Thursday, February 16, 2006

கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்

தலைப்பை படித்தவுடன், அரசியலை எதிர்பார்த்து வரும் நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு. இது அரசியல் பற்றிய பதிவல்ல. சாப்பாட்டில் ஊறுகாய் போல், இப்பதிவிலும் அரசியல் உண்டு. பொறுமையாக படியுங்கள் !

தங்கையின் திருமணத்திற்காக 15 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றிருந்தேன். விடுமுறை நாட்களில் பல சுவையான, மகிழ்ச்சியான சம்பவங்களும், சில கசப்பான அனுபவங்களும் கிடைத்தன. அவற்றிலிருந்து இதோ உங்களுக்காக, சில செய்தித் துளிகள்.

மும்பையிலிருந்து சென்னைக்கு தாதர் விரைவுவண்டியிலும், சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு ராக்போர்ட் விரைவுவண்டியிலும் பதிவு செய்திருந்தேன். தாதர் பயணிகளுக்கான உணவு / திண்பண்டங்கள் வழங்கும் சேவையில் நன்றாக செயல்பட்டது. வண்டியும், கழிவறைகளும் ஓரளவுக்கு சுத்தமாக இருந்தன. ஆனால் ராக்போர்ட் விரைவுவண்டியில் முந்தைய நாளிரவும், மறுநாள் காலையிலும் திண்பண்டங்கள், பானங்கள் எதுவுமே வரவில்லை. காலையில் கும்பகோணம் 7:30 மணிக்கு வந்து சேரும் வரை காபி கூட அருந்த முடிய வில்லை.

கும்பகோணத்தில் ஆங்காங்கே சாலையமைக்கும் / செப்பனிடும் பணிகள் நடந்து வருகின்றன. எங்கள் ஊரில் கூட சிமெண்ட் சாலை அமைக்கப் பட்டுள்ளது. சாலைப் பணியாளர்கள் திரும்ப வந்ததாலா அல்லது தேர்தலுக்காகவா என்று புரியவில்லை.

எங்கள் கிராமத்தில் பள்ளி மாணவர்கள், மாணவிகள் நிறைய பேர் புது மிதிவண்டி வைத்திருந்தனர், அரசாங்கம் கொடுத்தது. சிலர் வெள்ள நிவாரண உதவித்தொகை, வேட்டி, சேலைகள் பெற்றிருந்தனர். இவை அனைத்தும் ஓட்டுகளாக மாறிவிடும் என்றே நினைக்கிறேன்.

சாலைப் பணியாளர்களை திரும்ப அழைத்தது, அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், கலைத்துறையினருக்கு விருதுகள் என அதிமுக அரசு 7 கட்சி கூட்டணிக்கு தலைவலியை கொடுத்து வருவதை கண்கூடாக பார்க்க முடிந்தது. மதிமுக வேறு மதில்மேல் பூனையாக இருந்து வருவது கருணாநிதிக்கு கவலையளிக்கும் விஷயமே.

நான் ஊரிலிருந்த போது எங்கள் கிராமத்திற்கு விஜயகாந்த் தேர்தல் சுற்றுப் பயணமாக வந்தார். 2000 பேர் கொண்ட கூட்டத்தில் தெளிவாக பேசினார். வேலையில்லா திண்டாட்டத்தை, லஞ்ச ஊழலை ஒழிப்பேன். சுகாதார வசதிகளை மேம்படுத்துவேன். ரேஷன் பொருட்களை வீடு வீடாக வினியோகிப்பேன், பட்டதாரி மாணவர்களுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்குவேன் என்றெல்லாம் கூறினார். மக்கள் வெங்காய பகோடா தின்று கொண்டே அனைத்தையும் கேட்டு, சில சமயங்களில் கைதட்டி விட்டு, மெட்டி ஒலி பார்க்க வீட்டுக்கு சென்று விட்டனர். அனைவரின்
முகத்திலும் (என்னையும் சேர்த்து) ஒரு சினிமா நட்த்திரத்தை பார்த்த பரவசம் (மட்டுமே) தெரிந்தது.

கொள்ளிடம் ஆற்றில் நிறைய தண்ணீர். ஆனால் திருச்சியில் காவரி ஆறு வறண்டு காணப்படுகிறது. எங்கே போயிற்று அத்தனை நீரும், கடலுக்கா என்று தெரியவில்லை. எங்கள் கிராமத்திலும், சுற்றுப் புறங்களிலும், விவசாயத்தில் ஓரளவுக்கு நல்ல விளைச்சல்.

எங்கள் ஊரில் பி.ஸ்.என்.எல் டவர் போட்டு விட்டதால் பெரும்பாலோர் கையில் செல்போன் காணப்பட்டது. எஸ்.எம்.ஸ், மிஸ்டு கால், டாக் டைம் போன்ற பதங்களை பெரும்பாலோர் தெரிந்தும், தெரியாமலும் உபயோகித்து கொண்டிருந்தனர்.

கும்பகோணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களை பற்றி விசாரித்தேன். தவமாய் தவமிருந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. டிஷ்யூம் பரவாயில்லை. ஆதி அவுட் என்ற தகவல்கள் கிடைத்தன. இதில் ஆதியை பற்றி நிறைய கிண்டல் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு வந்த ஓர் குறுஞ்செய்தி "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.. ஆதி பார்த்தால் அன்றே சாவு !!!"


ஊரில் இருந்த போது, ஒரு மாலைப்பொழுதில் தமிழ்மணத்தைப் பார்க்கும் ஆவல் எழுந்ததால், ஊரிலிருந்த ஒரே இணையகத்திற்கு (Browsing Center)சென்றேன். இரண்டு கணிப்பொறிகள். ஓர் இளம்பெண், பள்ளி மாணவி ஒருவருக்கு எம்.ஸ் வோர்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். 'ப்ரவுசிங் பண்ணலாமா ??' இது நான். கைலி, சட்டை, ஸ்லிப்பர் செருப்புடன் நின்று கொண்டிருந்தேன். அந்த பெண் நம்பமுடியாமல் 'என்ன ? என்ன வேணும் உங்களுக்கு ?' என்றார். 'இல்ல.. ப்ரவுசிங் பண்ணனும்.. சிஸ்டம் இருக்கா ??' என்றேன். அரை மனதாக 'இருக்கு.. அம்பது ரூவா ஒரு மண்நேரத்துக்கு.. ஆனா அப்பப்ப டிஸ்கனெக்ட் ஆயிடும்.. போன் லைன் சரியில்ல.. பரவாயில்லயா ??' என்றார். அவர் அம்பது ரூவா என்று சொல்லும்போதே நான் திரும்ப ஆரம்பித்து விட்டேன், தமிழ்மணத்திற்கு என்ன, மும்பை சென்று பார்த்துக் கொள்ளலாம் !

எங்கள் ஊரான டி. பழூரிலிருந்து கும்பகோணம் செல்ல சாதரணமாக 75 நிமிடங்கள் ஆகும். தீபாவளி சமயத்தில் பெய்த மழையினால் சாலைகள் படுமோசமாக இருந்ததால், 120 நிமிடங்கள் பயணமாகி விட்டது. சண்முகம் பேருந்தில் இரண்டு டிவி பெட்டிகள் வைக்கப்பட்டு சிடி ப்ளேயரில் ரஜினி தேவுடா.. தேவுடா என்று ஆடிக் கொண்டிருந்தார். திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்ததில் கும்பகோணம் வந்ததே தெரியவில்லை. பக்கத்தில் உட்கார்த்திருந்த பால்காரர் '1234' எஸ்.எம்.எஸ் / குறுஞ்செய்தி கொடுத்து வந்த பதிலில் 'இந்தியா 120 ஃபார் 2, 24 ஒவர், டெண்டுல்கர் விளையாடறான்..' என்று நண்பருக்கு ரன்னிங் கமெண்ட்டரி கொடுத்தார். இந்தியா முன்னேறி வருகிறது என்று எனக்கு தோன்றிய போது சாலையில் 'கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்' என்ற விஜயகாந்த் போஸ்டர் கண்ணில் பட்டது !

12 comments:

Sud Gopal said...

மக்கள் வெங்காய பகோடா தின்று கொண்டே அனைத்தையும் கேட்டு, சில சமயங்களில் கைதட்டி விட்டு, மெட்டி ஒலி பார்க்க வீட்டுக்கு சென்று விட்டனர்.
Did you mean KOLANGAL?

Nice writeup.Felt nostalgic.

Pavals said...

//இந்தியா முன்னேறி வருகிறது என்று எனக்கு தோன்றிய போது சாலையில் 'கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்' என்ற விஜயகாந்த் போஸ்டர் கண்ணில் பட்டது !//
நல்ல நக்கல்.. ஆனா..செல்போனில், மாட்டுக்கு எந்த தீவனம் நல்லது, எப்ப என்ன மருந்து குடுக்கனும், அவுங்க 10ரூபாய்க்குய் சொஸைட்டி(!)க்கு ஊத்துன பாலை அவனவன் எப்படி நூறாக்கறான்னு பார்க்கும் போது இந்தியா முன்னேறுதுன்னு நினைங்க. ஸ்கோர் பார்க்கிறதுக்கும், கருப்பு எம்.ஜி.ஆருக்கு பெருசா வித்தியாசம் இல்லைங்க..

rv said...

நல்லாருக்குங்க. நம்ம ஏரியா வேறையா.. ரொம்பவே பிடிச்சது.

