Wednesday, May 30, 2012

பழூர் காராச்சேவு 5/29/2012 - பில்லா, சாரு, பவர் ஸ்டார், ஐபிஎல்-5, சினிமா


பில்லா - 2 இசை

சில நாட்களாக பில்லா - 2 பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். சாதாரணமாய் லேப்டாப் ஸ்பீக்கரில் கேட்கும் போது அவ்வளவாக கவரவில்லை. ஆனால் போஸ் போன்ற நல்ல ஹெட்செட்டில் கேட்கும் போது, பாடலே மாறி விடுகிறது. இப்போதைக்கு மதுரைப் பொண்ணும், இதயமும் ஃபேவரிட். சில மாதங்கள் முன்பு இப்படித்தான் மங்காத்தா பாடல்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் தற்போது அந்த பாடல்கள் என்னை கவருவது இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இருபது வருடங்களுக்கு முன்பு வந்த இளையராஜாவின் 'சொர்க்கமே என்றாலும்', 'செண்பகமே' போன்ற பாடல்கள் இப்போதும் என்னைக் கவருவது ஆச்சரியமே!!


சாரு நிவேதிதாவின் வழக்கு எண் 18/9 விமர்சனம்

ஏகப்பட்ட மசாலா திரைப்படங்களுக்கு நடுவில் கொஞ்சம் நன்றாக ஏதாவது திரைப்படம் வெளிவந்தால், அதை சாரு தனது வலைத் தளத்தில் கிழிப்பது ஒரு ஃபேஷனாகி விட்டது. படத்தை 10 நிமிடம் கூட பார்க்க முடிய வில்லையாம், இடைவேளையில் எழுந்து வெளியே வந்து விட்டாராம். இவரது தேகம் நாவலை யாராவது பாதி மட்டும் படித்து விட்டு விமர்சித்தால் ஒத்துக் கொள்வாரா? என் போன்ற சாதாரண சினிமா ரசிகனுக்கு வழக்கு நல்ல படம்தான்!!


நீயா நானா கோபிநாத் - பவர் ஸ்டார் சண்டை

பவர் ஸ்டார் என்ற அப்பிராணியை விஜய் டிவியில் கோபிநாத் சீரியஸாக கலாய்த்தார். எவ்வளவு வம்பிலிழுத்தாலும், பொறுமை இழக்காமல் சிரித்துக் கொண்டே பதில் கூறிய பவர் ஸ்டார் என்னை கவர்ந்தார். ஆனந்தத் தொல்லை யு.எஸ்ஸில் ரிலிசானால் பார்க்க முடிவு செய்திருக்கிறேன் :)


ஐபிஎல் - 5

ஏகப்பட்ட புகார்கள்களுடன் ஐபிஎல் - 5 முடிவடைந்திருக்கிறது. சென்னை இறுதி போட்டிக்கு வந்தது மேட்ச் ஃபிக்ஸிங் என்று இணையத்தில் 357 பேர் சத்தியம் செய்திருக்கிறார்கள். இவர்களில் 356 பேராவது அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் விடாமல் தொடர்ந்து பார்ப்பார்கள். எனவே கிரிக்கெட் தொடர்ந்து வாழும்!! அது ஃபிக்ஸிங்கோ என்னவோ, எனக்கு முடிவு முன்பே தெரியாத வரை சுவாரசியம்தான், அதனால் தொடர்ந்து பார்ப்பேன் என்றார் பிலாசாபி பிரபாகரன், அதையே நானும் வழிமொழிகிறேன்.


தி ஷஷாங்க் ரிடம்ஸன்

இப்போதுதான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். அருமையான படம். நீண்ட காலம் சிறையில் வாழும்/வாடும் இரு நண்பர்கள் மற்றும் சில சம்பவங்களை சுவாரசியமாக படமாக்கி இருக்கின்றனர். இதை யாராவது தமிழில் எடுக்கலாமே?

No comments: