Friday, September 01, 2006

தீவிரவாதிகளுக்கு நன்றி

தீவிரவாதிகள் என்றாலே சமூகம் அவர்களை கொடூரமானவர்களாக பார்க்கின்றது. ஆனால் சில சமயம் தீவிரவாதிகளும் அவர்களை அறியாமலேயே, நமக்கு நன்மைகள் ஏதாவது செய்து விடுகின்றனர்.

ராகா என்று எனக்கொரு நண்பர் இருக்கிறார். மென்பொருள் சோதனையாளராக இருக்கிறார். அலுவலுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். லண்டன் வழியே அமெரிக்கா - நியூயார்க். பின் டல்லாஸ் மாகாணத்திற்கு செல்ல வேண்டும். கிளம்புவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே பயண ஆயுத்தங்களை செய்ய ஆரம்பித்தார்.புனே பிக் பஜாருக்கு சென்று நூடுல்ஸ் பாக்கெட்டுக்கள் ஃபேமிலி பேக் - 4, பாசுமதி அரிசி 2 கிலோ, வத்தக்குழம்பு ரெடி மிக்ஸ் - 2 பாட்டில், ஊறுகாய் பாக்கெட்டுக்கள் - 2 இன்னும் பற்பல தின்பண்டங்கள். ஊரிலிருந்து அம்மாவை வரச்சொல்லி பருப்புப் பொடி, கொத்தமல்லி பொடி, கருவேப்பிலை பொடி,புளிக்காய்ச்சல் இன்னும் சில திரவ உணவுகள் அனைத்தும் தயார்.

ஊருக்கு கிளம்பும் முன் தின இரவு, நண்பரின் வாழ்க்கையில் விதி விளையாடியது. லண்டனில் விமானத்தை தகர்க்க திட்டமிட்ட தீவிரவாதிகள்(?) 12 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டன் - நியூயார்க் பிரயாண கெடுபிடிகள் அதிகமாக்கப்பட்டன. திரவ உணவுகள், வேறு திரவங்கள் ஹேண்ட் லக்கேஜில் எடுத்துச் செல்ல தடை செய்யப் பட்டன. செக்-இன் லக்கேஜில் எடுத்துச் செல்லலாம் என்றாலும், நண்பர் முன் ஜாக்கிரதையாக லக்கேஜை பாதியாகக் குறைத்து விட்டு (திண்பண்டங்கள் பெரும்பாலானவற்றை தவிர்த்து விட்டு) அமெரிக்கா சென்று விட்டார்.

இப்போது ப்ளாட்டில் இன்னொரு நண்பரும், நானும் வத்தக்குழம்பு மிக்ஸையும், பொடி வகையறாக்களையும் காலி செய்து கொண்டிருக்கிறோம். ரொம்ப சுவையாக உள்ளன, அமெரிக்கா போவதற்காக வாங்கியவை அல்லவா! அந்த தீவிரவாதிகளுக்கு ரொம்ப நன்றி !!! நீங்க என்ன சொல்றீங்க, நான் நன்றி சொல்றதுல ஒன்னும் தப்பில்லையே ????

*****

மும்பையில் வசிக்கும் நண்பர் அரவிந்த் சந்திரசேகரன் எழுதி அனுப்பிய கவிதை இது.


புதிர் ---- முத்தம் !


உரசல் ஒன்றுதான்
சத்தம் ஒன்றுதான் -
இவைகளின்
இனிமையான
இணைப்பால் ஏற்படும்
முத்தமும் ஒன்றுதான்.
உதடுகள் மாறும் போது
உணர்வுகளில் மாற்றம் ஏனோ!


***

Tuesday, August 22, 2006

C. அருண் s/o சந்திரசேகரன் - V 2.0

சோம்பேறி பையன் பதட்டமாக இருந்தான். அலுவலகத்தில் ஏதாவது வேலை செய்யச் சொன்னாலே பதட்டமாகி விடுவது, சோம்பேறி பையனின் வழக்கம். சம்பளம் கொடுக்கிறார்கள் அல்லவா, போனால் போகிறதென்று ஏதாவது செய்து வைப்பான். ஆனாலும் இன்று பதட்டமாய் இருந்ததற்கு காரணம் தேன்கூடு போட்டிக்காக அவன் எழுதிய கவிதைக்கும், கதைக்கும் கிடைத்த வரவேற்புதான்(?)!.

நண்பர் அருண்.சியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது "என்னய்யா, உன்னோட கதைக்கு நான் பாராட்டி எழுதின பின்னூட்டத்தை போட்டுட்டீங்க, ஆனா கவிதையை கொஞ்சம் திட்டி எழுதின பின்னூட்டத்தை போடவே இல்லை வலைப்பதிவில்??". நண்பரிடம் ப்ளாக்கர் கணக்கு இல்லாததால், மின்னஞ்சலில் பின்னூட்டம் அனுப்புவார்.

"அதெல்லாமில்லை, நான்கைந்து பின்னூட்டங்கள் வந்து சேர்ந்தவுடன், அவற்றிற்கு பதிலளிக்கும் போது, உங்கள் பின்னூட்டத்தையும் வெளியிட்டு விடுகிறேன்" - சோம்பேறி பையன்.

"சரி, பரவாயில்லை, நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன், எப்படியிருக்கிறதென்று பாருங்கள்" - அருண் சி.

மின்னஞ்சலில் வந்த அந்த கவிதைதான் இது.

*****

கயரிட்ட காலணியைக் கழற்றியும்
கயிற்றால் கட்டியது போல் வலிக்குது - கால்கள்
நீண்ட நேரம் நிற்பதால் கடுக்குது

எப்போது வருவாய்

முதுகில் இருந்து சுமையை இறக்கியும்
மலையைத் தாங்குவதாய் கனக்குது - சுமை
மனதிலிருந்து இறங்க மறுக்குது

எப்போது வருவாய்

உப்பு நீரை
கொலை செய்யத் துடிக்குறேன்
விழியிலிருந்து குழியில் தள்ளி

எப்போது வருவாய்

தலையில் எண்ணெய் பிசுக்குது
வயிறு பசிக்குது
துக்கம் மட்டுமல்ல
தூக்கமும் கண்களைத் தழுவுது

எப்போது வருவாய்

காய்வதும் தேய்வதும்
நிலவு மட்டுமல்ல

எப்போது வருவாய்

வழி மேல் விழி வைத்தன்றி
வாசல் நிலையில் நிலையின்றி
தலை சாய்த்து நிற்கின்றேன்
தவம் செய்து தவிக்கின்றேன்

எப்போது வருவாய் அம்மா!!!
அலுவலகத்திலிருந்து - என்னை
தழுவுவதற்கு
எப்போது வருவாய் அம்மா!!!

*****

நண்பர் அருண்.சி மும்பையில் வேலை பார்த்த போது அறிமுகமானவர். கும்பகோணத்துக் காரர், திருச்சியில் படித்து வளர்ந்தவர். தற்போது ஹைதராபாத்தில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை செய்கிறார். அவருடைய கவிதை இது. அற்புதமான கவிதைக் கருவை சுலபமாக, அழகாக சொல்லியிருக்கிறார். கடைசி வரிகளைப் படித்தவுடன், திரும்பவும் ஒரு முறை கவிதையைப் படிக்க வைக்கிறார். கவிதையென்றாலே அது காதலைப் பற்றியதுதான் என்று நினைத்துக் கொண்டிருந்த சோம்பேறி பையனுக்கு, கவிதைக்கு களங்கள் பலப்பல என்று நினைவூட்டுகிறார். வாழ்த்துக்கள் அருண்.சி, தொடர்ந்து எழுதுங்கள் !!

***

இந்த இடுகையின் முதல் பதிப்பிற்கு ஒரு பின்னூட்டமும் வராததால், பயந்து போன நண்பர் அருணின் மின்னஞ்சல் இது

innum oru comment kooda illai...namma kavithaiavulo mosamava irukku.....ennala unga peru keturumpola...onnum kedurathukku perusa illai.....i thinkovvoru varthaiya irunthathoda effectunnu oru chinnasanthegam...if possible re-publish panni irukkurathaunga web nambargal kitta sollavum.....illayaraja mothomotha music vasikkum pothu current ponathu than enakkuninappu varuthu...sathiya sothanai :-(

arun c

***

சங்க அரசியல்களும், உட்டாலக்கடி வலைப்பதிவு வேலைகளும் அருணுக்கு இன்னும் பழக்கமாக வில்லை..

ஆதலால் நண்பர்களே, கவிதையைப் படித்து விட்டு ஆல்ட் F4 போட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடாமல், ஓரிரு வார்த்தையாவது கவிதையை பாராட்டியோ, திட்டியோ பின்னூட்டம் இடுங்கள், அது நண்பர் அருண்.சியை ஊக்குப்படுத்துவதாக இருக்கும். அவரும் ஒரு புது வலைப்பதிவை ஆரம்பிக்கலாம்.

***

இந்த இடுகை சிற்சிறு மாற்றங்களுடன், மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

Monday, August 14, 2006

ஜெண்டில்மேன் - தேன்கூடு-போட்டி சிறுகதை

சங்கர் அரைத் தூக்கத்தில் இருந்தான். டிவியில், வணக்கம் தமிழகத்தில் போன வாரம் தற்கொலைக்கு முயன்ற நடிகை தமிழ்நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். சங்கர், கற்பனையில் அவளுடன் டூயட் பாட ஆரம்பித்த மைக்ரோ நொடியில், பையன் போர்வையை விலக்கி, முகத்தின் அருகில் வந்து 'அப்பா, இந்த கணக்கு எப்படி போடறதுன்னு சொல்லி கொடுங்கப்பா...' என்று இழுத்தான். 'போய் அம்மாகிட்ட கேளுடா, அப்பாவுக்கு ஆபிஸ்க்கு டைம் ஆய்டுச்சி' என்ற படியே, பாத்ரூமுக்கு ஓடினான் சங்கர். 'டைலாமோ, டைலாமோ...' பாடல் ஷவர் சத்தத்தையும் மீறி வழிந்தது.

குளித்து முடித்து விட்டு டிரஸ் பண்ணும்போது, சித்ரா வந்து 'ஏங்க, ஈவினிங் ஆபிஸ்ல இருந்து வந்தவுடனே பிக்-பஜார் போய்ட்டு வந்துருவோமா, மளிகை சாமானெல்லாம் வாங்கனுங்க...' என்றாள்.

'ஏண்டி அதான் நேத்தே சொன்னேன்ல, நீ போய்ட்டு வந்துடு, பகல்ல சும்மாதான இருக்க..'

