Saturday, September 01, 2012

பழூர் காராச்சேவு: மாணவர்கள் செய்வது சரியா? - ஆதங்கம்

புதிய வாசகர்களுக்கு முன்குறிப்பு:

பல செய்திகளை கலந்து என் கருத்துக்களோடு கொடுக்கும் பதிவுகளுக்கு காராச்சேவு என்று பெயர் வைத்திருக்கிறேன்.

எனக்கு பிடித்த இம்மாதிரி வகைத் தலைப்புகள்

  • கொத்து பரோட்டா (கேபிள் சங்கர்)
  • வானவில் (மோகன் குமார்)
  • அஞ்சறைப் பெட்டி (சங்கவி)


***

மாணவர்கள் செய்வது சரியா - ஒரு ஆதங்கம்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், மாணவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சாலையில் செல்லும் பேருந்தில் போட்ட ஆட்டம் இது. படத்தைப் பாருங்கள். இன்றைய தினமலரில் வந்த செய்தி இது.



இதில் என்ன தவறு, இதெல்லாம் ஒரு ஜாலிக்காக, நானும் கல்லூரிக் காலத்தில் இப்படி இருந்தவந்தான் என்பவர்களுக்கு சில சிந்தனைத் துளிகள்

1. மாணவர் தேர்தல் என்பது என்ன? கல்லூரியில் மாணவர்களை ரெப்ரசண்ட் பண்ண, அவர்களுக்காக குரல் கொடுக்க, சேவை செய்ய ஒரு தளம். அதில் வெற்றி பெற்றதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

2. அப்படியே நீங்கள் மகிழ்ச்சியின் விளைவாய் கொண்டாட விரும்பினாலும், கல்லூரியிலோ (அ) உங்கள் வீட்டிலோ (அ) ஒரு வளாகத்திலோ (ஹாஸ்டல்) அமைதியாக, மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் கொண்டாடலாமே?

3. இப்படி சாலையில் வந்து பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு செய்யலாமா? அதற்கு உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?

4. படத்தை மற்றுமொரு முறை பாருங்கள், பேருந்தில் இப்படி கூரைக்கு மேலேயும், பக்கவாட்டு ஜன்னல்களிலும் இருந்து கொண்டு பயணிக்கலாமா? உங்களது உயிருக்கு அல்லவா ஆபத்து?

5. ஒரு சில மாணவர்களைப் பாருங்கள், சட்டையை துறந்து வீரமாக போஸ் கொடுக்கின்றனர், இது ஒரு நாகரிகமான செயலா?

6. இவர்கள் ரோட்டில் ஆட்டம் போடுவதன் மூலம், பின்னால் வரும் வாகனங்களையும் அல்லவா தடுக்கின்றனர்.

இவையெல்லாம் உங்களை பெற்றெடுத்து, வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் உங்களை கல்லூரிக்கு அனுப்பி, அவன் பெரிய ஆளாக வருவான் என கனவு கண்டு கொண்டிருக்கும் பெற்றோருக்கு பெருமை சேர்க்குமா என்ன? நம்பிக்கை தருமா என்ன?

மாணவச் செல்வங்களே, இம்மாதிரி புகழ், பதவி, அரசியல் விளையாட்டுகள் தற்போது உங்களுக்கு வேண்டாம், படிப்பில் கவனம் செலுத்தி, முடித்து ஒரு வேலையை (அ) சுய தொழிலை தேடிக் கொள்ளுங்கள். அதில் வெற்றி பெற்று பிறகு மொத்தமாய் கொண்டாடலாம்!

***

கோவையில் டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி இருந்ததாம். ஒருவேளை நமது அரசாங்கமே மக்களின் மதுப் பழக்க வழக்கத்தை குறைக்க, இம்மாதிரி நடவடிக்கை எடுத்திருக்கிறதோ, என்னமோ!! இனிமே தமிழக அரசை யாரும் குறை கூற வேண்டாம் :)

***

வரதட்சினை கேட்போருக்கு 7 ஆண்டு சிறை - என மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறதாம். அப்படியா இந்த 2G, 3G ஊழல், நிலக்கரி, கிரானைட் ஊழலுக்கெல்லாம் ஏதெனும் சட்டம் கொண்டு வர திட்டம் உள்ளதா என்று யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்.

***

எனக்கு ஓட்டுகளில் நம்பிக்கை இல்லை, ஆனால் உங்கள் பின்னூட்டம் உங்கள் கருத்தை எனக்கு சொல்லும், என்னையும் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும். ஆதலால்...