தேவுடா தேவுடா பத்தி ஒண்ணு. நானும் பாத்தேன் போன தடவை இந்தியா வந்தபோது. பஸ்லேல்லாம் சர்வசாதாரணமா ரெண்டு டிவி (front & rear) ஒரு முப்பது ஸ்பீக்கர், டிவிடி ப்ளேயர் வச்சுகிட்டு நல்லா ரவுசு உடறாங்க. அம்மா திருட்டு விசிடி தான் போடக்கூடாதுன்னு சொன்னதால, டிவிடி போடறாங்களோ என்னவோ. நமக்கு நல்லா பொழுது போறதென்னவோ உண்மைதான்.

---
சின்ன விஷயம்: kbgjwnui - இதை தப்பில்லாம டைப் அடிக்கணும்னு ப்ளாக்கர் வர்ட் வெரிபிகேஷன் படுத்தறார். அதான் மட்டுறுத்தல் வந்திருச்சே.. :)

தருமி said...

"எங்கள் ஊரான டி. பழூரிலிருந்து.."//
- உங்க ஊருக்கும், பொன்னியின் செல்வனின் வரும் பழுவூருக்கும் ஏதாவது தொடர்புண்டா?

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நல்லா எழுதி இருக்கீங்க. பஸ்-ல வீடியோ போட்டதால வெளியே வேடிக்கை பார்க்குற இன்பம் மறந்து மறஞ்சு போய்க்கிட்டிருக்குன்னு எனக்குத் தோணுச்சு. பயண தூரம், அலுப்பு கொஞ்சம் மறக்க வச்சாலும்.

Unknown said...

உங்க கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார் கட்டுரை உங்களோடு நானும் உங்க ஊருக்கு வந்த மாதிரி ஒரு அனுவத்தைக் கொடுத்திருச்சு...கலக்கல் பதிவு பாஸ்

Anonymous said...

தமிழ் வாழ்க,

யோவ்... ரொம்ப நாள் கழிச்சு, மன்னிக்கவும், முதன் முறையாக ஒரு நல்லப் பதிப்பு. காமெடியும் கருத்தும் கலந்த நல்லக் கலபபு.

பழூர் கார்த்தி said...

சுதர்சன்.கோபால், சூடான வெங்காய பகோடாவை சாப்பிட்டு விட்டு, அதன் லேசாக கசந்த எண்ணெய் ருசியுடன் ஓரு டீ (சாயா) அடித்தால், சொர்க்கமே தெரியும் :-) மெட்டி ஒலி முடிந்து விட்டதென நினைக்கிறேன்.. கோலங்களுக்கு நிறைய ரசிகர்கள்.. பாவம் தமிழக மக்கள் !!

*****

ராசா, செல்போனில் ஸ்கோர் பார்ப்பதும் நல்ல முன்னேற்றம்தான் இல்லையா..

*****

இராமநாதன், ஆமா பிரைவேட் பஸ்ஸெல்லாம் இப்ப நம்மூருல களை கட்டுது.. வேர்ட் வெரிபிகேஷன் வைக்காவிடில் என் மெயிலுக்கு நிறைய ஜங்க் / விளம்பர பின்னூட்டங்கள் வருகின்றன...

*****

தருமி, நான் பொன்னியின் செல்வன் படித்ததில்லை.. ஆனால் எங்களூருக்கும் அதில் வரும் பழவூருக்கும் தொடர்பில்லை என்றே நினைக்கின்றேன்..

*****

செல்வராஜ், பயண அலுப்பு தெரிவதில்லை என்பது உண்மைதான்.. யாராவது கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் அடித்தாலும் தெரியாதே..

*****

தேவ், நீங்க ஒருமுறை எங்க ஊருக்கு வந்து பாருங்க.. இன்னும் நல்லாயிருக்கும்..

*****

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி !!!

ENNAR said...

கொள்ளிடத்தில் ஏழு கதவணைகள் கட்டச்சொல்லுங்கள்
http://merkondar.blogspot.com/2005/07/blog-post_10.html

ஜோ/Joe said...

நல்ல பதிவு!
//தவமாய் தவமிருந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது//
இதுலயாவது கொஞ்சம் முன்னேற்றம் இருக்க மாதிரி தெரியுது.

பழூர் கார்த்தி said...

என்னார், உங்கள் பதிவைப் படித்தேன்.. உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்.. ஆனால் நமது அரசியல்வாதிகளுக்கு எங்கே இதற்கெல்லாம் நேரமிருக்கப் போகிறது ??

*****

ஜோ, ஆமாம், நல்ல படங்கள் ஓட வேண்டும்.. அப்போதுதான், அதைப் பார்த்தாவது, நிறைய நல்ல படங்கள் வரும்..

இன்றைய ஆதி குறுஞ்செய்தி


தலைவலிக்கு சாரிடான்
தகதகக்க தங்கவேட்டை
தற்கொலைக்கு ஆதி..

Sundari said...

hi

romba nalla irundhadhu...I could relate to your thoughts ...
the last comment was too good..
evalo munnerinalum ..namma oor politics munneradhunu thonudhu..which is bad..
still a very nicely thought out post ... Way to Go!!!!