Friday, July 07, 2006

இஸ்ரேலில் சோம்பேறி பையன் - பாகம் 1

'டெல் அவிவ் விமான நிலையத்தை நெருங்கி விட்டோம். பயணிகள் இடுப்புப் பட்டையை இறுக்கிக் கொள்ளுங்கள். இனிய இஸ்ரேலிய அனுபவத்திற்கு ராயல் ஜோர்டான் உங்களை வாழ்த்துகிறது..' விமானியின் குரல் ஒலிபெருக்கியில் மெலிதாக வழிந்தது. ஜோர்டான் நாட்டு தலைநகரம் அம்மானிலிருந்து கிளம்பிய முப்பது நிமிட பயணத்தில் டெல் அவிவ் நகரத்தை அடைந்து விட்டோம்.


புனேயிலுள்ள தொலைத்தொடர்பு மென்பொருள்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் சோதனையாளனாக வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில், அலுவலக வேலைக்காக இஸ்ரேல் செல்ல வேண்டியதாகி விட்டது (அட்ரா சோம்பேறி அட்ரா, ஆங்கிலக் கலப்பில்லாமல் எவ்ளோ பெரிய வாசகம்ம்ம்ம்).

புனேயிலிருந்து மும்பைக்கு சென்று, மும்பையிலிருந்து ஜோர்டானின் அம்மானுக்கு வந்திறங்கினோம். உடனடி இணைப்பு விமானத்தில் இடமில்லாததால், 30 மணிநேரம் அம்மானில் 'க்வீன் அலியா' விடுதியில் தங்கியிருந்து விட்டு இஸ்ரேலுக்கு பயணித்தோம். நான் சென்று திரும்பியது ஒரு மாதத்திற்கு முன்பு, தற்போதுள்ள அளவுக்கு நிலைமை அப்போது மோசமில்லை(?).

டெல் அவிவ் நகரத்தில் 'பென் குரியன்' விமான நிலையத்தில் இறங்கிய மறுவினாடியே விமான நிலையத்தின் பிரமாண்டம் இனம்புரியாத ஓர் உணர்ச்சிக் கலவையை ஏற்படுத்தியது. முதல் வெளிநாட்டு பயணம், சென்ற வேலையை நல்லபடியாக முடித்துவிட்டு திரும்ப வேண்டுமே என்று சிந்தனை ஓடியது. மிகப்பெரிய, சுத்தமான, அழகான, அமைதியான(!) விமான நிலையம் பென் குரியன். நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்ட 'பென் குரியன்' என்ற தலைவர் பெயர் விமான நிலையத்திற்கு வைக்கப் பட்டுள்ளது.

'நீங்கள் ஏதாவது பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளீர்களா ?' இமிக்ரேஷன் (இதற்கு தமிழில் என்ன?) அதிகாரி கேட்டபோது தூக்கி வாரிப் போட்டது. ஊரிலிருந்து புறப்படும்போதே அயல்நாட்டு கலாச்சார வகுப்புகளில் தெளிவாக சொல்லி இருந்தார்கள். இமிக்ரேஷன் கேள்விகளுக்கு அதிபுத்திசாலித்தனமாக ஏதாவது உளறி வைக்காமல் எளிமையாக பதிலை சொல்லவும் என்று. விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்தேன்.

இஸ்ரேல் நாட்டு தலைநகரம் ஜெருசலம். மிகச் சிறிய நாடு. மக்கள் தொகை 65 லட்சம் என கேள்விப் பட்டேன் (மும்பையை விடக் குறைவு). எப்போதும் பதட்டமான மத்திய கிழக்கு பகுதியின் அரசியல் சூழலில், சுற்றியுள்ள நாடுகளில் ஜோர்டானுடன் மட்டுமே நட்புறவு. பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சினை பற்றி நான் ஏதாவது கருத்து சொன்னால், பின்னி பெடலெடுக்க தமிழ்மணம் நண்பர்கள்(!) தயாராக உள்ளதால் 'நோ கமெண்ட்ஸ்'.

இஸ்ரேல் நாட்டு கரன்சி 'ஷக்கீல்' (ஷகீலா அல்ல..) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஷக்கீலின் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 10 ரூபாய். நமது ஊர் பைசா போல் அங்கு 'அகோரட்' நாணயம். 100 அகோரட், 1 ஷக்கிலுக்கு சமம். இஸ்ரேலுக்கு புறப்படும்போதே செலவுக்கு அலுவலகம் அமெரிக்க டாலர்கள் கொடுத்தனர் (அப்ப்ப்ப்பா, டாலரை தொட்டு பார்த்துட்டோம்ல..). விமான நிலையத்திலேயே கொஞ்சம் டாலரை ஷக்கீலாக மாற்றிக்கொண்டு வெளியே வந்து டாக்சி பிடித்து 'ஹயர்க்கான் ரோட்டுல ஹோட்டல் பேசல் போப்பா' என்றோம்.