***


நன்றி: படம் & தகவல்: தினமலர்

***

19 comments:

Anonymous said...

மாணவர்கள் ப்ளாக் பக்கம் வருவதில்லை என்பது என்னுடைய கருத்து... அப்படி இருக்க யார் இதை படித்து அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்

பழூர் கார்த்தி said...

அனானி, தங்கள் கருத்துக்கு நன்றி!

***

மாணவர்கள் படிக்காவிட்டாலும், இதைப் படிக்கும் ஆசிரியரோ, பெற்றோரோ, அண்ணன், அக்காக்களோ தங்கள் மாணவரிடம், உறவினரிடம், மகன், மகளிடம், தம்பி தங்கைகளிடம் இதைப் பற்றி பேச வாய்ப்புள்ளதல்லாவா?

பதிவுலகில், நம்மளவில் ஒரு விழிப்புணர்வுடன் பேசப்பட்டு, தேர்ந்த பதிவர்களால் தொலைக்காட்சி போன்ற வீரியமிக்கு ஊடகங்களுக்கு இந்த கருத்து செல்ல வாய்ப்பு இருக்கிறிதல்லவா?

***

நம்பிக்கைதானே வாழ்க்கை!

***

வருகைக்கு மீண்டும் நன்றி!

ப.கந்தசாமி said...

//மாணவச் செல்வங்களே, இம்மாதிரி புகழ், பதவி, அரசியல் விளையாட்டுகள் தற்போது உங்களுக்கு வேண்டாம், படிப்பில் கவனம் செலுத்தி, முடித்து ஒரு வேலையை (அ) சுய தொழிலை தேடிக் கொள்ளுங்கள். அதில் வெற்றி பெற்று பிறகு மொத்தமாய் கொண்டாடலாம்!
//

படிப்பு எதற்கு? பிற்கால வாழ்க்கைக்கு பயன்படத்தானே? அதை அவர்கள் படிக்கிறார்கள்.

அந்தக் காலத்திலிருந்தே, அதாவது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே, மாணவர்களை தங்கள் சுயநல அரசியல் போராட்டங்களுக்கு கட்சிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இந்த மாணவர்கள்தான் எதிர்கால இந்தியா!

வவ்வால் said...

கார்த்தி ,

சென்னையில் இருந்தேன்னு சொல்லி இருக்கீங்க, இதெல்லாம் தினசரி நிகழ்வு.ஏதோ தேர்தலுக்காக அல்ல.

கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்ல,பள்ளி மாணவர்களும் தான்.

தினசரி காலை 9 மணிக்கு புரசைவாக்கம் நெடுஞ்சாலைப்போய் பாருங்க, அங்கு இருக்கும் அரசு உதவிப்பெறும் கிருத்தவப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் ,பேருந்தீன் கூறை, ஜன்னலில் குரங்கு போல தொத்திவருவார்கள்,

ஒரு முறை ஓடும் பேருந்தின் ஜன்னல் மீது இருந்து கீழே குதித்த மாணவன் என் வண்டியில் இடித்துக்கொண்டான், ஆனால் என்னைக்கெட்ட வார்த்தையில் திட்ட,நான் திட்ட ,வம்பா போச்சு.

அப்பள்ளி புரசைவாக்கம் ஆனந்தபவன் ஹோட்டல் அருகில் இருக்கு.

எல்லாரும்(பெரும்பாலும்) பான் பராக், ஹான்ஸ் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள்,அந்த அளவு நல்லப்பசங்க :-))

பழூர் கார்த்தி said...

பழனி.கந்தசாமி ஜயா, உங்க கருத்துக்கு நன்றி!

//அந்தக் காலத்திலிருந்தே, அதாவது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே, மாணவர்களை தங்கள் சுயநல அரசியல் போராட்டங்களுக்கு கட்சிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றன.//

உண்மைதான், இத்தகைய மாணவர்கள் ஆலோசனைகளயும், அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை..

பழூர் கார்த்தி said...

வவ்வால், உங்க கருத்துக்கு நன்றி!

சென்னையில் இருந்தபோதும் அவ்வப்போது செய்தித் தாள்களின் படித்திருக்கிறேன், தற்போதுதான் நான் எழுதி கருத்தை தெரிவிக்க முடிந்தது..

//ஒரு முறை ஓடும் பேருந்தின் ஜன்னல் மீது இருந்து கீழே குதித்த மாணவன் என் வண்டியில் இடித்துக்கொண்டான், ஆனால் என்னைக்கெட்ட வார்த்தையில் திட்ட,நான் திட்ட ,வம்பா போச்சு.//

ஓ, அப்படியா, வருத்தமாக உள்ளது, இப்படி பேருந்தில் அராஜகம் செய்யும் மாணவர்களை டிரைவர், கண்டக்டரும், பொதுமக்களும் தட்டிக் கேட்க வேண்டும், கண்டிக்க வேண்டும். தனிமனித ஒழுக்கத்தை, வாழ்க்கை நெறிகளை சிறு வயதிலிருந்தே போதிக்க வேண்டும், பெற்றொருக்கும், ஆசிரியருக்கும் அதில் பங்குள்ளது!!

திண்டுக்கல் தனபாலன் said...

அவர்கள் மீது தப்பில்லை... வளர்த்(ந்)த விதம் அப்படி...

பழூர் கார்த்தி said...

திண்டுக்கல் தனபாலன், உங்க கருத்துக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

காராச்சேவு... நல்லாத்தான் இருக்கு.

தனியாக இருக்கும்போது இப்படிச் செய்ய பயப்படுவார்கள். கூட்டமாக இருக்கும்போது என்ன செய்கிறோம் என இவர்களுக்குப் புரிவதில்லையோ....

தொடர்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தனிப்பட்ட முறையில் பேசிப் பாருங்கள் ஒவ்வொருவரும் நல்லவர்களாகவே காட்சி தருவர்.கூட்டத்தில் சேரும்போது
தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணமே இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளத் தூண்டுகிறது.
அதைவிட இன்னொரு காரணம் அமைதியாய் இருக்கும் மாணவர்களை மாணவிகள் கண்டுகொள்வதில்லை

Abarna said...

T.n. murali - உண்மை

பழூர் கார்த்தி said...

வெங்கட் நாகராஜ், கருத்திற்கு நன்றி!

//தனியாக இருக்கும்போது இப்படிச் செய்ய பயப்படுவார்கள். கூட்டமாக இருக்கும்போது என்ன செய்கிறோம் என இவர்களுக்குப் புரிவதில்லையோ....//

முற்றிலும் உண்மை!

பழூர் கார்த்தி said...

முரளிதரன், கருத்திற்கு நன்றி!

// .கூட்டத்தில் சேரும்போது
தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணமே இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளத் தூண்டுகிறது. //

உண்மைதாங்க, இதன் பின்விளைவுகளை அவர்கள் யோசிப்பதே இல்லை.. இவ்வாறு கூட்டமாய் சேர்ந்து ஹாஸ்டலில் வன்முறையில் ஈடுபட்ட என் நண்பர்க்ளின் எதிர்காலம் கேள்விக் குறியானது!!

பழூர் கார்த்தி said...

அபர்ணா, கருத்திற்கு நன்றி!

ராஜ் said...

பாஸ்,
சென்னை தவிர வேற எந்த ஊருலையும், ஸ்டுடன்ஸ் இது மாதிரி பஸ்ல ஏறி அராஜகம் பண்ணி நான் பார்த்தது இல்லை...

பழூர் கார்த்தி said...

ராஜ், கருத்திற்கு நன்றி! சென்னையில் இது அடிக்கடி நடக்கிறது, மற்ற ஊர்களிலும் நடக்கலாம், நானும் இதுவரை அறிந்ததில்லை..

வவ்வால் said...

கடலூரில் பெரியார் கலைக்கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் அட்டகாசம் செய்வார்கள், ஒரு முறை பேருந்தை கல்லூரியில் சிறப்பிடித்துக்கூட வைத்துக்கொண்டார்கள், ஆனால் இந்த அளவுக்கு கூறையில் எல்லாம் ஏற மாட்டார்கள்.

அப்புறம் தீபாவளி பொங்கல் சமயங்களில் கிராமங்களுக்கு செல்லும் பேருந்தில் பொதுமக்களே கூறையில் தான் பயணம் செய்யணும்.

இப்பக்கூட ஏதேனும் சில நாட்களில் கூட்டம் அதிகமாக கூறையில் பயணம் நடக்கிறது, ஆனால் மறக்காமல் டிக்கெட் வாங்கிடுவார் நடத்துனர் :-))

படைப்பாளி said...

நல்லாருக்கு..நடத்துங்க..

பழூர் கார்த்தி said...

வவ்வால், கருத்திற்கு நன்றி! பஸ் வசதி குறைவான கிராமங்களில் மக்கள் கூரையில் பயணம் செய்வதை கேள்விப் பட்டிருக்கிறேன், ஆபத்தானதுதான்!

***

படைப்பாளி, கருத்திற்கு நன்றி!