'ஹூக்கும், என்னைக்கு நீங்க வீட்டுக்கு வேலை செஞ்சிருக்கீங்க, பக்கத்து வீட்டு சோம்பேறி பையனை பாருங்க, பொண்டாட்டி ஆசைப்பட்டான்னு புனேயிலிருந்து பாம்பே போய் வடாபாவ் வாங்கிட்டு வந்து தர்ரார்!!!' என்று புலம்பியபடியே சித்ரா, சமையலறைக்கு நகர்ந்தாள்.

டிரஸ் பண்ணி விட்டு வந்து, டிபன் சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பா இருமிக் கொண்டே 'ஏம்ப்பா சங்கரு, போன வாரம் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரை இன்னும் வாங்கிட்டு வரலையேப்பா, இன்னைக்காவது வாங்கிட்டு வாயேன்...' என்றார்.

'இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானே வேணும்னு எதிர்பார்த்தா எப்படி, பக்கத்து தெருவில்தானே கடை இருக்கு.. போய் வாங்கித் தொலைக்கக் கூடாதா?' என்று எரிந்து விழுந்தான்.

அவசரமாக சாப்பிட்டு விட்டு, ஷூ மாட்டிக் கொண்டு அபார்ட்மெண்ட் கீழே வந்தான். அபார்ட்மெண்ட் செகரட்டரி, அவனைப் பார்த்து கையசைத்து, 'சங்கர் சார், இந்த சனிக்கிழமை வக்கீல் வீட்டுக்கு போய்ட்டு வந்துருவோமா, நம்ம ஹவுசிங் சொசைட்டியை ரிஜிஸ்டர் பண்ணனும்ல..' என்றார்.

'சாரி சார், இந்த வாரம் நான் கொஞ்சம் பிசி.. நீங்க தேர்டு ப்ளோர் சிவா சாரைக் கூப்பிட்டுகிட்டு போங்களேன்..' என்றுவிட்டு அவர் பதிலைக் கூட எதிர்பார்க்காமல், யமஹாவில் பறந்தான். 'குடும்ப உறவுகளே, பிரச்சினைதான்.... கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்...' என்று நினைத்துக் கொண்டே பாத்திமா நகர் சிக்னலை, வழக்கம்போல் ஜம்ப் செய்தான்.

அலுவலகத்தில் நுழைந்த சங்கர், காலியாயிருக்கும் கம்யூட்டரை தேர்வு செய்து, ஹெட்போனை தலையில் மாட்டியபடி காலில்(call) நுழைந்தான் "குட்மார்னிங் சார்.... ஐ ம் ஷங்கர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எக்ஸியூட்டிவ்....மே ஐ நோ இன் வாட் வே ஐ கேன் ஹெல்ப் யூ ?.........."

*******

எக்ஸ்ட்ரா நோட்ஸ் (முடிவை புரிந்து கொள்ளாதவர்களுக்கு மட்டும்)

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்பது நிகழ்ச்சி மேலாண்மை. அதாவது உங்கள் வீட்டில் ஒரு பெரிய பர்த்டே பார்ட்டி வைக்கறீர்கள் என்றால், நீங்கள் சங்கர் மாதிரி நிகழ்ச்சி மேலாளர்களை அணுகி பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து வீட்டு, சன் டிவியில் டாப் டென் மூவிஸ் பார்க்கலாம், இல்லாவிடில் உலகத் தொலைக்காட்சிகளில் ஆயிரத்து ஓராவது முறையாக ஸ்டார் மூவிஸ் போடும் மம்மி ரிட்டர்ன்ஸை பார்க்கலாம். சங்கர் உங்கள் பார்ட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் (காய்கறி வாங்குவது, சமையற்காரர் வைப்பது, போலிஸ் பர்மிஷன் வாங்குவது, மைக்செட் வைப்பது, இண்ட்டீரியர் டிசைனிங் செய்வது, எமர்ஜென்சி மெடிக்கல் உதவி ஏற்பாடு செய்து, லைட்டிங், இன்விடேசன் அடிப்பது, etc...) செய்து தருவார். இவ்வுளவு வேலைகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்யும் திறமையுடைய ஜெண்டில்மேன் சங்கர், வீட்டில் ஒரு துரும்பைக் கூட.........

Friday, August 11, 2006

தங்கைக்கோர் கீதம் - தேன்கூடு-போட்டி கவிதை

நீ பிறக்கும் முன்
அம்மாவின் வயிற்றில் இருந்த போதே,
நான் உன்னிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டேன்...

எப்போதாவது அம்மாவின் மடியில்
படுக்க வரும்போது,
பாப்பா வயிற்றில் தூங்குகிறாள் என்று கூறி
நான் படுப்பதை அம்மா தடுப்பாள்...
அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டு
உன்னைத் திட்டுவேன்...

நீ பிறந்த பின்பும்,
உனக்குத்தான் நிறைய செல்லம் கொடுப்பாள்..
என் மீது கவனிப்பும், செல்லமும் குறைந்ததால்
விவரமறியா சிறு வயதில்,
உன்மீது எனக்கொரு சிறு பொறாமை...

கொஞ்சம் வளர்ந்த பின்
தின்பண்டங்களுக்காக இருவரும்
சண்டை போட்டுக் கொள்வோம்...

விளையாட்டுச் சாமான்களுக்காக
நாம் சண்டை போட்டுக் கொள்ளாத
நாட்களே இல்லை...

வீட்டில் ஏதாவது பொருளை உடைத்து விட்டு
இருவரும் அடுத்தவரை குறை சொல்வோம்
இருவருக்கும் பொதுவாக அடி கிடைக்கும்...

கான்வென்ட்டில் இருந்து உன்னை
தினமும் மாலையில் அழைத்து வரும்போது
உன்னை மிரட்டிக் கொண்டே வருவேன்...

பள்ளிக் கூடத்தில் சேர்ந்த பின்
சிலேட்டிலிருக்கும் உன் வீட்டுப் பாடத்தை நான் அழிப்பதும்
என் வீட்டுப் பாடத்தை நீ அழிப்பதும் தினமும் நடக்கும்...

நான் பண்ணும் அடங்களை
அம்மாவிடம் தினமும் தவறாது போட்டுக் கொடுப்பாய்,
அம்மா திட்டி விட்டு நகர்ந்ததும்
நான் உன்னை அடிப்பேன்,
தேவைக்கதிகமான சத்தத்துடன் அழுவாய் நீ...

அம்மாவுக்கு தெரியாமல் நான்
தெருவில் விளையாட போகும்போது
என்னை தைரியம் கூறி அனுப்பி விட்டு
சிஐடியாய் அம்மாவுக்கு தெரிவிப்பாய்...
அம்மாவிடம் நான் அடி வாங்குவதை
ஒளிந்து நின்று ரசிப்பாய்...

இரவு உணவாக உப்புமா சாப்பிடும் போது
சிறு பெண்ணென்று, உனக்கு
வெல்லம் அதிகமாகவே கிடைக்கும்...
என் மீது பரிதாபப் பட்டு
சிறுதுண்டொன்றை எனக்கும் கொடுப்பாய்...

தாத்தா வீட்டு ஊஞ்சலில்
யார் அதிக நேரம் ஆடுவது என்று
தினமும் போட்டி நடக்கும், உனக்கும் எனக்கும்...

நான் நகரத்திற்கு படிக்கச் சென்றவுடன்
நான் ஊருக்கு திரும்பும் போதெல்லாம்
அம்மாவுடன், நீயும் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருப்பாய்..

வா என்று பாசத்துடன் அழைத்து விட்டு
வீட்டினில் நீ நுழைந்தவுடன்
திரும்பவும் ஆரம்பிக்கும், நம்மிருவருக்குமிடையே யுத்தம்...

இருவரும் வளர, வளர
இடைவெளி அதிகமானது...
செல்ல சண்டைகள் குறைந்து போனது...
இருப்பினும் குறையவில்லை பாசம்...

இப்போது உனக்கு திருமணமாகி விட்டது...
முன்புபோல் உன்னோடு சண்டையிட முடியவில்லை...
புதிதாய் கிடைத்த உன் உறவுகளோடு
நீ மகிழ்ச்சியாய் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியே...

இப்போதும், நீ அத்தானுடன் விடுமுறையில்
நம் வீட்டுக்கு வரும்போது
உன்னுடன் சண்டைபோட காத்துக் கொண்டிருக்கிறேன்...
ஏனெனில் சண்டைகளெல்லாம் சண்டைகளல்ல...

உனக்கும் புரிந்திருக்கும், என் தங்கையே,
உறவுகள் சிற்சிறு செல்லமான
சண்டைகளாலும் பலமடைகின்றன...

Thursday, August 10, 2006

ஹட்ச் நெட்வொர்க் ஏன் வீக்காக உள்ளது ?

ஒரு தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருவது சாதாரணமான காரியமல்ல. போட்டிகள் நிறைந்த இந்த துறையில் விளம்பரங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. ஆனால், சில சமயம் விளம்பரங்களே, பலவீனமாகவும் ஆகி விடுகின்றன.

தற்போதெல்லாம் ஹட்ச் நெட்வொர்க் ஏன் வீக்காக(பலவீனமாக) உள்ளது என்ற காரணம் தெரியவந்துள்ளது.







மின்னஞ்சலில் முன்செலுத்தியவர் : நண்பர் கணேசன் சாமிநாதன்.

Wednesday, August 09, 2006

கவனாமாயிருங்கள், இது உங்களுக்கும் நடக்கலாம் !





இன்று ரக்-ஷா பந்தன் தினம். பெண்கள், தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி உறவைக் கொண்டாடும் தினம். கவனாமாயிருங்கள் நண்பர்களே, இது இன்று உங்களுக்கும் நடக்கலாம். அழகான பெண்களைப் பார்த்தால் தூர ஓடி விடுங்கள். அதிகம் பெண்கள் கூடும் ஷாப்பிங் மால் போன்ற இடங்களை இன்று தவிர்ப்பது நல்லது. முழுக்கை சட்டை போட்டு வெளியில் நடமாடுங்கள்.

விஜய் 'நேருக்கு நேர்' படத்தில் ஹீரோயின் கவுசல்யாவிடம் சென்று 'ஏன், எங்களுக்கெல்லாம் ராக்கி கட்டி விட மாட்டீங்களா?' என்று கலாய்ப்பார். இதன் பிறகு 'அகிலா..அகிலா..' என்று சூப்பர் பாட்டு ஒன்று வரும்.

