கார்ட்டூன்கள் வரைவதில் அனுபவம் அதிகமில்லை. இருந்தாலும் ஆர்வம் அதிகம் உண்டு. உங்கள் கருத்தை அவசியம் எதிர்பார்க்கிறேன், அது ஒரு ஸ்மைலியாக இருந்தாலும்!
சோம்பேறி பையன் நான். நினைத்ததையெல்லாம் எழுதுபவன். கதை, கவிதை, கார்ட்டூன், விமர்சனங்கள் என்று எனது அலம்பலுக்கு ஒரு எல்லையே இல்லை.. ஏழு வருடங்களாக வலைப்பதிகிறேன்.. அமெரிக்காவில் வசிக்கிறேன்..
Thursday, July 26, 2007
தயாநிதி மாறன் - அன்றும் & இன்றும் - கார்ட்டூன்
கார்ட்டூன்கள் வரைவதில் அனுபவம் அதிகமில்லை. இருந்தாலும் ஆர்வம் அதிகம் உண்டு. உங்கள் கருத்தை அவசியம் எதிர்பார்க்கிறேன், அது ஒரு ஸ்மைலியாக இருந்தாலும்!
Wednesday, July 25, 2007
சில பதிவர்களிடம் சில கேள்விகள்
1. செந்தழல் ரவி
அது என்ன 'செந்தழல்' ரவி? செந்தழல் என்பது என்ன? உங்கள் ஊர்ப் பெயரா அல்லது காரணப் பெயரா? நிழல்கள் ரவி மாதிரி இருக்க வேண்டும் என்று செந்தழல் ரவி என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா?
2. தேசிகன்
எழுத்தாளர் சுஜாதா உங்களுக்கு எப்போதிலிருந்து பழக்கம்? எப்படி இந்தளவுக்கு பழக்கமானார்? உங்கள் உறவுக்காரரா அவர்?
3. டோண்டு
மகரநெடுங்குழைக்காதன் என்பவர் யார்? கடவுளா, எந்த கடவுள்? அவருக்கு இப்பெயர் எப்படி வந்தது?
4. பாஸ்டன் பாலா
ஈ.தமிழ் வலையகத்தில் முன்பு போல் இப்போதெல்லாம் தினமும் பதிவுகள் வருவதில்லையே ஏன்? நீங்கள்தான் இட்லிவடை என்று வதந்தி கிளம்ப காரணம் என்னவாக இருக்கலாம்?
5. லக்கிலுக்
உங்கள் பெயரை தமிழ் படுத்தினால் எப்படி வைக்கலாம்? 'அதிர்ஷ்டப் பார்வை' என்றா? லக்கி என்பதற்கான தூய தமிழ் சொல் என்ன? அதிர்ஷ்டம் என்பது வடமொழிச் சொல் அல்லவா?
பதிவர்களே, பதில்களை வீசுங்கள், பரிசுகளை(?) வெல்லுங்கள்!!
கேள்விகள் தொடரும்.....
Tuesday, July 24, 2007
திருமண வாழ்க்கை - ஓவியம்
மேலே உள்ள படம் சிந்தாநதி நடத்தும் ஓவியப் போட்டிக்காக வரையப்(?) பட்டது. இது முன் நவீனத்துவ ஓவியமாகியதால் யாரும் புரியவில்லை என்று கேள்வி எதுவும் கேட்கக் கூடாது. உங்களுக்கு என்னவெல்லாம் புரிகிறது என்று பின்னூட்த்தில் கூறலாம். சிறந்த பின்னூட்டத்திற்கு பிளாஸ்டிக் குடம் பரிசளிக்கும் எண்ணம் உள்ளது :-)
பின்குறிப்பு: எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் ஆகிவிடும் போல் தோன்றுகிறது.
Saturday, July 21, 2007
இந்திய கிரிக்கெட் - மற்றுமோர் சொதப்பல்
தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து பிட்ச்சுகளில் ஒப்பனர் வேலைக்கு ஒத்து வர மாட்டார். ஏதோ பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை பிட்ச்சுகளில் வேண்டுமானால் கார்த்திக்கை வைத்து ஒப்பேத்தலாம். இந்தியாவில் வேறு ஸ்பெசலிஸ்ட் ஓப்பனர்களே இல்லையா, என்ன??
217/1 என்றிருந்த இங்கிலாந்து 298 ரன்களில் ஆல் அவுட் ஆன போதே எங்கோ இடித்தது. சரிதான், நமது வீரர்கள் திடீர் உத்வேகம் பெற்று இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கி விட்டார்கள் என்று மகிழ்ந்து உச்சி முகர்வதற்குள் பேட்டிங்கில் சொதப்பி விட்டனர். ஆரம்பத்தில் இருந்தே தொடரும் கதைதான் இது. வெளிநாட்டு தொடர்களில் அதுவும் பந்து ஸ்விங் ஆகும் பிட்ச்சில் இந்தியாவின் பருப்பு எப்போதுமே வேகாது. இப்போதும் இப்படித்தான் இருக்கிறது.
பார்ப்போம், இரண்டாவது இன்னிங்ஸில் என்ன நடக்கிறதென்று!!!
Friday, July 20, 2007
புனே -> பெங்களூரூ -> கும்பகோணம்
சேவையில்லை, பெங்களூரூ வழியாக செல்லலாம், ரூ 9000 பயணக் கட்டணம் திரும்ப வருவதற்கும் சேர்த்து, கிங்பிஷர் ஏர்வேசில் (இதனை தமிழ்ப் படுத்தினால் எப்படி இருக்கும், கிங்பிஷர் - அரச மீன் பிடிப்பவர் :-)). ஜெட் ஏர்வேசில் ரூ 10000 ஆகிறது. சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 6 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும்.