டாக்சி டிரைவர் எங்களை ஏற இறங்க பார்த்து விட்டு, அப்படி ஒரு ஹோட்டலே இஸ்ரேலில் இல்லை என்று சூடமேற்றி சத்தியம் செய்யாத குறையாக சொன்னார். என்னாடா இது, அலுவலகத்தில் இந்த ஹோட்டலதான பதிவு பண்ணி அட்ரஸ் வேறு கொடுத்து விட்ருக்காங்க என்று மூளையை (இல்பொருள் உவமைதான்...) கசக்கிக் கொண்டிருந்த போது இஸ்ரேல்காரர் ஒருவர் சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு 'இது பேசல் அல்ல. ஹோட்டல் பசேல் (BASEL)' என்றார். 'சரிதான்..விளங்கிடும்டா...' என்று ஒருவழியாக ஹோட்டலை வந்தடைந்தோம்.

ஹயர்க்கான் டெல் அவிவ் நகர கடற்கரையை ஒட்டிய அழகான பெரிய வீதி. டெல் அவிவ்வின் பெரிய ஹோட்டல்கள் நிறைய இங்கே உள்ளன. நமது இந்திய தூதரகம் இங்கேதான் உள்ளது. ஹோட்டல் உள்ளே சென்றதும் நடக்கப்போகும் கூத்தை அறியாமல் உற்சாகமாக ரிசப்சனை அணுகுகிறோம். அப்ப்ப்பா, ஒருவழியா ஹோட்டலை வந்து சேர்ந்தாச்சு. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு உங்களையெல்லாம் பாகம் - 2ல் சந்திக்கிறேனே !!

பாகம் - 2ல்

இஸ்ரேலிலுள்ள தமிழ் வலைப்பதிவாளர்கள்
இஸ்ரேல் பற்றிய தமிழ் வலைப்பதிவுகள்
டெல் அவிவ் - ஜாபா சுற்றுப்பயணம்
ஹோட் ஹோசரானிலுள்ள அலுவலகத்தை பற்றி..
'ஷபாத்' என்றால் என்ன?

பின் குறிப்பு

இஸ்ரேல் பயண அனுபவங்களை தொடர்ந்து எழுதி இம்சை அரசன் 24ம் புலிகேசி ஆகலாம் என்று ஒரு உத்தேசம் உள்ளது. நண்பர்களின் பின்னூட்ட ஆதரவைப் பொறுத்து பாகங்கள் சுருக்கவோ, அதிகரிக்கவோ படும். ஆகவே அய்யா, அம்மா, நல்லதோ, கெட்டதோ ஏதாவது இரண்டு வரி பின்னூட்டம் போட்டு, வளர்கின்ற வலைப்பதிவாளரை(அட்ரா, அட்ரா.. 'வ'வுக்கு 'வ' எதுகை மோனை) தமிழ் மணத்தில் வாழ வையுங்கள் (திரும்பவும், 'வ'வுக்கு 'வ') !!

16 comments:

ஜயராமன் said...

நன்றாக வர்ணித்துள்ளீர்கள்.

மேலும், படிக்க ஆசையாக இருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.

தங்கள் எழுதும் பாணி சரியான லொள்ளாக இருக்கிறது. இதுவும் ஒரு சுவைதான். ஆனால், பார்த்து வியந்தது, அபூர்வமான விஷயம், தனிச்சிறப்பு, புதுமையான பேச்சு, பழக்கவழக்கம் என்று மனிதர்கள் இடங்களை பற்றி கலந்து எழுதினால் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும்.

முடிந்தால் படங்களும் போடலாமே!

நன்றி

பி.கு: please removed "word identification" while giving comments. This is a nuisance. people may avoid posting in this case.

ENNAR said...

சோம்பேறி பையன் சுறு சுறுப்பாக எழுதுங்கள்

Anonymous said...

நானும் இஸ்ரேல் சென்றிருக்கிறேன். விதவிதமான பழங்கள் கிடைக்கும் கட்டாயம் சாப்பிட்டு பாருங்கள்.

dondu(#11168674346665545885) said...

நான் பார்க்க விரும்பும் ஒரே வெளி நாடு இஸ்ரேல். பாஸ்போர்ட் கூட எடுக்க விருப்பமில்லாத நான் எங்கே அங்கேயெல்லாம் போகப் போகிறேன். உங்கள் போன்றவர்களை பார்த்து பொறாமைத்தான் பட முடியும்.

yad vashem பார்த்தீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

நன்றி ஜயராமன், அடுத்த பாகத்திலிருந்து படங்களும் வரும்

****

என்னார், சுறுசுறுப்பாவா ?? போங்க சார், உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான் :-))

****

தேசிகன், பழத்திலும் ஓர் கதை உள்ளது, வரும் பாகங்களில் வரும்...

****

டோண்டு, யாத் வசீம் சென்று கண்கலங்கி வந்தேன்.. வரும் பாகங்களில் பார்க்கவும்..

****

Santhosh said...

நல்ல பதிவு தொடர்ந்து எழுதி வாங்க.

வஜ்ரா said...

சோம்பேரிப்பையன்,

இஸ்ரேலில் இருந்து திரும்பிவிட்டீர்களா...?

இல்லை எனில் தனி மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்...இஸ்ரேலில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு வைத்து விடுவோம்!!?

வஜ்ரா said...

டோண்டு சார்,

யாத் வஷெம்

தருமி said...

sigh...! waiting for further postings.

Suresh said...

ஹ்ம்... நன்றாக ஆரம்பித்து இருக்கிறீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...

வடுவூர் குமார் said...

வலைப்பூக்கல் உதவியுடன் இச்ரேல் போக வாய்பு கிடைத்திருக்கிறது.
போடுங்க போடுங்க.

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, இல்லத்தில் இணைய வசதி இல்லாததால், பின்னூட்டங்களை உடனடியாக மட்டுறுத்த இயலவில்லை..
தாமதத்திற்கு மன்னிக்கவும்..

***

சந்தோஷ், நன்றி..ரொம்ப சந்தோஷம்..

***

வஜ்ரா சங்கர், இஸ்ரேலிலிருந்து திரும்பி விட்டேன்.. ஒரு மாதம் கழித்து திரும்ப வரும்போது நாம் சந்திப்போம் :-)

***

தருமி, நன்றி..

***

சுரேஷ் பாபு, நன்றி..

***

வடுவூர் குமார், அலுவல் காரணமாக இஸ்ரேல் சென்றேன், நன்றி..

டிபிஆர்.ஜோசப் said...

எழுதி இம்சை அரசன் 24ம் புலிகேசி ஆகலாம் என்று ஒரு உத்தேசம் உள்ளது. //

அப்படி நிச்சயமா ஆக மாட்டீங்க. முதல் பகுதியே நல்லா சுவாரசியமா இருக்கு..

நண்பர்களின் பின்னூட்ட ஆதரவைப் பொறுத்து பாகங்கள் சுருக்கவோ, அதிகரிக்கவோ படும்.//

பின்னூட்டங்கள பத்தி கவலையே படாதீங்க.. தொடர்ந்து விலாவாரியா எழுதுங்க..

என்ன, அப்பப்போ கொஞ்சம் படங்களையும் போட்டா நல்லாருக்கும்..

Anonymous said...

அடிக்கிர அடியில் தாரத் தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா...ம்ம்ம் கிளப்புங்கள்

அருண் ச

பழூர் கார்த்தி said...

நன்றி டி.பி.ஆர்.ஜோசப், படங்கள் அடுத்தடுத்த பாகங்களில் இணைக்கப்படும்..

****

செந்தில், யாரும் உதைக்க மாட்டார்களென நம்புவோம் :-)

****

அருண், தார தப்பட்டைகள் என்ன, கம்ப்யூட்டர் கீபோர்டே கிழியுமளவுக்கு தூள் கிளப்பி விடுவோம்..
யாரங்கே, அண்ணன் அருணுக்கு ஒரு ப்ளேட் மிர்ச்சி பஜ்ஜி கொடுங்கள் !!

rv said...

வாழ்த்துகள் சோம்பேறிப் பையன்...

சில வருஷங்களுக்கு முன்னாடி போக நல்ல சான்ஸ் கிடச்சுது. போகக்கூடாதுன்னு வீட்ல தடுத்துட்டாங்க. வேற என்ன, பயம் தான்.

சுருக்கமா முடிச்சுடாம, மெகா சீரியல் மாதிரி நீட்டி எழுதுங்க.. அதாங்க மீனா நடிக்க 'லட்சுமி' ஆரமிக்குதுல்ல. அது முடியறவரைக்குமாவது எழுதனும் சரியா?? :)))