இதேபோல் நானும், இன்று அலுவலக பேருந்தில் ஏறி மேற்சொன்ன வசனத்தை கூறினேன் (ஹிந்தியில்தான் - புனேவில் தமிழ் தெரிந்த பெண்கள் குறைவு). அடுத்த வினாடியே, என் இரு கைகள் முழுவதிலும், விதவிதமான ராக்கிகள், நான் கதறக் கதற கட்டப்பட்டன. இதனால், நான் கூடிய சீக்கிரம் இந்த அலுவலகத்திலிருந்து மாறிவிடலாமென்று இருக்கிறேன்.

ஆகவேதான், இந்த எச்சரிக்கைப் பதிவு. கவனாமாயிருங்கள் நண்பர்களே !! சொந்த சகோதரியிடம் மட்டும் ராக்கி கட்டிக் கொள்ளுங்கள் !

அழகான பெண் ராக்கி கட்ட வந்தால், எப்படி எஸ்கேப் (தப்பி ஓடுவது) ஆவது என்று பின்னுட்டத்தில் யோசனை கூறுங்கள். பின்னூட்டமளிப்பவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ப்ளாஸ்டிக் குடம் வழங்கப் படும் !!!

படத்திற்கு நன்றி: தினமலர்

Tuesday, August 08, 2006

என் பெயரில் போலி வலைப்பதிவு

என் பெயரில், எனது புகைப்படத்தையும் இணைத்து, போலி ஆபாச வலைப்பதிவுத் தளம் ஒன்று சமீபத்தில் உருவாகியுள்ளது. மேலும் அந்த போலி எனக்கு மின்னஞ்சலில் "டோண்டுவுக்கு நீ அடிக்கடி பின்னூட்டுவதால் உனக்கு நான் கொடுக்கும் சிறப்புப் பரிசு இது." என மிரட்டல் விடுத்துள்ளார்.

எனது உண்மையான வலைப்பதிவு முகவரி http://lazyguy2005.blogspot.com/

எனது உண்மையான ப்ளாக்கர் எண் 11015751

எனது உண்மையான மின்னஞ்சல் முகவரி swami.plr@gmail.com

எனது உண்மையான ப்ளாக்கர் பெயர் சோம்பேறி பையன் (போலி வலைப்பதிவில் சோம்பேறிபையன் (without space) என்று உள்ளது).

போலி வலைப்பதிவு பற்றி சென்ற வாரம் எனக்கு தமிழ்மணத்திலுள்ள நண்பர்கள் தெரிவித்தனர். ஆகவே, வலைப்பதிவாளர்கள், நண்பர்கள் கவனமாக இருக்கவும். ஏதாவது சந்தேகத்துக்குரிய, ஆபாசமான பின்னூட்டம் வந்தால்,
மட்டுறுத்த வேண்டாம். எனக்கு மின்னஞ்சலில் அதை தெரிவித்து, தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்!!

மேலும் இதைப்பற்றி ப்ளாக்கரில் புகார் தெரிவித்துள்ளேன்.

பின்குறிப்பு: இந்த பதிவை சென்ற வாரம் பதிவிட்டு, தலைப்பு நீளம் காரணமாக அது நீக்கப்பட்டு விட்டது. எனவே, திரும்பவும் மீள்பதிவு செய்துள்ளேன்.

Tuesday, August 01, 2006

தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள்

எப்போதாவது
பின்னிரவுகளில்
விழித்தெழும் போது,
திரும்பவும் தூக்கம்
என் கண்களைத்
தழுவும் வரையில்
தவழ்கிறேன், உன் நினைவுகளில்...
தூங்கியபின் கனவில்
திரும்பவும் நீ...

***

மருத்துவர் ஆலோசனையின் படி
இயற்கை காற்று வாங்க,
வைத்திருக்கிறேன் என் கணிணியில்
சீனரி வால்பேப்பர்...

***

கடிதங்கள்,
கைத்தொலைபேசி அழைப்புகள்,
குறுஞ்செய்திகள்,
மின்னஞ்சல்கள்,
வலைப் பதிவுகள்
ஒவ்வொன்றும்
சங்கீதமாகின்றன,
உன் பெயரைத் தாங்கி வரும்போது...

***

வலைப்பதிவுகளிலிருந்து
மீளலாமென்றுதான் நினைக்கிறேன்
ஒவ்வொரு பின்னூட்டமிடும் போதும்...
இ-கலப்பையை கணிணியில்
பார்க்கும் போதெல்லாம் குறுகுறுக்கிறது
பாழாய்ப் போன மனசு...
ஒவ்வொரு இடுகைக்கும் வரும்
ஒன்றிரண்டு பின்னூட்டங்களும்,
என்றாவது ஒருநாள் நட்சத்திரமாய்
தமிழ்மணத்தில் வலம்வரும் நப்பாசையும்,
இருக்கும்வரை இருந்தே தீருவேன்...
ஏனென்றால் நண்பர்களே,
போதை மதுவிலும், மாதுவிலும் மட்டுமல்ல...

***

தூங்கும் போதும்
மடிக்கணிணியை
இதயத்துக்கு அருகிலேயே
வைத்திருக்கிறேன்...
டெஸ்க்டாப் வால்பேப்பரில்
நீயே இருப்பதால்....

***

எத்தனை கடிதங்கள்..
எத்தனை தொலைபேசி அழைப்புகள்..
எத்தனை மின்னஞ்சல்கள்..
எத்தனை குறுஞ்செய்திகள்..
எத்தனை மின் அரட்டைகள்..
இத்தனையுமா காட்டினாய், உன் தந்தையிடம் ?
அடியா ஒவ்வொன்றும், இடி...
அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்,
காதலிக்காதவர்கள் கோழைகள்...

***

சுடும் நிலவு
சுடாத சூரியன்
அழாத குழந்தை
இனிக்கும் மிளகாய்
இனிக்காத சர்க்கரை
வரிப்பிடித்தமில்லா சம்பளம்
போலிகளில்லா தமிழ்மணம்
அடிக்காத மனைவி
அமைதியான உலகம்
அனைத்தையும் காணலாம்
ஐம்பத்தைந்தே ரூபாயில்,
கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர்...

***

Friday, July 21, 2006

இம்சை அரசனும், ஒசாமா பின்லேடனும் சந்திப்பு

ஒசாமா பின்லேடன், நமது இம்சை அரசன் 23-ம் புலிகேசியை சந்திக்க இந்தியா வருகிறார். இம்சை அரசனின் அரண்மணையில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர்.

ஒசாமா : அமெரிக்காவ, இந்த மேப்ல இருந்தே அழிச்சுடுணும்...

புலிகேசி : அந்த பொறுப்ப எங்கிட்ட விட்டுடு.... அமைச்சரோட அஞ்சாவது பொண்ணு ஸ்கூல் பேக்ல இருந்து திருடின ரப்பர் இன்னும் எங்கிட்டதான் இருக்கு...

ஒசாமா : !!!!!!!!!!




பின்குறிப்பு 1 : இதை எனக்கு மின்னஞ்சல் செய்த நண்பர் ராகவேந்திராவுக்கு நன்றி !!

பின்குறிப்பு 2 : இந்த இடுகைக்கும், தீவிரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ISP நண்பர்கள் அவசரப்பட்டு தடை செய்திட வேண்டாம் :-) !!

Thursday, July 13, 2006

இஸ்ரேலில் சோம்பேறி பையன் - பாகம் 2

முந்தைய பாகத்தில் : மும்பையிலிருந்து விமானத்தில் கிளம்பியது முதல் திறந்த வாய் மூடவில்லை (முதல் வெளிநாட்டு பயணமாச்சே). இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இறங்கி 'பசேல்' ஹோட்டலுக்கு நண்பர்களுடன் பயணிக்கிறேன். ஹோட்டல் ரிஷப்சனை அணுகிய போது...

'மன்னிக்கவும், உங்களுக்கு இந்த ஹோட்டலில் இடமில்லை..' அழகிய பெண் ரிசப்ஷனிஸ்ட் வாயசைத்ததை கேட்டு எனக்கு லேசாக மயக்கம் வந்தது. மயக்கம் தவிர்க்க கோலிசோடா தேடிக் கொண்டிருந்த நொடிகளில், ரிசப்ஷனிஸ்ட் தொடர்ந்தாள் "உங்களுக்கு 'தால்' ஹோட்டலில் ரூம் புக் செய்திருக்கிறோம், நீங்கள் இங்கிருந்து அங்கு போவதற்கு நாங்களே டாக்சி ஏற்பாடு செய்து விடுகிறோம், சிரமத்திற்கு மன்னியுங்கள்". 'இட்ஸ் ஓகே..ஹி..ஹி..' இது நான்.



இது டெல் அவிவ் கடற்கரை. ஹோட்டல் தால் (TAL) ஹயர்கான் வீதியில் கடற்கரை ஓரமாக உள்ளது. 10 தளங்களுடன் கூடிய அருமையான ஹோட்டல். இரு நிமிட நடையில் கடற்கரையை அடைந்து விடலாம். கடற்கரையை நம்மூர் மெரினாவுடனோ, மும்பை ஜூகுவுடனோ ஒப்பிட்டு நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை. ஒரே வரியில் சொன்னால் 'பூலோக சொர்க்கம்'.



மேலே நீங்கள் பார்ப்பது இஸ்ரேலில் ஓடும் பஸ். எல்லாமே அரசாங்கத்தைச் சேர்ந்ததுதான். தனியார் பஸ்கள் இல்லை. யுஎஸ் போலவே 'கீப் ரைட்' வண்டியோட்டும் நடைமுறை. பஸ், கார்களில் 'ஸ்டியரிங்' (தமிழ்ல என்னங்க) இடது முன்பக்கம் இருக்கின்றன. அழகான, புதிய, நன்கு பராமரிக்கப்படும் பஸ்கள். வழித்தடங்கள், இறங்கும் இடம் தெரிவிக்கும் பலகை அனைத்திலும் 'ஹீப்ரு' மொழியே. 20-25 பேர் மட்டுமே உட்கார முடியும்.



இது லாட்டரிக் கடை. பாருங்கள், எவ்வுளவு ஜோராக உள்ளதென்று. கடையின் முன் நிற்பது எனது நண்பர். இஸ்ரேலிலும் நம்பர் லாட்டரி உண்டு. ஒருநாள் அலுவலகம் முடிந்து திரும்பும் போது, சிறுமி ஒருவள் (8 அல்லது 9 வயது இருக்கும்) லாட்டரி வாங்கிக் கொண்டிருந்தாள். 'ஃபாரின் ஃபாரின்தான்' என்று நினைத்துக் கொண்டே நகர்ந்து விட்டேன்.