ஆனால் புனே - பெங்களூரூ விமானக் கட்டணம் ரூ 3750 மட்டும்தான் (திரும்ப வருவதற்கும் சேர்த்து). ரீடிப் கட்டணதேடுதல் இணையத்தில் தேடி ஒருவழியாக இண்டிகோ விமானத்தில் பதிவு செய்து விட்டேன். பெங்களூரூ - கும்பகோணம் 10 மணிநேரப் பயணம், பரவாயில்லை பேருந்தில் பயணிக்கலாம் என்று முடிவாகி விட்டது.
புனேயிலிருந்து மாலை 5:25க்கு விமானம் கிளம்பியது. இண்டிகோ விமானச் சேவை பரவாயில்லை, டிக்கெட் குளறுபடிகளில்லை. இணையத்தளமும் நன்றாக, எளிமையாக உள்ளது. பயணத்தின் போது கொஞ்சம் விமானம் ஆட்டம் காட்டினாலும், சரியாக இரவு 7 மணிக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள் :-)
பெங்களூரூவிற்கு இதுவரை வந்ததில்லை. தேசிகன் வலைப்பக்களிலும்(பெண்களூர்), மற்ற வலைப்பதிவர்களின் வலைப்பக்கங்களிலும், செய்தி ஊடகங்களில் ஊரைப் பற்றி கேள்விப் பட்டதை தவிர வேறு அனுபவமில்லை. பரவாயில்லை, ஊர் நன்றாகத்தான் இருக்கிறது.
பெங்களூரூ விமானநிலையம் ஓரளவுக்கு சுத்தமாக உள்ளது. என்னை ஆச்சரியப் படுத்தியது இதுவல்ல, வெளியே வந்தவுடன் மெஜஸ்டிக்(கேம்ப்கவுடா) பேருந்து நிலையம் செல்வதற்கு ஆட்டோவைத் தேடினேன். ஆட்டோவிற்கான வரிசை முன்பு, ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் நின்று கொண்டு பயணிகளின் பெயர், செல்லுமிடம், செல்பேசி எண்ணை,
ஆட்டோ எண்ணை குறித்துக் கொண்டு வழியனுப்பி வைக்கிறார். அற்புதமான ஏற்பாடு. ஊர் தெரியாது புதிதாக வருபவர்களுக்கு இது பயனுள்ளது.
பெங்களூரூவில் சாலைகள் நன்றாக உள்ளன. ஓரளவுக்கு ஊரே சுத்தமாக உள்ளது (மும்பை, புனேவை ஒப்பிடும்போது).ஆட்டோகாரர் மீட்டர் போட்டு, 74 ரூபாய் (மீட்டர் சார்ஜ்) வாங்கிக் கொண்டு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். ஆனால் டிராபிக் ரொம்பவும் அதிகம். விமான நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு 75 நிமிடத்திற்கு மேலாகி விட்டது (12 கிமீ மட்டுமே என்று நினைக்கிறேன்).
நான் பார்த்த வரையில் தமிழர்கள் நிறைய பேர் தென்பட்டனர். தமிழ் பத்திரிக்கைகளையும், செய்தித் தாள்களையும் கூட பார்க்க முடிந்தது. மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8:30க்கு கே.எஸ்.ஆர்.டி.சி ஏசி வசதிப் பேருந்து கும்பகோணத்திற்கு கிளம்புகிறது. ரூ 363 பயணக் கட்டணம். பேருந்து சுத்தமாக, வசதியாக உள்ளது. டிவி தொல்லை இல்லை. போர்த்திக் கொள்ள போர்வை, தண்ணீர் பாட்டில், முகம் துடைக்க டிஸ்யூ பேப்பர் போன்றவற்றை கொடுக்கின்றனர்.
சற்று கண்ணயர்ந்தால் 11 மணியளவில் கிருஷ்ணகிரி, காலை 5 மணிக்கு திருச்சி, 7 மணிக்கு கும்பகோணத்தில் கொண்டு சேர்த்து விடுகின்றனர். இவ்வண்டியைத் தவிர கேபிஎன் பேருந்தும் இருக்கிறது.
மூன்று நாட்கள் ஊரில் இருந்து விட்டு, திரும்பவும் கும்பகோணத்திலிருந்து, பெங்களூரூ. அங்கிருந்து புனே வந்து சேர்ந்து நண்பர்களிடம் 'அதிருதுல்ல....' என்றேன்!
Tuesday, April 24, 2007
கிரிக்கெட் - இந்த வாரம்
தற்போதைய ஃபார்மில் இறுதி போட்டிக்கு செல்ல, இலங்கைக்கே வாய்ப்பு அதிகம். அனுபவ வாஸ், அதிரடி மாலிங்கா, சுழற்புயல் முரளிதரன் என பந்துவீச்சிலும், ஜெயசூர்யா, சங்ககரா, ஜெயவர்த்தனே போன்ற அனுபவ வீரர்களால் மட்டையடியிலும் (பேட்டிங்) இலங்கை ஜொலிக்கிறது.
நாளை நடக்க இருக்கும் இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா இன்னும் ஒருமுறை இறுதிப் போட்டியில் விளையாட தயாராக உள்ளது.
இறுதிப் போட்டியில் எனது கணிப்பு : ஆஸ்திரேலியா - இலங்கை, உங்கள் கணிப்பு என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!
உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் காற்று வாங்குகின்றன. லாரா ஓய்வுபெற்ற வெஸ்ட் இண்டிஸ் - இங்கிலாந்து போட்டியை தவிர மற்ற பெரும்பாலான போட்டிகளில் பார்வையாளர்கள் மிகவும் குறைவே! அதிகமான டிக்கெட் விலை ஒரு காரணமாக சொல்லப் பட்டாலும், எனக்கென்னவோ காரணம் வெறெங்கோ உள்ளதாகப் படுகிறது, உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!
வங்கதேசத்திற்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி தேர்வாகி விட்டது. ராகுல் டிராவிட் கேப்டனாக, இளமையான(?) அணி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. டெண்டுல்கர், கங்குலி, ஹர்பஜன், அகார்கர், பதான் போன்றோர் கழட்டி விடப் பட்டுள்ளனர். டிராவிட் தேர்ந்தெடுக்கப் பட்டதும் கேள்விக் குறியே! அடுத்த உலகக் கோப்பையை மனதில் வைத்து இளமையான ஒருவரை கேப்டனாக தேர்ந்தெடுத்திருக்கலாம். யுவராஜ் சிங், சரியான தேர்வாக இருந்திருப்பார்.
Thursday, April 12, 2007
'தி' என்றால் திருச்சி...
நேற்று நண்பர் ஒருவரிடமிருந்து செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது "I m going 2 TRY this wknd". நண்பர் திருச்சியை சேர்ந்தவர் என்பதால், அவர் இந்த வார இறுதியில் திருச்சிக்கு செல்கிறார் என்பதை உடனே புரிந்து கொள்ள முடிந்தது.
திருச்சிராப்பள்ளி என்பதே திருச்சியின் முழுப்பெயர். பழங்காலத்தில் திரு. சிராப்பள்ளி என்று பழக்கத்தில் இருந்து வந்தது, காலப்போக்கில் திருச்சிராப்பள்ளி என்று மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி என்னும் பெயர், எப்போது திருச்சி என சுருக்கமாக வழங்க ஆரம்பிக்கப் பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை பேருந்துகளிலும், மற்ற பெயர் பலகைகளிலும் எழுதுவதற்கு சுலபமாக கடந்த 40 - 50 வருடங்களுக்குள்ளாகவே இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம்.
திருச்சியின் பெயர் மட்டுமல்லாமல், தஞ்சாவூர் என்பது தஞ்சை என்றும், கும்பகோணம் என்பது குடந்தை என்றும், திருநெல்வேலி என்று நெல்லை என்றும், பாண்டிச்சேரி என்பது பாண்டி என்றும் அழகாக சுருக்கப்பட்டுள்ளன. எனக்கென்னவோ சுருக்கப்பட்டுள்ள பெயர்களை விட, உண்மையான முழுப்பெயர்களே கவர்ச்சியாக உள்ளதாக உணறுகின்றேன்.
இப்போது இணைய அரட்டை, செல்பேசி குறுஞ்செய்திகளெல்லாம் வந்துவிட்ட பிறகு திருச்சி என்பதைக் கூட TRY என்றோ try. என்றோ இன்னும் சுருக்கி பயன் படுத்துகிறார்கள். ஒருவேளை எதிர்காலங்களில் இதுவும் கூட இன்னும் சுருங்கி திருச்சியை 'T' அல்லது 'தி' என்று பயன் படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்(how are you) என்பதை h r u? என்று கேட்கிறார்கள். இதை விடவும் இணைய அரட்டைகளில் ASL என்னும் அறிமுகம் செய்து கொள்ளும் வார்த்தை பிரபலம். ASL என்றால் Age, Sex & Location.
குறுஞ்செய்திகளில் சென்னை என்பது CHN என குறிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வந்தால் (இன்னமும் ஏன் வரவில்லை?) சென்னையை எவ்வாறு குறிப்பிடுவார்கள் என்று யோசித்தால் விடை புலப்பட வில்லை. 'செ' என்று குறிப்பிட முடியுமா? உதாரணத்திற்கு ஜெயங்கொண்டம் என்ற ஊரின் பெயரை 'ஜெ' என்று சொல்ல முடியுமா? ஜெ என்றால் இன்று வரை ஜெயலலிதாவை மட்டுமல்லவா குறிக்கிறது.
திருச்சியில் தில்லைநகர் என்ற இடத்தின் பெயரை தி.நகர் என்று சில பேருந்து பலகைகளில் பார்க்கலாம். இதுவே சென்னையில் தி.நகர் என்றால் தியாகராஜ நகர் என புரிந்து கொள்ள வேண்டும். மேலும் திருச்சியில் வயலூர், புத்தூர், உறையூர், திருவரங்கம் போன்றவற்றை எப்படி சுருக்க முடியும் என்று தெரியவில்லை.
எது எப்படியிருந்தாலும், தி என்றால் திருச்சி என்பது உடனே சாத்தியமாக வேண்டும் என்றால் ரஜினியின் அடுத்த படத்தில் ஒரு பாட்டு வைத்து விடலாம் 'தி என்றால் திருச்சி... ர என்றால் ரஜினி...', எஸ்பிபி மூச்சு விடாமல் பாடுவது ஒரு சரணம் வைத்து விட்டால் அப்புறம் கேட்கவா வேண்டும். உலகம் முழுக்க தி என்றால் திருச்சி என்று தெரிந்து விடும், என்ன சொல்கிறீர்கள்?
Thursday, April 05, 2007
'பல்லேலக்கா' சிவாஜி !!!!
எல்லாரும் சிவாஜியை பத்தி பதிவு போடறாங்க, நாமும் நம்ம பங்குக்கு ஒரு பதிவு போடலேன்னா எங்க பீல்ட் அவுட் ஆயிடுவோமான்னு பயமா இருக்கு... வந்ததுதான் வந்துட்டீங்க, படிச்சுட்டு ஏதாவது திட்டிட்டு போங்களேன்!
ரெண்டு வருஷமா பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்து ஒரு வழியா சிவாஜி பாட்டெல்லாம் ரிலிஸ் ஆயிடுச்சு. புனே ரஸ்தாபேட் ஏரியாவுல அதிகாரப்பூர்வ (அபிஷியல்) சிடியே கிடைக்குது. 125 ரூவாங்கிறது கொஞ்சம் அதிகந்தான் இருந்தாலும் ரஹ்மான் - ஷங்கர் - ரஜினிகாந்த் காம்பினேஷன் இருக்கிறதால நம்ம ப்ரண்ட் வாங்கிட்டு வந்துட்டாரு!
