Thursday, October 19, 2006

என்னடா சொல்கிறாய், நீ ???



காதல் கவிதைகள் பெரும்பாலும் ஆணின் பார்வையிலேயே எழுதப் படுகின்றன. ஆனால் பெண்களின் உணர்வுகள், பார்வைகளுடன் வெளிவந்திருக்கும் காதல் கவிதைகள் குறைவே! அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் தலைவியின்(பெண்களின்) காதல் பாங்கு அழகுடன் விளக்கப் படுகின்றது! இக்கவிதை அத்தகைய ஓர் முயற்சியே!

<<<<<<>>>>>>

தூக்கமே வருவதில்லை...
அப்படியே வந்தாலும்
தூக்கத்தில் சிரிக்கிறேன்
என்கிறார்கள் தோழிகள்....
கனவுகளிலும்
உன் ஞாபகம்தான்...

பசிக்கிறது....
ஆனால் எதுவும் சாப்பிட பிடிக்க வில்லை...
தட்டில் கை அலை பாய்கிறது...

படிக்கும் போதும்,
எழுதும் போதும்,
குளிக்கும் போதும்
பயணிக்கும் போதும்,
எப்போதும் உன் ஞாபகம்தான்..

கண்ணாடியை பார்க்கும்போதெல்லாம்
என்னில் உன்னை பார்க்கிறேன்...
ஆதலால் கண்ணாடியைப் பார்த்து
பேசிக் கொண்டிருக்கிறேன்
உன்னிடம் பேசுவதாய் நினைத்து....

தோழிகளுடன் உரையாடும் போதும்
திடீர் திடீரென
உன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவதால்
தடங்கலிடும் விவாதங்களால்,
விவாதப் பொருளாகிறேன் நான்...

என் செல்பேசியில் வரும்
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
உன்னையே ஞாபகப் படுத்துவதால்
செல்பேசிக்கு கிடைக்கின்றன கூடுதல் முத்தங்கள்...
கூடவே அலுவலக தோழிகளின் வியப்பு பார்வைகள்...

தினமும் முன்செலுத்தப்படும் மின்னஞ்சல்களில்
எங்காவது உன் பெயர் இருந்தால்,
அதற்காகவே சேமிக்கப்படுகின்றன
அவ்வஞ்சல்கள், என் கணிணியில்...

குளித்துவிட்டு உடல் துடைக்காமல்
ஆடையணிந்து அலுவலகம் கிளம்பும்
சம்பவங்கள்
அடிக்கடி நிகழ்கின்றன...

உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??

<<<<<<>>>>>>

நண்பர் சிறில் அலெக்ஸ், தனது 'தேன்' வலைப்பதிவுத் தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு அளித்து, அத்தலைப்பில் ஏதாவது எழுதச் சொல்கிறார். அவர் அக்-13 அளித்த கோமாளி என்ற தலைப்பே இக்கவிதைக்கான தூண்டுதல். அவருக்கும், கவிதைக்கான படத்தை மின்னஞ்சலில் முன்செலுத்திய நண்பர் கிருஷ்ணா ராஜப்பாவிற்கும் நன்றிகள் பலப்பல !!

<<<<<<>>>>>>

//உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??//

உலகம் கவிதை நாயகியை கோமாளி என்று சொல்வது இருக்கட்டும், இம்மாதிரி காதலில் மூழ்கி புற உலகத்தை மறந்திருக்கும் காதலர்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ??

<<<<<<>>>>>>

5 comments:

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல கவிதைங்க. வாழ்த்துக்கள்.

:)

VSK said...

Wasted youth!!

இப்படி உரு போட்டா உருப்பட்ட மாதிரிதான் அந்தப் பொண்ணு

:))

சிவாஜி said...

பெண்ணாய் மாறிப்
புற உலகம் மறந்து
காதல் கவி பாடும்
இந்தச் சோம்பேறி பையனின்
கவிதை நல்லாவே இருக்கிறது என்று
நான் சொல்வது இருக்கட்டும்...
பெண்கள் என்ன சொல்றாங்க?

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !!

<<>>

உங்கள் அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

<<>>

சிறில்,

நன்றி, உங்கள் தலைப்பும், அதற்கான இடுகையும் தந்த உற்சாகம்தான் இது..

<<>>

எஸ்கே,

//இப்படி உரு போட்டா உருப்பட்ட மாதிரிதான் அந்தப் பொண்ணு//

ஆமாம், இப்படியெல்லாம் ஒரேடியாக உலகம் மறக்கக் கூடாதுதான் :-))

<<>>

சிவாஜி,

எம் கவிதை இருக்கட்டும், உம் பின்னூட்ட கவிதை கலக்கல் :-))

enRenRum-anbudan.BALA said...

Just Fantastic :) Keep it up !