இரண்டு இஸ்ரேல் இளம்பெண்கள் ஒய்வெடுக்கின்றனர். இஸ்ரேலில் அனைத்து இளம்பெண்களும் அழகாக உள்ளனர் (அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறது). 18 வயதில் ராணுவத்திற்கு கட்டாயமாக அனுப்பப் படுவதாலும், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களாலும் எல்லாருமே 'ஜில்'லென்று உள்ளனர். (பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுமே ஸ்மார்ட்டாக, தொப்பையில்லாமல் சல்மான் கான் போலுள்ளனர்). பெண்கள் உடைகளும் ரொம்பவே மாடர்ன்தான், மிகக் குறைவான உடைகளை மட்டுமே நிறைய பெண்கள் அணிகின்றனர்.

இஸ்ரேலில் நிறைய தமிழ் வலைப்பதிவாளர்கள் இருப்பதாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்து வஜ்ரா சங்கர் இருக்கிறார். வேறு யாராவது இருப்பது தெரிந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். ஆனால் நான் அங்கே இருந்தபோது யாரையும் சந்திக்க இயலவில்லை. அடுத்த முறை பார்ப்போம்.


இஸ்ரேல் பற்றி நிறைய தமிழ் வலைப்பதிவுகள் வந்துள்ளன. சர்ச்சைக்குறிய விஷயங்களில்லாமல், இஸ்ரேலின் சுற்றுலாத்தளங்களை / பயண அனுபவங்களை பற்றிய பதிவுகள் குறைவே (என நினைக்கிறேன்).

வஜ்ரா சங்கர் தனது வலைப்பதிவில்புகைப்படத்துடன் சில இடுகைகளை, அருமையான விவரங்களுடன் இட்டுள்ளார். தள முகவரி http://sankarmanicka.blogspot.com/

வேறாதாவது தமிழ் வலைப்பதிவுகள் சுற்றுலா - இஸ்ரேல் பற்றி இருந்தால், நண்பர்கள் பின்னூட்டத்தில் முகவரி தரலாம்.

ஷபாத் பற்றியும், ஹோட் - ஹசரான் பற்றியும் அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாமே !!

Friday, July 07, 2006

இஸ்ரேலில் சோம்பேறி பையன் - பாகம் 1

'டெல் அவிவ் விமான நிலையத்தை நெருங்கி விட்டோம். பயணிகள் இடுப்புப் பட்டையை இறுக்கிக் கொள்ளுங்கள். இனிய இஸ்ரேலிய அனுபவத்திற்கு ராயல் ஜோர்டான் உங்களை வாழ்த்துகிறது..' விமானியின் குரல் ஒலிபெருக்கியில் மெலிதாக வழிந்தது. ஜோர்டான் நாட்டு தலைநகரம் அம்மானிலிருந்து கிளம்பிய முப்பது நிமிட பயணத்தில் டெல் அவிவ் நகரத்தை அடைந்து விட்டோம்.


புனேயிலுள்ள தொலைத்தொடர்பு மென்பொருள்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் சோதனையாளனாக வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில், அலுவலக வேலைக்காக இஸ்ரேல் செல்ல வேண்டியதாகி விட்டது (அட்ரா சோம்பேறி அட்ரா, ஆங்கிலக் கலப்பில்லாமல் எவ்ளோ பெரிய வாசகம்ம்ம்ம்).

புனேயிலிருந்து மும்பைக்கு சென்று, மும்பையிலிருந்து ஜோர்டானின் அம்மானுக்கு வந்திறங்கினோம். உடனடி இணைப்பு விமானத்தில் இடமில்லாததால், 30 மணிநேரம் அம்மானில் 'க்வீன் அலியா' விடுதியில் தங்கியிருந்து விட்டு இஸ்ரேலுக்கு பயணித்தோம். நான் சென்று திரும்பியது ஒரு மாதத்திற்கு முன்பு, தற்போதுள்ள அளவுக்கு நிலைமை அப்போது மோசமில்லை(?).

டெல் அவிவ் நகரத்தில் 'பென் குரியன்' விமான நிலையத்தில் இறங்கிய மறுவினாடியே விமான நிலையத்தின் பிரமாண்டம் இனம்புரியாத ஓர் உணர்ச்சிக் கலவையை ஏற்படுத்தியது. முதல் வெளிநாட்டு பயணம், சென்ற வேலையை நல்லபடியாக முடித்துவிட்டு திரும்ப வேண்டுமே என்று சிந்தனை ஓடியது. மிகப்பெரிய, சுத்தமான, அழகான, அமைதியான(!) விமான நிலையம் பென் குரியன். நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்ட 'பென் குரியன்' என்ற தலைவர் பெயர் விமான நிலையத்திற்கு வைக்கப் பட்டுள்ளது.

'நீங்கள் ஏதாவது பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளீர்களா ?' இமிக்ரேஷன் (இதற்கு தமிழில் என்ன?) அதிகாரி கேட்டபோது தூக்கி வாரிப் போட்டது. ஊரிலிருந்து புறப்படும்போதே அயல்நாட்டு கலாச்சார வகுப்புகளில் தெளிவாக சொல்லி இருந்தார்கள். இமிக்ரேஷன் கேள்விகளுக்கு அதிபுத்திசாலித்தனமாக ஏதாவது உளறி வைக்காமல் எளிமையாக பதிலை சொல்லவும் என்று. விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்தேன்.

இஸ்ரேல் நாட்டு தலைநகரம் ஜெருசலம். மிகச் சிறிய நாடு. மக்கள் தொகை 65 லட்சம் என கேள்விப் பட்டேன் (மும்பையை விடக் குறைவு). எப்போதும் பதட்டமான மத்திய கிழக்கு பகுதியின் அரசியல் சூழலில், சுற்றியுள்ள நாடுகளில் ஜோர்டானுடன் மட்டுமே நட்புறவு. பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சினை பற்றி நான் ஏதாவது கருத்து சொன்னால், பின்னி பெடலெடுக்க தமிழ்மணம் நண்பர்கள்(!) தயாராக உள்ளதால் 'நோ கமெண்ட்ஸ்'.

இஸ்ரேல் நாட்டு கரன்சி 'ஷக்கீல்' (ஷகீலா அல்ல..) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஷக்கீலின் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 10 ரூபாய். நமது ஊர் பைசா போல் அங்கு 'அகோரட்' நாணயம். 100 அகோரட், 1 ஷக்கிலுக்கு சமம். இஸ்ரேலுக்கு புறப்படும்போதே செலவுக்கு அலுவலகம் அமெரிக்க டாலர்கள் கொடுத்தனர் (அப்ப்ப்ப்பா, டாலரை தொட்டு பார்த்துட்டோம்ல..). விமான நிலையத்திலேயே கொஞ்சம் டாலரை ஷக்கீலாக மாற்றிக்கொண்டு வெளியே வந்து டாக்சி பிடித்து 'ஹயர்க்கான் ரோட்டுல ஹோட்டல் பேசல் போப்பா' என்றோம்.

டாக்சி டிரைவர் எங்களை ஏற இறங்க பார்த்து விட்டு, அப்படி ஒரு ஹோட்டலே இஸ்ரேலில் இல்லை என்று சூடமேற்றி சத்தியம் செய்யாத குறையாக சொன்னார். என்னாடா இது, அலுவலகத்தில் இந்த ஹோட்டலதான பதிவு பண்ணி அட்ரஸ் வேறு கொடுத்து விட்ருக்காங்க என்று மூளையை (இல்பொருள் உவமைதான்...) கசக்கிக் கொண்டிருந்த போது இஸ்ரேல்காரர் ஒருவர் சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு 'இது பேசல் அல்ல. ஹோட்டல் பசேல் (BASEL)' என்றார். 'சரிதான்..விளங்கிடும்டா...' என்று ஒருவழியாக ஹோட்டலை வந்தடைந்தோம்.

ஹயர்க்கான் டெல் அவிவ் நகர கடற்கரையை ஒட்டிய அழகான பெரிய வீதி. டெல் அவிவ்வின் பெரிய ஹோட்டல்கள் நிறைய இங்கே உள்ளன. நமது இந்திய தூதரகம் இங்கேதான் உள்ளது. ஹோட்டல் உள்ளே சென்றதும் நடக்கப்போகும் கூத்தை அறியாமல் உற்சாகமாக ரிசப்சனை அணுகுகிறோம். அப்ப்ப்பா, ஒருவழியா ஹோட்டலை வந்து சேர்ந்தாச்சு. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு உங்களையெல்லாம் பாகம் - 2ல் சந்திக்கிறேனே !!

பாகம் - 2ல்

இஸ்ரேலிலுள்ள தமிழ் வலைப்பதிவாளர்கள்
இஸ்ரேல் பற்றிய தமிழ் வலைப்பதிவுகள்
டெல் அவிவ் - ஜாபா சுற்றுப்பயணம்
ஹோட் ஹோசரானிலுள்ள அலுவலகத்தை பற்றி..
'ஷபாத்' என்றால் என்ன?

பின் குறிப்பு

இஸ்ரேல் பயண அனுபவங்களை தொடர்ந்து எழுதி இம்சை அரசன் 24ம் புலிகேசி ஆகலாம் என்று ஒரு உத்தேசம் உள்ளது. நண்பர்களின் பின்னூட்ட ஆதரவைப் பொறுத்து பாகங்கள் சுருக்கவோ, அதிகரிக்கவோ படும். ஆகவே அய்யா, அம்மா, நல்லதோ, கெட்டதோ ஏதாவது இரண்டு வரி பின்னூட்டம் போட்டு, வளர்கின்ற வலைப்பதிவாளரை(அட்ரா, அட்ரா.. 'வ'வுக்கு 'வ' எதுகை மோனை) தமிழ் மணத்தில் வாழ வையுங்கள் (திரும்பவும், 'வ'வுக்கு 'வ') !!

Saturday, April 08, 2006

IT திருக்குறள்கள்

திருக்குறளின் 134-வது அதிகாரம் சமீபத்தில் கண்டறியப் பட்டுள்ளது. அந்த அதிகாரத்தில் கணிணி, இணையம், மென்பொருள் மேம்பாடு போன்றவைகளைப் பற்றி திருக்குறள் அற்புதமாக விளக்குகின்றது. இந்த அதிகாரம் பின்வருமாறு..

Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்.

Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் Codingகெழுதியே சாவர்.

எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம்
Jobஇல்லை "C"யை மறந்தார்க்கு.

Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்.

Netடில் தேடி Copy அடிப்பதன்
மூளையிலிருந்து Logic யோசி.

பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu.

எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் Syntax Error.

எது தள்ளினும் Projectல் Requirement
தள்ளாமை மிகச் சிறப்பு.

Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று.

Bench Project Email இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.

பின்குறிப்பு : இந்த திருக்குறள்களை நண்பர் மணி, ஹைதராபாத்திலிருந்து இரு மாதங்களுக்கு முன்பு அனுப்பினார். அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. நண்பர்கள் மேலும் புதிய திருக்குறள்களை சிந்தித்து பின்னூட்டத்தில் இடலாம் !

Friday, February 24, 2006

சங்கிலித் தொடர் பதிவு - ஜோசப் & டோண்டுவிடமிருந்து

மூன்று நாட்களாய் அலுவலகத்தில் நிறைய வேலை இருந்ததால் தமிழ்மணம் பக்கம் வரமுடியவில்லை. திடீரென்று நேற்று மாலை தமிழ்மணத்தை திறந்த போது, சங்கிலித்தொடர் பதிவுகள் நிறைய தென்பட்டன. தெரிந்த விளையாட்டுதான், புது வடிவத்தில். சங்கிலித்தொடரில் என்னை அன்பால் இழுத்த ஜோசப் மற்றும் டோண்டுவிற்கு நன்றி !

பிடித்த நான்கு விஷயங்கள்

1. சினிமா பார்ப்பது / விமர்சிப்பது : சினிமா பெரும்பாலானோருக்கு பிடித்த பொழுதுபோக்குதான். சினிமா பார்ப்பதும், சினிமா பார்க்க வருபவர்களை பார்ப்பதும் எனக்கு இன்னமும் பிடித்தமான விஷயம்தான். ஆனால் தியேட்டரில்தான் சினிமா பார்க்க பிடிக்கும்.

2. கிரிக்கெட் பார்ப்பது / விளையாடுவது / விமர்சிப்பது : ஊரிலிருந்த வரை கிராமத்து கிரிக்கெட்டான கிட்டிப்புல்லின் ரசிகன் நான். திருச்சிக்கு படிக்க வந்தவுடன், கிரிக்கெட்டுக்கு மாறிவிட்டேன். இப்போதும் நமது கிரிக்கெட் பதிவுகளை 'கிரிக்கெட் கூட்டுப்பதிவில்' காணலாம்.

3. பழைய பாடல்கள் கேட்பது : பொதுவாக பாடல்கள் கேட்பது பிடிக்கும். பழைய பாடல்கள் இன்னும் ரொம்பவே பிடிக்கும். ஜெயா டிவியில் இரவு 11 மணியிலிருந்து 12 மணிவரை ஒலிபரப்பும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியின் பரம ரசிகன். நேற்று கூட 'கங்கைக் கரை தோட்டம்...' பாடலில் என்னையே மறந்தேன்.

4. தமிழ் வலைப்பதிவுகள் படிப்பது / படைப்பது : ஆறு மாதமாகத்தான் தமிழ்மணம் பழக்கம். தேசிகன் அறிமுகப் படுத்தினார். அவருதவியுடன் வலைப்பதிவையும் ஆரம்பித்தேன். முன்பெல்லாம் ஆனந்த விகடன், குமுதம், தினமலர், தினமணி, வெப் உலகம், ரீடிஃப் என்று எல்லா தமிழ் வலைத்தளங்களுக்கும் செல்வேன். இப்போதெல்லாம் தமிழ்மணத்திற்கே நேரம் போதவில்லை. டோண்டு சொல்வது போல், தமிழ்மணத்தைப் பார்க்காவிட்டால், கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. தமிழ்மணத்தை உருவாக்கி, நிர்வாகித்து, பங்களித்து வரும் நண்பர்கள், வலைப்பதிவர்கள் அனைவருக்கும் நன்றி !

பிடித்த நான்கு படங்கள்

1. அன்பே சிவம்
2. தவமாய் தவமிருந்து
3. குருதிப்புனல்
4. காக்க காக்க

பிடித்த நான்கு பாடல்கள்

1. சென்னை செந்தமிழ் (எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி)
2. நானொரு சிந்து (சிந்து பைரவி)
3. சின்ன சின்ன ஆசை (ரோஜா)
4. பச்சைக்கிளிகள் தோளோடு (இந்தியன்)

பிடித்த நான்கு இடங்கள்

1. டி. பழூர் (நான் பிறந்து வளர்ந்த கிராமம்)
2. திருச்சி (பள்ளி, கல்லூரி படிப்பு)
3. ஹைதராபாத் (முன்பு வேலை பார்த்த இடம் - 5 வருடங்கள்)
4. மும்பை (தற்போது வேலை பார்க்கும், வசிக்கும் இடம்)

பிடித்த வலைப்பதிவாளர்கள்

நிறைய பேரை பிடிக்குமென்பதால் வகைப்படுத்தி எழுதுகிறேன். இன்னும் நிறைய வலைப்பதிவுகள் ஞாபகத்தில் இல்லாததால், எழுத முடியவில்லை. நண்பர்கள், பொறுத்தருளுக.

அனுபவங்கள் / மீள் நினைவுகள் / சமூகம்

1. டோண்டு
2. டி.பி.ஆர்.ஜோசப்
3. தருமி
4. 'தாட்ஸ் இன் தமிழ்' பத்ரி

நகைச்சுவை / நையாண்டி

1. டுபுக்கு
2. இட்லி வடை
3. முத்து (தமிழினி)
4. பினாத்தல் சுரேஷ்

நிகழ்வுகள் / கதைகள் / பயண அனுபவங்கள்

1. தேசிகன்
2. புனே செப்புப் பட்டயம் மோகன்தாஸ்
3. கடற்புறத்தான் ஜோ
4. எண்ண கிறுக்கல்கள் செல்வராஜ்

சங்கிலித் தொடரில், நான் அழைக்க விரும்புபவர்கள்

1. தேசிகன்
2. ரஷ்யா இராமநாதன்
3. 'தாட்ஸ் இன் தமிழ்' பத்ரி
4. கோ. கணேஷ்

Thursday, February 16, 2006

கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்

தலைப்பை படித்தவுடன், அரசியலை எதிர்பார்த்து வரும் நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு. இது அரசியல் பற்றிய பதிவல்ல. சாப்பாட்டில் ஊறுகாய் போல், இப்பதிவிலும் அரசியல் உண்டு. பொறுமையாக படியுங்கள் !

தங்கையின் திருமணத்திற்காக 15 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றிருந்தேன். விடுமுறை நாட்களில் பல சுவையான, மகிழ்ச்சியான சம்பவங்களும், சில கசப்பான அனுபவங்களும் கிடைத்தன. அவற்றிலிருந்து இதோ உங்களுக்காக, சில செய்தித் துளிகள்.

மும்பையிலிருந்து சென்னைக்கு தாதர் விரைவுவண்டியிலும், சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு ராக்போர்ட் விரைவுவண்டியிலும் பதிவு செய்திருந்தேன். தாதர் பயணிகளுக்கான உணவு / திண்பண்டங்கள் வழங்கும் சேவையில் நன்றாக செயல்பட்டது. வண்டியும், கழிவறைகளும் ஓரளவுக்கு சுத்தமாக இருந்தன. ஆனால் ராக்போர்ட் விரைவுவண்டியில் முந்தைய நாளிரவும், மறுநாள் காலையிலும் திண்பண்டங்கள், பானங்கள் எதுவுமே வரவில்லை. காலையில் கும்பகோணம் 7:30 மணிக்கு வந்து சேரும் வரை காபி கூட அருந்த முடிய வில்லை.

கும்பகோணத்தில் ஆங்காங்கே சாலையமைக்கும் / செப்பனிடும் பணிகள் நடந்து வருகின்றன. எங்கள் ஊரில் கூட சிமெண்ட் சாலை அமைக்கப் பட்டுள்ளது. சாலைப் பணியாளர்கள் திரும்ப வந்ததாலா அல்லது தேர்தலுக்காகவா என்று புரியவில்லை.

எங்கள் கிராமத்தில் பள்ளி மாணவர்கள், மாணவிகள் நிறைய பேர் புது மிதிவண்டி வைத்திருந்தனர், அரசாங்கம் கொடுத்தது. சிலர் வெள்ள நிவாரண உதவித்தொகை, வேட்டி, சேலைகள் பெற்றிருந்தனர். இவை அனைத்தும் ஓட்டுகளாக மாறிவிடும் என்றே நினைக்கிறேன்.

சாலைப் பணியாளர்களை திரும்ப அழைத்தது, அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், கலைத்துறையினருக்கு விருதுகள் என அதிமுக அரசு 7 கட்சி கூட்டணிக்கு தலைவலியை கொடுத்து வருவதை கண்கூடாக பார்க்க முடிந்தது. மதிமுக வேறு மதில்மேல் பூனையாக இருந்து வருவது கருணாநிதிக்கு கவலையளிக்கும் விஷயமே.

நான் ஊரிலிருந்த போது எங்கள் கிராமத்திற்கு விஜயகாந்த் தேர்தல் சுற்றுப் பயணமாக வந்தார். 2000 பேர் கொண்ட கூட்டத்தில் தெளிவாக பேசினார். வேலையில்லா திண்டாட்டத்தை, லஞ்ச ஊழலை ஒழிப்பேன். சுகாதார வசதிகளை மேம்படுத்துவேன். ரேஷன் பொருட்களை வீடு வீடாக வினியோகிப்பேன், பட்டதாரி மாணவர்களுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்குவேன் என்றெல்லாம் கூறினார். மக்கள் வெங்காய பகோடா தின்று கொண்டே அனைத்தையும் கேட்டு, சில சமயங்களில் கைதட்டி விட்டு, மெட்டி ஒலி பார்க்க வீட்டுக்கு சென்று விட்டனர். அனைவரின்
முகத்திலும் (என்னையும் சேர்த்து) ஒரு சினிமா நட்த்திரத்தை பார்த்த பரவசம் (மட்டுமே) தெரிந்தது.

கொள்ளிடம் ஆற்றில் நிறைய தண்ணீர். ஆனால் திருச்சியில் காவரி ஆறு வறண்டு காணப்படுகிறது. எங்கே போயிற்று அத்தனை நீரும், கடலுக்கா என்று தெரியவில்லை. எங்கள் கிராமத்திலும், சுற்றுப் புறங்களிலும், விவசாயத்தில் ஓரளவுக்கு நல்ல விளைச்சல்.