ஏழு பாட்டுங்க இருக்குங்க. முதல் தடவை கேட்கறப்பவே மூனு நாலு பாட்டுங்க பச்சக்கன்னு அட்ராக்ட் பண்ணிடுச்சுங்க. 'அதிரடி..தீ..'ன்னு ஆரம்பிக்கிற ரஹ்மான் பாட்டு நாலு தடவ கேட்டப்புறம் பரவாயில்லை போல இருக்கு. பாட்டு வரியெல்லாம் கேரண்ட்டியா புரிஞ்சுக்கவே முடியாது.
ரெண்டாவது பாட்டு 'பல்லேலக்கா' சூப்பரோ சூப்பர். 'சூரியனோ சந்திரனோ...'ன்னு ஆரம்பிச்சு எஸ்பிபி 'காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்..'ன்னு எண்ட்டர் ஆவராரு பாருங்க, அட்டகாசம். இப்ப எழுதறப்பவே எனக்கு புல்லரிக்குது, தியேட்டர்ல பிச்சு உதறும்னு நினைக்கிறேன். ஓப்பனிங் சாங் இதுதான். சந்திரமுகி 'தேவுடா.. தேவுடா..' மாதிரியே இதுவும் கலக்கும் பாருங்க.
'சஹானா சாரல்..' பாட்டு சூப்பர் மெலடி. உதித் நாரயணனும், சின்மயியும் போட்டு போட்டுட்டு கலக்கி இருக்காங்க. பாட்டு வரிகளெல்லாம் தெளிவா கேட்க முடிவதே ஒரு பெரிய சாதனைதான். 'மார்கழிப் பூவே' பாட்டுக்கு அப்புறம் ரஹ்மானோட நெக்ஸ்ட் மெலடி ரேங்க் இதுக்குத்தான்னு நான் (நான் மட்டும்தான்) நினைக்கிறேன்..
'சஹாரா பூக்கள்..' பாட்டு சோகமான மெலடி. விஜய் யேசுதாஸ், கோமதி ஸ்ரீ (யாருங்க இந்த பொண்ணு, புதுசா ??) பாடியிருக்காங்க. பாடல் ஓகே ரகம். ரொம்ப மெதுவா, இழுக்கறாப்ல இருக்கு.
'ஸ்டைல்..' பாட்டு ரொம்ப ஸ்டைலா இருக்கு. இருந்தாலும் 'ஒரு கூடை சன்லைட்..' அப்படிங்கிற வரியே வலைப்பதிவையெல்லாம் படிச்சுட்டு கேட்டாத்தான் புரியுது. பாட்டு வேற ரொம்ப வெஸ்டர்னா இருக்கு. என்னமோ போங்க..
'சிவாஜி' தீம் மியுசிக் சுமார்தான், சொல்றதுக்கு ஒன்னுமில்லை.
கடைசி பாட்டு 'வாஜி..வாஜி..சிவாஜி' கலக்கல் பாட்டு. ஹரிஹரன், மதுஸ்ரீ பட்டையை கிளப்பி இருக்காங்க. 'ஆம்பல்..ஆம்பல்..'ன்னு ஆரம்பிக்கிற பாட்டுல வார்த்தைகளெல்லாம் சூப்பரா வந்துருக்கு. சின்ன குழந்தைகளெல்லாம் முணுமுணுக்கப் போறாங்க இந்த பாட்டைத்தான்.
மொத்தத்தில பாட்டெல்லாம் நிறைய மார்க் வாங்கி படத்தை பற்றி எதிர்பார்ப்பை இன்னும் எக்கச்சக்கமாக எகிற வைச்சிக்குங்க. படம் மே - 17ம் தேதி ரிலிஸ்ன்னு சொல்றாங்க. அதுக்கு முன்னாடியே திருட்டு விசிடி வந்தாலும் வந்துரும். விசிடியை பார்க்காம, தியேட்டருக்கு போய் மக்களோட மக்களா படத்த பாருங்க, பாத்துட்டு வந்து நீங்களும் உங்க பங்குக்கு ஒரு விமர்சனப் பதிவு போட்ருங்க!!
கொசுறு தகவல்:
புனேயில் இருக்கும் எங்க ஆபிஸ் கேம்பஸ்லயும் ஷூட்டிங் நடந்திருக்கு. எங்க ஆபிஸ் இருக்கிற சைபர் சிட்டிதான் 'சிவாஜி யுனிவர்சிட்டி'யா படத்தில மாற்றப் பட்டிருக்கு. ரஜினி காலேஜ் திறக்கற சீனை படத்தில் பாத்துட்டு வந்து எப்படி இருக்குன்னு மறக்காம எனக்கு சொல்லுங்க!! எங்கயாவது ஒரு
ப்ரேம்ல நான் கூட இருக்கலாம்!!
Wednesday, April 04, 2007
கிரிக்கெட் உலகக்கோப்பை யாருக்கு?
முதலில் அரையிறுதிக்கு தகுதிபெறக் கூடிய அணிகளின் வாய்ப்புகளைப் பற்றி பார்ப்போம்.
சூப்பர்-8க்கு தகுதி பெற்ற அணிகளில் அயர்லாந்து, பங்களாதேஷ் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எனவே இவைகளை ஒதுக்கி விடலாம். வெஸ்ட் இண்டீஸ் தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. தற்போதைய ஃபார்மில் இதுவும் வெளியேறி விடும்.இங்கிலாந்தும் சுமாராகத்தான் காட்சி அளிக்கிறது. அயர்லாந்துடன் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. எனவே இதற்கும் வாய்ப்புகள் குறைவு.
எனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியுசிலாந்து, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். இவற்றில் முதலிடம் பெறும் அணி நான்காமிடம் பெறும் அணியிடமும், இரண்டாமிடம் பெறும் அணி மூன்றாமிடம் பெறும் அணியிடமும் மோதும். தற்போதைய நிலைமையின் படி, இரு அரையிறுதிகளிலும் தென்னாப்ரிக்கா - இலங்கை (A2 vs A3), ஆஸ்திரேலியா - நியுசிலாந்து (A1 vs A4) மோதுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இவற்றில் வென்று இறுதிப் போட்டியில் மோதுவதற்கு ஆஸ்திரேலியா & தென்னாப்ரிக்கா அணிகள் தயாராக உள்ளன. வாய்ப்பும், ஃபார்மும் கூட இவ்விரண்டு அணிகளுக்கே உள்ளன. ஆனாலும் அந்த நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அவையே முன்னேறலாம். இதெல்லாம்
சரி, இறுதிப்போட்டியில் யார் வெல்வார் என்று கேட்கிறீர்களா? தென்னாப்ரிக்கா வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை, பொறுத்திருந்து பார்ப்போமே!!
இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரர் ஆவதற்கான வாய்ப்பு மேத்யூ ஹேடன், மெக்ராத், ஜெயசூர்யா, மாலிங்கா ஆகிய வீரர்களுக்கு அதிகமுள்ளது! இவ்வீரர்களில் முதல் மூவர் 30 வயதை தாண்டிய அனுபவ வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உங்கள் சாய்ஸ் (உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி, சிறந்த வீரர்) என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
Tuesday, November 21, 2006
கடைசி அஸ்திரம் - மூன்று வரிக் கதை
"முடியவே முடியாது... காதல், கீதலெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது.. என் கவுரவம், அந்தஸ்து என்னாவது" அப்பா வானத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதித்தார்.
"அப்பா..... அவளும் நம்ம ஜாதிதாம்பா...." கடைசி அஸ்திரத்தை வீசினேன் நான்.
"கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம் ??..." என்றார் அன்புள்ள அப்பா.
<<<<>>>>
புகைப்படம் : புனே கிரிவன் மலைப்பகுதி
Tuesday, November 07, 2006
இயலாதோர்க்கான வேலைவாய்ப்பு சந்தை
பட்டதாரிகளான இயலாதோர், எபிலிட்டி பவுண்டேஷன் வலைத்தளத்தில் இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.
வலைத்தளம்: http://www.abilityfoundation.org/organisations1.htm
தொலைபேசி: +91 44 2445 2400
மின்னஞ்சல்: jobs@abilityfoundation.org
இதே வலைத்தளத்தில் நிறுவனங்களும், வேலைக்கு சிறப்பு தேவை மக்களை தேர்ந்தெடுக்க, பதிவு செய்து கொள்ளலாம்.
<<<>>>
If you know any disabled graduates, help them by passing this info.Job fair organized on 17th Dec 06 for the disabled graduates.It will be held in Chennai.
For more details: http://www.abilityfoundation.org/organisations1.htm
For more queries Call : +91 44 2445 2400
Or mail us at jobs@abilityfoundation.org
<<<>>>
தகவல் நன்றி: ரத்னாகர் மிஷ்ரா, புனே.
<<<>>>
நண்பர்களே, உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இத்தகவலை பரப்புங்கள். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலும், இங்கு வேலைக்கு தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்யுங்களேன், நன்றி!
<<<>>>
தமிழ் வலைப்பதிவுகள் - பொருத்துக
சரியான விடைகளை பின்னூட்டத்தில் (எ.கா: 1 - j, 2-e, ....) கூறுங்கள். பின்னூட்டங்கள் உடனே வெளிவராது. சரியான பதிலென்றால் உங்களைப் பாராட்டி ஒரு சிறுகவிதையும், தவறென்றால் குறிப்பும் வழங்கப் படலாம். புதிரில் சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர்களும் கலந்து கொள்ளலாம்!
1. டி.பி.ஆர்.ஜோசப் - a. பொருளாதார கட்டுரைகள்
2. பாஸ்டன் பாலா - b. அத்தை பெண்கள்: ராஷ்ஷசிகள் என்று, கவிதை புனைபவர்
3. தேசிகன் - c. ராமயணக் கதை, ஐடிபில் நினைவுகள் எழுதும் மொழிபெயர்ப்பாளர்
4. லக்கிலுக் - d. திரும்பிப் பார்த்தவர்
5. மா சிவகுமார் - e. சமீபத்திய 'தேன்கூடு போட்டி' விமர்சகர்
6. *** கணேசன் - f. 'இலவச'த்தை வழங்கியவர்
7. கார்த்திக் பிரபு - g. செய்திகளை பேச வைத்தவர்
8. யதா - h. தமிழில் எண்ணங்கள்
9. டோண்டு - i. கடலளவுக்கு கலக்குபவர்
10. பத்ரி - j. கோயில்கள் நிறைய சுற்றும், 'பெண்களூர்'காரர்
Monday, October 30, 2006
இன்று திங்கள் கிழமை..
<<<>>>
இன்று திங்கள் கிழமை,
நாளை செவ்வாய் கிழமை,
ஒவ்வொரு முறையும்
வாங்கிக் கொடுக்கும் குளிர்பானங்கள்,
கூட்டிச் செல்லும் திரைப்படங்கள்,
உணவருந்தும் குளிரூட்டப்பட்ட விடுதிகள்,
கணக்கிலடங்கா பரிசுப் பொருட்கள்,
மணிக்கு இருமுறை தொலைபேசி அழைப்புகள்,
அளவில்லா இணைய அரட்டைகள்,
இவைகளால் கரையும் என் வங்கி சேமிப்பு,
எல்லாம் நினைவிற்கு வருகிறதடி
உன்னை பார்த்தவுடன், என் காதலி !!
<<<>>>
Friday, October 27, 2006
இன்று வெள்ளிக்கிழமை...
இன்று வெள்ளிக்கிழமை,
நாளை சனிக்கிழமை,
நாளை மறுநாள் ஞாயிறு,
நம் பெயர்கள்,
தோழிகளின் பெயர்கள்,
நம் செல்பேசி எண்கள்,
மின்னஞ்சல் கடவுச்சொல்,
பணம் வழங்கும் அட்டையின் கடவு எண்,
நேற்று நாம் பார்த்த திரைப்படத்தின் கதை....
