ஆரம்பித்து இப்போது
பார்ப்பதே இல்லை

Sridhar V said...

//இது உண்மையா என்பதை, தேசிகனோ அல்லது வேறு தெரிந்தவர்கள் யாராவது கூறலாம்.//

பொய் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இருப்பதாக நினைக்கிறீர்களா என்ன? போகிற போக்கில் இப்படி ஒரு கேள்வியை கேட்பது மகா எரிச்சலாக இருக்கிறது.

ஜூனியர் போஸ்ட் பல வருடங்களுக்கு முன்னரே நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்கப்புறம் விகடன் பக்கஙக்ளை அதிகபடுத்தினார்கள் என்று நினைக்கிறேன். Re-allocation of resources strategy.

ஜூனியர் போஸ்ட் மாலை நேர நாளிதழாக வெளிவந்தது.

பழூர் கார்த்தி said...

அறிவே தெய்வம், உங்கள் கருத்துக்கு நன்றி, நம் படங்களில் பாடல்களே தேவையில்லை என நினைக்கிறேன் :-)

<<>>

Sridhar Narayanan, என்னுடைய கேள்வி உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்..
அந்த கேள்வி விஷயத்தை அறிந்து கொள்வதற்காகவே கேட்கப் பட்டது, நானும் அவரது ரசிகர்களில் ஒருவன்.
உங்களது கருத்துகளுக்கும், செய்திகளுக்கும் நன்றி!!!

பழூர் கார்த்தி said...

ஒரு சந்தேகம்,

விகடனில் வரும் எல்லா விதமான இதழ்களும் (அவள் விகடன், சுட்டி விகடன், நாணயம், மோட்டார் விகடன்) நன்றாக ஓடுகிறதா? கட்டுப்படி ஆகிறதா, யாராவது கூறுங்களேன்..

மதிபாலா said...

சுஜாதாட்ஸை ஒட்டிய பழூர்தாட்ஸ் பிரமாதம். வாசிக்க வேண்டும்

Sridhar V said...

கார்த்தி அவர்களே,

//அந்த கேள்வி விஷயத்தை அறிந்து கொள்வதற்காகவே கேட்கப் பட்டது, நானும் அவரது ரசிகர்களில் ஒருவன்//

என்னை புண்படுத்த எல்லாம் இல்லை. நீங்கள் அந்த கேள்வியை அமைத்த விதம் தவறானது என்று சுட்டிக் காட்டவே பின்னூட்டமிட்டேன். தொடர்ந்து அப்படியே பதிவை வைத்திருப்பதன் மூலம் நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரியவில்லை என்று தெரிகிறது. நீங்கள் அவர் ரசிகரோ அல்லது உங்களுக்கு அவர் ’சும்மனாங்கட்டிக்கு’ சொல்கிறாரோ என்று தோன்றியிருக்கலாம். ஆனால் அப்படி ஒரு கேள்வியை Just like that போட்டுப் போவதின் மூலம் எழுத்தாளரின் நேர்மையை சந்தேகிக்கும்விதமாக அமைகிறது என்பதை புரிந்து கொண்டீர்களா என்று தெரியவில்லை. மேலே சொல்ல ஒன்றுமில்லை.

பழூர் கார்த்தி said...

Sridhar,
உங்கள் விளக்கம் புரிகிறது. சர்ச்சைக்குரிய அவ்வரிகளை நீக்கி விட்டேன், மீண்டும் எனது தளத்திற்கு வந்து பதிலளித்ததற்கு நன்றி!