எங்கள் ஊரில் பி.ஸ்.என்.எல் டவர் போட்டு விட்டதால் பெரும்பாலோர் கையில் செல்போன் காணப்பட்டது. எஸ்.எம்.ஸ், மிஸ்டு கால், டாக் டைம் போன்ற பதங்களை பெரும்பாலோர் தெரிந்தும், தெரியாமலும் உபயோகித்து கொண்டிருந்தனர்.

கும்பகோணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களை பற்றி விசாரித்தேன். தவமாய் தவமிருந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. டிஷ்யூம் பரவாயில்லை. ஆதி அவுட் என்ற தகவல்கள் கிடைத்தன. இதில் ஆதியை பற்றி நிறைய கிண்டல் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு வந்த ஓர் குறுஞ்செய்தி "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.. ஆதி பார்த்தால் அன்றே சாவு !!!"


ஊரில் இருந்த போது, ஒரு மாலைப்பொழுதில் தமிழ்மணத்தைப் பார்க்கும் ஆவல் எழுந்ததால், ஊரிலிருந்த ஒரே இணையகத்திற்கு (Browsing Center)சென்றேன். இரண்டு கணிப்பொறிகள். ஓர் இளம்பெண், பள்ளி மாணவி ஒருவருக்கு எம்.ஸ் வோர்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். 'ப்ரவுசிங் பண்ணலாமா ??' இது நான். கைலி, சட்டை, ஸ்லிப்பர் செருப்புடன் நின்று கொண்டிருந்தேன். அந்த பெண் நம்பமுடியாமல் 'என்ன ? என்ன வேணும் உங்களுக்கு ?' என்றார். 'இல்ல.. ப்ரவுசிங் பண்ணனும்.. சிஸ்டம் இருக்கா ??' என்றேன். அரை மனதாக 'இருக்கு.. அம்பது ரூவா ஒரு மண்நேரத்துக்கு.. ஆனா அப்பப்ப டிஸ்கனெக்ட் ஆயிடும்.. போன் லைன் சரியில்ல.. பரவாயில்லயா ??' என்றார். அவர் அம்பது ரூவா என்று சொல்லும்போதே நான் திரும்ப ஆரம்பித்து விட்டேன், தமிழ்மணத்திற்கு என்ன, மும்பை சென்று பார்த்துக் கொள்ளலாம் !

எங்கள் ஊரான டி. பழூரிலிருந்து கும்பகோணம் செல்ல சாதரணமாக 75 நிமிடங்கள் ஆகும். தீபாவளி சமயத்தில் பெய்த மழையினால் சாலைகள் படுமோசமாக இருந்ததால், 120 நிமிடங்கள் பயணமாகி விட்டது. சண்முகம் பேருந்தில் இரண்டு டிவி பெட்டிகள் வைக்கப்பட்டு சிடி ப்ளேயரில் ரஜினி தேவுடா.. தேவுடா என்று ஆடிக் கொண்டிருந்தார். திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்ததில் கும்பகோணம் வந்ததே தெரியவில்லை. பக்கத்தில் உட்கார்த்திருந்த பால்காரர் '1234' எஸ்.எம்.எஸ் / குறுஞ்செய்தி கொடுத்து வந்த பதிலில் 'இந்தியா 120 ஃபார் 2, 24 ஒவர், டெண்டுல்கர் விளையாடறான்..' என்று நண்பருக்கு ரன்னிங் கமெண்ட்டரி கொடுத்தார். இந்தியா முன்னேறி வருகிறது என்று எனக்கு தோன்றிய போது சாலையில் 'கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்' என்ற விஜயகாந்த் போஸ்டர் கண்ணில் பட்டது !

Wednesday, January 18, 2006

சோம்பேறி பையனுக்கு கவிதை எழுத தெரியுமா ?

நமக்கு கல்லூரி காலத்திலிருந்தே கவிதைகள் எழுத பிடிக்கும். கவிதைகள் ஏதாவது கிறுக்கி, அதை வைரமுத்து அளவுக்கு நான்கு முறை கரடுமுரடாக படித்து கருத்து கேட்பதால், நண்பர்கள் இப்போதும் என்னிடம் சற்று கவனமாகத்தான் இருப்பர். நமது டி.பி.ஆர். ஜோசப் 'சூரியன்' தொடர்கதை எழுதுகிறார் அல்லவா, அவர் தொடர்கதையின் அத்தியாயங்களுக்கு கவிதைகள் எழுதித் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தேன். இரு நாட்கள் முன்பு ஆறாம் அத்தியாயத்தை அனுப்பி அதற்கு தோதான ஓர் கவிதை கேட்டிருந்தார். நான் வழக்கம் போல் சோம்பேறித் தனமாக கூகுல் மின்னஞ்சல் பெட்டியை இரண்டு நாட்களாக திறவாமல், இன்றே பார்த்தேன். உடனே அவருக்கு ஓர் கவிதை அனுப்பி வைத்தேன். அது, இங்கே உங்கள் பார்வைக்கு..


சூரியன் முகம் பார்க்காது
தாமரை மலராது தெரியுமா
உன் முகம் பார்க்காமல்
நான் மலர மாட்டேன், தெரியுமா ?

தலைவனும், தலைவியும்
ஊடலோடு காதல் புரியும்
அகநானூற்று கவிதைகள் பலவுண்டு..
எதையேனும் தெரிந்திருப்பாயா ?

தெரிந்திருந்தால்
என்னை முழுமையாய்
புரிந்திருப்பாயோ ??

விளையாட்டாய் புரிந்த செயல்
வினையாய் முடிந்த வருத்தத்தில்
மனதார கேட்கிறேன், மன்னிப்பு
மலர்வாயா, மறப்பேன் என் தப்பு !

தலைவன் ஊரிலில்லாத பொழுது
பசலை நோயில் ஏங்கும்
தலைவி போல், ஏங்குகிறேன்
நான்உன் புறக்கணிப்பால்...

உன்னைக் காட்டிலும் எனக்கு
உன் திறமை பிடிக்கும்...
உன் கர்வம் பிடிக்கும்..
உன் திமிர் பிடிக்கும்..
உன் ஆணாதிக்கம் பிடிக்கும்..
உன் கோபம் பிடிக்கும்..
இத்தனையும் மீறி
உன் நற்குணம் பிடிக்கும்...

இத்தனையும் பிடித்ததாலேயே
உன்னை எனக்கு பிடித்தது...
உன்னையே எண்ணி தவிக்கும்
என்னை பிடிக்குமா, உனக்கு ?

Friday, December 30, 2005

விருதுகள் - 2005

ஒவ்வோரு ஆண்டின் இறுதியிலும் செய்தி ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த ஆண்டின் சிறந்தவைகளை பட்டியலிடுவது வழக்கம். இதோ நமது பட்டியல் !

தமிழ் திரையுலகம்
  • திரைப்படம் - தவமாய் தவமிருந்து
  • குணசித்திர நடிகர் - ராஜ்கிரன் (தவமாய் தவமிருந்து)
  • நகைச்சுவை நடிகர் - விவேக் (அன்னியன்)
  • கதாநாயகன் - விக்ரம் (அன்னியன்)
  • கதாநாயகி - அசின் (கஜினி)
  • திரைப்பட இசை - ஹாரிஸ் ஜெயராஜ் (அன்னியன்)
  • பாடல் - மயிலிறகே - வாலி (அ..ஆ)
  • இயக்குனர் - சேரன் (தவமாய் தவமிருந்து)
  • திரைக்கதை - சந்திரமுகி (வாசு)

விளையாட்டு
  • கிரிக்கெட் வீரர் - இர்ஃபான் பதான்
  • டென்னிஸ் வீராங்கனை - சானியா மிர்சா
தொலைக்காட்சி
  • நீள்தொடர் - மெட்டி ஒலி (சன்)
  • தொடர் - சிதம்பர ரகசியம் (சன்)
  • நகைச்சுவை காட்சிகள் - ஷோ டைம் (ஜெயா)
  • செய்திகள் - என்.டி.டிவி
  • விளையாட்டு - சீ. ஸ்போர்ட்ஸ்
  • நிகழ் தொடர் - அரட்டை அரங்கம் (சன்)
  • பழைய பாடல்கள் - தேனமுது (ஜெயா)
  • பாடல் வரிசையமப்பு - சூப்பர் 10 (சன்)

அரசியல் & சமூகம்
  • அமைப்பு - இந்திய தேர்தல் ஆணையம் (பீகார் தேர்தலுக்காக)
  • நகரம் - மும்பை (26/7 பேரழிவிலிருந்து மீண்டு வந்ததற்காக), பெங்களூர் (கணினி தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள்)
  • ஏழை மக்கள் மறுவாழ்வு - மும்பை (சேரி மக்களுக்கு 53000 வீடுகளை கட்டிக்கொடுத்ததற்காக)
  • தொலைபேசி நிறுவனம் - ரிலையன்ஸ் (இந்திய அளவில்), ஏர்செல் (தமிழக அளவில்), டாடா (வாழ்நாள் இலவசம் - உள்வரும் அழைப்புகள்)
  • மென்பொருள் நிறுவனம் - இன்ஃபோசிஸ்
  • நிர்வாகத் தலைவர் - நாராயணமூர்த்தி (இன்ஃபோசிஸ்)
  • மாநிலம் - தமிழகம் (சாலை வசதிகள், தூய்மையான கோயம்பேடு பேருந்து நிலையம், அரசு நிர்வாகம் மற்றும் ஒரளவுக்கு திறம்பட செயல்பட்ட
    பேரழிவு நிவாரணப் பணிகள் மற்றும் சமாளிப்பிற்காக (வெள்ள நிவாரண சாவுகள் தவிர்த்து))

பின்குறிப்பு : இவை முழுவதும் என் கவனத்திற்குள்ளான செய்திகளின் / ரசனைகளின் மீதான மதிப்பீடு மட்டுமே. இவைகளிலிருந்து நீங்கள் மாறுபட்டால் பின்னூட்டங்களில் உங்கள் கருத்துகளை இடலாம். மேலும் விருதுகளை தெரிவிக்கலாம் !!

Tuesday, December 27, 2005

வாசனையுடன் ஓர் பதிவு

வலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ! கடுமையான வேலைப்பளுவின் காரணமாக நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின் இப்போது பதிவிடுகிறேன்.

கடந்த இருபது நாட்களில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. இந்தியா, இலங்கையை கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக வென்றது. சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகளில் மரண அடி வாங்கியுள்ளது. பாரளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பதவி பறிபோயுள்ளது. சுனாமி நினைவுதினமன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளை வெளியிட்டன. தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணம் வாங்க வந்தவர்களிடம் கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிறைய பேர் இறந்தனர். வழக்கம்போல் அரசு தொலைக்காட்சியும், எதிர்க்கட்சி தொலைக்காட்சியும் இதை முடிந்த அளவுக்கு அரசியலாக்கின.வலைப்பதிவுகள் வழக்கம்போல் வெளிவந்தன.