எல்லாம் நினைவில் உள்ளதடா
உன்னை பார்க்கும் வரை, என் காதலா !!
<<<<<>>>>>
புகைப்பட உதவி : நண்பர் ராகவேந்தர், புனே.
Tuesday, October 24, 2006
விறுவிறுப்பாகும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள்
இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் லீக் போட்டிகளில், எதிர்பார்த்த படியே சில எதிர்பாராத முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இதில் முக்கியமானது, ஆஸ்திரேலியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கொடுத்த ஆப்பு!ஆப்புகளில் அடுத்த இடத்தை பிடிப்பது, தென்னாப்ரிக்காவுக்கு நியூசிலாந்து கொடுத்தது.
லீக் சுற்றில் முதல் போட்டியில், இந்தியா தட்டுத் தடுமாறி இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய பந்துவீச்சாளர்கள், சிறப்பாக ஆடி இங்கிலாந்தை 125 ரன்களில் ஆல் அவுட்டாக்கிய போதும், பேட்டிங்கில் 6 விக்கெட்டுகளை இழந்துதான் இந்தியா வெற்றி பெற முடிந்தது. சேவக் டிவெண்ட்டி20 நினைப்பில் ஆடுவதை மாற்றிக் கொண்டால் இந்தியா பிழைக்கும்!
+: பதான் ஃபார்முக்கு திரும்பியது, முனாப் பட்டேல், பவாரின் பந்துவீச்சு
-: டிராவிட், தோனியின் ஃபார்ம், இங்கிலாந்தின் பேட்டிங்
இரண்டாம் போட்டியில் நியுசிலாந்து ப்ளெமிங் தயவில் 195 ரன்கள் எடுத்தது. ஆனால் தென்னாப்ரிக்கா மில்ஸ், ஓரம், படேல் போன்றோரின் பந்துவீச்சில் 108 ரன்களில் வீழ்ந்தது சற்று எதிர்பாரததே!
-: தென்னாப்ரிக்காவின் 'டுபாக்கூர்' பேட்டிங்
மூன்றாம் போட்டியில் பலவித குழப்பங்களில் சிக்கியிருந்த பாகிஸ்தான், பயங்கர ஃபார்மில் இருந்த இலங்கையை வீழ்த்தியது. நல்ல ஸ்கோரை எட்டியிருந்தும், பலமான பாகிஸ்தான் பேட்டிங்கை எதிர்கொள்ள முடியவில்லை, இலங்கைக்கு.
+: பாகிஸ்தானின் பேட்டிங், அப்துல் ரசாக்கின் ஆல்ரவுண்ட் திறமை
-: இலங்கையின் வேகப்பந்து வீச்சு, முரளியை ஓவராக சார்ந்திருப்பது
நான்காவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா இந்திய ஆடுகளங்களில் சுமாராகத்தான் ஆடும். மிக அதிகமான தன்னம்பிக்கை சில சமயங்களில் காலை வாரி விடுவதுமுண்டு. மார்டன், லாரா பேட்டிங்கில் ஜோலிக்க, பவுலிங்கில் 'ஹாட்ரிக்' டெய்லர் தனியாளாக கலக்கினார். 10 ரன்களில் வெற்றியை கோட்டை விட்டது ஆஸ்திரேலியா.
+: வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சு
ஐந்தாவது போட்டியில் நியுசிலாந்தை, இலங்கை வீழ்த்தியது. முரளியின் சுழலில் நியுசிலாந்து 165 ரன்களில் பணிய, அதை அநாயாசமாக 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலங்கை வென்றது.
+: இலங்கையின் சுழல் & பேட்டிங்
-: நியுசியின் 'பரத நாட்டிய' பேட்டிங்
ஆறாவது போட்டியில் 'ஆஷஸ்' அணிகள் மோதின. எதிர்பார்த்த படியே ஆஸ்திரேலியா இங்கிலாந்தை சொல்லி வைத்து வீழ்த்தியது. 87 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்து, 159 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்டானதற்கு காரணம் 'ஆஷஸ்' ஞாபகமா?இனிமேலாவது 'ஆஷஸ்' சீரிஸுக்கு ஓவர் பில்டப் கொடுப்பதை இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் நிறுத்தலாம். ப்ளிண்டாபை பார்த்தால் 'இம்சை அரசன் காமெடி வடிவேலு'தான் ஞாபகத்திற்கு வருகிறார். Right person in wrong place ?? வழக்கம் போல் ஏகப்பட்ட சவால்கள் விட்டு, பரிதாபமாக தோற்றது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவும் சுமாராகத்தான் ஆடியது, இருந்தாலும் இங்கிலாந்தின் தயவால் வெற்றி பெற்றது.
-: இங்கிலாந்து அணியின் அணுகுமுறை
<<<>>>
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முடிவால், விறுவிறுப்பாகி உள்ளது சாம்பியன்ஸ் ட்ராபி. இங்கிலாந்தை தவிர மற்ற ஏழு அணிகளும் இன்னமும் கோப்பைக் களத்தில் உள்ளன. எனது தற்போதைய கணிப்புப் படி பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டிஸ் அணிகள் அரையிறுதி போட்டியில் இடம் பிடிக்கலாம். உங்களோட சாய்ஸ் என்ன ??
Friday, October 20, 2006
மற்றும் ஓர் தீபாவளி வாழ்த்து....
தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!
:-)))o
அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்
<<<>>>>
தீபாவளி சம்பந்தமாய் வந்த பெரும்பாலான இணைய இடுகைகளில் சென்று பின்னூட்டம் இட்டாகி விட்டது. நண்பர்களுக்கெல்லாம் மின்னஞ்சலிலும், செல்பேசி குறுஞ்செய்திகளிலும் வாழ்த்து அனுப்பி விட்டோம். உறவினர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தாயிற்று. இருந்தாலும் எம் போன்ற கவிஞர்களுக்கு(?) அழகு தீபாவளியை ஓர் கவிதையுடன் கொண்டாடுவதே! இதோ....
<<<>>>>
புத்தம்புது ஆடைகள்,
விதவிதமான திண்பண்டங்கள்,
வீடுகொள்ளா உறவினர்கள்,
பயமுறுத்தும் அதே சமயத்தில்
ஆர்வமூட்டும் வெடிகள்,
வானொலி செய்திகளில் வரும்
பிரபலங்களின் வாழ்த்துகள்,
தெருமுழுக்க சிதறி கிடக்கும்
பட்டாசு காகிதங்கள்,
காற்றில் மிதந்து வரும்
வெடிவாசனையுடன் கூடிய புகை,
பரவசமூட்டும் பண்டிகை
கொண்டாடங்கள்...
இவையனைத்தும் இல்லாமல்
மடிக்கணினியில் உலாவும் இணையம்,
கைத்தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள்,
தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகள்,
அடுக்குமாடி அண்டைவீட்டாரின் 'ஹேப்பி திவாளி',
மெக்டொனால்ட்ஸின் பிஸ்ஸா
என்று கழியும் எங்களுக்கு
இத்தீபாவளி திருநாள்....
இருந்தாலும் அடுத்த தீபாவளியை
எதிர்நோக்கி ஆர்வமாய் காத்திருப்போம் !!!!
<<<>>>>
தீபாவளியை ஊருக்கு சென்று வீட்டோடு கொண்டாட இயலாத, எம் போன்ற எண்ணற்ற பேச்சிலர் நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் !!
<<<>>>>
Thursday, October 19, 2006
என்னடா சொல்கிறாய், நீ ???
காதல் கவிதைகள் பெரும்பாலும் ஆணின் பார்வையிலேயே எழுதப் படுகின்றன. ஆனால் பெண்களின் உணர்வுகள், பார்வைகளுடன் வெளிவந்திருக்கும் காதல் கவிதைகள் குறைவே! அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் தலைவியின்(பெண்களின்) காதல் பாங்கு அழகுடன் விளக்கப் படுகின்றது! இக்கவிதை அத்தகைய ஓர் முயற்சியே!
<<<<<<>>>>>>
தூக்கமே வருவதில்லை...
அப்படியே வந்தாலும்
தூக்கத்தில் சிரிக்கிறேன்
என்கிறார்கள் தோழிகள்....
கனவுகளிலும்
உன் ஞாபகம்தான்...
பசிக்கிறது....
ஆனால் எதுவும் சாப்பிட பிடிக்க வில்லை...
தட்டில் கை அலை பாய்கிறது...
படிக்கும் போதும்,
எழுதும் போதும்,
குளிக்கும் போதும்
பயணிக்கும் போதும்,
எப்போதும் உன் ஞாபகம்தான்..
கண்ணாடியை பார்க்கும்போதெல்லாம்
என்னில் உன்னை பார்க்கிறேன்...
ஆதலால் கண்ணாடியைப் பார்த்து
பேசிக் கொண்டிருக்கிறேன்
உன்னிடம் பேசுவதாய் நினைத்து....
தோழிகளுடன் உரையாடும் போதும்
திடீர் திடீரென
உன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவதால்
தடங்கலிடும் விவாதங்களால்,
விவாதப் பொருளாகிறேன் நான்...
என் செல்பேசியில் வரும்
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
உன்னையே ஞாபகப் படுத்துவதால்
செல்பேசிக்கு கிடைக்கின்றன கூடுதல் முத்தங்கள்...
கூடவே அலுவலக தோழிகளின் வியப்பு பார்வைகள்...
தினமும் முன்செலுத்தப்படும் மின்னஞ்சல்களில்
எங்காவது உன் பெயர் இருந்தால்,
அதற்காகவே சேமிக்கப்படுகின்றன
அவ்வஞ்சல்கள், என் கணிணியில்...
குளித்துவிட்டு உடல் துடைக்காமல்
ஆடையணிந்து அலுவலகம் கிளம்பும்
சம்பவங்கள்
அடிக்கடி நிகழ்கின்றன...
உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??
<<<<<<>>>>>>
நண்பர் சிறில் அலெக்ஸ், தனது 'தேன்' வலைப்பதிவுத் தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு அளித்து, அத்தலைப்பில் ஏதாவது எழுதச் சொல்கிறார். அவர் அக்-13 அளித்த கோமாளி என்ற தலைப்பே இக்கவிதைக்கான தூண்டுதல். அவருக்கும், கவிதைக்கான படத்தை மின்னஞ்சலில் முன்செலுத்திய நண்பர் கிருஷ்ணா ராஜப்பாவிற்கும் நன்றிகள் பலப்பல !!
<<<<<<>>>>>>
//உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??//
உலகம் கவிதை நாயகியை கோமாளி என்று சொல்வது இருக்கட்டும், இம்மாதிரி காதலில் மூழ்கி புற உலகத்தை மறந்திருக்கும் காதலர்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ??
<<<<<<>>>>>>
Tuesday, October 17, 2006
கவிதைக்கு மெய் அழகு...
1
முருகன்..
கணேசன்..
இயேசு..
அல்லா..
அனுமான்..
பாலாஜி..
சிவன்..
எத்தனை பெயர்கள் இறைவா உனக்கு !!
ஒன்றிற்காவது இருக்கிறதா கடன் அட்டை* ??
~~~~~
* கடன் அட்டை - கிரெடிட் கார்டு
<<<<<>>>>>
2
ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
...
...
...
ஸ்ரீராமஜெயம்
நூற்றியெட்டு முறை
எழுதி அனுப்பினேன் மின்னஞ்சலை
ஸ்ரீராமர்@இந்திரலோகம்.காம் !!!