2005ம் வருடத்தில் இந்தியாவில் நிறைய சோக சம்பவங்கள் நடந்து விட்டன. மும்பையில் மழை, வெள்ள அழிவுகள், காஷ்மீரில் பூகம்பம், குஜராத், ஒரிஸ்ஸாவில் மழை, வெள்ளம், தமிழ்நாட்டில் வெள்ள அழிவுகள், கூட்ட நெரிசல் பலிகள், பாரளுமன்ற பிரதிநிதிகள் பதிவிபறிப்பு என நிறைய
சம்பவங்கள் நடந்து விட்டன. இவைகளிலிருந்து மக்களும், அரசாங்கமும் பாடம் கற்று, எதிர்காலத்திலாவது இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள ஓரளவாவது தயார்நிலையில் இருக்க வேண்டும். 2006ம் வருடம் உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தர இறைவனை பிரர்த்திப்போம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் !


கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்குவது வழக்கம். இதோ வாசனைக் கவிதையை வாசியுங்கள், ஏதாவது புரிந்தால் பின்னூட்டத்தில் கெட்ட வார்த்தைகள் தவிர்த்து, மற்ற வார்த்தைகளில் எனக்கு எழுதுங்கள் !


வாசனை


தூக்கம் வர மறுத்த ஓரிரவில்

ஞாபகம் வந்தது உன் வாசனை..

பேருந்தில் உன் தோள் மேல் கைபோட்டு

நெருங்கி உட்கார்ந்திருந்த போது வந்த வாசனை..

வாசனைத் திரவியங்கள் உபயோகப் படுத்தும்

பழக்கமில்லாத உன்னை, உன் வாசனையினால்

இன்னும் பிடித்துப் போனது, எனக்கு...

உன் பெயரை எங்காவது பார்க்கும்போதும்

படிக்கும்போதும், ஞாபகத்தில் வருவது

உன் உருவமும், வாசனையும்தான்..

இன்றும் கூட எப்போதாவது தொலைபேசியில்

உன்னுடன் பேசினால், பேசி முடித்து விட்டு

முகர்ந்து பார்க்கிறேன், உன் வாசனையை...

எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம்..

ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்தோம்..

உனக்கும், எனக்கும் நம்மை பிடிக்கும் முன்பே

பிரிந்து விலகினோம்...எதனால் நாம் பிரிந்தோம்..

மறுபடியும் சேருவோமா..காரணம்

தெரிய வில்லை, புரிய வில்லை...

இருப்பினும் தூக்கம் வராத இரவுகளில்,

இன்னமும் நுகர்கிறேன், உன் வாசனையை !!!

Thursday, December 08, 2005

கிரிக்கெட் - திருச்சி - கணிப்பொறி - பயணம்

நண்பர் 'பத்ரி' தொடங்கியிருக்கும் கிரிக்கெட் வலைப்பதிவில் நானும் உறுப்பினராகி விட்டேன். இன்று ஒரு பதிவு சச்சினைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி இங்கே 'சச்சின் - டெல்லி - 35 ?'

திருச்சியைப் பற்றி எழுதிய பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பதிவின் இரண்டாம் பாகம் தயாரகிறது. கூடிய சீக்கிரம் வெளியிட்டு விடலாம்.

நேற்று இரவு என்.டி.டிவியில் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் - இன்போசிஸ் நாராயணமூர்த்தி - பிரணாய் ராயின் கலந்துரையாடல் ஒளிபரப்பானது. 1.7 பில்லியன் டாலர் மைக்ரோசாப்ட் இந்தியாவில் முதலீடு செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. பில்கேட்ஸின் பேச்சில் செயற்கை தன்மை நிறைய இருப்பது போல் எனக்கு தோன்றியது. மூர்த்தி இயல்பாக பேசினார். கொஞ்ச நேரம் பார்த்து விட்டு ஜெயா டிவி 'ஷோ டைம்' நிகழ்ச்சிக்கு சென்று விட்டோம்.

மும்பையில் கன்சோலியிலிருந்து சான்படாவிற்கு மாறி விட்டேன். தினமும் அலுவலகத்திற்கு மின்சார தொடர்வண்டியில்தான் (ட்ரெயின்) வருகிறேன். பயணம் சுவாரசியமாக இருக்கின்றது, கூட்டமே இல்லை. இத்தடம் (தானே - வாஷி) புதிதாகையால் கூட்டம் இல்லை.

7 வருடங்கள் கழித்து கல்லூரி நண்பனை சந்திக்க முடிந்தது. தற்போது இவர் என்னுடனே தங்கியிருக்கிறார். மும்பை பன்னாட்டு வங்கி ஒன்றில் பணி புரிகிறார். தினமும் கல்லூரி நாட்களைப் பற்றி பேசி நினைவலைகளில் நனைந்து கொண்டிருக்கிறோம். சுவாரசியமான சம்பவங்கள் பதிவுகளாக வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவுகள் கலக்கிக் கொண்டிருக்கின்றன. தருமி, கோ. கணேஷ், ஜோ போன்றவர்களின் ராஜபாட்டையை தொடர்ந்து குழலியும் இந்த வாரம் கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் நட்சத்திரமாய் கலக்கியவர்களுக்கும், கலக்கப் போகின்றவர்களுக்கும் !!!

Saturday, November 26, 2005

நம்ம ஊர் திருச்சி

மலைக்கோட்டை மாநகரம் திருச்சிராப்பள்ளியைப் பத்தித்தாங்க பேசப் போறேன். ரொம்ப நாளாச்சுங்க நம்ம ஊரைப் பத்தி பேசி. அதான் கொஞ்சம் நினைவலைகளில் நனையலாமேன்னு உங்ககிட்ட பேசறேன். நான் பொறந்தது ஜெயங்கொண்டம் பக்கத்துல ஒரு கிராமத்துலங்க. திருச்சியிலதான் படிச்சேன். 1991 -லிருந்து 1998 வரைக்கும் அங்கதாங்க இருந்தேன். வாங்க, நடந்துகிட்டே பேசுவோம்!

ஏங்க, திருச்சின்னா உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும் ? மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், காவேரி, முக்கொம்பு, கல்லணைன்னு எதுவாச்சும் ஞாபகத்துக்கு வருதுல்லியா ? எனக்கு ஒரு ஐஸ்கீரீம் கடைதாங்க ஞாபகத்துக்கு வரும்.
  • வனிலா ஐஸ்கீரீம் ரூ 1.50
  • சாக்லேட் ஐஸ்கீரீம் ரூ 2.00
  • புரூட்சாலட் ஐஸ்கீரீம் ரூ 2.00
இதுதாங்க ஐஸ்கீரீம் மெனு. எங்கே தெரியுமா ? திருச்சி தெப்பக்குளம் போஸ்ட் ஆபிஸ் பக்கத்துல 'மைக்கேல்ஸ் & சன்'னுன்னு ஒரு கடை இருக்குங்க (இப்ப கூட இருக்குதுங்க, இப்ப திருச்சியிலேயே நிறைய இடங்கள்ள கிளைகள் திறந்துட்டாங்க). இந்த கடை ரொம்ப பிரபலங்க. சின்ன கடைதான். ஒரு இருபது பேர்தான் உட்காரலாம் ஒரே சமயத்தில. ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் ஐஸ்கீரீம். நாங்கல்லாம் ஸ்கூல் படிக்கிறப்ப தினமும் சாயந்திரம் இங்க வந்துருவோம்.

நான் செயிண்ட் ஜோஸப் காலேஜ்லதாங்க படிச்சேன். காலேஜ் படிச்சப்பவும் இங்கதாங்க வருவோம். இந்த கடைக்கு பின்னாடி ஹோலிகிராஸ் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி, எதிர்த்தாப்ல பிசப் ஹிபர் பள்ளி, பக்கத்துல செயிண்ட் ஜோஸப் பள்ளி மற்றும் கல்லூரின்னு ஓரே இளைஞர்கள் கூட்டமாத்தான் இருக்கும் எப்பவும். பக்கத்துலதான் மலைக்கோட்டை. அங்க சுத்திப் பாக்க வர்ரவுங்க கூட இங்கே வருவாங்க. இப்ப ஒரு ரூவா விலை ஏத்தியிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு உலகத்துலேயே குறைந்த விலைக்கு தரமான ஐஸ்கீரீம் கிடைக்கிற இடம் இதுதான் நினைக்கிறேங்க. நீங்க திருச்சிதானா ? இல்லைன்னா ஒரு தடவை திருச்சி போயிட்டு வாங்களேன், சூப்பர் ஊருங்க !

என் கல்யாணத்துக்கு இந்த ஐஸ்கீரிம் கடையில்தான் டீரிட் கொடுக்கலாம்னு இருக்கேன். 100 பேர் சாப்பிட்டாலும் ரூ 1000க்கும் மேல பில் வராது. என்ன சொல்றீங்க ?

இந்த கடைக்கு பின்னால இருக்குற தெருவுலதாங்க 'பனானா லீஃப்' ன்னு ஒரு ஹோட்டல் இருக்குங்க. சாப்பாடு தலை வாழை இலைல சூப்பரா போடுவாங்க. எல்லா வெரைட்டிஸூம் இங்க கிடைக்கும்ங்க. ஆனா அசைவம் கிடையாதுன்னு நினைக்கிறேன். சரியா ஞாபகம் இல்லீங்க !

திருச்சியில நிறைய தரமான ஹோட்டல்கள் இருக்குங்க. இருந்தாலும் ரோட்டோர நைட் கடைகளும் நிறைய இருக்குங்க. இந்த மாதிரி ரோட்டு கடையில இட்லி, தோசை, பரோட்டா எல்லாம் சாப்பிட்டு ஒரு நாலு ஆம்லெட், ஆஃப்பாயில் சாப்பிடற சுகமே சுகந்தாங்க. அவ்வுளவு அருமையா இருக்கும் !

என்னடா இவன் சாப்பாடைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கானேன்னு பாக்குறீங்களா ? கோச்சுக்காதீங்க, எனக்கு சாப்பாடைப் பத்தித்தான் எப்பவும் நினைவு.

இப்ப திருச்சியில உள்ள சுற்றுலா தளங்கள் பற்றி பேசுவோமா ? மலைக்கோட்டைதாங்க முதல்ல. நீங்க மெயின்கார்டுகேட்ல இறங்கனீங்கன்னா அப்படியே எதிர்த்தாப்ல நடந்து போயிறலாம். மலைவாசல் கீழே டிக்கெட் வாங்கிகிட்டு (ரூ 2) விநாயகர் ஒருத்தரு இருப்பாரு, அவர கும்புட்டுட்டு அப்படியே படிகள்ள ஏறீனீங்கன்னா, தாயுமானவர் கோயில் வருங்க. நல்லா பொறுமையா சுத்திப்பாத்துட்டு இன்னும் கொஞ்சம் மேல ஏறீனீங்கன்னா மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு வந்துருவீங்க. மொத்தம் 470 படியோ என்னமோ. மேல ஏறினப்புறம் திருச்சியவே பாக்கலாம். பிரமாண்டமா இருக்கும். காத்து பிச்சிகிட்டு வரும் பாருங்க, இதாங்க பூலோக சொர்க்கம் !

மெயின்கார்டுகேட் எதிர்த்தாப்ல, எங்க செயிண்ட் ஜோஸப் கல்லூரி வளாகத்துலேயே ஒரு பெரிய பழமையான சர்ச் இருக்குங்க. நான் காலேஜ் படிச்சப்ப அடிக்கடி இங்க போவோம். ரொம்ப உயரமானது. மலைக்கோட்டை உயரம் வரும்னு நினைக்கிறேன். இந்த சர்ச்சும் ரொம்ப நல்லா இருக்கும்ங்க.

அப்புறம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுங்க. ஆசியாவிலேயே உயரமான கோபுரம்ன்னு சொல்றாங்க. நல்லா இருக்கும்ங்க கோயில். அரங்கநாதர் பள்ளிகொண்ட நிலையில் பரவசப் படுத்துவாருங்க. நம்ம சுஜாதா சார் ஸ்ரீரங்கம் பத்தி நிறைய சொல்லியிருக்கார், நீங்க படிச்சிருக்கிங்களா ? நம்ம தேசிகன் கூட ஸ்ரீரங்கம் சொக்கப்பானைன்னு ஒரு பதிவு போட்ருந்தாருங்க. சூப்பர் கோயிலுங்க, நீங்க பார்த்தே ஆகனும்.

திருவானைக்காவல் சிவன் கோயிலும் பெரிய, பழைமையான கோயில். இங்க சிவபெருமான் நிலத்துக்கு கீழ எப்பவும் தண்ணீருக்கு மத்தியில் இருப்பாருங்க. சூப்பரா இருக்கும். அப்புறம் மதியம் 12 மணிக்கு இங்க கோமாதா பூஜை ஒன்னு செய்வாங்க, ஐயர் புடவை கட்டிட்டு வந்து செய்வாருங்க. நமக்கு இது பத்தி மேம்போக்காதாங்க தெரியும்.

உறையூர் வெக்காளி அம்மன் கோயில் (அம்மன் மேற்கூரையின்றி வெட்டவெளியில் இருப்பாள்), பஞ்சவர்ணசுவாமி கோயில்
போன்ற கோயில்களும் நல்லா இருக்கும்ங்க. அப்புறம் சமயபுரம் மாரியம்மன் கோயில், சொல்லி தெரிய வேண்டியதில்லை. அருமையான திருத்தலம், போயி பார்த்துட்டு வாங்க. குணசீலம், திருப்பைஞ்சலி கோயில்களும் பிராமாதனமானவை.

இன்னும் நிறைய கோயில்கள் இருக்குங்க திருச்சியில. யாராவது சொந்தக்காரங்க இருந்தாங்கன்னா, போய் ஒரு பத்து நாள் இருந்து சுத்திப் பாத்துட்டு வாங்க. கோயில்கள் மட்டுமில்லைங்க. முக்கொம்பு சூப்பரான சுற்றுலாத் தளம். கல்லணை பிரமாண்டமா இருக்கும். அதுவும் இப்ப காவிரியில் வேற தண்ணீர் முழுமையா ஓடிக்கிட்டிருக்கு, போய் பாத்தீங்கன்னா அசந்துருவீங்க !

திருச்சியில துணிக்கடைகள் பிரபலம்ங்க. சாரதாஸ், ஆனந்தாஸ், தைலா, சென்னை சில்க்ஸ், பாம்பே டையிங் ஷோரூம்ன்னு சின்னகடை வீதி போனீங்கன்னாலே கூட்டம் அலை மோதும்ங்க. தரமான துணிகளை குறைந்த விலைக்கு வாங்கலாங்க. மலைக்கோட்டை போற வழியிலதான் இவை அனைத்தும் இருக்குதுங்க.

சினிமா தியேட்டர்களுக்கு என்ன குறைச்சலா திருச்சியில ? நிறைய தியேட்டர்கள் இருக்குங்க. ஒரே காம்ப்ளெக்ஸ்ல (மாரீஸ்) 5 தியேட்டர்கள் இருக்குங்க. அப்புறம் ரம்பா, ஊர்வசி, சிப்பி, சோனா, மீனா, காவிரி இன்னும் நிறைய தியேட்டர்கள் ஞாபகம் இல்லைங்க.

நீங்க புதுப்படம் பாக்கணும்ன்னா மேல சொன்ன தியேட்டர்களுக்கு போகலாம், இல்ல செகண்ட் ரவுண்ட் ஓடற படம் பாக்கணும்னா லிட்டில் அருணா, ருக்மணி, ராமகிருஷ்ணா, வெங்கடேசா இப்படி தியேட்டர்கள் இருக்கு. ஆங்கிலப் படங்கள் பார்க்கனுமா, அதுக்கு சிப்பி, பிளாஸா இருக்குங்க. சீன் படம் பாக்கணுமா, முல்லை, கோஹீனூர் இருக்குங்க. இல்ல நீங்க தியேட்டர் போகப் பிடிக்கலையா, விசிடி நிறைய கிடைக்கும்ங்க, அப்புறம் என்ன, ஜமாய்க்க வேண்டியதுதான் !

இது எல்லாத்தையும் விடுங்க. படிப்புக்கு சிறந்த இடம் திருச்சிதாங்க. ஆண்களுக்காக செயிண்ட் ஜோஸப் பள்ளி மற்றும் கல்லூரி, பிசப் ஹீபர் பள்ளி மற்றும் கல்லூரி, நேசனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, இ.ஆர் பள்ளிகள் இருக்குங்க. பெண்களுக்காக ஹோலி கிராஸ், இந்திரா காந்தி, எஸ்.ஆர்.சின்னு நிறைய இருக்குங்க. ஓரளவுக்கும் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள்ள தரமாவே படிப்பு சொல்லித் தராங்க. என்ன ஒன்னு, பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் கோ-எட் கிடையாது. அது ஒன்னுதாங்க எனக்கு வருத்தம். இது மட்டுமல்லாமல் கணிப்பொறி படிப்பிற்கான தனியார் கல்விக்கூடங்களும் இருக்குதுங்க.

சொல்ல மறந்துட்டேன் பாருங்க, தரமான மருத்துவ கூடங்கள் (ஆஸ்பிடல்ஸ்) திருச்சியில் நிறைய இருக்குங்க. உறையூர்ல சி.எஸ்.ஐ அப்படின்னு ஒரு ஹாஸ்பிடல் இருக்குங்க. சூப்பரான ஹாஸ்பிடல். தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த நியாயமான செலவில் கிடைக்கும். அப்புறம் சீ.ஹார்ஸ் பணக்காரங்களுக்கு. கண் மருத்துவமனைகளும் நிறைய. இன்னும் நிறைய நல்ல ஹாஸ்பிடல்ஸ் இருக்குங்க.

ரோடுகள் எல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கும். வன்முறை, ரவுடித்தனம் அதிகம் இருக்காதுங்க. நல்ல ஊரு, சுத்தமான காத்து, காவிரித் தண்ணி, குறைந்த விலைவாசி (மற்ற தமிழக நகரங்களை ஒப்பிட்டால்), அமைதியான, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடைய மக்கள் இதெல்லாம்தாங்க திருச்சி.

இப்ப சொல்லுங்க நீங்களே, திருச்சி பூலோக சொர்க்கம்தானே ? இதுவரைக்கும் திருச்சிக்கு போனதில்லைன்னா உடனே போயிட்டு வந்துருங்க. உங்களுக்கும் திருச்சியை புடிச்சுடுச்சுன்னா '+'ல்ல ஒரு குத்து விட்டுட்டு போங்களேன், புண்ணியமாப் போவும் !

Saturday, November 12, 2005

இந்திய கிரிக்கெட் அணியின் (திடீர்) முன்னேற்றம்

போன தொடர் வரை அடிமேல் அடி வாங்கி சாதனை படைத்து வந்த இந்திய அணி திடீரென்று வீறு கொண்டு எழுந்து, தற்போது நடக்கும் ஒருநாள் தொடரில் இலங்கை அணியை துவைத்து எடுக்கின்றது. இதற்கான காரணங்கள் என்ன என்று செய்தித் தாள்களும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அலசி ஆராய்கின்றன. நாமும் நம் பங்குக்கு ஏதாவது ஆராய்ந்து வைப்போம்!

ஓர் அணியின் திறமையை ஒரு தொடரை வைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றாலும் இந்திய அணியின் தற்போதைய முன்னேற்றத்துக்கு பின்வருவனவற்றை காரணமாகச் சொல்லலாம்.
  • டிராவிட் - சேப்பல் கூட்டணியின் அணித்தலைமை
  • இளைஞர்களின் வரவும், இதனால் அணிக்கு கிடைத்த புத்துணர்ச்சியும்
  • எதிர்பாராத ஆட்ட வியூகங்கள்
  • ஒரு திட்டம் தோற்கும்போது, மாற்றுத்திட்டம் வைத்திருப்பது
  • அணி வீரர்களிடம் காணப்படும் போராட்ட குணம் மற்றும் தன்னம்பிக்கை
  • முன்னின்று வழிநடத்தும் டிராவிட்டின் பொறுப்பான அணுகுமுறை

இருந்தாலும் இவை அனைத்தும் இத்தொடரோடு முடிந்து விடுமா அல்லது இந்திய அணி தொடர்ந்து ஜொலிக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். சவுரவ் கங்குலி அணிக்கு திரும்புவாரா, சேவக் மீண்டும் விலாசுவாரா என்று நிறைய கேள்விகளுக்கும் கொஞ்ச நாட்களில் பதில் தெரிய வரும். அதுவரைக்கும் வேறெதையும் பற்றி கவலைப் படாமல் நமது அணியின் சிறப்பான ஆட்டத்தை கண்டுகளிக்க நான் தயார், நீங்கள் தயாரா?