முகவரி சரியில்லை என திரும்பி
வந்து விட்டது,
யாராவது சொல்லுங்களேன்
ஸ்ரீராமர் எங்கேயிருக்கிறார் என்று ???
<<<<<>>>>>
3
நாட்டில் எங்கும் ஊழல் பெருகி விட்டது..
அரசியல்வாதிகள் ரொம்பவும் மோசம்..
என
பயணச்சீட்டில்லாமல் ரயிலில் பயணிப்பவர்
நிஜமாகவே கவலைப் படுகிறார் !!
<<<<<>>>>>
4
நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும்
கணிணி மென்பொருளாளர்
நான்கு ரூபாய்க்காக காய்கறிக் கடையில்
பேரம் பேசி, சண்டை போட்டு வெல்கிறார்...
வீட்டிற்கு வந்ததும்,
பெண் தோழியிடம் செல்பேசியில்
நாற்பது நிமிடங்கள் கதைக்கிறார் !!!
<<<<<>>>>>
5
நேரம் போவதே தெரியாமல்
எத்தனையோ நாட்கள்
தொலைபேசியில் கதைத்திருக்கிறோமடி,
உன் தங்கையே நீ அறிமுகப் படுத்தும் வரை...
இப்போதெல்லாம்
உன்னை நினைத்துப் பார்க்கக் கூட
நேரமில்லை !!
<<<<<>>>>>
பின்குறிப்பு : உங்களுக்கு எந்த கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் (எண்ணை மட்டும்) மறக்காமல் சொல்லுங்கள் !! எதுவுமே பிடிக்கவில்லையென்றால் சிரிப்பான் ஒன்றை போட்டு விடுங்களேன் :-)) கவிதைகளை மேம்படுத்த மாறுதல் ஆலோசனைகளும் வரவேற்கப் படுகிறது!
Friday, October 13, 2006
நில், கவனி, யோசி..
முத்துமாணிக்கம் மலைக்கோட்டை மாநகரின் பிரபல தொழிலதிபர். திருச்சி கைலாசபுரம் அருகே பெல் நிறுவனத்தைச் சார்ந்து இயங்கும் ஓர் பெரிய தொழிற்சாலைக்கு சொந்தக்காரர். சில, பல கல்விக்கூடங்களையும் நடத்தி வருகிறார். லயன்ஸ், எக்ஸ்னோரா மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தலைவராகவோ, பொருளாளராகவோ, செயலாளராகவோ இருக்கிறார். தொண்டு நிறுவனம் ஒன்று, இவருடைய சேவையைப் பாராட்டி 'சமூகக் காவலர்' என்று பட்டம் கூட கொடுத்திருக்கிறது. திருச்சியில் புகழ்பெற்ற ஓர் கல்லூரி ஆண்டுவிழாவில்தான் மேற்கண்டவாறு பேசிவிட்டு அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
அலுவலகத்தில் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவுடன், காரியதரிசி உள்ளே வந்து "சார், ஷிப்ட் சூப்பர்வைசர் வேலைக்கு இண்டர்வியூ முடிந்து விட்டது, மூன்று பேர் கடைசி லெவல் வரை வந்து இருக்கிறார்கள். நீங்கள் இறுதி இண்டர்வியூ நடத்திவிட்டால் மூவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து விடலாம்..." என்றார்.
முத்துமாணிக்கம் "எனக்கு இப்போ நேரமில்லை, அவங்களைப் பத்திய விபரங்களை கொண்டு வாங்க.." என்றார்.
"...சார்.. அந்த மூணு பேர்ல ஒருத்தன் நம்ப ஜாதி பையன்..." - காரியதரிசி.
"அப்ப, அந்த பையனையே அப்பாயிண்ட் பண்ணிடுங்க.." என்றார் சமூகக் காவலர் முத்துமாணிக்கம் !!
***
தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்தும் அக்டோபர் மாத போட்டிக்கான சிறுகதை.
Monday, October 09, 2006
மழைச்சாரலில் நனைந்த கவிதைகள்
1
மழை பொழியும் பின்னிரவுகளில்
சுடச்சுட தேநீருடன்
வராந்தாவில் நின்றபடியே
மழையை ரசிக்கும்போதும்
ஞாபகத்திற்கு வருவதில்லை,
வீடில்லாமல் மழையில் நனைந்தபடியே
தெருவில் உறங்கும் மக்களின் வாழ்க்கை !!
***
2
நேரம் போவதே தெரியாமல்
எத்தனையோ நாட்கள்
தொலைபேசியில் கதைத்திருக்கிறோம்,
உன் தங்கையை நீ அறிமுகப் படுத்தும் வரை...
இப்போதெல்லாம்
உன்னை நினைத்துப் பார்க்கக் கூட
நேரமில்லை !!
***
3
மழையில் நனையும் கார்
நடுவீதியில் நின்றவுடன்
கூப்பிடாமலேயே ஓடிவந்து
தள்ளிவிடும் தெருவில் வசிக்கும் சிறுவர்கள்...
பிச்சைக்காரருக்கு
சூடான சாதம் போடும்
பக்கத்து வீட்டு பாட்டி...
வழி தெரியாமல் தவிக்கும்
வெளியூர் காரருக்கு
கூடவே வந்து பஸ் ஏற்றி
விடும் கடலை விற்பவர்...
கீழே தவற விட்ட பணத்தை
கூப்பிட்டு எடுத்துக் கொடுக்கும்
வழிப்போக்கர்...
இவர்களுக்காக
இன்னும் இருக்கிறது ஆகாயம் !!!!
***
கடைசிக் கவிதை தமிழ்ச் சங்க போட்டிக்காக எழுதப் பட்டது. உங்களுக்கு எந்த கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் (எண்ணை மட்டும்) மறக்காமல் சொல்லுங்கள் !! எதுவுமே பிடிக்கவில்லையென்றால் சிரிப்பான் ஒன்றை போட்டு விடுங்களேன் :-))